வதை முகாமில் ஒரு வண்ணத்துப்பூச்சி!





நான் ஆன் ஃப்ராங்க். 1929ல் ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் நகரில், ஓட்டோ ஃப்ராங்க் - எடித் ஆகியோரின் இளைய மகளாகப் பிறந்தேன். ஜெர்மனி, நாஜிகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தவுடன் ஃப்ராங்க்ஃபர்ட்டிலிருந்து நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமுக்கு என் குடும்பம் குடிபெயர்ந்தது.  என்னுடைய 13வது பிறந்தநாளில் பரிசாகக் கிடைத்த டயரியில் என் எண்ணங்களை எழுத ஆரம்பித்தேன்.

அப்போது நாஜி படையினரிடமிருந்து என் அக்காவுக்கு சம்மன் வந்தது. சம்மன் வந்தவர்கள் வதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதனால், நாங்களும் நண்பர்கள் சிலரும் அப்பாவின் அலுவலகத்தில் இருக்கும் ரகசிய அறைக்குள் தஞ்சமடைந்தோம். பகல் நேரத்தில் பேச முடியாது... வேகமாக நடக்க முடியாது. கழிவறை பயன்படுத்த முடியாது.

அன்று பீரங்கிகளின் சைரன் ஒலி காதைக் கிழித்தது... நள்ளிரவு வரை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. கண்ணீர் விடுவதைத் தவிர என்னால் என்ன செய்ய முடியும்?
ரகசிய அறைக்கு வந்து ஒரு வருடமாகிவிட்டது. எங்கள் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. இரண்டாம் உலகப் போரின் விளைவால் உணவுப்பற்றாக்குறை. பொருள்களின் விலை எங்கோ சென்றுவிட்டது. நாங்களும் உணவைச் சுருக்கிக் கொண்டோம். சில நாட்கள் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிடுவோம். சில நாட்கள் பயறு உண்போம். நேற்று எங்களுக்குக் காய்கறி கொடுக்கும் நண்பரை ராணுவம் பிடித்துச் சென்றுவிட்டது. இனி அதுவும் கிடைக்காது. ஒரு சாதாரண ரொட்டி சாப்பிட்டு எவ்வளவு காலமாகிவிட்டது!  

என் உடை மிகவும் குட்டையாகி விட்டது. செருப்புப் பொருந்தவில்லை. குளிருக்கு இதமான கம்பளிகள் இல்லை. பார்வைக்கோளாறும் வந்துவிட்டது.
தலைமறைவு வாழ்க்கையில் இன்னொரு சங்கடம்... திருடர்கள் யாராவது கீழ்தளத்துக்கு வரும்போது எங்கள் இதயமே நின்றுவிடும். எங்களைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது? சாவதை விட எப்போது சாவோம் என்று காத்திருப்பது கொடுமையானது.  

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் மனித மனம் அதிலிருந்து விடுபடவே எண்ணும். ஆம்... எனக்குள்ளும் சந்தோஷமான விஷயங்கள் நிகழ்கின்றன. பீட்டர்! வான்ட்டானின் மகன்தான் பீட்டர். ஆரம்பத்தில் எனக்கு அவனைப் பிடிக்கவில்லை. காலத்தின் கோலத்தில் பிடித்துவிட்டது. என் வயது அப்படிப்பட்டது என்று நினைக்கிறேன். சில நேரங்களில் நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். சில நேரங்களில் அவன் அறிவிலியாகவும் சோம்பேறியாகவும் இருப்பதாக எண்ணுகிறேன். என் சிந்தனைகள் வேறு... பீட்டரின் சிந்தனைகள் வேறு. இவன் எனக்கு சரிவரமாட்டான் என்றும் தோன்றுகிறது. ஆனாலும், இந்த நட்பு இந்தச் சூழலில் மகிழ்ச்சியளிக்கிறது.

இன்னொரு விஷயம்... நானும் அக்காவும் சுருக்கெழுத்தில் நன்றாகத் தேர்ச்சி பெற்றுவிட்டோம். என்னைப் பெரிய பெண்ணாக அங்கீ கரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அக்கா படிக்கும் சில புத்தகங்களை நான் வாசிக்க அனுமதி கிடைத்திருக்கிறது!

போர்ச்சூழலிலோ ஒன்றும் மாற்றம் இல்லை. யூதர்கள் வேட்டையாடப்பட்டு, கண்காணா வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்று அறியும்போது இதயம் வெடித்து விடுவது போல இருக்கிறது. சில முகாம்களில் நச்சுப்புகை செலுத்தி கூட்டம் கூட்டமாகக் கொன்று விடுகிறார்கள். என் நண்பர்கள் குளிரில் அடி வாங்கி மடிந்துபோகும்போது, நான் மட்டும் இந்தப் பாதுகாப்பான இடத்தில் வாழ்வது நியாயமா?

பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் திரும்பி வரும்போது பெற்றோர் காணாமல் போயிருப்பார்கள். கடைக்குச் சென்ற மனைவி திரும்பி வரும்போது வீடு பூட்டியிருக்கும். பெற்றோரைத் தேடி குழந்தைகள் அழும் ஓலம் என்னவோ செய்கிறது. வீதியில் விழும் பிணங்களை அகற்றுவதே பெரிய வேலை. சே... போர் எவ்வளவு கொடூரமானது? பூகோளமே போரில் ஈடுபட்டிருக்கிறதே... தன் நாட்டு மக்களையே அழித்தொழிக்கும் கொடூரத்தைப் போரில் மட்டுமே காண முடியும். போர் இரக்கமற்றது. நியாய, தர்மங்கள் கிடையாது. போரால் யாருக்கும் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

நாங்கள் செய்த பாவம் என்ன? யூதர்களாகப் பிறந்தது எங்கள் குற்றமா? ஒரு யூதன் தவறு செய்தால் ஒட்டுமொத்த யூதர்களுமே தவறு செய்தவர்களாகி விடுகிறார்கள். ஒருவேளை யூதர்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்... லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஹிட்லரைக்கூட நாங்கள் மன்னித்துவிடுவோம்!

