சவால் விடும் சந்தானம்!



தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஆச்சர்யங்கள் நிகழும். அந்த ஆச்சரியங்களில் ஒன்று  சந்தானம்.  மிக எளிமையான இடத்தில் இருந்து வந்து கடுமையாக உழைப்பவர்களை சினிமா வலிமையான இடத்தில்  வைக்கும். இப்போது சந்தானம் நாயகனாக அப்படியொரு வலிமையான இடத்தில் அமர்ந்துள்ளார். அவர் இருக்கும் இடத்திற்கு பின்னால் இருப்பது வெற்று புரோமோஷனும், வெட்டி பந்தாவும் இல்லை. உண்மையான மற்றும் மனம் தளராத அவரது உழைப்பு.

டிவி நிகழ்ச்சி மூலமாக மக்களின் மனதில் அமர்ந்தவர், செய்யும் வேலையை மிகவும் நேசித்தே செய்தார். அந்த நேசிப்பும் அர்ப்பணிப்பும்தான் அவரை ‘மன்மதன்’ படம் மூலமாக சினிமாவிற்கு இழுத்து வந்தது.சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவுடனே அவர் காமெடியில் உச்சம் அடையவில்லை. படிப்படியாக தனக்கான இடத்தைப் பிடிக்க அவர் பெரிதும் உழைத்தார். தனித்துவமான  காமெடியில் தனி இடத்தைப் பிடித்தார்.

பெரிய பெரிய ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்கள் எல்லாரும் சந்தானத்திற்காக காத்திருந்தார்கள்.  காமெடியில் உச்சத்தில் இருந்தபோதே  ஹீரோ அவதாரம் எடுத்தார். ஹீரோவாக அவர் எடுத்து வைத்த முதல்படியே வெற்றிப்படியாக அமைந்தது. அடுத்தடுத்த படங்களிலும் மிகச்சிறப்பாக கவனம் செலுத்தினார். இப்போது அவரது  படங்கள் எப்போது  வெளியாகிறது? என்று மக்கள் கவனிக்கத் துவங்கி விட்டார்கள். மேலும் வியாபார ரீதியாகவும் வசூல் ரிதீயாகவும் சந்தானம் பலரும் ஆச்சர்யப்படும் இடத்தில் இன்று இருக்கிறார். குறிப்பாக சந்தானம் நடிக்கும் படங்களை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் என்ற பேச்சு பலமாக இன்று கேட்கிறது.

இந்த வருடம் சந்தானம் திரைவாழ்வில் மிக முக்கியமான வருடமாக இருக்கும் என்பதை அவரது நடிப்பில் வெளியாகவுள்ள படங்களின் வரிசையை பார்க்கும்போதே தெரிகிறது. நடிகர் விஜய்சேதுபதிதான் அதிக படங்களில் நடித்து வரும் கதாநாயகன் என்று ஒரு கருத்து சினிமாவில் உண்டு. ஆனால்   சந்தானத்தின் படங்கள் விஜய்சேதுபதி படங்களை விட அதிகமாகவுள்ளன. வியாபாரத்திலும் சந்தானம் முன்னணியிலே இருக்கிறார்.
இந்த வருடம் ‘டகால்டி’ வெற்றியைத் தொடர்ந்து ‘சர்வர் சுந்தரம்’, ‘பிஸ்கோத்’, ‘டிக்கிலோனா’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘தில்லுக்கு துட்டு 3’ ஆகிய படங்கள் வெறித்தனமான கன்டென்ட் மற்றும் பிரம்மாண்டத்தோடு தயாராகியுள்ளன.

அடுத்தடுத்த சந்தானத்தின் கமிட்மெண்ட்களும் வேறு லெவலில் இருக்கிறது. ‘A1’ படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஒரு படத்திலும், ‘வஞ்சகர் உலகம்‘ என்ற படத்தைத் தயாரித்த புரொடக்சன் கம்பெனி தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார் சந்தானம்.
மேலும் ஒரு நடிகராக மட்டும் அல்லாமல் சிறந்த மனிதராகவும் சந்தானம் இருக்கிறார். வெளியில் தெரியாமல் எத்தனையோ பேர்களுக்கு பெயருக்கு ஏற்றமாதிரி தானமும் செய்து வருகிறார்.

இதையெல்லாம் அவர் வெளியில் சொல்ல விரும்புவதே இல்லை. சந்தானம் என்ற பெயரில் வாசம் இருப்பது போல் அவரிடம் நிறைய பாசமும் இருக்கிறது. அதுதான் அவரை உயர்த்தி வருகிறது. காமெடியனானாலும் கதாநாயகனானாலும் இனி நான்தான் என மற்ற ஹீரோக்களுக்கு சந்தானம் சவால் விடுவதுபோல் இருக்கிறது இந்த வருடம்.

- ரா