அறுபதிலும் ஆசை வரும்!



ஆஷிஷ் வித்யார்த்திக்கு அறிமுகம் தேவையில்லை. அப்படியே ஒரு இன்ட்ரோ கொடுத்தால் இருந்த இடத்திலிருந்தே கல்லெடுத்து எறிவீர்கள்! அந்தளவுக்கு சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.
தமிழில் விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும், அப்பாவாகவும் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்திருப்பவர்தான் ஆஷிஷ் வித்யார்த்தி.
அப்படிப்பட்டவருக்கு தமிழ் சினிமாவில் இப்போது பெரிய வாய்ப்புகள் இல்லை. இதனால் அவரை இங்குள்ள ரசிகர்கள் ஏறக்குறைய மறந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. டிரெண்டிங்கில் இல்லாவிட்டாலும் நினைவின் ஓரத்தில் இருக்கவே செய்கிறார்.

அப்படி இருந்தவர் இப்போது மீண்டும் லைம் லைட்டுக்கும் டிரெண்டிங்குக்கும் வந்திருக்கிறார்!ஆம். தன் 60வது வயதில் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

ஆஷிஷ் வித்யார்த்தி தனது அறுபதாம் வயதில் கரம் பிடித்திருக்கும் ரூபாலி பரூவாவுக்கு வயது 50. இவர் ஃபேஷன் துறையில் வளர்ந்து வரும் தொழிலதிபர். அஸ்ஸாமில் இருக்கும் கெளஹாத்தியைச் சேர்ந்தவர். இவருக்கு கொல்கத்தாவில் ஒரு ஃபேஷன் ஸ்டோர் இருக்கிறது. இங்கு கைத்தறியில் நெய்த ஆடைகளை NAMEG என்ற பிராண்டின் மூலம் விற்பனை செய்து வருகிறார்.

இவர்களது திருமணம் கேரளம் மற்றும் அஸ்ஸாம் பாரம்பரிய திருமண முறைகளைக் கலந்து நடந்திருக்கிறது. கேரளாவின் முண்டு கட்டிக்கொண்டு ஆஷிஷ் வித்யார்த்தியும்; அஸ்ஸாமின் மேகலா சந்தோர் பாரம்பரிய உடையில் ரூபாலி பரூவாவும் புன்னகைத்தபடியே மாலைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கொல்கத்தா கிளப்பில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்திருக்கிறார்கள்.போதாதா..? இப்போது ஆஷிஷ் வித்யார்த்தியின் இந்த திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது. ‘கில்லி’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தாரே அவர்தானே... என்று ஆஷிஷ் வித்யார்த்தியைப் பற்றி இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘‘இந்த வயதில் ரூபாலியை திருமணம் செய்திருப்பது அற்புதமான உணர்வைக் கொடுத்திருக்கிறது. காலையில் எளிமையான முறையில் கல்யாணம், மாலையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒரு சந்திப்பு என திருமண நாள் எங்கள் இருவருக்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. நாங்கள் சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தோம். அடுத்து திருமணம்தான் என்று தோன்றியது. அதனால் திருமணம் செய்து கொண்டோம்...’’ என்கிறார் இந்த புது மாப்பிள்ளை.

ஆஷிஷ் வித்யார்த்திக்கும், ரூபாலி பரூவாவுக்குமிடையே எப்படி காதல் மலர்ந்தது?

ரூபாலி கொல்கத்தாவில் வசித்து வருகிறார். ஆஷிஷ் வித்யார்த்தி சமீபகாலமாக நிறைய பயணங்களை மேற்கொள்கிறார். அனைத்தையும் தனது Vlogஇல் - யூடியூப் வலைத்தளத்தில் - பதிவேற்றி வருகிறார்.அப்படி கொல்கத்தா பக்கம் சென்றவர், ரூபாலியை எதேச்சையாகச் சந்திக்க... அந்த சந்திப்பு நட்பாக மாற... நட்பு காதலாகி இப்பொழுது திருமணத்தில் முடிந்திருக்கிறது.

இப்படி இந்த மணமக்கள் திருமணக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் இருக்க... ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி ராஜோஷி பரூவா, சமூக வலைத்தளத்தில் பதிந்த ஸ்டேட்ட்ஸ் பரபரப்பாகி இருக்கிறது.

‘நன்றாகப் புரிந்துகொண்ட ஒருவர் உங்களை கேள்வி கேட்க தூண்டமாட்டார். உங்களை காயப்படுத்துகிற எதையும் அவர்கள் செய்யப் போவது இல்லை. மறந்துவிடாதீர்கள்... பிரிவால் சுதந்திரம் அர்த்தமுள்ளதாக மாறியிருக்கிறது...’ என்று சமூக ஊடகத்தில் எழுதிவிட்டு தனது வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.

ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி ராஜோஷி பரூவாவும் ஒரு நடிகைதான். இவர் பிரபல நடிகை சகுந்தலா பரூவாவின் மகள். ஆஷிஷ் வித்யார்த்திக்கும், ராஜோஷிக்கும் திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். அவர் பெயர் அர்த் வித்யார்த்தி.

காம்ஸ் பாப்பா