மீன ராசிக்கு மாமியார் மருமகள் பிரச்னையைத் தீர்க்கும் இறைவன்





பன்னிரெண்டு ராசிகளில் கடைசியாக வருவது மீன ராசி. இருப்பதிலேயே பள்ளமானது மீன ராசியாகும். அதனாலேயே என்னவோ இந்த ராசிப் பெண்கள் பல விஷயங்களை ஆழ்மனதில் பதுக்கி வைத்திருப்பீர்கள். பள்ளத்தைத் தேடி வெள்ளம் பாய்வதுபோல விஷயங்களைத் தேடி உங்கள் மனம் ஓடிக் கொண்டிருக்கும். நீங்கள் கற்ற அனைத்தையும் புகுந்த வீட்டில் நடைமுறைப்படுத்த முயற்சிப்பீர்கள். சில சீர்த்திருத்தங்கள் செய்வீர்கள். ‘‘ஏன் இந்த டாக்டர்கிட்டயே காட்டிக்கிட்டிருக்கீங்க. நான் சொல்றவர்கிட்ட வந்து பாருங்க’’ என்று எல்லா விஷயத்திலும் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். ‘‘எங்க வீட்ல என்னோட அப்பா, அம்மா மட்டும் ஏதோ தனியா பேசுவாங்க. பல விஷயங்களை முடிவெடுப்பாங்க. ஆனா, இங்க எல்லா விஷயத்தையும் எல்லாரும் ஆர்க்யூமென்ட் பண்றது எனக்குப் புதுசா இருக்கு’’ என்று பல சமயங்களில் குதறுவீர்கள்.

உங்களின் மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக கோதண்ட குரு எனப்படும் தனுசு குரு வருகிறார். ‘‘அவருக்கு தெரியாத விஷயமே இல்லை’’ என்று பலரும் பாராட்டுவார்கள். உங்கள் மீது பிரியமாக இருப்பார். என்ன... அவ்வப்போது கோதண்ட குருவின் இயற்கை குணமான சண்டை போடுவதும் இருக்கத்தான் செய்யும். ‘‘உன்கிட்ட சொல்றதுக்கு எனக்கு உரிமை இருக்குங்கறதுனால இதெல்லாம் பேசறேன். ஆனா, இந்தக் காலத்துல மருமககிட்ட கூட உரிமையா எதையும் பேச முடியலை’’ என்பார். அவர் என்ன மனநிலையில் பேசுகிறார் என்பதை காதுகொடுத்துக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
எவ்வளவு செய்தாலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார். ‘‘நீங்க சௌகரியமாக இருந்தா அதுவே போதும். இனிமே எனக்கென்ன வேண்டிக் கிடக்கு’’ என்று தத்துவரீதியாக பல சமயங்களில் அவர் பேசுவது உங்களுக்குப் பிடிக்காது. குருவின் ஆதிக்கத்தில் உங்கள் மாமியார் ஸ்தானம் வருவதால், உலகோடு ஒட்டி வாழ மாட்டார். எல்லா விஷயத்திற்கும் தத்துவரீதியாக பதில் கொடுப்பார். ஆனால், வெளியிடங்களில் உங்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். உங்களின் ராசிக்கு அதிபதியாகவும், மாமியார் ஸ்தானத்திற்கு உரியவராகவும் குருவே வருவதால் பெரும்பாலும் இருவரும் ஒரே மாதிரி சிந்திக்கவும் செய்வீர்கள். பல சமயங்களில் ஒரே மாதிரியான முடிவுகளையும் எடுப்பீர்கள்.

பொதுவாகவே உங்கள் மாமனார் விஷய ஞானம் மிக்கவராக இருப்பார். ஏனெனில், மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக ரிஷபச் சுக்கிரன் வருகிறார். எல்லா விஷயத்தையும் உங்களை விட லகுவாக எடுத்துக் கொள்வார். பல விஷயங்களில் உங்களுக்கு எதிர்மறையாகத்தான் பேசுவார். ஏனெனில், உங்கள் ராசிக்கு அதிபதியாக வரும் குரு, ரிஷப ராசிக்கு அதிபதியாக வரும் சுக்கிரனுக்கு பகைவராவார். ஆனாலும், உங்களை விட பல விஷயங்களில் சூட்சுமமாக நடந்து கொள்வார். மாமனாரை விட நாம் பல படிகள் தாண்டி யோசிக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுத்திருக்கும். ஆனால், சுக்கிரனின் அறிவுரைகள் இந்த வாழ்க்கையை வளப்படுத்தத்தான் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை. உங்களின் சொந்த ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால், தந்தையும் மகளுமாக இருப்பீர்கள். சுக்கிரன் 6ல் மறைந்து சனியோடு சேர்ந்து நின்றாலோ, தனிக் குடித்தனம் செல்வீர்கள்.
 
