கிரகங்கள் தரும் யோகங்கள்



மேஷ லக்னத்துக்கு சூரியனும் செவ்வாயும் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் 4


மேஷ லக்னத்தின் அதிபதியான செவ்வாய் ஒவ்வொரு ராசியிலும் தனித்து நின்றால் என்ன பலன் என பார்த்தோம். இனி அடுத்தடுத்த அத்தியாயங்களில் செவ்வாயோடு ஒவ்வொரு கிரகமும் சேர்ந்து நின்றால் கிடைக்கும் பலன்களைப் பார்க்கப் போகிறோம். அதில் முதலாவதாக சூரியனும் செவ்வாயும் சேர்ந்து மேஷத்தை லக்னமாகக் கொண்டால் என்னென்ன பலன்களை அளிக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

முதலாவதாக மேஷ லக்னம் எனப்படும் முதலாம் இடத்தில் சூரியனும் செவ்வாயும் சேர்ந்து அமர்வதென்பது விசேஷமாகும். இதற்கு மங்கள ஆதித்ய யோகம் என்று பெயர். அதாவது, லக்னாதிபதியான செவ்வாயும் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியும் பூர்வபுண்யாதிபதியுமான சூரியனும் லக்னத்தில் அமர்வது நன்மையே. பிறக்கும்போதே பரம்பரைச் சொத்துக்களோடு இருப்பார்கள்.

பிறந்த மண்ணில் உறவுகள் புடை சூழ வலம் வருவார்கள். சிறந்த மக்கட்பேறு அமையும். பிறர் சொத்துக்கு ஒருபோதும் ஆசைப்பட மாட்டார்கள். மேஷத்தில் சூரியன் உச்சமாவதால்  இதயநோய் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்குவர். புதுமையான விஷயங்களை யோசித்து நடைமுறைப்படுத்துவார்கள்.  ஆனால், இந்த சேர்க்கையானது தந்தைக்கும் மகனுக்குமான போராட்டத்தைக் கொடுக்கும். அவர்களுக்குள் ‘நீயா, நானா’ என்கிற போட்டி இருந்தபடி இருக்கும். 

அடுத்ததாக சூரியனும் செவ்வாயும் ரிஷப ராசியில் - அதாவது லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் அமர்ந்தால் கொஞ்சம் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். சுக்கிரன் வீட்டில் சூரியன் அமர்கிறது. இதனால் பார்வைக் குறைபாடு நேரலாம். இது சூரிய தசையோ அல்லது சூரிய புக்தியோ நடக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், ஒருபோதும் பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது. பிறர் மனதைப் புண்படுத்தும்விதமாகப் பேசுவதால் சுற்றியுள்ளோர் வெறுப்பாகவே செயல்படுவார்கள். இவர்கள் ஆன்மிகப் பேச்சாளர்களாகவும் பிரசாரகர்களாகவும் விளங்குவார்கள்.

 இது குடும்ப ஸ்தானத்தைக் குறிப்பதால் குடும்பத்தோடு இணக்கத்தோடு இருக்க மாட்டார்கள். வாழ்க்கைத் துணையை சீண்டிப் பார்த்துச் சிரிக்கும் குணமிருக்கும். விஷயங்களைப் போட்டு வாங்கிக் கறக்கும் திறமையும் இருக்கும். பெண்களுக்கு நாத்தனார், கொழுந்தனாரோடு கருத்து மோதல்கள் வந்து நீங்கும். நாணயம், கீர்த்தி, புகழ், இளைய சகோதரன், தைரியம், முயற்சி போன்றவற்றைக் குறிப்பது மூன்றாம் இடமாகும்.

