ப்ரியங்களுடன்
‘100 கேள்விகள் 100 பதில்கள் அனைத்தும் பல்வேறு துறை நிபுணர்களின் வாழ்க்கையோடு இயைந்த, வாசகர்களின் கேட்கப்படாத கேள்விகளுக்கும் விடையளிப்பதாக இருந்தது. அத்தனையும் அரிய தகவல்கள்... பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியவை. மனம் நிறைந்த பாராட்டுகள்! - கி.புஷ்பலதா, சென்னை - 20., ஜெ.சொர்ணா, காரமடை., கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்., எஸ்.ஸ்டெல்லா, செங்கல்பட்டு., சுகந்தி நாராயணன், வியாசர் காலனி., ரஜினி பாலசுப்ரமணியன், சென்னை-91 மற்றும் பலர்.
நடிகை ரித்திகா சிங் மற்றும் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு ஜெயிக்கணும் என்பது மட்டுமே மனதில் இருந்ததால் இறுதிச்சுற்றின் இரும்புக்கரங்களில் வெற்றிக்கோப்பை! - பி.வைஷ்ணவி, சென்னை மற்றும் எஸ்.முருகன், ஓசூர்.
ரெடிமேட் ‘ஜாம்’ ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமில்லாத நிலையில், பழங்களை வைத்து வீட்டிலேயே ஜாம் தயாரிக்கலாம் என்ற கானசரஸ்வதியின் தகவல் ஆரோக்கிய வரவாக அமைந்தது. - வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.
சிறுகிழங்கு பற்றி டயட்டீசியன் நித்யஸ்ரீ வழங்கிய மருத்துவ மகிமைகள் அசத்தல். முதன்முதலாக சிறுகிழங்கு பற்றி அறிந்து கொண்டேன். - கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.
டிப்ஸ்... டிப்ஸ்... (என் சமையலறையில்) அனைத்துமே ‘அடடே செய்துடலாமே’ என எண்ண வைத்தது. - வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி -18 மற்றும் என்.கலாவதி, திருவள்ளூர்.
மக்கள் விஞ்ஞானி டோரதி ஹட்ஜ்கின் மனிதநேய சிந்தனையாளர் என்பது கூடுதல் சிறப்பு, 4 பிள்ளைகளுடன் குடும்ப வாழ்வை செவ்வனே நடத்தி, காலங்கடந்து படித்து, செயல்வீராங்கனை ஆனது வியப்பு. இவரை மேரி க்யூரியின் வாரிசு என்றால் மிகையில்லை! ‘பிடிகருணை’ என்கிற சிறுகிழங்கை சிறப்பாகச் சமைத்துக் காட்டிய தோழிக்கு வாழ்த்துகள்! - எஸ்.நவீனா தாமு, பொன்னேரி.
காமராஜ் போல வீட்டுக்கு ஒரு மருத்துவ நிபுணர் இருந்துவிட்டால் பிரச்னையே வராது. மாற்றத்துக்கான முதல் படியை ஆழமாக வைக்கச் சொல்லி, அடுத்த இதழை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துவிட்டார். - ராஜிகுருஸ்வாமி, சென்னை-88.
இணைப்பு இதழ் டின்னர் ரெசிபி 30ல் சர்க்கரைவள்ளிக்கிழங்கு தோசை செய்து சாப்பிட்டோம். ருசியோ ருசி... அவ்வளவு ருசி. குங்குமம் தோழிக்கு எங்கள் குடும்பம் சார்பில் நன்றி! - இல.வள்ளிமயில், திருநகர், மதுரை.
‘தமிழ்ல எனக்குப் பிடிச்ச வார்த்தை சாப்பாடு’ என சாப்பாட்டின் வழியாக அன்பை ஊட்டும் தமிழர் பண்பாட்டின் மேன்மையைக் கூறிய மும்தாஜ் சர்க்கார்க்கு பாராட்டுகள்! - எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
5 வயதுக் குழந்தையின் நடை எவ்வளவு அழகோ, அதுபோல 5ம் ஆண்டில் கால் பதிக்கும் தோழியே! நீ மேன்மேலும் வளர வாசகர்களாகிய எங்களது பங்களிப்பு என்றும் உண்டு. பாசத்துக்குரிய குங்குமம் தோழி 5ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்! - வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்., கே.ராஜேஸ்வரி, மணப்பாறை., பிரமீளா, நாச்சியார்கோவில் மற்றும் பலர்...
|