கிச்சன் டைரீஸ் - டயட் மேனியா



டயட் மேனியா பகுதியில் லோ கார்போ டயட் வகைகள் பற்றி ஒரு பருந்துப் பார்வை பார்த்து வருகிறோம். தொடர்ந்து, சவுத் பீச் மற்றும் ஸ்டில்மேன் போன்ற லோ கார்போ டயட் வகைகள் பற்றி பார்த்தபின்பு, லோ ஃபேட் டயட்கள் பற்றிப் பார்ப்போம்.

சவுத் பீச் டயட்டை ஆர்த்தர் அகஸ்டன் என்பவர் 2003ம் ஆண்டில் தொடங்கினார். குறைந்த கிளைசெமிக் உள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்ட டயட் இது. இந்த டயட்டில் கார்போஹைட்ரேட்கள் கொழுப்புச்சத்துகளைப் போலவே நல்ல கார்போ, கெட்ட கார்போ என்று பிரிக்கப்படுகின்றன. இதில் நல்ல கார்போவை உடலில் போதுமான அளவில் சேர்த்து, கெட்ட கார்போவை குறைப்பதுவே இந்த சவுத் பீச் டயட்டின் வெற்றி ஃபார்முலா.

செளத் பீச் டயட்டில் மூன்று நிலைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் விகிதத்தை சிறிது சிறிதாக சேர்த்து, கொழுப்பு மற்றும் புரோட்டினை குறைப்பது இந்த டயட்டின் வழிமுறை. இதில் காய்கறிகள் முதல் அசைவம் வரை பலவகையான உணவுகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இந்த டயட்டின் முதல் நிலை என்பது உடனடி எடைக்குறைப்பை இலக்காகக் கொண்டது. அதாவது சராசரியாக வாரத்துக்கு மூன்று நான்கு கிலோ வரை எடைக்குறைப்பை இலக்காகக் குறித்திருப்பார்கள். இங்கிலாந்தின் தேசிய உணவு சேவை நிறுவனம் இந்த அதிரடி எடைக்குறிப்பால் சில சமயங்களில் உடலில் வைட்டமின், தாது உப்புகள், நார்ச்சத்துகள் ஆகியவற்றில் இழப்பு ஏற்படக்கூடும் என்று அறிவுறுத்தினாலும் இந்த டயட் கவுன்சிலர்கள் இது உடலில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்றே சொல்கிறார்கள். இந்த முதல் நிலை இரண்டு வாரங்கள் நீடிக்கும்.

இரண்டாவது நிலை என்பது நீடித்த கால அளவைக் கொண்டது. முதல் நிலையில் தடைசெய்யப்பட்ட சில உணவுகளை இந்த நிலையில் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட எடை அளவை நெருங்கும்வரை இந்த இரண்டாம் நிலை தொடரும். பெரும்பாலானவர்களுக்கு இந்த நிலையை நெருங்க சிறிது காலம் ஆகும்.

மூன்றாவது நிலை என்பது வாழ்நாளுக்கானது. இரண்டாவது நிலையான ஒருவர் அடைய வேண்டிய இலக்கான எடையை அடைந்த பிறகு அதைத் தொடர்ந்து பராமரிப்பதற்காக இந்த மூன்றாவது நிலையைத் தொடர வேண்டும். ஒருவேளை  மூன்றாம் நிலையில் இருக்கும்போது மீண்டும் எடை அதிகரிப்பு நிகழ்ந்துவிட்டால் நிபுணர்கள் உதவியோடு, முதல் நிலையிலிருந்தோ இரண்டாம் நிலையில் இருந்தோ மீண்டும் தொடர வேண்டும்.

எக்ஸ்பர்ட் விசிட்

இன்று கொரோனாதான் உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் உயிர் ஆபத்து. உலகில் உள்ள எல்லா நிபுணர்களுமே அதைத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தியாவின் புகழ் பெற்ற டயட்டீஷியன் ருஜுதா திவேகர் இந்த தொற்றுநோய் காலத்தில் உடலை உறுதியாக்கும், எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கும் உணவுகள் எதுவென சொல்கிறார்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுதான் இந்நாட்களில் அவசியம் செய்ய வேண்டிய வேலை. எனவே, உடலில் ஆண்டி ஆக்ஸிடண்ட்களை அதிகரிக்கும் மஞ்சள், லவங்கம், பட்டை, சீரகம், கிராம்பு, கடுகு, திப்பிலி, மிளகு, மிளகாய், வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை அதிகமாகச் சேர்க்கலாம்.

