STOP AIDS



-மகேஸ்வரி

1986ம் வருடம் அது. பாலியல் தொழில் செய்யும் 6 பெண்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் எச்.ஐ.வி. தொற்று உள்ளது என்பது அப்போதுதான் வெளி உலகிற்கு வெளிச்சத்திற்கு வந்தது. பல சோதனைகள், எதிர்ப்புகளுக்குப் பிறகு அது உறுதி செய்யப்பட்டது.

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் HIV கிருமி (Human Immuno Deficiency Virus), மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் வைரஸ். அது பரவுவதால் மரணம் நிச்சயம் என்ற நிலைதான் அப்போது இருந்தது. தற்போது முப்பது ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழகத்தில் எச்.ஐ.வி நிலை என்ன? அது தொடர்பான எண்ணற்ற கேள்விகளுடன், சென்னை தரமணியில் இயங்கிவரும் ஒய்.ஆர்.ஜி.கேர் (YRG CARE) நிறுவனத்தின் பயிற்சி மேலாளர் சதீஷ்குமாரை சந்தித்தபோது, எய்ட்ஸ் எனும் உயிர்கொல்லி நோயின் தற்போதைய நிலை பற்றி தெளிவான விளக்கங்களை தந்தார்.

தமிழகத்தில் எய்ட்ஸின் தற்போதைய நிலை என்ன?

30 ஆண்டுகளில் மக்களிடம் நிறைய விழிப்புணர்வு வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் எச்.ஐ.வி பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசிற்கு மூன்று நோக்கங்கள் உண்டு. அதாவது மூன்று ஜீரோ. முதல் ஜீரோ புதிதாக யாரும் எச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிக்கக் கூடாது. இரண்டாவது, முக்கியமாக குழந்தைகள் இதில் பாதிப்படையவே கூடாது. மூன்றாவது, எச்.ஐ.வி தொற்றால் ஏற்படும் இறப்பு என்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே.

எல்லா கர்ப்பிணி  தாய்மார்களும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இது சந்தேகப்பட்டு செய்யப்படும் பரிசோதனை அல்ல. எச்.ஐ.வி இருக்கிறது எனத் தெரியவந்தால் அதை வளரவிடாமல் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவத்தால் தற்போது இயலும். கர்ப்பிணியாக இருந்தால், வயிற்றில் வளரும் கருவிற்கு வராமல் உறுதியாக தடுக்க முடியும்.

பாதிக்கப்பட்ட ஒரு தாய், பாதிப்பில்லாத குழந்தையினை பெற்றெடுக்க கண்டிப்பாக முடியும். இது பெண்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். நிறைய பெண்களுக்கு எச்.ஐ.வி  பாதிப்பு தனக்கு உள்ளது என்பதே முதல் பிரசவ பரிசோதனைக்கு வரும்போதுதான் தெரிய வருகிறது. தன்னார்வமாக எந்தப் பெண்ணும் எச்.ஐ.வி. தொற்று தனக்கு உள்ளதா எனத் தெரிந்து கொள்ள முயற்சி எடுப்பதில்லை.

எச்.ஐ.வி உள்ளது எனத் தெரியவந்தால், பெண்ணிற்கு அது மிகப் பெரிய அதிர்ச்சி. அம்மாவுக்கு இருந்தால் மட்டுமே குழந்தைக்கு வருகிறது. அப்பாவுக்கு இருந்தால்  வராது. முன்பு பெண்களை மட்டும் டெஸ்ட் செய்து ஆண்களை விட்டுவிடுவார்கள். இதற்கு எம்.டி.சி.டி என்று பெயர். ‘மதர் டூ சைல்ட் டிரான்ஸ்ஃபர்’. இதனால் பெண்ணால்தான் குடும்பத்திற்கு எச்.ஐ.வி. வருகிறது என்ற பிரச்சனை வருகிறது. இப்போது பி.பி.டி.

சி.டி என மாற்றப்பட்டு, ‘பிரிவென்சன் ஆஃப் பேரண்ட் டூ சைல்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன்’ என அழைக்கப்படுகிறது. ஒரு குழந்தை எச்.ஐ.வி பாதிப்புடன் இருக்கிறது என்றால் அதற்கு அப்பா-அம்மா இருவருமே காரணமானவர்கள்.

