ஆட்குறைப்பில் அமெரிக்கா… 80 ஆயிரம் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறி..?
ஆமாம்... ஒன்றல்ல இரண்டல்ல... கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேரின் வேலை அமெரிக்காவில் பறிபோயுள்ளது.பொருளாதார மந்தநிலை காரணமாக அமெரிக்காவில் தொடங்கிய பெரிய நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் வேகமெடுத்திருக்கின்றன. கடந்த இரு வாரங்களை ‘லே ஆஃப் வாரம்’ என்றே அழைக்கலாம். அந்தளவு ஆட்குறைப்புகள். இதை ஆரம்பித்து வைத்தவர் எலன் மஸ்க்.  டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு ஆட்குறைப்பு செய்தார். அப்போது ஏதோ அவர் ஈகோ காரணமாக இச்செயலை அரங்கேற்றுகிறார் என்றுதான் பெரும்பாலான உலக மக்கள் நினைத்தனர். பொருளியல் வல்லுனர்கள் மட்டும் இது அலாரம் என எச்சரித்தனர். பொருளாதார மந்தத்துக்கான தொடக்கம் என அறிவித்தனர்.அதற்கேற்பதான் இப்போது நிகழ்வுகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன.  டுவிட்டரைத் தொடர்ந்து சமூக ஊடக நிறுவனமான மெட்டா (ஃபேஸ்புக்), இணைய வணிக நிறுவனமான அமேசான், தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.பி உள்பட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.2002 நவம்பரில் தொடங்கி வைத்த ஆட்குறைப்பு நடவடிக்கை சிறு சிறு நிறுவனங்கள் வரை தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களில் லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளார்கள். இதுவரை, 3 லட்சத்து 12 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர் என்று Layoffs.fyi இணையதளம் கூறுகிறது.
இதில் மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான், ஆல்பாபெட் ஆகிய நான்கு முன்னணி நிறுவனங்கள் மட்டும் 51,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. 2023 ஜனவரி 1 தொடங்கி 23ம் தேதிக்குள் மட்டும் 174 நிறுவனங்களில் இருந்து 56,570 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார்கள்.இக்கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்திலும் அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆட்குறைப்பை செய்து கொண்டிருக்கும் என்பதுதான் நிஜம்.
மியூசிக் தளமான ஸ்பாடிபை தனது ஊழியர்களில் 6 சதவிகிதம் பேரை நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருப்பது இதன் எச்சம்தான். போலவே உலகம் முழுவதும் உள்ள தங்கள் ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கி, நிதி சேவை நிறுவனமான கோல்ட்மென் சச்ஸ் சுமார் 3 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது.
எல்லா வற்றுக்கும் உச்சமாக, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கடந்த மாதம் மென்று விழுங்கி சொல்லியுள்ளது. ‘‘இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணியாளர்களின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னைப் பெரிதும் பாதிக்கிறது. இதற்கான, முழுப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன்...” என்று சுந்தர் பிச்சை கண்கலங்குகிறார்.
கூகுள் பிச்சை மட்டுமல்ல உலகளவில் அனைத்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுமே வேறு வழியின்றி இந்த நடவடிக்கைகளில் இறங்குவதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான இந்த பணிநீக்க அறிவிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இந்தியர்கள்தான் என்பது முகத்தில் அறையும் நிஜம். அமெரிக்காவில் மட்டும் 80 ஆயிரம் வரை இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலை இழந்துள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலோர் H-1B, L1, L-1B விசாவில் இருப்பவர்கள்.
அமெரிக்காவில் H-1B, L1, L-1B விசாவில் இருப்பவர்கள் வேலை இழந்தால் பதில் வேலை தேடுவதற்கு 60 நாள் அவகாசம் தரப்படும். அந்த 60 நாட்களுக்குள் புதிய வேலையைக் கண்டுபிடிக்கத் தவறினால் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். பின்னர் வெளிநாட்டில் இருந்துதான் அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது சட்டம்.
