நீதி தேவதைகள்
வழக்கறிஞர் முதல் வருங்கால அதிபர் வரை!
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் களமிறங்கி இருக்கும் ஹிலாரி ரோதம் கிளிண்டன் - வழக்கறிஞர். அவர் மட்டுமல்ல... அவரது கணவர் முன்னாள் அமெரிக்க அதிபரான பில் கிளிண்டனும் வழக்கறிஞர். இப்போது அதிபராக பதவி வகிக்கும் பராக் ஒபாமாவும் வழக்கறிஞர். இந்தியாவில் அரசியலுக்கும் திரைத்துறைக்கும் உள்ள தொடர்பு போல, அமெரிக்காவில் அரசியலுக்கும் வழக்கறிஞர் தொழிலுக்கும் நிறைய தொடர்பு உண்டு!
இளைஞர்களின் எழுச்சி நாயகன் விவேகானந்தர் சென்று உரையாற்றிய சிகாகோவில், இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் ஹிலாரி. விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம், வினாடிவினா போட்டி களில் கலந்து கொள்ளுதல், குழந்தைகள் நலனுக்கான சேவையில் ஈடுபடுதல் என துறுதுறுவென இயங்கினார். வகுப்பில் லீடராகவும், அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பவராகவும் இருந்துள்ளார். யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.
யேல் சட்ட பத்திரிகையில் எடிட்டர் குழுவிலும் ஹிலாரி அங்கம் வகித்திருக்கிறார். கல்லூரி விடுமுறையில் கூட சட்ட ஆலோசனை உதவிகள் வழங்க வேறு மாகாணங்களுக்கு செல்வார். அர்கன்சாஸ் மாநிலம் ஹிலாரிக்கு முக்கியமானது. அங்குதான் அவரின் வருங்கால கணவர் - சட்டக்கல்லூரி காதலர் - பில் கிளிண்டன் சட்டப் பேராசிரியராக பணியாற்றினார். ஹிலாரியும் அதே பல்கலைக்கழகத்தில் கிரிமினல் மற்றும் அரசியலமைப்பு சட்டம் போதிக்கும் விரிவுரையாளரானார். குழந்தைகள் மற்றும் குடும்பம் சம்பந்தமான லீகல் கிளினிக்கும் தொடங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் படிக்கும் காலத்தில் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகும் அவருடைய கவனம் முழுவதும் குழந்தைகள், குடும்ப நலனிலேயே இருந்தது. அதனால் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் (CDF) சேர்ந்தார். வீடு வீடாக சென்று குழந்தைகளின் தேவையை கேட்டறிந்தார். தென் கலிஃபோர்னியா சிறைச்சாலையில் கைதிகளாக இருக்கும் சிறார்களிடம் பேட்டி எடுத்தார்.
மீனவக் குடும்பத்தில் பிறந்த ஊனமுற்ற சிறுமிக்கு பள்ளி சென்று படிக்க ஆசை. ஆனால். நடந்து போக இயலாத அந்த சிறுமி யின் ஆதங்கம் இவரது மனதை தைத்திருக்கிறது. இந்த சிறுமியை போலவே நடக்க முடியாமல் வீல் சேரில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் எல்லா குழந்தைகளுக்குள்ளும் இதே போன்ற ஏக்கம் உள்ளிருக்கும் என்பதை உணர்ந்தார். வேறுசில வழக்கறிஞர்களோடு சேர்ந்த இவரது முயற்சியால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு CDF குழந்தைகள் உதவித்தொகை மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. மாற்றுத்திறனாளிகளும் அரசுப் பள்ளிகளில் படிக்க அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில் இடம் கிடைப்பதுதான் கடினம். அங்கு அனைவரும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவே விரும்புவார்கள்.
ஃபெய்டிவெலி (Fayetteville) என்ற இடத்தில் வாடகை வீட்டில் குடியிருந்தார் பில் கிளிண்டன். காதலியோடு அவர் சாலையை கடக்கும்போது, ‘வீடு விற்பனைக்கு’ பலகை தென்பட்டது. அந்த வீடு ஹிலாரிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்க கிளிண்டன் அந்த வீட்டை சொந்தமாக வாங்கினார். அந்த வீட்டில்தான் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். கிளிண்டனின் அரசியல் பிரவாகத்துக்கு காரணமானவரும் ஹிலாரியே. சட்டப் பேராசிரியராக இருந்த கிளிண்டன் எதிர்பாராமல் வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அரசியலில் இறங்கினார். அர்கன்சாசின் அட்டர்னி ஜெனரலாக நியமனமானார். சிறிது காலத்துக்குப் பின் அர்கன்சாசின் கவர்னராக நியமனமானார். நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் விரிவுரையாளர் வேலையை ஹிலாரியால் தொடர முடியவில்லை. அதனால் வீட்டுக்கு அருகில் இருக்கும் ரோஸ் லா பார்ம் மற்றும் வின்சி லா பார்ம்களில் சேர முயற்சித்தார். அந்த இரண்டு சட்ட நிறுவனங்களும் ஹிலாரியை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. காரணம் அவர் பெண் என்பதே. அதோடு, அம்மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக ஹிலாரியின் கணவர் பதவி வகிப்பதால், அமெரிக்க பார் அசோசியேசனின் அனுமதி வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது என்றனர்.
