கிச்சன் டிப்ஸ்
*சப்பாத்தி மிருதுவாக இருக்க கோதுமை மாவுடன் ஒரு வாழைப்பழம், ஒரு கரண்டி தயிர் விட்டு, கொதிநீர் விட்டு பிசைந்து சுட்டால், சப்பாத்தி மென்மையாய் இருப்பதுடன் சிறிது இனிப்பாகவும் இருக்கும்.
 *முற்றிய கோவைக்காயில் பொரியல் செய்யும் பொழுது, சிறிது வெல்லம் சேர்த்துச் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். சுவையும் கூடுதலாகும்.
*வெண்டைக்காயை வதக்குவதற்கு முன் ஒரு தேக்கரண்டி புளித்த மோரை சேர்த்தால், வெண்டைக்காய் மொறு மொறுவென்று இருக்கும்.
- டி.லதா, நீலகிரி.
 *பருப்பு உருண்டை குழம்புக்கு உருண்டை பிடிக்கும் போது ஒரு டீஸ்பூன் அரிசி மாவை கலந்து உருட்டினால் உருண்டை கரையாமல் இருக்கும்.
*ரவா கேசரி, ரவா பர்ஃபிக்கு தண்ணீரை பாதியாக குறைத்து, கெட்டியான பாலை சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
*ரசத்தில் ஒரு ஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்தால் ருசி பிரமாதமாக இருக்கும்.
- மல்லிகா அன்பழகன், சென்னை.
*கோதுமை ரவையை வறுத்து, வேகவைத்து புட்டு செய்யலாம். கூடவே வெல்லம் சேர்த்தால் படு டேஸ்ட்.
*வடைக்கு அரைத்து எடுத்ததும் அதில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவைக் கலந்து வடை தட்டினால் மொறுமொறுவென சூப்பராக வரும்.
*நெல்லிக்காயை சீவிப்போட்டு பருப்பு தண்ணீரோடு ரசம் செய்தால் அருமையாக இருக்கும்.
*முருங்கைப்பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிட்டால் அந்த நறுமணம் ஊரே வீசும்.
- எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.
*கீரை மற்றும் முட்டைக்கோஸ் பொரியல் மீந்துவிட்டால் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பக்கோடாவாக செய்யலாம்.
*தோசை மாவு புளித்திருந்தால் சிறிதளவு சாதத்தை மிக்ஸியில் அரைத்து மாவுடன் கரைத்துக் கொள்ளலாம்.
*காராபூந்தியில் காரம் அதிகமானால் மாவுடன் உப்பு சிறிது, எலுமிச்சைச் சாறு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்கலாம்.
- ச.லெட்சுமி, தென்காசி.
*ரவா தோசைக்கு மாவு கரைக்கும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கரைத்து வார்த்தால் தோசை சிவந்து மொறுமொறுப்புடன் இருக்கும்.
*பாகற்காயுடன் உப்பு, வெல்லம், மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு கலந்து பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு வறுத்தால் கசப்பே இருக்காது.
*தக்காளி, பூண்டு, உருளைக்கிழங்கு, தேன், ஆலிவ் எண்ணெய், நட்ஸ், காபி தூள், பிரெட், வெங்காயம் இதையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது.
- எம்.ஏ.நிவேதா, திருச்சி.
*அரிசியை சமையலுக்கு உபயோகிக்கும் போது சிறிதளவு கல் உப்பையும் சேர்த்துக் கலந்து கழுவினால் அரிசியில் உள்ள அழுக்கு நீங்கி விடும்.
*கீரையை சமைக்கும் போது 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயும் சேர்த்து சமைத்தால் கீரை பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
*அவல், ரவா, சேமியா உப்புமா செய்யும்போது தண்ணீரின் அளவை குறைத்து ½ கப் தயிரைக் கடைந்து மோராக்கி அதில் கலந்து வேகவைத்தால் உப்புமாவின் சுவை அதிகரிக்கும்.
*ஆப்பம் மாவினை ஊற்றி அதில் கொஞ்சம் கேரட் துருவலையும், தேங்காய் துருவலையும் மேலே தூவி மூடி வைத்து வெந்ததும் சாப்பிட்டால் கலர்ஃபுல் ஆக இருப்பதுடன் சுவையும் அதிகரிக்கும்.
- எஸ்.ராஜகுமாரி, சென்னை.
*மிக்ஸி ஜாரில் மசாலாப் பொருட்களை பொடி செய்தவுடன், எவ்வளவுதான் கழுவினாலும் மசாலா வாசனை போகாது. சிறிதளவு பிரெட்டை ஜாரில் போட்டு பொடி செய்தால் வாசனை அறவே போய் விடும்.
*தோசைக்கு மாவு அரைக்கும் போது இரண்டு உருளைக்கிழங்குகளை தோலை நீக்கி நறுக்கி, சேர்த்து அரைத்து, தோசை வார்த்தால் தோசை பொன்னிறமாய் ஹோட்டல் தோசை போல மிருதுவாக வரும். சுவையாகவும் இருக்கும்.
*பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாமல் இருக்கும் போது மூடி வைக்கக் கூடாது.
- அ.சித்ரா, காஞ்சிபுரம்.
சோயா பருப்பு பொங்கல்
தேவையானவை: சோயாபீன்ஸ் - 1 கப், பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (வேக வைத்துக் கொள்ளவும்), பால் - ½ லிட்டர், பொடித்த வெல்லம் - 1¼ கப், நெய்யில் வறுத்த முந்திரி - 8 (பொடி செய்யவும்), ஏலக்காய் தூள் - ¼ ஸ்பூன், பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: சோயாபீன்ஸ் பருப்பை வெந்நீரில் 2 நிமிடம் போட்டு, நீரை வடித்துக் குளிர்ந்த நீரில் 2 முறை அலசி பிழிந்து வைக்கவும். பாலை நன்கு காய்ச்சி அதில் பாசிப்பருப்பு, சோயா பருப்பை வேகவிடவும். இரண்டும் குழைந்து வெந்தபின், வெல்ல கரைசலை சேர்க்கவும். பிறகு நெய், பொடித்த முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். சோயா பருப்பு (அ) சோயா கிரானுல்ஸ் பொங்கல் ரெடி.
- வாசுகி, சென்னை.
|