கவனம் இது வெயில் காலம் என்பதால் மிளகு, மிளகாய் போன்றவை முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றவர்களுக்கு மூலப் பிரச்சனைகள், அஜீரணப் பிரச்சனைகளை உருவாக்கலாம்.  எனவே, அவற்றை அளவோடு பயன்படுத்துங்கள். பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

உணவில் காய்கறிகள், பழங்களை அதிகமாகச் சேர்த்து அரிசி, கோதுமை போன்ற கார்போ உணவுகளைக் குறைவாகச் சேர்க்கலாம். வீட்டிலேயே இருப்பவர்களுக்கு இது மிகவும் நல்லது. இதனால், செரிமானம் எளிதாகும். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராது.

ஒரே வகையான காய்கறிகள் சாப்பிடுவதைவிடவும், பலவண்ண காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம். தினசரி ஏதேனும் ஒரு பழம் என்று சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்றால் செரிமானத்துக்காக வெந்நீர் குடிப்பதோடு, உலர் திராட்சைகள் சாப்பிடலாம்.

வீட்டில் வேலை செய்யாமல் இருப்பதால் சிலருக்கு உடல் உஷ்ணமாகிவிடும். இவர்கள் குளிர்ச்சியான பழங்கள் சாப்பிடலாம். நார்ச்சத்து உள்ள உணவு
களைச் சேர்ப்பதோடு, மோர் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தினசரி மூன்று லிட்டர் தண்ணீர் பருக மறக்காதீர்கள். வெறுமனே நீராகப் பருகுவதற்கு பதிலாக எலுமிச்சைச் சாறு, சீரகத் தண்ணீர் என்று பருகலாம். மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவை வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான பழங்கள். இந்த சீசனில் அதிகமும் கிடைக்கும் என்பதால் இவற்றை உண்ண மறக்காதீர்கள்.

ஃபாஸ்ட் ஃபுட்களுக்கு ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிடுங்கள். செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, உடலுக்கு எந்தவிதமான ஊட்டச்சத்துகளும் இல்லாதவை. அதுபோலவே செயற்கையான பழரச பானங்களைப் பருகுவதைவிடவும் இயற்கையான பழங்களை அப்படியே கடித்துச் சாப்பிடுவது நல்லது.

மூங்கில் நெல்லை சாப்பிட்ட மக்கள்

இந்த கொரோனா நாட்களில் அரசு ஊரடங்கு அறிவித்ததும் மக்களுக்கு ஏற்பட்ட முதல் பீதி உணவு பற்றியதுதான். செல்வந்தர்கள், உயர் வர்க்கத்தினருக்கு இந்தப் பிரச்சனை இல்லை. ஆனால், அன்றன்று உழைத்தால் அன்றைய உணவு என்று இருக்கும் அன்றாடங்காய்ச்சிகள் நம் நாட்டில் பல கோடிப் பேர் இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த கொரோனா நாட்களில் கடும் அவஸ்தைப்பட்டுவருகிறார்கள். கொரோனாவைவிடக் கொடிய பசி என்ற மிருகம் அவர்களை வேட்டையாடிக்கொண்டிருக்கும் கொடூர காலம் இது.

இந்நாட்களில் இந்தியாவை உலுக்கிய பழைய பஞ்ச நாட்களின் நினைவுகள் ஏற்படுவதைத் தடுக்க இயலவில்லை. இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கி இந்திய விடுதலை வரை சுமார் பதினைந்து பஞ்சங்கள் தலைவிரித்தாடின. சுதந்திர இந்தியாவிலும் மூன்று முறை பஞ்சம் வந்தது.

முதல் பஞ்சம் வட இந்தியாவில் வந்தாலும் தாது வருஷப் பஞ்சம் அல்லது தென்னிந்தியப் பஞ்சம் எனப்படும் கொடூரப் பஞ்சம்தான் நம் மக்களை வாட்டி வதைத்திருக்கிறது. நல்லதங்காள் பஞ்சம் என்று சொல்லப்படும் பஞ்சமும் இந்நாட்களில் ஏற்பட்டதுதான். ஒரே ஒருபிடி சோற்றுக்காக மக்கள் அலைந்து திரிந்திருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளை அடிமைகளாக விற்றிருக்கிறார்கள்.

நெல், சிறுதானியங்கள் உட்பட எதுவுமே கிடைக்காமல் போனதால் உண்ண வழியின்றி மக்கள் கற்றாழைத் தண்டை தோண்டி எடுத்து அதனை உண்டிருக்கிறார்கள். தாமரைத் தண்டின் அடிப்பாகத்தை உண்டிருக்கிறார்கள். மூங்கில் விளையும் அரிசியை யானைகள்கூட தின்னாது அவ்வளவு கடினம் அதனைச் செரிப்பது. ஆனால், வழியே இன்றி அதனையும் உண்டிருக்கிறார்கள்.