தடைகள் நீங்கி ரோஸ் லா பார்மில் இவர் சேர்ந்த பிறகும் அங்கிருப்பவர்கள் ஹிலாரியை சோதனைப் பொருளாகவே கண்டனர். அவருடைய முடி, கண் இமை, பாவனை என அவருக்குப் பின்னால் கேலி பேசினர் (மாகாண கவர்னரின் மனைவி என்று தெரிந்த பிறகும்). நீதிமன்றம் சென்று வாதிடும் வேலையும் இவருக்கு கொடுக்கப்படவில்லை. செத்த எலி தேடிக் கொடுத்த புகழ் போனால் போகட்டுமென்று செத்த எலி வழக்குக்கு வாதாட ஹிலாரியை அனுப்பி வைத்தனர். நீதிமன்றத்தில் வாதாடும் முதல் வழக்கு என்பதால் ஜூரி குழு மற்றும் நீதிபதியை கண்டு பயந்து கொண்டிருந்தார் ஹிலாரி. உணவுப் பொருள் பதப்படுத்தும் தொழிற்சாலை மீது ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பதப்படுத்தும் நிறுவனத்தின் சார்பாக பேச வேண்டிய வழக்கறிஞராக நீதிமன்றத்தில் நின்றார் ஹிலாரி. பதப்படுத்திய உணவை சாப்பிட திறந்த நபர் அதில் செத்த எலியை கண்டதும் அருவெறுப்படைந்து அப்போதிலிருந்து துப்ப ஆரம்பித்தவர் துப்புவதை நிறுத்தவே இல்லையாம். நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது இருக்கையில் அமர்ந்திருந்த வாதி கையில் இருந்த கர்சிப்பில் துப்பியவாறே பரிதாபமாக நோட்டமிட்டு எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார். துப்புவதிலேயே அவர் பிசியாக இருப்பதால், அவருடைய வருங்கால மனைவியை முத்தமிட முடியவில்லை. அதனால் நிறுவனம் தனக்கு பெரும் தொகையை நஷ்டஈடாகக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘எலி விழுந்த உணவுப் பண்டத்தை விற்றது நிறுவனத்தின் கவனக்குறைவுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்த உணவை அவர் திறந்து மட்டுமே பார்த்திருக்கிறார்... உட்கொள்ளவில்லை. அதனால் அவருக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என்று ஹிலாரி வாதாடினார். அவரது திறமைக்கு பரிசாக, குறைந்த தொகையை மட்டுமே பாதிக்கப்பட்டவருக்கு நிறுவனம் கொடுத்தால் போதும் என்று கட்டளையிட்டது நீதிமன்றம்.
ஹிலாரி கிளிண்டன் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்த போது, 4 மாதங்கள் விடுப்பில் இருந்ததால், ரோஸ் சட்ட நிறுவனத்திலிருந்து பாதி ஊதியமே கிடைத்தது. குழந்தை பிறப்பால் பெண்களின் வேலை பாதிக்கப்படுவதும் பணத்தேவைக்காக அவர்கள் குழந்தையை அருகிலிருந்து பராமரிக்க முடியாமல் வேலையை தேடி ஓடுவதுமான நிலையை இத்தம்பதி நன்கு உணர்ந்தனர். இதனால், அதிபரானவுடன் முதன்முதலாக கிளிண்டன் கையெழுத்திட்டதே குடும்பம் மற்றும் மருத்துவ விடுப்புச் சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவில்தான்! சட்டத்தையே மாற்றியமைத்தவர் அர்கன்சாசிஸ் கல்லூரியில் இலவச சட்ட உதவி மையத்தில் இணை நிறுவனர் மற்றும் உறுப்பினரான இவரிடம் (legal aid clinic) சட்ட உதவிக்காக வருபவர்களுடன் சட்ட மாணவர்களை உதவிக்கு அனுப்பி வைப்பார். ஆனால், நீதிபதி பட் அதற்கு அனுமதிக்க மாட்டார். நீதிமன்றத்துக்கு சட்ட உதவியோடு வரும் நபர்களின் மொத்த சொத்து மதிப்பு 10 டாலருக்குள் இருக்க வேண்டும் என்பது விதி. வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை சேர்த்தாலே அதனுடைய மதிப்பு 10 டாலருக்கு மேல் சென்றுவிடும். அதனால் வசதியில்லாதவர்கள் யாருமே சட்ட உதவியை நாட முடியாது. மாநில நீதிமன்றத்தின் எக்ஸிகியூடிவ் கமிட்டி முன்பு நீதிபதியும் ஹிலாரியும் அவரவர் கருத்துகளை முன்வைத்தனர். ஒருவழியாக ஹிலாரியின் குறிக்கோள் நிறைவேறும் வகையில் 10 டாலர் சொத்து மதிப்பு என்ற சரத்துகள் நீக்கப்பட்டன.