இந்த இடத்தில் செவ்வாயும் சூரியனும் இணைந்திருப்பது பெரும்பாலும் நன்மையையே தரும். அதிகாரம் மிக்க பதவியில் அமர்வார்கள்.  இந்த செவ்வாய் எட்டுக்குரியவராக இருப்பதாலும், தனக்கு அஷ்டமத்தில் மறைவதாலும் நீண்ட, தீர்க்கமான ஆயுள் இருக்கும். ஆனால், இந்த சேர்க்கையானது இளைய சகோதரனைப் பாதிக்கும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களின் வீட்டில், அண்ணனும் தம்பியும் சேர்ந்து வெகு காலம் இருப்பது உறவையே பாதிக்கும். அதனால், இரண்டு வீடு தள்ளியிருப்பது நல்லது.

 காதுவலி தொல்லை இருந்தால் பார்த்துக்கொள்ளுங்கள். விலையுயர்ந்த ரத்தினங்கள், வைரம் அணியக்கூடிய யோகத்தைக் கொடுக்கும் அமைப்பு இது. இவர்கள் பேசும் எல்லா வார்த்தைகளிலும், விவாதத்திலும் ‘தான் சொல்வதே சரி’ என்கிற அகந்தை இருக்கும். காரசாரமாக சாப்பிடுவார்கள். செஸ் விளையாட்டு, நூலகம், மொழிபெயர்ப்பாளர்கள் என்று சில துறையில் சிறந்து விளங்குவார்கள்.

நான்காம் இடமான சந்திரனின் வீடான கடகத்தில் சூரியனும் செவ்வாயும் முதல் மூன்று டிகிரிக்குள் சேர்ந்திருந்தால் அது நல்லதல்ல. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு என்று சிரமப்படுவார்கள். தாயார் அவ்வப்போது நோய்வாய்ப்படுவார்கள். இந்த அமைப்பில் பிறந்தோர் பலரும் தாத்தா - பாட்டி நிழலில் வளர்வார்கள். இவர்கள் பூர்வீகச் சொத்து விஷயமாக வழக்குகள் தொடுக்காமல் இருக்க வேண்டும். இல்லையெனில் ரெண்டு காணி இடத்திற்காக நாலு காணிக்கான தொகையை செலவிட வேண்டியிருக்கும். பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்கும்தான்.

கஷ்டமோ, நஷ்டமோ, தனியாக எதிர்கொள்ள வேண்டும். இவர்கள் தாயாரையே சார்ந்து இருக்கக் கூடாது. பள்ளியில் படிக்கும்போதே சில வருடங்கள் விடுதியில் தங்கிப் படிப்பது நல்லது. இதுவே வாகன ஸ்தானமாகவும் இருப்பதால் கியருள்ள வண்டியை உபயோகப்படுத்தக் கூடாது. நிச்சயம் மதுவைத் தவிர்க்க வேண்டும். முகத்தில் ஏதாவது ஒரு வடு இருக்கும். பித்தக் கல் பிரச்னை இருக்கும். பார்த்துக் கொள்ளுங்கள். கலப்புத் திருமணமாகும் வாய்ப்பே அதிகம். 

சிம்மத்தில் - அதாவது லக்னத்திலிருந்து ஐந்தாம் இடத்தில் சூரியனும் செவ்வாயும் முதல் மூன்று பாகைக்குள் 13, 17 டிகிரிக்கு அப்பால் 27, 30க்குள் அமர்ந்தால் நல்லது. நிறைய யோக பலன்களை எதிர்பார்க்கலாம். கருவிலேயே திருவுடையாராக விளங்குவார்கள். ஆனால், இந்த இரு கிரகங்களும் முதல் ஐந்து பாகைகளுக்குள் இருந்தால் கர்ப்பப்பை சம்பந்தமாக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

தந்தை சம்பாதித்த சொத்தை விடவும் பாட்டன் வைத்துவிட்டுச் சென்ற சொத்துக்களே நிலைத்து நிற்கும். உள்ளுணர்வு, கனவுகள் ஆகியவற்றைக் கணித்து எதிர்காலம் குறித்த சித்திரத்தை வரைவார்கள். யோக விஷயங்களில் மிகவும் ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பார்கள். ஆத்மகாரகனாகிய சூரியன் தன்னுடைய சொந்த ராசியில் இருப்பதால் இப்படி! சட்ட வல்லுனர்களாகவும் சிறந்து விளங்குவார்கள்.

