மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீ அரவிந்த அன்னை

மனிதர்களுடைய பாராட்டுதலை ஒருபோதும் எதிர்பார்க்காதே. ஏனென்றால் எந்த அடிப்படையில் ஒன்றைப் பாராட்ட வேண்டும் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அது மட்டுமல்ல, அவர்களைவிட உயர்ந்த ஒன்றைக் காணும்போது  அவர்கள் அதை விரும்புவதும் இல்லை.உன்னுள் இறைவனது சாந்நித்யம் உள்ளது.

 நீ அதை வெளியே தேடுகிறாய். உள்ளே பார். அது உனக்குள்ளேயே இருப்பதை உணர முடியும். பலம் பெறுவதற்காகவே நீ பிறருடைய பாராட்டை எதிர்பார்க்கிறாய். அந்த வழியில் நீ ஒருபோதும் பலம் பெறமாட்டாய். உண்மையில் உனக்குத் தேவையான வலிமை உனக்குள்ளேயே இருக்கிறது.
-  அன்னை

‘‘அது என்ன அதிமன சக்தி’’ - தத்தாவின் மனதில் கேள்வி எழும்போதே மிரா பதில் சொல்லத் தொடங்கினார்.‘‘இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் இறைவன்தான் படைத்தார். அனைத்துக்குள்ளும் தன் தன்மையை வைத்தார். அதைச் சுற்றி பல மாயைகளை உருவாக்கி வைத்துவிட்டு  பிரபு மனதுள் சென்று அமர்ந்துகொண்டார்.

யாருக்கெல்லாம் சுயத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் தேடிக் கண்டு கொள்ளட்டும் என்பது கடவுளின் விருப்பம். தேடல் உள்ள உயிர்கள் மாயையைக் கடந்து இறைவனை கண்டுகொள்ளும்.  மாயையைக் கடந்து மனதுள் உறைந்துள்ள பிரபுவை தரிசிப்பதால்தான் அவரைக்  ‘கடவுள்’ என்று சொல்கிறார்கள். அப்படிக் கண்டுகொள்ளும் போது கடவுள் சிரிக்கிறார். அப்படியான முயற்சியில் கோடியில் ஒருவர்தான் இறங்குகிறார்கள். அதில் அனைவரும் வெற்றி காண்பதும் அரிது.

அரவிந்தர் தனது யோகத்தின் மூலமாக  அறியாமையில் இருக்கும் உயிர்களை தெளிவு பெற வைக்க விரும்புகிறார். அதாவது, தான் கடவுளின் அம்சம் என்பதை முதலில் உணர வைக்க வேண்டும்.அடுத்து, தெளிவானவர்கள் கடவுளைத் தேடும் வழிகளை அறியும் உயர் மன சக்தியைப் பெறவேண்டும். அதிலிருந்து யோகத்தின் வழியாக அதிமனம் என்கிற கிருஷ்ண பகவானின் தன்மையைப் பெற வேண்டும்.

கிருஷ்ண சக்தியை அடுத்து... அதாவது, அதிமன சக்தியைக் கடந்தால் பிரபஞ்சத்தின் மூல சக்தியாக விளங்கும் ஒளிமனதை அடைய முடியும். அந்த ஒளி மன சக்தியை அனைவரும் அடைய முடியாது அல்லவா?ஆகவே, தனது தவத்தின் மூலமாக முதலில் தாம் கிருஷ்ண தன்மை அடைந்து அந்த ஒளி மன சக்தியை பூமிக்கு கொண்டுவந்துவிட்டால் அனைத்து உயிர்களும் பலன் பெரும் என்பதற்காகவே அரவிந்தர் யோகம் செய்கிறார்.
ஏன் இதை அரவிந்தர் செய்ய வேண்டும்?

