பொலிவான முகம் வேண்டுமா?



முகம் பொலிவு பெற... மாசு மருவற்ற சருமம் கிடைக்க பாரம்பரியமாக பயன்படுத்தும் மூலிகைப் பொடிக்கான செய்முறை இது.

என்னென்ன தேவை?
 
கடலைப்பருப்பு - 1/2 கிலோ,
பச்சைப்பயறு - 1/4 கிலோ,
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்,
காயவைத்த பப்பாளி தோல் - கைப்பிடி அளவு அல்லது தேவைக்கேற்ப,
காயவைத்த ஆரஞ்சு தோல் - கைப்பிடி அளவு அல்லது தேவைக்கேற்ப,
காய்ந்த பன்னீர் ரோஜா இதழ் - 50 கிராம்,
காய்ந்த பூலாங்கிழங்கு - 50 கிராம்,
காய்ந்த வாழைப்பழத்தோல் - கைப்பிடி அளவு,
காய்ந்த வேப்பிலை - 50 கிராம்,
காயவைத்த செம்பருத்திப்பூ - கைப்பிடி அளவு,
காயவைத்த திருநீற்றுப் பச்சையிலை - 1 கட்டு (பூக்கடைகளில் கிடைக்கும். இதனை பயன்படுத்தினால் முகத்தில் வரும் கரும்புள்ளிகள் குறையும்.),
காயவைத்த ஆவாரம்பூ - 100 கிராம்,
காயவைத்த மகுடம்பூ - 100 கிராம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்),
காயவைத்த எலுமிச்சை தோல் - 2 எண்ணிக்கை.

இவை அனைத்தையும் நைசாக மாவாக பொடித்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை

தினமும் ஒரு வேளை 1 டீஸ்பூன் அளவு எடுத்து பால் விட்டு குழைத்து முகத்தில் பரவலாகப் போட்டு, 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து உபயோகிக்கும்போது முகம் பளபளவென்று மின்னும். உபயோகித்த பிறகு 1/2 மணி நேரத்திற்கு முகத்திற்கு சோப் எதுவும் பயன்படுத்த வேண்டாம். குழந்தைகளும் தாராளமாக பயன்படுத்தலாம்.

- வி.பவானி, சென்னை-4.