மேஷ லக்னத்திற்கு சூரியனும் செவ்வாயும் கன்னி ராசியான ஆறில் இருப்பது நல்லது என்றே நூல்கள் சுட்டிக் காட்டுகின்றன. திடீர் யோகம் அளிக்கும் அமைப்பு இது. சட்டென்று வாழ்க்கைப்பாதை மாறுவதையே இது காட்டுகிறது. சகோதர வகையில் மட்டும் அவ்வப்போது மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். மின்சார விபத்துக்கள், நெருப்புக் காயங்கள் போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவர்களுக்கு ரகசியங்களை காக்கத் தெரியாது. தடுக்கி விழுந்தால் ‘கேஸ் போடுகிறேன்’ என்று காவல் நிலையத்திற்கு ஓடுவார்கள். இதனால் இவர்களோடு வெளிப்படையாகப் பழகுவதற்கு பலரும் அஞ்சுவார்கள். அடிவயிற்றில் வலி வந்து நீங்கியபடி இருந்தாலும் தொடர்ந்து மருத்துவரை பார்ப்பது நல்லது. அயல்நாட்டுக் குடியுரிமை பெற முயற்சிப்பார்கள்.

சுக்கிரனின் வீடான ஏழாம் வீட்டில், துலாம் ராசியில் சூரியனும் செவ்வாயும் அமர்ந்தால் கொஞ்சம் வீரியமான பலன்களே கிடைக்கும். ரிஷப ராசி சுக்கிரனுடைய வீடாக இருந்தாலும், அது சுக்கிரனின் மென்மையான வீடாகும். ஆனால், துலாம் அப்படியல்ல. சனி உச்சமடைகிற வீடாக இருப்பதால் இது கொஞ்சம் வீரிய வீடாகும். லக்னாதிபதியான செவ்வாய் சமநிலையில் இங்கு இருப்பார்.

 ஆனால், சூரியன் பலவீனமாகிறார். கலப்புத் திருமணம், திடீர் மணமுறிவு, தாமதத் திருமணம் என ஆகக்கூடும். இந்த இரண்டு கிரகங்களும் விசாகத்தில் சேர்ந்து அமர்ந்திருந்தால் திருமண விஷயங்கள் எந்தத் தடையுமில்லாது செல்லும். ஆனால், குழந்தை பாக்கியம் சற்று தாமதித்துத்தான் கிடைக்கும். வசதி வாய்ப்புகளைப் பார்க்காமல் பாரம்பரியத்தைப் பார்த்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது நல்லது.

கூட்டுத் தொழிலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து மேஷ ராசியைப் பார்ப்பதால் திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் எமோஷனலாக யோசிப்பீர்கள். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுடைய சகோதரர்களுக்கும் உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்தில் புதுப்புயல் பிரச்னையாக மையம் கொள்ளும். 

அடுத்ததாக லக்னாதிபதியான செவ்வாய், லக்னத்திற்கு எட்டாமிடமான விருச்சிகத்தில் ஆட்சி பெறுகிறார். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் எட்டில் மறைந்தாலும், தனக்கு - அதாவது சிம்ம ராசிக்கு - நாலில் அமர்கிறார். இதில் முதல் பாகைக்குள் செவ்வாயும் கொஞ்சம் பாகைகள் தள்ளி சூரியனும் அமர்ந்திருந்தால் ராஜதந்திரியாக விளங்குவார்கள். உளவாளி யாக இருப்பார்கள். வருமான வரித்துறையில் முக்கிய பணியில் அமர்வார்கள்.

