நாகப்பட்டினத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்...
சுனாமியில் பெற்றோரை இழந்த பெண்... 16 ஆண்டுகளாக ஆதரவு காட்டி பராமரித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர்... 2 ஆண்டுகளுக்குமுன் தத்தெடுப்பின் வழியாகக் கிடைத்த அப்பா அம்மா... கொண்டாட்டமாக உறவுகள் சூழ நடந்த திருமணம்...
சமீபத்தில் நாகப்பட்டினத்தில் நடந்த திருமணம் ஒன்றில் தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பம் சகிதம் நேரில் வந்திருந்து மணமக்களை ஆசீர்
வதிக்க, மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹரும் ஒன்றுசேர்ந்து வாழ்த்த, மணப்பெண்ணின் வளர்ப்புப் பெற்றோர் கண்ணீர் மல்கி நிற்க... அந்த இடமே உணர்ச்சிப் பெருக்கில் நெகிழ்ந்துபோனது.
 விஷயம் இதுதான்.கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமி பேரலை பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதை எல்லோருமே அறிவோம். இதில் பெற்றோரையும் உறவினர்களையும் இழந்த சௌமியா, மீனா என இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து ரொம்பவே ஆதரவுகாட்டி வந்தார் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளரான ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்! இதில் மூத்தவளான சௌமியாவின் திருமணமே சமீபத்தில் நடந்தது. அதில்தான் இத்தனை நெகிழ்வான தருணங்கள்.  ‘‘ரெண்டு பேருமே கடந்த பதினாறு ஆண்டுகளா காப்பகத்துலயே வளர்ந்த பொண்ணுங்க. அவங்களுக்கு உறவுகள்னு யாரும் கிடையாது. ராதாகிருஷ்ணன் சார்தான் சுனாமிக்குப் பிறகு இவங்கள ஒரு கேர்டேக்கரா இருந்து தொடர்ந்து கவனிச்சிட்டு வந்தார். நான் கடந்த ரெண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி அவங்கள தத்தெடுத்தேன்...’’ என்றபடியே பேசத் தொடங்கினார் அம்மாவான மலர்விழி மணிவண்ணன்.
 ‘‘நான் அடிப்படையில் வழக்கறிஞர். எனக்கும் கணவர் மணிவண்ணனுக்கும் பூர்வீகம் தஞ்சாவூர். அவர் இங்க நாகப்பட்டினத்துல விசைப் படகிற்கான எஞ்சின் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வச்சிருக்கார். அதனால, இங்கே செட்டிலாகிட்டோம். எங்க ரெண்டு பேருக்குமே குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும். அதனால, அவங்களுக்கு கல்விக் கட்டணம் கட்டறது, பாடப்புத்தகம் வாங்கிக் கொடுக்குறதுனு இப்பவரை செய்திட்டு இருக்கோம். நான் சுனாமிக்குப் பிறகு சமூக சேவை பக்கம் வந்துட்டேன். குழந்தைகள் நலச் செயற்பாட்டாளரா பணி செய்றேன்.

2018ல் குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினரானேன். அப்ப சௌமியாவும், மீனாவும் அரசின் அன்னை சத்யா காப்பகத்துல இருந்தாங்க. என்னுடைய குழந்தைகள் நலக்குழுவின் அலுவலகம் இந்தக் காப்பகத்தின் உள்ளே இருந்து செயல்படுது. ஏற்கனவே இந்தக் குழந்தைகளைப் பத்தி எனக்குத் தெரியும். இருந்தாலும் முழு விவரங்களும் உறுப்பினரான பிறகே தெரிய வந்தது.
இங்க சுனாமி அப்ப 99 குழந்தைகள் பெற்றோரை இழந்தாங்க. அவங்க அன்னை சத்யா காப்பகத்துல வளர்ந்தாங்க. இதுல மற்ற குழந்தைகளுக்கு உறவினர்கள் இருந்தாங்க. அதாவது தாத்தா, மாமா, அத்தை, சித்தினு யாராவது ஒருத்தர் இருந்தாங்க.
