குழந்தையின்மையால் மன உளைச்சலா?



-பூர்ணிமா

குழந்தையின்மையால் பல பெண்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கும் முன், பலதரப்பட்ட சிந்தனைகளுக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள். இவற்றிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பது குறித்து சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்ரீனிவாஸ் ப்ரியா மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் ராஜப்ரியா அய்யப்பனிடம் கேட்டபோது பல தகவல்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“குழந்தையின்மைக்கான சிகிச்சை கடினமானதா, அதிக செலவாகுமா, அதிக வலி இருக்குமா இப்படி பல சிந்தனைகள் குழந்தை பெற முடியாத பெண்களின் மனதில் எழும். மருத்துவருடனான சில சந்திப்புகளில் சரியான பலன் கிடைக்கவில்லை என்றால், சிகிச்சை எடுப்பதை நிறுத்திவிடுகிறார்கள். ‘‘நான் அதிர்ஷ்டசாலி இல்லை, சமூகம் என்னை மலடி என்று கூறுகிறது, பெண்களுக்கு இலவசமாக கிடைக்கும் தாய்மைக்கு தான் மட்டும் அதிகம் செலவு செய்ய வேண்டுமா?” இப்படி பல கேள்விகள் இவர்கள் மனதில் தோன்றுகின்றன.

மகப்பேறு நிபுணரை முதலில் அணுகும் போது, அவர்களின் மனநிலையை கண்டறியவே பல மணி நேரமாகும். குறிப்பாக வேலைக்குச் செல்லாத பெண்களிடம் மகப்பேறு குறித்த ரகசியத்தை எளிதில் கண்டறியமுடியும். இப்போது உள்ள நவீன உலகில் குழந்தையின்மைக்கு பல காரணங்கள் உள்ளன.

கணவன்-மனைவி இடையே நெருக்கமின்மை, சந்தேக குணம், பாலிசிஸ்டிக் கருப்பைகள் காரணமாக ஏற்படும் மாதவிடாய் பிரச்னை, கர்ப்பப்பை குழாயில் தொற்று காரணமாக ஏற்படும் அடைப்பு, ஆலிகோவாஸ்தேனோடெராடடோஜுஸ்பெர்மியா (Oligoasthenoteratozoospermia). இவை எல்லாம் யதார்த்தமான எதிர்பார்ப்புகளை முற்றிலும் முறியடிக்க காரணமாகிறது.

இந்த எதிர்பார்ப்புகளை இயற்கை முற்றிலும் அளிக்க தயாராக உள்ளது. அதற்கு இந்த காலத்து தம்பதியினர் ஒத்துழைக்கவேண்டும். கொஞ்சம் பொறுமை, உறுதியான மனநிலை, மகப்பேறு நிபுணரின் படிப்படியான ஆலோசனைகள் இவை எல்லாம் கணவன்-மனைவி இடையே உள்ள காதலை அதிகப்படுத்தும். அவர்கள் கண்ட கனவும் நனவாகும். இது மட்டும் இல்லாமல், தம்பதியரின் வசதிக்கு ஏற்ப சிகிச்சை முறைகளும். மாறுபடும். இதன் மூலம் அவர்கள் மனதில் உள்ள நெகட்டிவ் சிந்தனைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

பாலிசிஸ்டிக் கருப்பைகள் இப்போது எல்லா பெண்களும் சந்திக்கும் பிரச்னையாக உள்ளது. பாலிசிஸ்டிக் கருப்பைகள் குழந்தைகள் அம்மாவின் கருவுக்குள் இருக்கும்போதே உருவாகிறது. இது உருவாக குறிப்பிட்ட காரணங்கள் இல்லை. இருந்தாலும் உடல்கூறு, பரம்பரை மற்றும் நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் ரசாயன மாற்றம், நவீனமான வாழ்க்கைமுறை இவை எல்லாம் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது.