இயற்கையாகவே மனித உரிமையை வாழ்நாள் லட்சியமாக கொண்டு களத்தில் பணியாற்றிவரும் ஹிலாரி, இப்போது அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஆற்றும் உரை தனித்துவம் பெற்று உள்ளது. ‘ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் (LGBT) போன்றோர் மக்களால் தனித்து விடப்பட்டுள்ளனர். நான் அதிபரானால் அந்த நிலையில் மாற்றம் வரும். அவர்களும் அடிப்படை உரிமைகள் பெற வேண்டும்’ என்று உறுதி கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் மட்டுமல்ல... இதுவரை 80 நாடுகளுக்கு மேல் பயணம் செய்து மனித உரிமைகளுக்காகவும் பெண்களின் உரிமைகளுக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். சகலகலா வல்லி தேசிய சட்ட பத்திரிகை, ‘ஆதிக்கம் செலுத்தும் நூறு வழக்கறிஞர்களில் ஹிலாரியும் ஒருவர்’ என்று இரு முறை அங்கீகரித்துள்ளது. ஹிலாரியின் சொந்த வாழ்க்கை, சட்ட சேவை, அரசியல் பிரவாகம் என அனைத்தையும் விரிவாக விவரிக்கும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. குடும்பம், வேலை, சேவை என்று வரிசைப்படுத்தி தனது பங்களிப்பை எதிலும் குறையில்லாமல் செய்து வருகிறார். அதற்குச் சான்றுதான் அவரின் ஒரே மகள் செல்சியா. அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியாளர், செனட்டர், ரோஸ் சட்ட அலுவலகத்தில் பார்ட்னரான முதல் பெண், வால்மார்ட் வணிகத்தின் போர்டு மெம்பர்களில் பெண் உறுப்பினர். 1994ல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களுக்கு நீதி வழங்கும் தனித்துறையை நிறுவ காரணமாக இருந்தவர் என பன்முகத்தன்மை படைத்தவராக விளங்குகிறார் ஹிலாரி. மனதுக்குள் லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதை நிறைவேற்ற முடியும் என்ற பாடத்தை அவருக்கு கற்றுக் கொடுத்தது அவரது தாயார்தான். மார்ட்டின் லூதர் கிங் உரையை கேட்ட பிறகே மனித உரிமைகள் மீதும் அரசியல் மீதும் தாக்கம் ஏற்பட்டது என்கிறார் ஹிலாரி. அட்டர்னி ஆண்டணி தன்னிடம் சட்ட உதவி நாடி வந்த தம்பதியை ஹிலாரியிடம் அனுப்பி வைத்தார். அந்தத் தம்பதி தாங்கள் இரண்டரை வருடங்கள் வளர்த்த குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாக கூறினர். அர்கான்சாஸ் மனித வளத்துறை சட்டத்தில் அதற்கு அனுமதியில்லை என மறுத்துவிட்டது. இந்தச் சம்பவம் அவரின் மனதிலேயே தங்கி இருந்து, 1996ல் தத்தெடுத்தல் மற்றும் பாதுகாப்பான குடும்பச் சட்டம் உருவாக காரணமானது.