ஆனா, சௌமியாவிற்கும், மீனாவுக்கும் அப்படி யாருமே இருக்கல. இதுல மீனாவுக்கு இங்குள்ள கீச்சாங்குப்பம். அவங்க அப்பா விஜயன் சுனாமிக்கு முன்னாடியே கேரளாவுக்கு வேலைக்கு போயிருக்கார். ஆனா, ஊருக்குத் திரும்பல. அவங்க அம்மா வசந்தா, மீன் வியாபாரம் பார்த்திட்டு இருந்திருக்காங்க. அவங்க சுனாமியில் இறந்திட்டாங்க. உறவினர்கள்னு சொல்லி யாரும் வரல. அவளுக்கு ரேஷன் கார்டு எல்லாம் இருந்தது.
ஆனா, சௌமியா பத்தின விவரங்கள் இன்னைக்கு வரை தெரியல. அவள் வேளாங்கண்ணியில் ஒரு ஹோம்ல இருந்து அழைச்சிட்டு வரப்பட்டிருக்கா. அவங்க குடும்பம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தாங்களா அல்லது இங்கிருந்த குடும்பமானு எந்த விவரங்களும் இல்ல. பெயர் மட்டும் சௌமியானு சொல்லியிருக்கா.
அப்ப அவளுக்கு மூணேமுக்கால் வயசு. மீனாவுக்கு ரெண்டரை வயசு. அப்போதிலிருந்து காப்பகத்துலதான் இருக்காங்க. அந்த சமயத்துல நாகை மாவட்ட ஆட்சியரா இருந்த ராதாகிருஷ்ணன் சார் இந்த ரெண்டு குழந்தைகளுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. கூடவே, சாரின் மனைவி கிருத்திகா மேடமும், மகன் அரவிந்தும் ரொம்ப கவனிச்சிருக்காங்க.
சார் நாகையில் இருந்தவரை வாரம் ஒருமுறை காப்பகத்திற்கு போறதும், அவங்களுடன் இருக்கிறதும், ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடறதும், விளையாடுறதுமா இருந்திருக்காங்க. சென்னைக்குப் போனபிறகு எந்தளவுக்கு நேரத்தை செலவழிக்க முடியுமோ அந்தளவுக்கு செய்திருக்காங்க.இருந்தும், இந்தக் குழந்தைகள் உறவுகளுக்காக ஏங்கியிருக்காங்க.
ஏன்னா, ஏதாவது நல்ல நாட்கள் வரும்போது மற்ற குழந்தைகளை உறவினர்கள் வந்து அழைச்சிட்டுப் போயிடுவாங்க. இந்த ரெண்டு பேரும், இன்னொரு பொண்ணும் மட்டும் காப்பகத்துலயே இருந்திருக்காங்க. இன்னொரு பொண்ணுக்கு உறவினர்கள் இருந்தாலும் கஷ்டப்பட்ட நிலையில் இருந்ததால அழைச்சிட்டு போறதில்ல...’’ என்கிறவர், தொடர்ந்தார். ‘‘பொதுவா, இளஞ்சிறார் நீதிச் சட்டப்படி குழந்தைகளை 18 வயது வரைக்கும்தான் சிறார் காப்பகத்துல வச்சிருக்கலாம். அதன்பிறகு, அந்த வயசுக்கேற்ப இருக்கக்கூடிய அரசின் இல்லங்களுக்கு மாத்துவாங்க. அவங்க கல்லூரி வாழ்க்கையை அங்கிருந்து தொடங்கிக்கலாம். குறிப்பா, 12ம் வகுப்பு முடிச்சதுமே மாத்திடுவாங்க. ஆனா, ராதாகிருஷ்ணன் சாரின் ஆதரவு இவங்களுக்கு இருந்ததால இந்த இல்லத்துல இருந்து அனுப்பல. காரணம், உறவுகள் யாரும் இல்லாததால எங்க இவங்க பாதிக்கப்படுவாங்களோனு சாருக்கு பயம்.