மீன ராசிக்கு மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக ரிஷபச் சுக்கிரனும், மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக தனுசு குருவும் வருகிறார்கள். இவர்கள் தங்களுக்குள் பகைவர்களாக இருந்தாலும் தனித்திறன் பெற்றவர்களாக விளங்குவார்கள். இதனால் பெருமாள் அம்சம் பொருந்திய, உக்கிரத்தோடு காட்சியளிக்கும் இறைவனை வணங்கினால் நல்லது. அப்படிப்பட்ட மூர்த்தியே சக்கரத்தாழ்வார் ஆகும். சக்கரத்தாழ்வாரை எல்லா வைணவ ஆலயங்களிலும் தரிசிக்கலாம். அதிலும் மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் எனும் தலத்தில் அருளும் சக்கரத்தாழ்வாரை தரிசிக்க, குடும்பத்தில் ஒற்றுமை கூடும். எனவே, திருமோகூர் சக்ரத்தாழ்வாரை வணங்குங்கள். பிரச்னைகள் இல்லாமல் வாழ்ந்திடுங்கள்.

இதுவரை மாமனார், மாமியார் பிரச்னைகள் குறித்துப் பார்த்தோம். அடுத்ததாக கல்வி... எல்லோரும் வாழ்வில் குறைந்தது இருபது வருடங்கள் கல்விக்காக செலவிடுகின்றனர். குடும்பத்தின் நிம்மதியே, இன்று குழந்தையின் படிப்பைப் பொறுத்ததாக இருக்கிறது. ‘வெள்ளத்தில் போகாது. வேந்தராலும் கொள்ளத் தகாதது. கொடுத்தாலும் குறையாது’ என்று மாபெரும் சிறப்பைப் பெற்றதே கல்விச் செல்வம். வீடு, வாசல் என்று சகல வசதிகளையும் காசு கொடுத்து வாங்கிவிடலாம். கல்வி விலை கொடுத்து வாங்க முடியாதது. நாம் எதுவுமே சொல்லாமலே சில பிள்ளைகள் தானாகப் படிப்பார்கள். ஆனால் சில பிள்ளைகள், தொண்டை தண்ணி தீரக் கத்தினால்தான் படிக்கவே ஆரம்பிப்பார்கள். ‘புத்தகத்தை எடுடா...’ என்றால் எடுப்பார்கள். ‘நேத்து என்ன நடத்தினாங்க’ என்று கேட்டால்தான் பதில் சொல்வார்கள். அப்படியே உட்கார்ந்தாலும் தொடர்ந்து படிக்க மாட்டார்கள். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை எழுந்து எதையாவது செய்து நேரத்தைக் கடத்துவார்கள். இம்மாதிரி மனநிலையை எது தீர்மானிக்கிறது?

தகுதிக்கு மீறி கடன் வாங்கி, சிபாரிசுக் கடிதத்தோடு புகழ்பெற்ற கல்லூரியின் இடம் வாங்கி படிக்க வைத்தாலும் கடைசி வரிசையில் உட்கார்ந்து சிலர் கலாட்டா செய்கிறார்களே... படிப்பின் அருமை புரிந்தும் அவர்களால் ஏன் செயல்பட முடியவில்லை? அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலியாக இருந்தாலும், தெருவிளக்கில் படித்து பெருமை தேடித் தந்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு. இவ்வாறு பிள்ளைகளை தூண்டுவதும் துலங்கச் செய்வதுமே கிரகங்கள்தான். ‘‘ப்ரீ கேஜி படிக்கும்போதே நாலு ரைம்ஸ் மனப்பாடமா சொல்லுவா’’ என்பதெல்லாமும் கிரகங்கள் செய்யும் மாயம்தான். ‘‘நல்லாதான் படிச்சா. ஆனா, டென்த் வந்ததும் எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. என்ன பிராப்ளம்னு புரியலை. நல்லாதான் தயார் பண்றா. எக்ஸாம் எழுதும்போது எல்லாம் மறந்து போகுதுங்கறா’’ என திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ‘‘எங்க நாத்தனார் பையனை ஒவ்வொரு முறையும் வார்னிங் கொடுத்துதான் பாஸ் பண்ண வச்சாங்க. ஆனா, டென்த்ல தொண்ணூறு பர்சென்ட் மார்க் வாங்கினான். எப்படின்னே தெரியலை’’ என்பதற்குப் பின்னால் கிரகங்களின் தசையும், புக்தியும் வேலை செய்கின்றன.

