கவிதைக்காரர்கள் வீதி



கோணல்கள்

கோணல் உலகம்
கோணல் மனிதர்கள்
கோணல் வாழ்க்கை
கோணல் புத்தி
ஆதாம்
ஏவாள்
அந்தக் கனியைக் கடித்து
ஆரம்பித்து வைத்த கோணல்.

இந்தக் கோணலை
சரி செய்யத்தான்
வந்து...
வந்து...
போகிறார்கள்
தீர்க்கதரிசிகள்.
சிலுவைப் பாடுகளை ஏற்கிறார்கள்.

கல்லடிகளையும்
கசையடிகளையும் தாங்குகிறார்கள்.
பிறந்த குழந்தைக்கு தொட்டிலும்
இறந்த குழந்தைக்கு சவப்பெட்டியும்
வாங்க முடியாமல் வறுமை வசப்படுகிறார்கள்.

கடலில் கட்டி எறியப்படுகிறார்கள்.
நஞ்சூட்டிக் கொல்லப்படுகிறார்கள்.
கொரில்லாக்களாய் மரணத்திற்கு மார்பு காட்டி
வீர சொர்க்கத்தை தழுவுகிறார்கள்
இருந்தும்...

இருந்தும்...
இன்னும் சரி செய்யப்படாததாகவே
இருக்கிறது
இந்த கோணல் உலகம்.