வதந்திகள் சேரை தூற்றியும் வாடாத வண்ண ரோஜா சமூகத்தின் நேரடி வெளிச்சத்துக்கு வருபவர்கள் உயர உயர வதந்திகளும் ஏதேனும் ஒரு வடிவில் வந்த வண்ணமே இருக்கும். ஹிலாரி அமெரிக்க அரசாங்கத்தில் பதவி வகிக்கையில் அரசு விதிப்படி இணைய செய்திகள் அனுப்பும்போது அரசாங்க சர்வரையே பயன்படுத்த வேண்டும். ஹிலாரி தனிப்பட்ட சர்வரை பயன்படுத்தியுள்ளார் என்பது இப்போது தெரியவந்துள்ளது. ‘அவர் அரசாங்க ரகசியத்தை சேகரித்து வைத்துள்ளார் அல்லது ஏதோ தவறு செய்துள்ளார். அதை மறைக்கத்தான் தனிப்பட்ட சர்வரை பயன்படுத்தி இருக்கிறார்’ என்று ஹிலாரியை விளக்கம் கேட்டு விவகாரமாக்கி உள்ளனர். சர்ச்சையை கிளப்பியுள்ளபாலின வழக்கு 1975ல் வாஷிங்டன் நீதிமன்றத்தில் நடந்த பாலியல் வழக்கை கையில் எடுத்துக்கொண்டு, அமெரிக்க செய்தித்தாள் களும் வலைத்தளங்களும் சுவாரஸ்ய செய்தியை கொடுக்கிறோம் என்ற பேர் வழியில் ஹிலாரியை உரசி பார்க்கின்றன. அன்று தாமஸ் டைலர் என்பவர் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காகக் கைதானார். நமத்துப்போன பட்டாசை கொளுத்தி வெடிக்க வைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபடு வதற்கான காரணம் ஹிலாரி. 1975களில் ஹிலாரியின் விவாதம் அடங்கிய கேசட் இப்போது கிடைத்திருக்கிறதாம். ‘அன்று தாமஸ் டைலருக்காக வாதாடியவர் இவர்தான். பெண்களின் உரிமைப் போராளி என்று வக்கணையான முலாம் பூசிக்கொண்டு உலாவரும் இவர், 12 வயது சிறுமிக்கு எதிராக குற்றவாளிக்கு துணை போயிருக்கிறார்’ என்று ஹிலாரியைத் தூற்றுகின்றனர். நடந்தது என்ன?
அப்போது வழக்கறிஞரும் 12 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்த கிப்சன் நடந்தவற்றை விளக்கி கூறுகிறார். குற்றவாளி சார்பாக வாதிட யாருமில்லாததால் நீதிமன்றம் வழக்கறிஞரை நியமிக்க வேண்டியிருந்தது. நீதிபதி வசதியில்லாத குற்றவாளிக்காக வாதாட ஓர் ஆண் வழக்கறிஞரை நியமித்திருந்தார். ஏதோ காரணத்துக்காக அவரால் வழக்கை நடத்த முடியாத போது நீதிபதி, ஹிலாரியை நியமித்தார். நீதிபதியின் உத்தரவு வெளியான உடனே ஹிலாரி என்னை அழைத்தார். ‘இந்த வழக்கை எடுத்து நடத்த எனக்குத் துளியும் விருப்பமில்லை. என்னை எப்படியாவது இந்த கேஸிலிருந்து விடுவித்துவிடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். நீதிபதியை சந்திக்கும்படி அவருக்கு நான் அறிவுரை வழங்கினேன். ஹிலாரி நீதிபதியை சந்தித்து கேட்டுக் கொண்டார். ஆனால், ஹிலாரியின் வேண்டுகோளை நீதிபதி ஏற்கவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் 27 வயதான ஹிலாரி, நீதிமன்ற ஆணைக்காகவே குற்றவாளியின் சார்பாக வாதாடினார். இதில் ஹிலாரியின் தவறு எதுவுமில்லை என்று தெரிந்தாலும், எத்தனை பேர் இதை நம்புவார்கள் என்பதுதான் குழப்பம்.
ஹிலாரியும் கிளிண்டனும் கணவன் மனைவியே இல்லை. அவர்கள் பிசினஸ் பார்ட்னர்கள் என்று பிரபல எழுத்தாளர் ஒருவர் இன்னொரு வெடியை இப்போது வீசியுள்ளார். ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ என்பது ஹிலாரிக்கு தெரியாததா? அவரின் இலக்கு அமெரிக்க அதிபர் நாற்காலியின் மீதே உள்ளது. வழக்கறிஞர் ஹிலாரி ஐக்கிய அமெரிக்காவின் வருங்கால அதிபராவார் என்று கருத்துக்கணிப்பு குழு மட்டுமல்ல... சமூகமும் எதிர்நோக்கு கிறது. புதிய சட்டங்கள் பல வடிவெடுக்க ஹிலாரி புதிய அவதாரம் எடுப்பாராக!
‘‘அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியாளர், செனட்டர், ரோஸ் சட்ட அலுவலகத்தில் பார்ட்னரான முதல் பெண், வால்மார்ட் வணிகத்தின் போர்டு மெம்பர்களில் பெண் உறுப்பினர். 1994ல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களுக்கு நீதி வழங்கும் தனித்துறையை நிறுவ காரணமாக இருந்தவர் என பன்முகத்தன்மை படைத்தவராக விளங்குகிறார் ஹிலாரி.’’ மார்ட்டின் லூதர் கிங் உரையை கேட்ட பிறகே மனித உரிமைகள் மீதும் அரசியல் மீதும் தாக்கம் ஏற்பட்டது என்கிறார் ஹிலாரி.
(தேவதைகளைச் சந்திப்போம்!)
|