எச்.ஐ.வி. பரிசோதனை முறைகள்
எச்.ஐ.வி. பரிசோதனை என்பது மிகவும் சாதாரணமான ரத்தப் பரிசோதனை மாதிரிதான். 15 நிமிடங்கள்தான் ஆகும். முன்பெல்லாம் இந்தப் பரிசோதனை 4 மணி நேரம் எடுக்கும். இப்போது ‘ஸ்பாட் டெஸ்ட்’ என அழைக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் இது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களில் 150 முதல் 200 வரை நிர்ணயித்துள்ளார்கள்.

எச்.ஐ.விக்கான சிகிச்சை முறை
எச்.ஐ.வி என்பது கிருமி. எய்ட்ஸ் என்பது நிலை. ஒருவருக்கு எச்.ஐ.வி நோய் தொற்றுதான் வரும். நம் உடலுக்குள் அக்கிருமி வந்துவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியினை தரக்கூடிய வெள்ளை அணுக்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் துவங்கும். அப்போது வேறு ஏதாவது நோய்த் தொற்று நம் உடலுக்குள் வந்தால், அதை எதிர்க்க முடியாத நிலை வரும்.

அந்த நிலைதான் எய்ட்ஸ். எச்.ஐ.வி வைரஸ் உடலில் பரவாமல் இருக்க மாத்திரைகள் வந்துவிட்டன. வெள்ளை அணுக்களை அழியாமல் தடுப்பவைதான் ஏ.ஆர்.டி மாத்திரைகள். சரியான முறையில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, எதிர்ப்பு சக்தியே உடலில் இல்லாத நிலையினை உடல் அடைய துவங்கும்.

சரியான மருத்துவ முறைகளைக் கையாளவில்லை என்றால், நோய் எதிர்ப்பு சக்தியினை முற்றிலும் குறைத்து, எய்ட்ஸ் என்ற இறுதி நிலையினை உடல் அடைய துவங்கும். முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை எச்.ஐ.விக்கு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் வராமல் தடுக்க முடியும். வந்தால் அதனுடன் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

நீரிழிவு நோய், ஹைபர் டென்ஷன் மாதிரி இதுவும் ஒரு நோய். எவ்வளவு நாள் வேண்டுமானாலும் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம். ஆனால் குணப்படுத்த முடியாது. ஏ.ஆர்.டி மாத்திரைகளை 12 மணி நேரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது அரசு பொது மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கிறது.

எச்.ஐ.வி  கிருமி தொற்று உள்ளவர்களுக்கு எடை குறைவு ஏற்பட்டால் அது எச்.ஐ.வி கிருமியால் வராது, வேறு நோய்களால் ஏற்படும். உதாரணத்திற்கு எச்.ஐ.வியும்் காசநோயும் காதலர்கள் போல. எச்.ஐ.வி நோய் தொற்று உள்ளவர்களுக்கு காசநோய் எளிதில் வரும். காசநோயால்  உடல் எடை குறையும். உடல்நிலை குலையும். சில மாத்திரைகளாலும் உடல்நிலை குலைவு ஏற்படும். அது மாத்திரையால் ஏற்படும் பக்கவிளைவுதானே தவிர, எச்.ஐ.வியால் அல்ல.

எச்.ஐ.வி பரவும் வழிமுறைகள்
பாலியல் தொழிலாளர்கள், போதை ஊசி பழக்கம் உள்ளவர்கள் மூலமாக பரவலாம். இதில் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகமான அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு தாய்க்கு எச்.ஐ.வி இருந்தால் தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு பரவ குறைந்தளவு வாய்ப்புகள் உண்டு. எச்.ஐ.வி நோய்த் தொற்று உள்ள ஒருவருடன்.

பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டு, அதன் மூலம் உடலில் பரவ வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. பாதுகாப்பற்ற உடல் உறவு மூலம், எச்.ஐ.வி கிருமி நுழைந்த ஒருவரின் ரத்த மாதிரியில் மூன்று மாதங்கள் கழித்தே எச்.ஐ.வி இருப்பது தெரியவரும். அந்த இடைப்பட்ட மூன்று மாத கால இடைவெளியில். அவரிடமிருந்து ரத்தம் வேறொருவர் உடலில் ஏற்றப்பட்டால், அந்த ரத்தம் மூலமும் பரவலாம்.

எச்.ஐ.வி பற்றி நன்கு தெரிந்தவர்கள், தன்னார்வமாக ரத்தம் கொடுக்க முன்வரும்போது தான் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் இருந்தோமா, போதை ஊசி எதுவும் எடுத்தோமா, தானமாக ரத்தம் ஏற்றிக்கொண்டோமா என யோசித்துவிட்டு, பிறகு ரத்த தானம் செய்ய வேண்டும். பாதுகாப்பான உடலுறவு என்பது இருபாலருக்கும் மிகமிக முக்கியம்.

ஆணுறை பயன்படுத்துவது என்பது குழந்தைப் பேற்றை தடுப்பதற்கு என்றே பலர் நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைப் பேற்றை தடுப்பது மட்டுமின்றி, எச்.ஐ.வி நோய்த் தொற்று தடுப்பு, பால்வினை நோய் தடுப்பு என அனைத்துக்குமானதாக ஆணுறை இருக்கிறது. ஒவ்வொருமுறை உடலுறவுக்கும் ஆணுறையினை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

பதின்பருவத்தினருக்கு பாலியல் விழிப்புணர்வு
பாலியல் பற்றி மிகப் பெரிய தவறான கண்ணோட்டத்தை நாம் இளையவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். நமக்கு எப்படி பசிக்கிறதோ, தூக்கம் வருகிறதோ, கோபம் வருகிறதோ, அது மாதிரியான உணர்வுதான் செக்ஸ். மனித உடலில் அது ஓர் இயல்பு. நமக்குள் இருக்கும் பலவிதமான உணர்வுகளில் செக்ஸ் ஒரு முக்கியமான உணர்வு. அந்த உணர்வு வரவில்லை என்றால்தான் பிரச்சனை.

தற்போது குழந்தைகளிடத்தில் ஊடக பயன்பாடு மிகவும் அதிகம். எந்நேரமும் நம் குழந்தைகளை கண்காணித்துக்கொண்டே இருக்க முடியாது. ஊடகங்கள் பெரும்பாலும் குழந்தைகளின் பால் உணர்ச்சிகளை தூண்டும் நிகழ்ச்சிகளையே அதிகம் தருகின்றன. பாலியல் சார்ந்த செய்திகளை அறியும் ஆர்வத்தை ஊடகங்கள் வளரும் இளம் பருவத்தினரிடையே தொடர்ந்து அதிகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

பாலியல் பற்றி தெரிந்துகொள்ள மாணவர்களிடையே எப்போதும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. சரியான புரிதல் இன்றி, தவறான கருத்துக்களே மாணவர்களிடத்தில் பெரும்பாலும் இருக்கும். அரசல் புரசலாகத் தவறான சில தகவல்களை தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கு பாலியல் பற்றி அறியும் ஆர்வம் அந்த வயதில் அதிகமாகவே இருக்கும். சரியான பார்வையில் அவர்களுக்கு அதை விளக்க வேண்டும்.

குழந்தை இப்படித்தான் பிறக்கும் என்பதைக்கூட நாம் பேசுவது கிடையாது. இதைப்பற்றி சொல்லிக்கொடுத்தால் குழந்தைகள் அதைத் தெரிந்துகொள்ள எங்காவது போய்விடுவார்களோ என்ற பயம் பொதுவாக உள்ளது. பிறப்புறுப்பு பற்றி, அதன் செயல்பாடு பற்றி, பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றி விளக்க வேண்டும்.

