வேலை : சுபமி





‘‘டேய் விமலு... உங்கம்மா ராப்
பகலா வேலை செஞ்சு, கஷ்டப்பட்டு சம்பாதிச்சு உன்னைப் படிக்க வச்சது வீண் போகலை. பார்... ஒரே சமயத்துல ரெண்டு உத்தியோகம் தேடி வந்திருக்கு. தீயணைப்புத் துறையில ஃபயர்மேன் வேலை. காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் வேலை... போடா, போய் போலீஸ் வேலையில ஜாயின் பண்ணு’’ என்று மாமா சொன்னதும், தயங்கினான் விமல்.

‘‘மாமா... நான்
ஃபயர் மேன் வேலை க்கே போறேனே!’’
‘‘அட முட்டாப்
பயலே... சம்பளத்தைக் கவனிடா! சப் இன்ஸ்பெக்டருக்கு ஃபயர்மேனைவிட மூணு பங்கு சம்பளம் அதிகம்! எவ்வளவு மரியாதை கிடைக்கும் தெரியுமா? நம்ம உறவுக்காரங்கள்ல யாருக்கும் கிடைக்காத அதிகாரமான பதவி. நீ அந்த டிரஸ்ல ஜீப்ல ஏறி வந்தா ஊர்ல நமக்கு என்ன மதிப்பு இருக்கும், தெரியுமா? யோசிக்காம போயி அந்த வேலையில சேர்ந்துடு!’’ என்றார் மாமா அதட்டலாக.
விமல் கண்கலங்கினான்.
‘‘மாமா, சொற்பச் சம்பளம்னாலும், தீ விபத்துல சிக்குற எத்தனையோ உசிரைக் காப்பாத்துற ஃபயர் மேன் வேலைதான் எனக்குப் பிடிச்சி ருக்கு. காலமெல்லாம் தீப்பெட்டி கம்பெனியில எனக்காக உழைச்ச எங்கம்மா, கடைசியா தீப்பெட்டித் தொழிற்சாலை விபத்துலயே பொசுங்கிப் போனாங்க. அவங்க ஆத்மாவும் இந்த வேலையைத்தான் விரும்பும் மாமா’’ என்றான் குரல் தழுதழுக்க!
இப்போது மாமாவும் கலங்கினார்.