கலர் கலராய் அவதாரமெடுக்கும் பூஞ்சை நோய்கள்!



கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அதிலிருந்து போராடி மீண்டு வரும் நோயாளிகளை கலர் கலரான பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. அரிதான ஆனால் ஆபத்தான பூஞ்சை தொற்றுநோயான மியூகோமைகோசிஸ் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை, தொற்று நோயாக அறிவித்துள்ளனர். பேராசிரியர் மருத்துவர் முரளிதரன், மியூகோமைகோசிஸ்  நோயின் தாக்கம், அறிகுறிகள், சிகிச்சை குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்கிறார்.

தடுப்பு சக்தி குறைவாக இருப்பவர்களையே இந்த நோய் தாக்குகிறது. கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு போராடி தப்பியவர்கள், கொரோனா போய்விட்டது என அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். அவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும், தங்கள் எதிர்ப்புச் சக்தியை மீண்டும் அதிகரிக்கும் போதுதான் முழுமையாக குணமடைகிறார்கள்.

கொரோனா தொற்றில் பாதித்து, நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கரும் பூஞ்சை நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதிலும் குறிப்பாக நீரிழிவு நோய் சீராக இல்லாதவர்கள் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் பாதிப்பு அதிகரிக்கலாம்.

இதுதவிர, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டயாலிசிஸ், புற்றுநோயாளிகள், கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை பெறுபவர்கள் அனைவருமே நோய் எதிர்ப்பு குறைபாடுடன் இந்த கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப்படக் கூடியவர்கள். வெளியே எப்படி நல்ல காற்றோட்டமான இடங்களில் ஃபங்கஸ் உருவாகாதோ, அதே போல நல்ல ஆரோக்கியமான உடலில் இந்த நோய் உருவாக வாய்ப்பில்லை.

இதன் ஆரம்ப அறிகுறிகள், மூக்கு வழியாக வெளிர் கருப்பு நிறங்களில் சீழ் அல்லது சளி வெளியேறுதல், கன்னங்களில் வலி மற்றும் வீக்கம், கண் வீக்கம், ஒரு பக்க தீவிர தலைவலி, கண் பார்வை இரண்டாக தெரிவது/ மங்கலாகத் தெரிவது, சிலருக்கு வாயில் கறுப்பு நிறத்தில் தடிப்புகள் தோன்றலாம். இதெல்லாம் ஆரம்பக் கட்ட அறிகுறிகள்தான்.

ஆனால், பலரும் இந்த ஆரம்பக் கட்டத்தில் மருத்துவரை அணுகமாட்டார்கள்.இந்த நோய் கண்களுக்கு பரவும் போது இரண்டாம் நிலை பாதிப்பை தரும். அப்போது உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது மட்டுமில்லாமல், 24-48 மணி நேரத்திற்குள் மூன்றாம் நிலையான மூளைக்கு இந்த நோய் பரவாமல் தடுப்பது மிக மிக அவசியம். அதனால், அறிகுறிகள் தோன்றியதுமே மருத்துவரை அணுகி உடனடி சிகிச்சை செய்ய வேண்டும்.

இந்த மியூகோமைகோசிஸ் நோய் மூக்கு, கண், மூளையை பாதிக்கும் நோயாகும். முதல் கட்டம் மூக்கில் தொடங்கி, கண்களுக்கு பரவி மூளையை பாதிக்கிறது. கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது கண்களையே அகற்றும் நிலை உருவாகலாம். இது மிகவும் கொடிய நிலை என்றாலும், மற்றொரு கண்ணிற்கு பரவாமல் தடுத்து மூளையை தாக்காமல் காக்க இதுவே வழியாகும்.