இந்து மதத்தில் தினந்தோறும் அனைவரும் சொல்லும் பிரார்த்தனை மந்திரமான, ‘லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து’  என்ற வாக்கியம் ‘அனைத்து லோகங்களும் சுகமுடையதாக ஆகட்டும்’ என்கிறது. இந்த மந்திரம் பிரபஞ்சம் அனைத்தின் நலத்தையும் வேண்டுகிறது. ‘சர்வே ஜனா: சுகினோ பவந்து’ என்ற மந்திரம் எல்லா மக்களும் சுகமுடன் இருப்பார்களாகுக! என்ற பிரார்த்தனையை முன்வைக்கிறது. இந்தியாவில் எங்கோ ஒரு காட்டில் உட்கார்ந்து கொண்டு தவமியற்றும் முனிவர்கள் தங்களுடைய சுயநலத்துக்காக தவம் செய்வதில்லை. உலக நன்மைக்காகவே செய்கிறார்கள். அரவிந்தரும் அந்த விதமான ஞான மரபில் வந்தவரே.

அதனால்தான் உலக மக்களின் நன்மையைப் பொருட்டு தவத்தில், யோகத்தில் ஆழ்ந்திருக்கிறார். விரைவில் அதிமன சக்தி பூமிக்கு வரும்... அதைத் தொடர்ந்து ஒளிமன சக்தியும் வந்துவிடும்!’’ - சொல்லும்போதே மிராவின் கண்கள் ஒளிகொண்டன.தத்தாவும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். முழுநிலவு நடுவானில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. தெய்வீக சக்தியை பூமிக்குக் கொண்டுவரும் பணியில்  முழுமையாக ஈடுபட்ட அரவிந்தர் நாளின் பெரும்பகுதியை தியானத்திலேயே கழித்தார். உரையாடல் வெகுவாகக் குறைந்திருந்தது.

 அரவிந்தரின் தீவிர யோகத்தின் காரணமாக அங்கு வசித்த சாதகர்களிடம் வார்த்தையாக்க முடியாத ஒரு மௌனம் கவிந்திருந்தது. தியானத்திலும் தீவிரமாக இருந்தார்கள். அனைவரது முகத்திலும் ஒரு அழகிய அமைதி தெரிந்தது. கடவுளின் சக்தி மெல்ல மெல்ல அரவிந்தரின் உடலில் இறங்கிக் கொண்டிருந்ததன் விளைவே இத்தகைய மாற்றங்களெல்லாம் என்பதை மிராவும் தத்தாவும் உணர்ந்திருந்தார்கள். அரவிந்தரின் உடல்கூட பொன்நிறமாக மாறத்தொடங்கியிருந்ததை மிரா கவனிக்கத் தவறவில்லை.

1926, நவம்பர் 24. மாலை வேளை. சாதகர்கள் அவரவர் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் கடற்கரையில் அமர்ந்து அலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் தியானத்தில் இருந்தார்கள். மிரா அனைவருக்கும் ஒரு தகவல் அனுப்பினார். இன்னும் சிறிது நேரத்தில் அனைவரும் வராந்தாவிற்கு வந்து சேர வேண்டும் என்பதே அது.

மிராவின் வார்த்தைக்கு மறுப்பேது?
அனைவரும் ஒன்று கூடினார்கள். அந்த வராந்தாவில் கதவை ஒட்டி அரவிந்தர் அமர ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. அதற்குப் பின்னால் இருந்த கதவின் மேல் கறுப்பு நிறப் பட்டுத்  திரைச் சீலை தொங்கியது. அதில் தங்க நிறத்தில் லேஸ்கள் தைக்கப்பட்டிருந்தன. அந்தச் சீலையில் மூன்று டிராகன்கள் ஒன்றின் வாலை மற்றொன்று வாயில் கவ்விக் கொண்டிருப்பதைப் போல தைக்கப்பட்டிருந்தது. இது ஒரு சீன தத்துவம். மூன்று டிராகன்களும் பூமி, மனம், ஆகாயம் ஆகியவற்றைக் குறிக்கும். இவை மூன்றும் இணையும் போதுதான் சத்தியம் பூமிக்கு வந்து இறங்கும் என்று குறிக்கும் குறியீடு இது.