தெளிவான பார்வை கிடைத்த பிறகு இவ்வளவுதானா என்ற எண்ணம் அவர்களுக்கு வருகிறது. அதன் பிறகு தன்னை எப்படி பாதுகாப்பது என்ற புரிதல் பதின்பருவத்தினரிடையே தானாக வருகிறது. சில நேரம், நம் குழந்தைகள் பாலியல் சார்ந்த கேள்விகளை நம்மிடத்தில் கேட்டால் அதைக் குற்றமாக நினைத்து அவர்களை குழப்பாமல், அவர்களின் வயதுக்கேற்ற சரியான பார்வையில் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

இதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடத்தில் நெருக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும். அவர்களது கேள்விகளை ஊக்கப்படுத்தி, சரியான கண்ணோட்டத்தில் விளக்க வேண்டும். பாலியல் சார்ந்த கேள்விகளை யாரிடம் எப்படிக் கேட்பது என அவர்களுக்குத் தெரியாது. எனவே சரியான முறையில் அவர்களை வழி நடத்துவதில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது.

மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. குறித்து பேசுவதில் ஏன் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய மனத்தடை இருக்கிறது. பெற்றோருக்கும் உண்டு. மேல்நிலை கல்வி படிக்கும்போது வரும் பாலியல் பாடத்தை ஆசிரியர்கள் தவிர்த்துவிட்டுச் செல்கின்றனர். செக்ஸ் எஜுகேஷன் வகுப்பு இருக்கிறது என சொன்னாலே நிறைய பெற்றோர்கள் அதை நடத்த வேண்டாம் எனச் சொல்லும் நிலையே பெரும்பாலும் இங்கு இருக்கிறது.

பாலியல் கல்வி என்றால் உடல் உறவை எப்படி வைத்துக்கொள்வது என சொல்லிக்கொடுப்பதுதான் என்பது மாதிரி ஒரு தவறான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் இருக்கிறது. யுனிசெஃப், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், டி.டி.ஆர்.டி. மூன்று அமைப்புகளும் சேர்ந்து, எல்லா் பள்ளி, கல்லூரிகளிலும் எச்.ஐ.வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழங்கின.

1996ல் எங்களுக்கு இதெல்லாம் மிகப்பெரிய சவாலாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து நிகழ்ச்சிகளை  நடத்தத் துவங்கினோம். மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி பரவும் முறைகளை மட்டும் பேசிவிட்டு வரமுடியாது. கட்டாயம் அவர்களுக்கு பாலியல் தொடர்பான செய்திகளைச் சொல்ல வேண்டும். எச்.ஐ.வி. நோய்த் தொற்று குறித்து இளைஞர்கள் மத்தியில் பேசும்போது பாலியல் பற்றிய நிறைய சந்தேகக் கேள்விகள் அவர்களிடமிருந்து எழத் தொடங்கின.

அவர்களின் சந்தேகங்களை மிகவும் இயல்பாக தெளிய வைத்துவிடுவோம். மனித உடலின் ஒவ்வொரு செயல்பாடும் அவர்களுக்கு புரியவைக்கப்படும். பெண் மற்றும் ஆண் உடல் இயக்கங்கள், விறைப்புத் தன்மை ஏன் வருகிறது, மாதவிடாய் தோன்றுவது, குழந்தைப் பிறப்பு பற்றிய அத்தனை விஷயங்களும் தெளிவுபடுத்தப்படும். உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் ஏன் நிகழ்கிறது எனவும் விளக்கப்படும்.

அதைத் தெரிந்துகொள்ளும்போது பாலியல் பற்றிய வக்கிரம் மாணவர்களிடையே கட்டாயம் உடையும். தவறான கருத்துகள் உடைந்து, தெளிவான பார்வை கிடைக்கும். அவர்கள் அதை வெளிப்படுத்தவும் செய்வார்கள். தாங்களாகவே முன்வந்து எச்.ஐ.வி. பரிசோதனை எடுக்கவும் தயாராகிவிடுவார்கள்.

மக்களுக்கு எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வை தருவது, வராமல் பாதுகாப்பது, தனிமை மற்றும் புறக்கணிப்பு இல்லாமல் செய்வது போன்ற வேலைகளைச் செய்யவேண்டியது அவசியம். அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து் இவற்றை செய்கின்றன. இந்த 30 ஆண்டுகளில், இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில் அரசும் தன்னார்வ அமைப்புகளும் நிறைய பணியாற்றியுள்ளன.