அப்ப சௌமியா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் இரண்டாமாண்டு படிச்சிட்டு இருந்தா. மீனா, பி.ஏ. வரலாறு முதல் ஆண்டு படிச்சா. அந்நேரம், ‘இந்தக் குழந்தைகளுக்கு 18 வயசாகிடுச்சு. இவங்கள மாத்துங்க’னு காப்பகத்துல இருந்தே கேட்டாங்க. அப்ப நன்னடத்தை அதிகாரி சௌதாமணி மேடம் என்கிட்ட, ‘இதுமாதிரி கல்லூரியில படிச்சிட்டு இருக்காங்க. இந்தசமயம் மாத்தணும்னு சொன்னா இவங்க வாழ்க்கை என்னாகும்னு தெரியல’னு வருத்தப்பட்டாங்க.
நான் தத்தெடுத்துக்கிறேன்னு சொன்னேன். சட்ட நடைமுறைகள் ஒத்துவந்து என்கிட்ட கொடுக்க வாய்ப்பு இருந்தால் கொடுங்கனு கேட்டேன். சரின்னாங்க. அதுக்கு முன்னாடி நான் வீட்டுலயும் ஒருவார்த்தை கேட்டேன். என் கணவர் மணிவண்ணன் நல்ல விஷயம்தானேனு வரவேற்றார். இருந்தும், ‘நம்ம குழந்தைங்ககிட்ட ஒருவார்த்தை கேட்டுக்கோ’னார். எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். அவங்க ரெண்டு பேரும் எந்த மறுப்பும் சொல்லல. பிறகு சௌமியா, மீனாகிட்ட கேட்டேன். அவங்களும் மறுப்பேதும் சொல்லாமல் வர்றோம்மானு சொன்னாங்க.
அப்புறம், ராதாகிருஷ்ணன் சார்கிட்ட உங்களுக்கு ஏதாவது மறுப்பு இருக்கா சார்னு கேட்டேன். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, ‘இந்தக் குழந்தைங்களை என்ன செய்யப் போறோம்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன். இப்ப மகிழ்ச்சியா இருக்கு. என் தொடர்புல இருங்க’னு சொன்னார். பிறகு எல்லா சட்ட நடைமுறைகளையும் முடிச்சிட்டு 2020ல் கொரோனா நேரத்துல வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன்.
இவங்கள அழைச்சிட்டு வரும்போதே உங்கள படிக்க வைக்க பொருளாதார சூழ்நிலை எப்படியிருக்கும்னு தெரியாது. ஆனா, எந்த உறவுகளை இழந்தீங்களோ அதை என்னால் தரமுடியும்னு சொல்லி அதேமாதிரி செய்தேன். ஆனா, எனக்கு முன்னாடியே சில நல்லுள்ளங்கள் இவங்களுக்கு உதவிகள் செய்திட்டு இருந்தாங்க. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மார்க்கண்டேயன் சார் இவங்களுக்கு இதுவரை கல்விக் கட்டணம் கட்டியிருக்கார். இப்ப சௌமியா எம்.எஸ்.டபிள்யு படிக்கிறா. அதுக்கும் அவர் கட்டணம் செலுத்தியிருக்கார்.
அப்புறம், தஞ்சாவூரைச் சேர்ந்த மாரிமுத்து சார் ஆண்டுக்கு ஒருமுறையோ ரெண்டு முறையோ வந்து இவங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்திருக்கார். கோவிட் அப்ப ஒரு மீட்டிங்கிற்காக நாகப்பட்டினம் வந்தப்ப எங்க வீட்டிற்கே ராதாகிருஷ்ணன் சார் வந்தாங்க. குழந்தைங்க கூட நேரத்தை செலவழிச்சாங்க...’’ என்கிறவர், சௌமியா திருமணம் பற்றி தொடர்ந்தார்.