விருச்சிக சூரியன் விசேஷ சூரியனாவார். மாறுபட்ட சிந்தனைகளோடு எப்போதும் இருப்பார்கள். ஒரு அமைப்பை உடைக்க வேண்டுமெனில் இவர்களை அனுப்பலாம். இவர்களுக்கு குடல்வால் பிரச்னை, பிறப்புறுப்பில் புண் அல்லது வீக்கம், பெண்களாக இருந்தால் மாதவிடாய்க் கோளாறு போன்றவை வந்து நீங்கும்.

கர்ப்பப்பையில் குழந்தை வளராமல் கர்ப்பப்பை குழாயிலேயே கரு வளரும் விபரீதம் நேரலாம். கவனத்தோடு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். காலத்தினால் எல்லோரும் மறந்துபோன தாத்தாவின் சொத்துக்களை இவர் மீட்டெடுப்பார். போலிப் பத்திரங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பார்.

பொதுநல வழக்குகளை போட்ட வண்ணம் இருப்பார்கள். பயணப் பிரியராக இருப்பார்கள். சிறிய வயதிலேயே வெளிநாட்டிற்குச் சென்று படிப்பை முடித்துவிட்டு மத்திம வயதில் ஊர் திரும்புவார்கள். சிலர் தேயிலை, காபி தோட்டமெல்லாம் வைத்திருப்பார்கள். சூரியனும் செவ்வாயும் ஒன்பதாம் இடமான தனுசுக்குள் இருப்பது அவ்வளவு விசேஷமில்லைதான். பிதுர்காரகனான சூரியன் பிதுர் ஸ்தானத்தில் இருப்பதால் ‘காரகா பாவ நாஸ்தி’ என்கிற தோஷத்தை அடைகிறது. இதனால் தந்தைக்கும் பிள்ளைக்கும் ஏதேனும் தகராறு இருந்து கொண்டேயிருக்கும். ஆனால், உங்கள் லக்னத்திற்கு ஐந்தாம் இடமான திரிகோணத்திற்குரிய சூரியனும் மற்றொரு திரிகோண வீடான ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் தந்தை - மகன் உறவு பெரிதாக பாதிக்காது என்றுதான் சொல்ல வேண்டும். 

மேஷ லக்னத்திற்கு பத்தாம் வீடான மகரத்தில் சூரியனும் செவ்வாயும் அமர்ந்திருந்தால் நிரந்தரமாக ஒரு வேலையில் அமர முடியாது. ‘இனிமே நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று நினைக்கும்போதே சட்டென்று பதவியிறக்கம் செய்வார்கள். இவர்கள் நேர்மையாக இருப்பார்கள். பழைய ஃபைல்களை நோண்டிக் கொண்டே இருப்பார்கள். அரசு வேலையில் இருந்தால் அடிக்கடி பணிமாற்றம் நடந்தபடி இருக்கும். இதனால் நொந்துபோய் வேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழிலில் ஈடுபடுவார்கள்.

செங்கல் சூளை, பினாயில், உப்பளம், கரி விற்பனை, சுண்ணாம்பு, சிமென்ட் என்று பல தொழில்களில் ஈடுபடுவார்கள். செவ்வாயானது முதல் 16 டிகிரிக்குள் இந்த ராசிக் கட்டத்திற்குள் அமர்ந்திருந்தால் மாபெரும் தொழிற்சாலையை அமைப்பார்கள். பெட்ரோல் பங்க், எலக்ட்ரிக்கல், ஆட்டுப் பண்ணை போன்றவற்றை தொடங்கி நன்கு நடத்துவார்கள். இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை ஏற்பாடு செய்வார்கள். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் தந்தையின் தொழிலைச் செய்யாமல் இருப்பது நல்லது.