ஆனாலும் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்படுவது மற்றும் புறக்கணிக்கப்படுவது இன்றும் தொடர்கிறது. எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான ஒரு குழந்தையிடமிருந்து தன் குழந்தைக்கு வந்துவிடுமோ என்கிற எண்ணம் மக்களிடம் இன்றும் இருக்கிறது. பள்ளி, வேலை செய்யும் இடங்களிலும் இது தொடர்கிறது.

பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை எடுக்கும் மருத்துவமனை, பயன்படுத்தும் கழிவறையை பயன்படுத்துவீர்களா? என கேள்விகேட்டால் யோசிக்கும் நிலையே இப்போதும் இங்கு இருக்கிறது. சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியபின் அதே கேள்வியினைக் கேட்டால், தெளிவாக பதில் சொல்வார்கள். நூறு பெண்கள் மத்தியில் இதுகுறித்துப் பேசினால், அந்த நூறு பெண்களும் பாதிக்கப்படாமல் வாழ்நாள் முழுவதும் இருப்பதற்கு தேவையான விழிப்புணர்வை இத்தகைய பயிற்சிகள் வழங்குகின்றன.

ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களை தவிர்க்காமல் எப்படி கையாள்வது, பழகுவது என்றும் சொல்லித்தரப்படும். ஹெல்த் கேர் புரொபஷனல்ஸ் எனப்படும் டாக்டர், நர்ஸ், லேபில் வேலை செய்பவர்கள், கவுன்சிலர் என இவர்களுக்கும் இரண்டு நாள் எச்.டி.சி. எனப்படும் பயிற்சி உண்டு. எச்.ஐ.வி. பரிசோதனைக்கு வருபவர்களுக்கு என்ன மாதிரியான தகவல் தர வேண்டும்.

ப்ரீகவுன்சிலிங் முறைகள், எப்படி பரிசோதனை செய்வது என எல்லாம் இந்தப் பயிற்சியில் அவர்களுக்கு கற்றுத்தரப்படும். அனைவருக்கும் எச்.ஐ.வி கல்வி தேவை. அது மட்டுமே மனதில் இருக்கும் தடைகளை சரிசெய்யும். எச்.ஐ.வி பாதிப்பினால் மிகவும் முடியாத நிலையில் வருபவர்களைக் கூட தொடர்ந்து சிகிச்சை பெறவைத்து, நல்ல உடல் நிலையுடன் வாழவைக்க முடியும்.

மருத்துவரீதியான முன்னேற்றம் இறப்பைத் தடுத்திருக்கிறது. எங்கள் நிறுவனத்திற்கு வந்து் சிலர் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். வரத்தயங்குபவர்களுக்கு வீட்டிற்கே சென்று மருத்துவம் செய்கிறோம். இவர்களுக்கென திருமணத் தகவல் மையமும் எங்களிடம் உண்டு. பாதிக்கப்படாதவர், பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்துகொண்டவர்களும் எங்களிடம் உண்டு.

121 புராஜக்ட்
YRG Care, 121 மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளார்கள். எச்.ஐ.வி, காசநோய், மஞ்சள் காமாலை, பால்வினை நோய் பற்றிய தகவல்கள் இதில் உள்ளன. ஆப் பயன்படுத்தும் வசதி இல்லாதவர்கள், 044-33125000 என்ற ஹெல்ப் லைனை பயன்படுத்தலாம். நிறைய தொண்டு நிறுவனங்களுடன் நெட்வொர்க் செய்து இந்த ஆப்பை இணைத்துள்ளனர்.

மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை எங்கே சேர்ப்பது என்ற தகவல் வேண்டுமா? கால் இழந்த நபருக்கு இலவசமாக செயற்கை கால் பெறவேண்டுமா? எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி வேண்டுமா?  இந்த ஹெல்ப் லைன் நம்பரை அல்லது ஆப்பை தொடர்பு கொண்டால், சந்தேகங்களுக்கு, எந்த நிறுவனத்தை எங்கே அணுகுவது என்ற தகவலைப் பெற்றுத் தருகிறார்கள். 24 மணி நேரமும் இது செயலில் இருக்கும்.

