கீரைக்கிழங்கு அடை



என்னென்ன தேவை?
 
புழுங்கலரிசி - 1 கப்,
பாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 1/2 கப்,
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1,
மரவள்ளிக்கிழங்கு - 1,
பெரிய நெல்லிக்காய் - 3,
நறுக்கிய முருங்கைக்கீரை - 1 கப்,
காய்ந்தமிளகாய் - 4,
இஞ்சி - ஒரு சிறு துண்டு,
பூண்டு - 4 பல்,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மரவள்ளிக்கிழங்கையும், சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு, துவரம்பருப்பை ஊறவைக்கவும். நெல்லிக்காயை சீவி கொட்டையை நீக்கவும். அரிசியை ஊறவைத்து களைந்து தண்ணீரை வடித்து, ஊறவைத்த பருப்பு, நெல்லிக்காய், வேகவைத்த கிழங்கு, இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய் சேர்த்து கரகரப்பாக அடை மாவு பதத்திற்கு அரைக்கவும். இத்துடன் முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும் அடை தட்டி எண்ணெய் விட்டு முறுகலாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.