சந்திரன் சர்வ கலாபிதன். ஆய கலைகளுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறவன். ஜாதகத்தில் சந்திரன் நன்றாக அமைய வேண்டும். அப்போதுதான் அறிவு விருத்தியாகும். கற்றலில் ஆர்வத்தை உண்டாக்குவதே சந்திரன்தான். அதேபோல ஒவ்வொரு பாடப் பிரிவிலும் தனித்த திறன் பெற புதன் உதவுவார். ஒருவர் கணக்கில் புலி என்றால், அவருக்கு புதன் நன்றாக இருக்கிறான் என்று அர்த்தம். பாடத்தைத் தாண்டி ஆசிரியரை கேள்வி கேட்க வைப்பவரும் புதன்தான். ஆசிரியர் கற்பிக்கும் முறையோடு ஒன்றி பாடங்களை அழகாக புரிந்து கொள்வார்கள். எனவே, சந்திரனைப் போலவே புதனும் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். அதனால் ஜோதிட நூல்கள் புதனை வித்யாகாரகன் என்று அழைக்கின்றன. ‘‘நாளைக்கு எல்லோரும் ரெண்டாம் எக்சர்சைஸ் படிச்சுட்டு வாங்க. ஹோம் ஒர்க்கை சரியா முடிங்க’’ என்றால், அதை சரியாக முடிக்க வைக்க குரு பகவானின் கருணை வேண்டும். வகுப்பறை நடத்தையை குருதான் தீர்மானிக்கிறார். எங்கு ஆசிரியரைப் பார்த்தாலும் வணங்கும் பண்பையும் அவர்தான் சொல்லிக் கொடுப்பார். ‘‘அந்தப் பையன் இந்த வருஷம் முழுக்க ஒருநாள் கூட லேட்டாவே வந்தது கிடையாது. ஒரு ப்ரேயரை கூட மிஸ் பண்ணது கிடையாது’’ என்றால், ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருக்கிறான் என அர்த்தம். அதேபோல வகுப்பறை தலைவர் முதல் பள்ளியின் மாணவத் தலைவர் வரை கொண்டு செல்லும் பணியை சூரியன் செய்கிறார்.
எந்த விழாவாக இருந்தாலும், எந்த பிரபலம் வந்தாலும், வாழ்த்துரை வழங்குவதற்கு மாணவர் சார்பில் ஒரு பையனை தொடர்ந்து அழைக்கிறார்கள் எனில் அந்த மாணவருக்கு சுக்கிரன் நன்றாக இருக்கிறார் என்று அர்த்தம். படிப்பைத் தாண்டி கட்டுரை, கவிதை என்று எல்லா திறமைகளையும் அவர் தருகிறார். எந்த விளையாட்டுப் போட்டியிலும் கலக்கும் மாணவனுக்கு செவ்வாய் உறுதுணையாக இருக்கிறார். ‘‘பந்தை அடிக்கற அடியில தெறிச்சுக்கிட்டு ஓடுது பார்’’ என ஆக்ரோஷம் காட்டினால், செவ்வாய் வீரியத்தோடு ஜாதகத்தில் இருக்கிறார் என்று பொருள். 

‘‘சார்... இவன் என்னைப் பார்த்து பார்த்து எழுதறான்’’ என்றும், ‘‘மூணாவது கேள்விக்கு பதில் சியா, டியான்னு கேட்கறான்’’ என்றும், ‘‘சார்... நீங்க இல்லாதபோது கிளாஸ்ல பேசிக்கிட்டே இருக்கான்’’ என்று எப்போதும் வகுப்பறையில் புகார் புத்தகத்தோடு ஒருவர் அலைந்து கொண்டிருந்தால், சனியின் ஆக்கிரமிப்பில் அந்த மாணவர் இருக்கிறார் என்பதுதான் காரணமாகும். ‘‘பூமிக்கு மேல இருக்கற செடிங்க சூரியன் கிட்டயிருந்து உணவை தயாரிக்குது. ஆனா, கடல் அடியில இருக்கற செடிங்க எப்படி உணவைத் தயாரிக்குது’’ என்பது போன்ற கேள்விகளை அவ்வப்போது ஒருவர் கேட்கிறார் எனில், ராகு பகவான் பூரணமாக தன் கதிர்வீச்சை அவர் மீது செலுத்துகிறார் என்று பொருள். ‘‘நேத்துதான் பழனி கோயிலுக்கு போயிட்டு வந்தேன். இந்தாங்க சார் திருநீறு’’ என்றும், ‘‘எங்க நிலத்துல விளைஞ்ச வேர்க்கடலை சார் இது’’ என்று பையோடும் ஒரு மாணவன் அவ்வப்போது வந்து ஆசிரியருக்குக் கொடுத்தால் கேது பகவானின் ஆதிக்கம் அவரிடம் நிறைந்திருக்கிறது. நாட்டுப் பற்றையும், மொழிப்பற்றையும் கேது கூட்டுவார். இப்படி வகுப்பறை நடத்தை முதல் மதிப்பெண்கள் வரை எல்லாவற்றையும், அவ்வப்போது ஆங்காங்கு இருந்தபடியே கிரகங்கள்தான் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் என்னென்ன படிப்பார்கள் என்பதையும், பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் அவர்கள் எவ்விதமான பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என்பதையும், எப்படி அவற்றை அணுகுவது என்பது குறித்தும் இனி பார்ப்போம். எல்லாவற்றிற்கும் அடிப்படையாக சரஸ்வதி கடாட்சம் இருந்தால்தான் கல்வியைத் தொடர முடியும். எனவே, அவர்கள் எந்த ராசியில் பிறந்திருந்தாலும் சரஸ்வதியை வழிபட்டால் போதும். அவளே சகல கலைகளையும் அநாயாசமாக அருள்வாள். எனவே சரஸ்வதி தேவியின் பாதத்தைப் படர்வோம். கல்விச் செல்வத்தை பெறுவோம்.
(தீர்வுகளைத்
தேடுவோம்...)