ஒரு வெள்ளை அதிகாரி தன் குறிப்புகளில் எழுதுகிறார். ஒரு நாய் எங்கிருந்தோ எலும்புத் துண்டை தூக்கிக்கொண்டு ஓட, அதனை விரட்டிப் போய் அந்த நாயைக் கொன்று அதன் வாயிலிருந்த எலும்பையும், அந்த நாயையும் சேர்த்தே தின்றிருக்கிறார்கள் நம் மக்கள்.

இன்று சீனர்களை நாம் கரப்பான் பூச்சி, பல்லி, பாம்பு, தவளை, வண்டுகள். நாய், பூனை என்று கண்டதையும் தின்கிறார்கள் என்று கேலி பேசுகிறோம் அல்லவா? சீனர்களிடம் இந்த வழக்கம் கடந்த நூற்றாண்டுகளில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் உருவானதுதான். பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்று சும்மாவா சொன்னார்கள்.

மனிதனின் இத்தனைப் பரிணாம வளர்ச்சியின் பின்னும் இருப்பது அவனது ஒரு ஜான் வயிறுதானே. இந்திய வரலாற்றில் அந்தக் கொடூரப் பஞ்சங்கள் அழியா நினைவுகளோடு இன்றும் இருக்கின்றன. இந்த கொரோனா காலங்கள் வரலாற்று உணர்வுள்ளவர்களுக்கு அந்நினைவுகளைக் கீறிவிடுகின்றன.
டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் பொருட்கள் வாங்கும்போது, சில பொருட் களில் ஆர்கானிக் என்றும், சில பொருட்களில் மேட் வித் ஆர்கானிக் என்றும், சிலவற்றில் ஆர்கானிக் இன்கிரிடென்ட்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இவற்றுக்கு எல்லாம் என்ன பொருள். இவை அனைத்தும் தரமான ஆர்கானிக் பொருட்கள்தானா என்பதைப் பார்ப்போம்.

100% ஆர்கானிக் : இவை, முழுமையான ஆர்கானிக் பொருட்கள். இவற்றில் இந்திய ஆர்கானிக் லோகோ, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆர்கானிக் ஏஜென்சிகளின் லோகோக்கள் இடம்பெற்று இருக்கும்.

ஆர்கானிக்: இவற்றில் 95 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாக இருக்க வேண்டும். எஞ்சி உள்ள 5 சதவிகிதத்தில்  (உப்பையும் நீரையும் தவிர) குளோரின் (பேக்கிங் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதால்), நிறமூட்டிகள் போன்ற  ஆர்கானிக் அல்லாத பிராசசிங் எய்டுகள் இருக்கலாம். ஆனால், அவை அங்கீகரிக்கப்பட்ட பொருட்களாக இருக்க வேண்டும்.

 மேட் வித் ஆர்கானிக்:  இவற்றில் 70 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களால் ஆனவையாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஊறுகாய் என்றால்  அதில் உள்ள மாகாய் இயற்கைமுறையில் விளைந்ததாக இருக்க வேண்டும். ஆனால், இவற்றில் சில சுவையூட்டிகளும் உப்புகளும் செயற்கையானவையாக இருக்கக்கூடும்.

ஆர்கானிக் இன்கிரிடெண்ட்ஸ்:  இவற்றில் 70 சதவிகிதத்துக்கும் குறைவான ஆர்கானிக் பொருட்கள் இருக்கும். இவற்றை ஆர்கானிக் உணவு என்று சொல்ல முடியாது. ஆனால், இவற்றின் லேபிளில் ஆர்கானிக் பொருட்களால் ஆன இன்கிரிடெண்ட்ஸ் உள்ளதென குறிப்பிட்டுக்கொள்ளலாம். உதாரணம் ஜாம்கள், சாஸ்கள் மற்றும் சப்ளிமென்டுகள்.

நேச்சுரல்:  இந்தியாவில் நேச்சுரல், ஹெர்பல் போன்றவைகளுக்கு எந்தவிதமான முறைசார்ந்த அங்கீகார சான்றிதழ்களும், கண்காணிப்புகளும் கிடையாது. இவற்றில் குறைந்த அளவு பிராசஸ்டு பொருட்கள் இருக்கக்கூடும் அல்லது இவைகள் போலியானவையாகவும் இருக்கக்கூடும்.
ஃபேர் டிரேடு: என்.ஜி.ஓ-க்கள் மூலமாக சந்தைப்படுத்தப்படும் பொருட்கள்.

உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் பொருட்கள் இவை. சில குறிப்பிட்ட ஊர்கள் சூழல் களில் மட்டும் இவற்றைக் காணலாம். உதாரணம், ஊட்டி டீத்தூள், காபிக்கொட்டை, காபி தூள்.ஆர்கானிக் பை டிரஸ்ட்: சிறிய விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் பெறுவது பெரிய அளவில் சந்தைப்படுத்துவது சாத்தியமில்லை.