மிரா எதற்காக வரச் சொன்னார்?
 அனைவருக்குள்ளும் இந்தக் கேள்வி இருந்தது. அவரது வருகைக்காக அனைவரும் காத்திருந்தார்கள். மாலை நகர்ந்து இரவு தொடங்கியது. மெல்லிய குளிர் காற்று அறையை இதமாக்கியது. சிறிது நேரத்திற்கெல்லாம் லேசான நறுமணம் அந்த அறை முழுக்கப் பரவியது. தெய்வீகம் நிரம்பித் ததும்பிய அந்தத் தருணத்தில் சூரியன் போல அரவிந்தர் அந்தக் கதவின் வழியே உள்ளே வந்தார். அவரைத் தொடர்ந்து மிராவும் வந்தார்.நாற்காலியில் அரவிந்தர் அமர்ந்தார். தியானம் தொடங்கியது. சிறிது நேரத்திற்கெல்லாம் அனைவரது கண் முன்னே அந்தப் பேரதிசயம் நிகழ்ந்தது. ஆம்! வானிலிருந்து ஒரு பொன்னொளி பூமிக்கு இறங்கியது. அது அனைவரது சிரசிலும் பூப் போல கவிந்தது. அனைவரும் ஆனந்தப் பரவசத்தில் திளைத்தார்கள்.  மனிதன் கடவுளாவது இப்படித்தான் என அனைவரது மனமும் உணர்ந்து களித்த தருணம் அது.

‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா’ எனக் குதூகலித்தார்கள். யார் மனதிலும் கோபம் இல்லை. ஆசை இல்லை. துன்பம் இல்லை. கனிவு பொங்கியது. அன்பு நிரம்பி விழிந்தது. அந்தப் பிரதேசம் முழுக்கவே ஆனந்த அலை அடித்தது.மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த சாதகர்கள் அனைவரையும் மிரா தன் கரங்களால் தலை தொட்டு ஆசீர்வதிக்க, மிராவின் கைகளுக்கு மேலாக தன் கரத்தை வைத்து மிராவின் வழியாக தனது ஆசியை சாதகர்களுக்கு வழங்கினார் அரவிந்தர்.
தியானம் முடிந்தவுடன் சாதகர்களிடம் அரவிந்தர், ‘‘இன்று கிருஷ்ண உணர்வு என்கிற அதிமன சக்தி பூமியில் இறங்கியது. கிருஷ்ணன் என்றாலே ஆனந்தம். மேல் மனத்தின் மூலமாக உலகின் பரிணாமத்தை ஆனந்தத்தை நோக்கி கிருஷ்ணர் அழைத்துச் செல்வார்’’ என்றார்.

இந்தச் சம்பவம் நடந்த போது சாதகர்களின் எண்ணிக்கை 24. தெய்வீகப் பேருணர்வு பூமியில் இறங்கிய இந்த நாளை சித்தி தினமாக பிரகடனப்படுத்தினார் மிரா. (இன்றும் இந்த நாள்  அரவிந்தர் - அன்னை பக்தர்களால் வெகு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது). இந்தச்  சம்பவத்திற்குப் பின்னரே நீண்ட யோசனைக்குப் பிறகு தனது சாதகர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவந்து காக்க வேண்டும் என்று முடிவு செய்தார் அரவிந்தர். மிராவுடன் விவாதித்தார். விளைவு ‘ அரவிந்தர் ஆஸ்ரமம் ’ என்கிற பெயருடன் உலகுக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு உருவானது.

நாட்கள் ஓடின. ஆஸ்ரமத்தில் இருந்த அனைவரையும் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார் மிரா. அப்படி மிராவின் அன்பைப் பெற்றது ஒரு பூனை. அதற்கு சுந்தரி என அரவிந்தர் பெயர் சூட்டினார். தினமும் அதற்கு பால் முதலான உணவுகளைக் கொடுத்து கவனித்துக் கொண்டார்கள் சாதகர்கள்.சுந்தரி கருவுற்றது. சில மாதங்களில் குட்டி போட்டது. அந்தக் குட்டிகளைக் கவ்விக்கொண்டு சென்றது பூனை. அது எங்கு செல்கிறது என ஆச்சர்யத்தோடு எல்லோரும் பார்க்கும்போது அது மிராவின் அறைக்குள் சென்றது. மிராவின் காலில் குட்டிகளைப் போட்டுவிட்டு அவரது காலடியில் சரண் புகுந்தது.

மிராவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பூனையின் குட்டிகளை கைகளால் தடவிக் கொடுத்து ஆசி அளித்தார். தாய்ப் பூனைக்கு தன் ஸ்பரிசத்தால் அன்பு செய்தார்.
இப்படி ஆசிரமத்தில் பூனை கூட மிராவிடம் அன்பு காட்டியபோது சிலர் அவரை ஏற்கத் தயங்கினார்கள். எதிர்க்கவும் தொடங்கினார்கள். அதற்கெல்லாம் ஒரு முடிவுகட்ட வேண்டும் என நினைத்தார் அரவிந்தர். என்ன செய்தார் தெரியுமா?

அன்னையின் அற்புதம்

இழந்ததை மீட்டுத்தந்த அன்னை

‘‘அம்மாகிட்ட போராடி ஆசை ஆசையா அந்த ரேஸ் பைக்கை வாங்கினேன். அப்பவே அது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். எனக்கு தம்பி மாதிரி அந்த பைக். ஒரு நாள் வீட்டில் நிறுத்தி இருந்த பைக்கை காலைல எழுந்து பார்த்தால் காணோம்.  துடிச்சுப் போய்ட்டேன். என் வீட்ல எல்லோரும் அரவிந்த அன்னை மீது அதிக நம்பிக்கை உள்ளவர்கள். என் அம்மா சொன்னபடி நான் மாம்பலம் அன்னை ஆஸ்ரமத்துக்குப் போய் காணிக்கை செலுத்தி, ‘பைக்கை மீட்டுக் கொடும்மா’னு வேண்டிக்கிட்டேன்.

அந்த பைக் லாக் ரொம்ப விசேஷமானது. அதை திறக்கவே முடியாது. எப்படி தொலைஞ்சதுனு யோசிக்கும்போது என் நண்பன் ஒருவன் பைக் வாங்கிட்டு போனது ஞாபகத்துக்கு வந்தது. ரகசியமாய் விசாரித்ததில் அவன்தான் டூப்ளிகேட் கீ செய்து திருடியது  தெரிய வந்தது. பைக் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சேன். அங்கு வண்டியை பார்ட் பார்ட்டாய் பிரித்துப் போட்டு வைத்திருந்தார்கள்.

இது என்னுடைய பைக்தான் என நிரூபிப்பது எப்படி என யோசித்தபோது அன்னையின் போட்டோவை டேங்க் கவருள் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அதைச் சொல்லி வண்டியை மீட்டு வந்தேன். என் அம்மா வாங்கித் தந்து தொலைந்த பைக்கை மீட்டுக் கொடுத்தது அன்னைதான். என் தம்பி எனக்கு திரும்பக் கிடைத்த திருப்தி. அன்னைக்கு நன்றி!’’ என நெகிழும் ராகுல், ஐ.டியில் வேலை செய்யும் சென்னை இளைஞர்.

வரம் தரும் மலர்

பிரச்னை தீர்க்கும் வில்வம்!

மனிதனின் எல்லா பிரச்னைகளையும் பூரண பக்தியின் மூலமாக தீர்த்துக்கொள்ள முடியும். அத்தகைய அசைக்க முடியாத பக்தியைப் பெற  அன்னைக்கு வில்வ இலையை சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள வேண்டும். அன்னையின் அருளால் பக்தி உணர்வு பெருகும். பிரச்னைகள் விலகும்!

(பூ மலரும்...)

எஸ்.ஆா்.செந்தில்குமாா்
ஓவியம்:மணியம் செல்வன்