மருத்துவப்படிப்பில் ஒன்றிய அரசு அரசியல் செய்கிறதா..?
இந்த வினாதான் தேசம் முழுக்க அலசப்பட்டு வருகிறது.
என்ன விஷயம்..?
நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான இடங்களை தேசிய பொதுக்கலந்தாய்வு மூலம் ஒன்றிய அரசே நிரப்புவதற்கான முன்மொழிவை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுதான் இன்றைய தேதியில் ஹாட் டாபிக்.பிபிசி இணையதளம் முதல் அனைத்து ஆங்கில, பிராந்திய மொழி மீடியாவிலும் இதுகுறித்த விவாதங்கள்தான் நடைபெற்று வருகின்றன.
 இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் தயாராகி வருவதாக செய்திகள் கசிகின்றன.
என்ன பிரச்னை?
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ படிப்புக்கான இடங்களையும் நீட் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பொதுக்கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்துள்ளதாக கடந்த 2ம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் அரசிதழில் செய்தி வெளியிட்டது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் ஜி.எம்.இ.ஆர்.- 23 (Graduate Medical Education Regulations) என அழைக்கப்படுகின்றன.
 இப்போதைய எந்த விதிகளிலும் விலக்கு இல்லாமல் NEET-UGஇன் தகுதிப் பட்டியல் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு இருக்கும் என்று அரசிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளுக்கு முரணாக எந்த மருத்துவ நிறுவனமும் மருத்துவப் படிப்புக்கு எந்த ஒரு விண்ணப்பதாரரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த முடிவு மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்ற குரல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் பரவலாகவே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘‘தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும் ஒன்றிய அரசே நேரடியாக கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருக்கிறது. மாணவர்களின் நலன் என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த புதிய கலந்தாய்வு முறை மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல்...’’ என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
சரி, தமிழ்நாட்டில் எப்படி கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது?
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்ககம் (Directorate of Medical Education) நடத்தி வருகிறது.இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள் தவிர மீதமுள்ள 85 சதவீத இடங்களும்; தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் இந்தக் கலந்தாய்வின் மூலமாகவே நிரப்பப்படுகின்றன.
அதேபோல, முதுநிலை மருத்துவப் படிப்பிலும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்கள் தவிர மீதமுள்ள இடங்களை கலந்தாய்வு மூலம் தமிழக அரசே நேரடியாக நிரப்பி வருகிறது.தமிழக அரசின் கீழ் வராத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள இடங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.
ஆனால், இந்தப் புதிய விதிகளின்படி இனி அனைத்து இடங்களுக்குமான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்படும் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் நடத்த முடியும்.மாநில அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகள், ஒன்றிய அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடத்துவது கால தாமதத்தையும், மாணவர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகக் கூறி இந்த முடிவை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. ஒன்றிய அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்கிறார்கள்.
‘‘நீட் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்திய போது, தேர்வை நடத்தி தரவரிசைப்பட்டியலை மாநில அரசுக்கு ஒன்றிய அரசு வழங்கும். அந்தப் பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாநில இடஒதுக்கீட்டிற்கு ஏற்ப மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். இப்போது கலந்தாய்வையும் நாங்களே நடத்துவோம் என்று கூறியிருப்பது மருத்துவக் கல்வி மீது மாநில அரசுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் ஒழிக்கும் செயல்’’ என்கிறார்கள்.
தனித்தனியே கலந்தாய்வு நடக்கும்போது முறைகேடாக மாணவர் சேர்க்கை நடப்பதாக ஒன்றிய அரசு வைக்கும் வாதம் குறித்தும் சமூக ஆர்வலர்கள் மறுக்கிறார்கள். முறைகேடாக மாணவர் சேர்க்கை நடப்பதற்கு ஒன்றிய அரசே காரணம் என்பது இவர்களது வாதம். ‘‘தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடைசி நேரங்களில் இடங்கள் முழுமையாக நிரம்பாததைக் காரணம் காட்டி ஸ்ட்ரே கவுன்சிலிங் (stray counselling), மாப் அப் கவுன்சிலிங் (Mop up counselling) முறையை அனுமதிக்கின்றனர். இதுபோன்ற கடைசி நேர கலந்தாய்வில் அதிக பணம் கொடுப்பவர்களுக்கு தனியார் கல்லூரிகள் இடம் வழங்குகின்றன. அதற்காக கடைசி நேரத்தில் ஒன்றிய அரசு கட்-ஆப் மதிப்பெண்ணை குறைக்கிறது.
கட்-ஆப் மதிப்பெண்ணை குறைப்பதும் தனியார் கல்லூரிகளை கடைசி நேரத்தில் கலந்தாய்வு நடத்த அனுமதிப்பதும்தான் முறைகேடுகள் நடக்க காரணம். இதற்குப் பதிலாக கடைசி சீட் வரை மாநில அரசின் கீழ் உள்ள இடங்களுக்கு மாநில அரசும்; ஒன்றிய அரசின் கீழ் உள்ள இடங்களுக்கு ஒன்றிய அரசும் கலந்தாய்வு நடத்தினாலே இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கலாம். இது முறைகேடுகளை காரணம் காட்டி மறைமுகமாக மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல்...’’ என்கிறார்கள்.
இதைப் புரிந்து கொள்ள இட ஒதுக்கீடு குறித்து அறிய வேண்டியது அவசியம். ஏனெனில் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.உதாரணமாக, பல மாநிலங்களில் பின்பற்றப்படும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவதில்லை. அதேபோல அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது. மேலும், முஸ்லீம்கள் மற்றும் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது.
எனவே, நாடு முழுவதும் பொதுக்கலந்தாய்வு என்பது இட ஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனப் பலரும் தெரிவிக்கின்றனர்.ஆனால், பொதுக்கலந்தாய்வின் போதும் மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்படும் என்றும் இதற்காக மாநில அரசு ஒரு தகவல் தொடர்பு அதிகாரியை (nodal officer) நியமிக்க வேண்டும் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநில இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடித்து ஒன்றிய அரசே கலந்தாய்வை நடத்துவது சாத்தியமற்றது என்றும், அதனால் ஏராளமான குழப்பங்களும், முறைகேடுகளும் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். எனவே அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் ஒன்றிய அமைச்சரை சந்திக்க உள்ளதாக செய்திகள் கசிகின்றன. நல்லதே நடக்கும் என நம்புவோம். கடவுளுக்கு சமமாகக் கருதப்படும் மருத்துவர்கள் தேர்வில் ஒன்றிய அரசு அரசியல் செய்யக் கூடாது என்பதே அனைவரது கோரிக்கை; ஆசை.
|