பாத்திமா, கேம்ப் ரெயின்போ கன்சல்டன்ட்
எங்கள் நிறுவனத்தில் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான 500 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். சாதாரண குழந்தைகள் மாதிரி விளையாட விடாமல், யாருடனும் கலந்து பழக விடாமல் தனிமைப்படுத்துவார்கள். தனியாக அமர வைப்பார்கள். அவர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிதான் ‘கேம்ப் ரெயின்போ’. ரெயின்போ பார்த்ததும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும் குதூகலமும் வரும்.

அதுமாதிரிதான் இந்த முகாமும். குழந்தைகளுக்கு நிறைய மகிழ்ச்சியைத் தரும். எங்கள் அமைப்பில் பதியப்பட்ட குழந்தைகள் மட்டுமல்லாமல் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டத்திலுள்ள குழந்தைகளையும் சேகரித்து முகாம் நடத்துகிறோம். அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகள், நேச்சுரல் அண்ட் டிஸ்கவரி. ஸ்டேஜ் நைட், கார்னிவல் மூலமாக திறமைகளை வெளிக்கொண்டு வருவோம்.

சில குழந்தைகள் நன்றாகப் பாடுவார்கள். அந்த திறமை அவர்களுக்கே தெரியாது. இந்த முகாம் அவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவே தருகிறோம். இதன் மூலம் எச்.ஐ.வி பற்றி தெரிய வைப்பது, அதனுடன் எப்படி வாழ்வது போன்ற விஷயங்களைக் கற்றுத் தருகிறோம். முதலில் அவர்களுக்கு நட்பு வட்டம் இருக்காது.

ஆனால் இந்த முகாம் வந்த பிறகு நண்பர்கள் இருப்பார்கள். அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் அளவிற்கு அவர்களின் தன்னம்பிக்கை வளர்ந்திருக்கும். 5 நாள் தங்கி இருந்து எச்.ஐ.வி குறித்து முழுமையாகப் புரிந்து, எனக்கு இந்த  நோய் தான் இருக்கு, இதுதான் என் பிரச்சனை, நான் இப்படித்தான் வாழனும், இந்த மாத்திரைகளை நான் தவறாமல் சாப்பிடனும், சாப்பிடலைன்னா என்ன நடக்கும், எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு, அதை நான் முழுமையா வாழனும், வாழ முடியும். நான் நினைத்ததைப் படிக்கலாம்.

திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசிக்கும் உரிமை எனக்கும் உண்டு போன்ற விஷயங்கள் எல்லாவற்றையும், வயதின் அடிப்படையில் 9 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறோம். எப்படி சேர்ந்து வேலை செய்வது என்ற ‘டீம் ஒர்க்கும்’ இங்கே கற்றுத் தரப்படும். அவர்களுக்கு மிகப் பெரிய தெளிவு கிடைக்கும். தொடர்ந்து அவர்களை நாங்கள் கண்காணிப்போம்.

டாக்டர் சுனிதி சாலமன்
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் எச்.ஐ.வி இருப்பதை உறுதி செய்த சோதனையில் தன் மாணவி நிர்மலா செல்லப்பனுடன் இணைந்து அதுகுறித்த ஆராய்ச்சிகளில் முக்கிய பங்காற்றியவர்.எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கவும் அதை ஒழிக்கவும் தீவிரமாக முயற்சிகளும் செய்தார்.

விருப்ப ஓய்வு பெற்று எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான கல்வி, ஆலோசனை, பரிசோதனைக்காக ஒய்.ஆர்.ஜி தொண்டு நிறுவனத்தை சென்னை தரமணியில் தொடங்கி நடத்தி வந்தார். 74 வயதான அவர் கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் காலமானார். அவரது இறப்பிற்கு பிறகு, தன்னலமற்ற அவரின் சேவையினைப் பாராட்டி, மத்திய அரசு பத்ம விருதினை வழங்கி அவரை கவுரவித்தது.