கொரோனா தாக்குதலுக்கு முன், வருடத்திற்கே மூன்று அல்லது நான்கு நோயாளிகள்தான் கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது ஒரே நாளில் மூன்று
நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

பலருக்கும் கொரோனா தொற்று தாக்கியபின், மருத்துவ பரிசோதனையில் நீரிழிவு நோய் இருப்பதும் தெரிய வருகிறது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்காது. அவர்களுக்கு கொரோனா சிகிச்சையின் போது ஸ்டீராய்டு மருந்துகள் கண்டிப்பாகச் செலுத்தப்படும். அப்போது சர்க்கரை நோயின் அளவும் அதிகரிக்கும். மருத்துவமனையில் இருக்கும் வரை மருத்துவர்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். ஆனால் கொரோனா குணமாகி வீட்டிற்கு வந்தாலும், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நோயாளிகளின் கடமை.

ஆனால் பல நாட்களாக மருத்துவமனையிலிருந்து திரும்பியவர்கள், உணவுக் கட்டுப்பாடு இல்லாமல், சரியான உடற்பயிற்சியும் செய்யாமல் அலட்சியமாக இருக்கும் போது நீரிழிவு நோய் அதிகரித்து, எதிர்ப்புச் சக்தியும் குறையும். கொரோனாவிலிருந்து தப்பித்துவிட்டோம், நீரிழிவு நோய் தானே சரியாகிவிடும் என நினைக்கும் போது கரும் பூஞ்சை நோய் தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

புற்றுநோய் நோயாளிகள், கிட்னி நோயாளிகள், டயாலிசிஸ் செய்பவர்கள் போன்றோர் தங்கள் நோயின் தீவிரத்தை உணர்ந்து பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிகள் இதன் தீவிரத்தை உணராமல் அஜாக்கிரதையாக இருந்தால், கரும் பூஞ்சை நோய் தாக்கலாம். சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து, ஆரோக்கியமான உணவையும், வளமான
வாழ்க்கை முறை மாற்றங்களையும் செய்து இந்த நோய் தாக்காமல் காத்துக்கொள்ளுங்கள்” என்கிறார் டாக்டர் முரளிதரன்.

கரும்பூஞ்சை நோயை தொடர்ந்து வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோய் இந்தியாவில் பரவலான இடங்களில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களை தாக்கி வருகிறது. வெள்ளை பூஞ்சை, கரும்பூஞ்சை நோயை விட ஆபத்தானது. இது நுரையீரலை மட்டுமல்லாமல், நகங்கள், தோல், சிறுநீரகம், மூளை போன்ற உடல் உறுப்புகளை பாதிக்கிறது.

இது புதிய நோய் அல்ல. எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை இது பல ஆண்டுகளாக தாக்கி வருகிறது. தற்போது கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அவர்களை இது பாதிக்க வாய்ப்புள்ளது. கொரோனா போன்ற அறிகுறிகளை இந்த நோய் வெளிப்படுத்தும். ஆனால் கொரோனா பரிசோதனையில் நெகடிவ் வரும். சி.டி. ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே மூலம் இந்த நோயை கண்டறிய முடியும்.  

மஞ்சள் பூஞ்சை என அழைக்கப்படும் மியூகர் செப்டிக் பூஞ்சை தொற்று நோய், பொதுவாக பல்லிகளில்தான் தோன்றும். இது கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்களை விட ஆபத்தானது என கூறப்படுகிறது. எடை குறைதல், பசியின்மை, சோம்பல் போன்றவை மஞ்சள் பூஞ்சை நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும். இதன் தீவிரம் அதிகரித்தால் உடல் உறுப்புகள் செயலிழக்க கூட வாய்ப்புள்ளது.

மக்களாக நம் கடமை, உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுதான். ஆரோக்கியமாக இருப்பவர்கள் இந்த நோயுடன் தொடர்பில் வந்தாலும், பாதிக்கப்படமாட்டார்கள். கொரோனாவிலிருந்து குணமாகி வீட்டிற்குச் செல்பவர்களிடம், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை செய்தால் நோய் வராமல்
கட்டுப்படுத்த முடியும்.

ஸ்வேதா கண்ணன்