இதனால், அமெரிக்காவில் வேலையிழந்த H-1B, L1, L-1B விசா இந்தியர்கள் அடுத்த 60 நாட்களுக்குள் வேறு புதிய வேலையைத் தேடி அமர வேண்டும் அல்லது பெட்டியை கட்டிக்கொண்டு இந்தியா திரும்ப வேண்டி இருக்கும் என்னும் நிலை.
அமெரிக்காவில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைப்பது கடினமில்லைதான்; ஆனால், சொந்தமாக வீடு வாங்கியவர்கள், குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்த்துள்ளவர்கள் அப்படி துண்டை உதறிவிட்டு எழுந்து வந்துவிட முடியாது. குழந்தைகள் கல்வி பாதிக்கப்படும்.எனவே, வேலை இழந்துள்ள அமெரிக்க வாழ் இந்தியா்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வது சிரமமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனா். இதைக் கருத்தில்கொண்டு, ஹெச்1பி விசா வைத்துள்ளவா்களைப் பணி நீக்கம் செய்யும் கால அவகாசத்தைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நீட்டிக்க வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதற்கு மாற்று வழி இல்லையா?
‘‘இருக்கிறது...’’ என்கிறார் ஆண்டி ஜே. செமோடியுக். அமெரிக்க மற்றும் கனேடிய குடிவரவு வழக்கறிஞரான ஆண்டி ஜே. செமோடியுக் முன்னாள் ஐநா நிருபர்; இப்போது, கனடாவில் டொராண்டோவில் உள்ள பேஸ் சட்ட நிறுவனத்தில் பணிபுரிகிறார்.“வேலை இழந்தவர்கள் 60 நாட்கள் கடந்தும் அமெரிக்காவில் தங்கி வேலை தேட விரும்பினால் H-1B, L1, L-1B விசா நிலையில் இருந்து B-1, B-2 நிலைக்கு மாற விண்ணப்பிக்க வேண்டும். அதை குறிப்பிட்ட 60 நாள்கள் முடிவதற்குள் செய்ய வேண்டும்.
அந்த விண்ணப்பத்தில், ஏன் அதிக நேரம் தேவைப்படுகிறது என்பதற்கான உண்மையான காரணத்தைக் குறிப்பிட வேண்டும். அல்லது அமெரிக்கா அருகிலேயே இருக்கும் கனடாவுக்கு சென்று அங்கிருந்து அமெரிக்க வேலை வாய்ப்பை முயற்சிக்கலாம்...” என்கிறார் செமோடியுக்.இன்னொரு வழி, ‘ஏற்கெனவே இருந்த வேலைக்கு நிகரான ஒரு வேலையை மட்டும் தேடுவதை விட்டுவிட்டு, விசாவை தக்கவைத்துக்கொள்ள சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை என அமெரிக்காவிலேயே சாத்தியமான ஒரு வேலைக்கு மாறலாம்’ என்கிறார்கள், இதுபோன்ற நிலையை ஏற்கெனவே கடந்து வந்தவர்கள்.
இதனிடையே, பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்கள் பலரும் இணைந்து ஒரு வாட்ஸ் அப் குரூப்பினை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளைத் தேட ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர்.பொருளாதார மந்தநிலை என்பது நிரந்தரமானது இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வந்துசெல்வதுதான். எனவே, நிலைமை சீராகும்வரை அமெரிக்காவில் அவர்கள் தாக்குப்பிடித்துவிட்டால், அவர்கள் கனவு காணும் அமெரிக்க வாழ்க்கை சாத்தியம்தான்.எல்லாம் சரி... இந்த பொருளாதார மந்தநிலையும் ஆட்குறைப்பு நடவடிக்கையும் இந்தியாவைப் பாதிக்குமா?
இந்தியாவின் பிரபல ஐ.டி. நிறுவனமான விப்ரோ 452 பேரை பணி நீக்கம் செய்து, இந்தியாவுக்குள்ளும் ஆட்குறைப்பை அழைத்து வந்துள்ளது. ஜூனில் இருந்து பொருளாதார மந்தநிலையின் பாதிப்புகள் இந்தியாவிலும் தெரிய ஆரம்பிக்கும் என்று மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மட்டுமல்ல இந்தியா வாழ் இந்தியர்களும் வரும் நெருக்கடிக்கு தயாராக வேண்டும்.
என்.ஆனந்தி
|