மூலிகை மந்திரம்



ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மூலிகை சாறு உடலுக்கு நல்லது. சித்தர்கள் ஆராய்ந்து அளித்த உயிர் சத்துகள் நிறைந்தவை மூலிகைகள். ஆரோக்கியமாகவும், நோயில் வாடாமலும், உடலை பாதுகாக்க சில மூலிகைகள்.

அறுகம்புல்
ஒரு பிடி அறுகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை எடுத்து மூன்று டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் இளம்சூட்டுடன் காலையில் குடிக்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், அதிக எடை குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்றாக வளர்ந்து, இளநரை மறையும். ரத்தசோகை நீங்கி ரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத்தளர்ச்சி, தோல் வியாதி நீங்கும். கர்ப்பப்பை கோளாறு, மலச்சிக்கல், மூட்டுவலி நீங்கும். புற்றுநோயை அழிக்கும்.

சீரகம்
இரண்டு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளராக குறைந்ததும் குடிக்கலாம். ரத்த விருத்தி அதிகரிக்கும். ரத்தம் சுத்தமாகும். ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண் நோய், வாய் நாற்றம், வயிற்றுவலி, இருமல், விக்கல், பித்தம், அஜீரணம், வயிறு மந்தம் நீங்கும்.

செம்பருத்தி
இரண்டு செம்பருத்திப் பூக்களை பறித்து காம்பு, மகரந்தம் நீக்கி இரண்டு ஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக குறைந்தவுடன் குடிக்கலாம். பெண்களின் கர்ப்பப்பை வலிமை பெறும். வயிற்றுப்புண், மாதவிடாய் கோளாறுகள், வாய்ப்புண், இருதய நோய், நீர் சுருக்கு இவை நீங்கும். முகம் பொலிவு பெறும். ரத்த விருத்தி, ரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும். தலைமுடி உதிர்தல் நீங்கி முடி செழுமையாக வளரும்.

கொத்தமல்லி
ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய்த் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு ஸ்பூன் பனை வெல்லம், ஓர் ஏலக்காய் சேர்த்து அரைத்து 1 டம்ளர் குடிக்கலாம். அஜீரணம், பித்தம், இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைச்சுற்றல், நெஞ்செரிச்சல், சுவை இன்மை இவை நீங்கும்.

கேரட்
கேரட் துருவல் ஒரு கைப்பிடி, தேங்காய்த் துருவல் சம அளவு, காய்ச்சிய பால் கால் டம்ளர், பனைவெல்லம் இரண்டு ஸ்பூன், ஏலக்காய் ஒன்று சேர்த்து அரைத்து அப்படியே குடிக்கலாம். ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். மலட்டுத்தன்மை நீங்கும். இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். முடி வளர்ச்சி, கல்லீரல் மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள்காமாலை நோய் விரைவில் குணமாகும்.

கரும்புச்சாறு
கரும்புச்சாறை அப்படியே 1 டம்ளர் குடிக்கலாம். (எதுவும் சேர்க்க வேண்டாம்) உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். மலச்சிக்கல் நீங்கும். மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை நீங்கும்.

இளநீர்
ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்கலாம். உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடையும். இன்சுலின் சரியான அளவில் சுரக்கச் செய்யும். பித்தம், கபம், குடல் புழுக்கள் நீங்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற எல்லா தாது உப்புகளும் உள்ளன. சிறுநீரகக் கல்லை நீக்கி சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

- ஹசினா