மேலும் இந்த அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மாதவிடாய் பிரச்னை, உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, ஹைபெராடியோஜெனிசம் (Hyperandrogenism), இடுப்பு பகுதியில் எடுக்கப்படும் ஸ்கேன் (Pelvic scan proof) இவை எல்லாம் பாலிசிஸ்டிக் கருப்பைகளுக்கான முக்கிய அம்சங்கள். முகத்தில் கரும்புள்ளிகள், ஒவ்வாமை காரணமாக ஏற்படும் பொடுகு பிரச்னையால் வழுக்கை, ஆண்களைப் போல் முகத்தில் அதிக முடி வளர்ச்சி, ஆரோக்கியமற்ற உடல் பருமன் மற்றும் சமூகம் எளிதில் கூறிவிடும் இழிசொற்கள் இவை எல்லாம் உளவியல்ரீதியாக அவர்களை பெருமளவில் பாதிக்கும்.

இவை எல்லாம் குணப்படுத்தக் கூடியது என்றாலும், பலர் சமூகத்தில் அவமானப்பட நேரிடும் என்பதால், சிகிச்சைக்கு வரத் தயங்குகிறார்கள். பாலிசிஸ்டிக் கருப்பைகள், இப்போது எல்லா பெண்களின் முக்கிய பிரச்னையாக இருப்பதால், இந்தப் பிரச்னைக்காகவே, சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளன. அதில் மனநிலை ஆலோசகர்கள், எண்டோகிரைனாலஜிஸ்ட் (endocrinologist), பேரியாடிக்(bariatic) ஆலோசகர், உணவு ஆலோசகர், பிசியோதெரபிஸ்ட் என அனைத்து வல்லுனர்களும் ஒரே இடத்தில் இருப்பதால், நோயாளியின் சிக்கலான மனநிலையை மாற்றி அவர்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வு அளிக்க முடியும்.

முதலில் பிரச்னைக்குரிய ஒவ்வொன்றையும் தகர்க்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் 10 சதவிகித உடல் பருமனை குறைக்க வேண்டும். அடுத்து சிகிச்சைக்கான ஊசிகள், மருந்துகள், லேப்ரஸ்கோபிக் சிகிச்சைகள் கொடுக்கப்படும். இவற்றில் ஏதும் பலன் அளிக்கவில்லை என்றால் அடுத்த கட்டம் IVF (In Vitro Fertilisation) அல்லது Intra Cytoplasmic Sperm (ICS).

அதாவது செயற்கை முறையில் கருத்தரிப்பது. சிகிச்சைக்கான நேரம் என்பது சில மாதங்கள் ஆகலாம் அல்லது சில வருடங்கள் கூட ஆகலாம். இதைப் பற்றி தம்பதியருக்கு தெளிவாக புரியவைக்க வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமானது, அவர்கள் சிகிச்சை எடுக்கும் போது, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது அவசியம்.

செயற்கை முறையில் கருத்தரிக்கும் போது, ஹார்மோன்கள் பிரச்னை மட்டும் இல்லாமல் உடல்ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படும். இவை குறித்து டாக்டர்களின் ஆலோசனை பெற்றாலே சுகமான வாழ்க்கையை அனுபவிக்கலாம். பாலிசிஸ்டிக் கருப்பைகள் நோயை பொறுத்தவரை நோயாளிகளின் ஒழுக்கம் மிகவும் அவசியம்.

உடல் எடை குறையும் போது, அது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்குவதால், உடலில் பல வித மாற்றங்கள் ஏற்படும். உணவில் மட்டும் கட்டுப்பாடு இருந்தால் அது உதவி செய்யாது. அதனுடன் சேர்த்து உடற்பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். இதன் மூலம் பல தடைகளை தாண்டி நாம் எல்லாரும் கை கோர்த்து ஒரு பெண்ணுக்கு குழந்தையின்மையால் ஏற்படும் மனஉளைச்சலை போக்கி ஜெயிக்க முடியும்” என்கிறார்.