மக்களுக்கும் இந்தப் போரில் பங்கிருக்கிறது. இல்லை என்றால் இந்தப் போருக்கு எதிராக மக்கள் புரட்சி செய்திருக்க மாட்டார்களா? மனிதனுக்குள் அழித்தொழிக்கக் கூடிய கொடிய மனப்பான்மை இருக்கும் வரை, உலகில் அனைத்து அழகான விஷயங்களும் மடிந்துகொண்டேதான் இருக்கும்.

டயரி எழுத ஆரம்பித்தபோது இருந்த ஆன் வேறு... இன்று இருக்கும் ஆன் வேறு. என் உடல் வளர்ந்ததைப் போலவே சிந்தனையும் வளர்ந்திருக்கிறது. நிறைய படிக்கிறேன். நிறைய தெரிந்துகொள்கிறேன். பலமும் துணிச்சலும் உள்ள பெண்ணாக மாறியிருக்கிறேன்.

எதிர்காலத்தில் நான் என்னவாக வர விரும்புகிறேன்? மற்ற பெண்களைப் போல ‘பிறந்தோம் ஏதோ வாழ்ந்தோம்’ என்று என்னால் இருக்க முடியாது. ஒருநாளும் மறந்து போகக்கூடிய ஒரு சாதாரணப் பெண்ணாக நான் வாழ்ந்து முடிக்க விரும்பவில்லை.

எழுத்தாளர்! ஆம்... நான் நிறைய சிறுகதைகள் எழுதி வைத்திருக்கிறேன். ஒரு நாவல் எழுதும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். 2 ஆண்டுகளாக நான் ‘கிட்டி’ டயரியில் பகிர்ந்துகொண்ட விஷயங்களை ஒரு புத்தகமாகக் கொண்டுவரும் எண்ணத்தில் இருக்கிறேன். இறந்த பிறகும் வாழ வேண்டும் என்றால் ஓர் எழுத்தாளரால்தான் சாத்தியம்!

பத்திரிகையாளர் ஆகவும் ஆசை. எழுத்து மூலம் அனைத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரமுடியும் என்று நம்புகிறேன். எழுத்தின் மூலம் என் துயரங்கள் மறைவது போல, உலகத்தின் துயரத்தை என்னால் துடைக்க முடியும். இது சாத்தியமா?

ஐயோ... இந்த நாள் மிகவும் துயரமானது. யாரோ எங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டனர். ஆண்கள் ஒரு வண்டியிலும் பெண்கள் ஒரு வண்டியிலும் ஏற்றப்பட்டோம். யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை.

பாதிக்கப்பட்டவர்களை எட்டியிருந்து பார்த்த நான், இன்று பாதிக்கப்பட்டவளாக வதைமுகாமுக்குச் செல்கிறேன். வதைமுகாமில் டைபஸ் என்ற நோய் பரவி வருகிறது. வரிசையாக ஒவ்வொருவரையும் மரணம் ஆட்கொள்கிறது. அக்கா இறந்த ஒரு மாதத்தில் நான் மடிந்து போனேன். அம்மாவும் இறந்து போனார். ஆண்கள் சிறையில் பீட்டரும் இறந்து போனான்...

என் அப்பா?
பல லட்சம் உயிர்களைக் குடித்த பிறகு, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. தப்பிப் பிழைத்தவர்களில் என் அன்பு அப்பாவும் ஒருவர். எங்கள் குடும்ப நண்பர் மையீப் கையிஸ் அப்பாவைச் சந்தித்தார். நாங்கள் வதை முகாம்களுக்குச் சென்ற பிறகு, எங்கள் அறைக்கு வந்து, என் டயரியை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார் அவர். என் டயரியைப் படித்த அப்பாவால், ஒரு தகப்பனாக தன் துயரத்தைத் தாங்கமுடியவில்லை. தன் மகளின் எழுத்தாற்றலும் நாஜி படைகள் நிகழ்த்திய கொடூரங்களும் வெளியுலகுக்குத் தெரிய வேண்டும் என்று விரும்பினார். புத்தகமாகக் கொண்டு வந்தார்.
1945... 15 வயதில் நான் இறந்து போனேன். ஆனால், இன்று உலகம் முழுவதும் 60க்கும் அதிக மொழிகளில் என்னுடைய புத்தகத்தின் மூலம் வாழ்ந்து வருகிறேன். உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட 10 நூல்களில் என் புத்தகமும் ஒன்று. நான் நினைத்தது போல சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்ற என் கனவு நிறைவேறிவிட்டது...

தோழிகளே! ஒரு நிமிடம்... எழுத்தாளர் என்பது மட்டுமே என் கனவு அல்ல. நான் சொல்ல வந்த செய்தி, இனத்தின் பெயரால் எந்த ஒரு மனிதரும் இனி சாகக்கூடாது... எந்தக் காரணத்துக்காகவும் இந்த பூமியில் போர் நிகழக்கூடாது என்பதுதான். இனத்தின் பெயரால் உயிரை இழந்த கடைசி மனிதர்கள் நாங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இன்றும் இனத்தின் பெயரால் படுகொலைகளும் அழித்தொழிப்புகளும் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன. என்னைப் போல எத்தனையோ லட்சம் பேர் பலியாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சாத்தியமாகாத கனவா என்னுடையது? ஹிட்லர்கள் ஒருபோதும் மரிப்பதில்லையோ?