எனவே, அவர்கள் சந்தைப்படுத்தும் பொருட்கள் அல்லது அவர்களால் சில என்.ஜி.ஓ க்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களில், ‘ஆர்கானிக் பை டிரஸ்ட்’ எனக் குறிப்பிட்டுக்கொள்வார்கள். இது ஒருவகை சுயசான்றிதழ் என்பதால் இவற்றின் தரத்தை நிர்ணயிப்பது கடினம். வாடிக்கையாளர்கள்தான் இவற்றின் நம்பகத்தன்மையை சோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.

கேஜ் ஃப்ரீ: இந்தியாவில் கேஜ் ஃப்ரீ, நியர் ஆர்கானிக் போன்ற பதங்கள் மாறி மாறி குறிப்பிடப்படுகின்றன. கூண்டில் அடைக்கப்படாமல், ஒரு பெரிய கட்டடத்தில் சுதந்திரமாக இருக்கவிடப்பட்ட பறவைகளின் இறைச்சிகளை கேஜ் ஃப்ரீ என்பார்கள். இதுவும் முறையான அங்கீகாரம் பெறப்பட்ட சான்று அல்ல.கிராஸ் ஃபெட்: தானியங்கள், புற்கள், இலை தழைகள் போன்ற இயற்கை உணவுகள் தந்து வளர்க்கப்பட்ட கால்நடைகள் மற்றும் பறவைகளின் இறைச்சி மற்றும் அவற்றில் இருந்து பெறப் படும் பால் பொருட்களில்  கிராஸ் ஃபெட்  என குறிப்பிடப்பட்டிருக்கும்.

நோ ஏடட் ஹார்மோன்ஸ்: ஹார்மோன் ஊசிகள் போடப்படாத கால்நடைகளில் இருந்து பெறப்பட்ட பால்பொருட்கள் மற்றும் இறைச்சிகள் மேல் நோ ஏடட் ஹார்மோன்ஸ் எனக்குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில்  முறையாக இந்த சான்றிதழ் பெற்றுள்ள நிறுவனங்கள் உள்ளன.

 யார் சான்று தருவது? ஏபிஇடிஏ (Agricultural and Processed Food Products Export Development Authority)எனும் மத்திய அரசு நிறுவனம் ஆர்கானிக் பொருட்களுக்கான தரச்சான்றிதழை வழங்குகிறது. தற்போது, ஏற்றுமதி பொருட்களுக்கு மட்டுமே அரசின் அங்கீகாரம் கட்டாயம் என்று உள்ளது.

மற்றவர்கள் விரும்பினால் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். உள்ளூர் பொருட் களுக்கு ஏற்கெனவே அக்மார்க் அங்கீகாரம் உள்ளது. ஆனால், இந்தச் சான்றிதழ் பெறுவதும் கட்டாயம் அல்ல. எனவே, இந்தியாவைப் பொறுத்தவரை ‘ஆர்கானிக் பை டிரஸ்ட்’ என்பதுதான் பொதுவான சந்தை அங்கீகாரமாக பெரும் அளவு உள்ளது எனலாம்.

ஃபுட் மித்ஸ்

சில்லென்று ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட்டால் அது குளிர்ச்சி என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் அது குளிர்ச்சி அல்ல வெப்பம்தான். சிறுவயதில் உள்ளுறை வெப்பம் என்று படித்திருப்போம் இல்லையா? அதே கான்செப்ட்தான் இது. ஃபிரிட்ஜ் உண்மையில் ஒரு பொருளின் மூலக்கூறு வெப்பத்தை குளிர்ச்சியாக மாற்றிவிடுவதில்லை.

மாறாக அதனை உள்ளே உறையச் செய்கிறது. எனவே, வெயிலில் சுற்றிவிட்டு வந்து சில்லென்று ஃபிரிட்ஜ் தண்ணீர் குடித்தால் குளிர்ச்சி என்று நினைக்க வேண்டாம். அதனால் உடல் மேலும் அதிக உஷ்ணமே ஆகக்கூடும். குளிரூட்டப்படாத தண்ணீரே போதுமானது.

உணவு விதி #47

தொற்றுநோய் காலங்களின் உணவு விதி என்பது ஒன்றல்ல. அதில் பல உள்ளன என்றாலும் நாம் மறக்கக் கூடாத பொன்விதி ஒன்றுள்ளது. அது சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுங்கள். நம் பாரம்பரிய உணவு முறை என்னவோ அதை மட்டுமே சாப்பிடுங்கள். இதுதான் இவ்விதிகளிலேயே முக்கியமானது.

இளங்கோ கிருஷ்ணன்