சூரியனும் செவ்வாயும் மேஷத்திற்கு 11ம் வீடான கும்பத்தில் அமர்வது நல்லதல்ல. மேஷத்திற்கு பாதக ஸ்தானமாக வருகிறது. கூடாப் பழக்க வழக்கங்கள் வந்து அலைக்கழிக்கும். மூத்த சகோதரர்களோடு சரியாக வராது. நீங்கள் நேசித்தாலும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள். சிலர் சுரங்கங்களில் வேலை பார்ப்பார்கள். தந்திரத்தோடு பல விஷயங்களை மறைத்துப் பேசுவார்கள்.

பிரபலங்களுக்கு பினாமியாக இருப்பார்கள். ‘‘அமைச்சரோ, ஐ.ஏ.எஸ்ஸோ, இவரு இல்லைன்னா எதுவும் நடக்காது’’ என்று பெயரெடுப்பார்கள். இவர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது உயிரையே வைத்திருப்பார்கள். ஆனால், இவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களையே அவர்கள் செய்தபடி இருப்பார்கள். நிலத்தகராறு, பாகப்பிரிவினையெல்லாம் இதனால் நடந்தேறும்.

மீன ராசியான பன்னிரெண்டாம் வீட்டில் சூரியனும் செவ்வாயும் அமர்ந்திருந்தால் அடுத்த பிறவி இருக்காது. இவர்களை ‘பிழைக்கத் தெரியாத மனுஷங்க’ என்றுதான் சொல்வார்கள். ‘பிரமாண்டமான உலகம் நிலையற்றது.

பிரம்மமே நிலையானது’ என்பார்கள். இவர்கள் ஒரு எதிர்பார்ப்போடு  எல்லோருக்கும் உதவி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், மற்றவர்கள் நன்றியோடு நடந்துகொள்ள மாட்டார்கள். ‘‘அவரு என்ன பெருசா பண்ணிட்டாரு’’ என்பார்கள். கிரகஸ்த தர்மத்திலிருந்து சந்நியாச தர்மத்தை ஏற்று ஞானமார்க்கத்திற்குச் செல்வார்கள். எப்போதுமே ஒரு விஷயத்தைத் தொடங்கும்போது சிரமங்கள் இருக்கும். போகப் போகத்தான் சரியாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சூரியனும் செவ்வாயும் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து எதிர்மறை பலன்களை அதிகமாகக் கொடுத்தால் அவர்கள் திருவிடைக்கழி எனும் தலத்திற்குச் சென்று வரவேண்டும். ஏனெனில், சிவாம்சம் மிகுந்த சூரியனும் முருகாம்சம் நிறைந்த செவ்வாயும் சேர்ந்த கிரக சேர்க்கையைத்தான் மேலே பார்த்தோம். எனவே, இவர்கள் இருவரும் நேர்மறையாகவும் சமநிலையில் சேர்ந்தமர்ந்து பலன்களைத் தரவேண்டுமெனில் முருகன் சிவபெருமானை பூஜிக்கும் இத்தலத்திற்குச் சென்று வணங்க வேண்டும். அவ்வப்போது செல்ல வேண்டும் என்பதும் முக்கியம். 

இங்கே சிவாலய அமைப்பில் அமைந்த முருகன் கோயில் பேரருளோடு திகழ்கிறது. குரா மரத்தின் கீழ் சிவலிங்கத் திருமேனியுடன், முருகப் பெருமானின் திருமேனியும் ஒருங்கே அருளும் அரிய தலம்.

குரா மரத்தடியில் பூசித்த தம் குமாரர் முருகக் கடவுளைத் தம் வடிவாகவே ஈசன் இத்தலத்தில் விளங்கச் செய்ததாக புராணம் கூறுகிறது. முருகப் பெருமான் ஒரு திருமுகம், இரு திருக்கரங்களுடன் ஒரு கரம் அபயமருள, மற்றொன்றை இடுப்பில் ஊன்றிய நிலையில் நின்ற நிலையில் தரிசனம் தருகிறார்.     இத்தலம் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ளது. சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் திருக்கடையூர் தலத்திலிருந்து தென்மேற்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்