‘‘சௌமியாவும், மீனாவும் எங்களை அம்மா, அப்பாதான் கூப்பிடுவாங்க. என் பசங்களை அக்கா, தம்பினு அழைப்பாங்க. இப்ப எல்லோருமே ரொம்பப் பிணைப்பாகிட்டாங்க.
இந்நேரம், நாகப்பட்டினத்துல இருந்து ஒரு தோழர் மூலமா வரன் வந்தது. ‘பையன் சுபாஷ், டிப்ளமோ இன் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடிச்சிருக்கார். திருப்பூர்ல வேலை செய்றார். கூட்டுக்குடும்பம்’னு சொன்னாங்க. அப்புறம் அனாதை இல்லத்துல வளர்ந்த பொண்ணு இருந்தா சொல்லுங்கனு கேட்டாங்க.
நான் இன்னொரு பொண்ணுக்காக விசாரிச்சேன். ஆனா, அவளை அவங்க உறவினர்கள் அழைச்சிட்டு போயிட்டாங்க. நான் விசாரிச்சப்ப ரொம்ப நல்ல குடும்பமா இருந்தாங்க. தவிர, பையன் வீடு நிறைய உறவினர்களுடன் இருந்தாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. எனக்கும் அடுத்தடுத்து பொறுப்புகள் இருக்கிறதால இந்த வரன் சௌமியாவுக்கு ரொம்ப நல்லாயிருக்குமேனு தோணுச்சு. அப்புறம், நாம் தேடும்போது இந்தமாதிரி ஒரு வரன் கிடைக்கலனா என்ன பண்றதுனு யோசிச்சேன்.
சௌமியாவும் கல்லூரி முடிச்சிருந்தாள். இந்த வயசு திருமணத்திற்கு சரியானதுதான்னு அவள்கிட்ட பையனின் போட்டோவைக் காட்டிக் கேட்டேன். சரின்னாள். உடனே, ராதாகிருஷ்ணன் சார்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லி செய்யலாமானு கேட்டேன். அவரும் சரின்னார். அப்படியா திருமணம் கைகூடியது.
என் குடும்பத்தினர் எல்லோரும் வந்திருந்து வேலைகள் செய்தாங்க. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் சார்கிட்ட சொன்னதும், இது நம்மவீட்டு கல்யாணம்னு ஒரு லட்சம் ரூபாய் தந்தார். ராதாகிருஷ்ணன் சார் புடவை உள்பட மற்ற உதவிகள் செய்தார். அப்படியா, எல்லோர் ஆசீர்வாதத்துடன் இந்தத் திருமணம் சிறப்பா நடந்தது. இப்ப சௌமியா கல்யாணமாகி திருப்பூர் போயிட்டா. இதனால, மீனா தனியா ஃபீல் பண்ணுவாளோனு ராதாகிருஷ்ணன் சார் அவகிட்ட தினமும் பேசிட்டு இருக்காங்க. சார் இல்லனா எதுவும் நடந்திருக்காது...’’ என திருப்தியாக மலர்விழி முடிக்க, மணப்பெண்ணான சௌமியாவிடம் பேசினோம். ‘‘எனக்கு எந்த நினைவுகளும் இல்ல. பெயர் கூட யார் வச்சானு தெரியல. ராதாகிருஷ்ணன் அப்பாதான் எங்களைப் பார்த்துகிட்டாங்க. சுனாமி நேரத்துல நிறைய தடவை வந்து எங்ககூட நேரத்தை செலவிட்டாங்க.
எங்களுக்கு நிதியுதவி செய்திட்டே இருந்தாங்க. ‘எல்லோருக்கும் ரோல்மாடலா இருக்கணும். நல்லா படிக்கணும். உதவிகள் யார் கேட்டாலும் செய்யணும்’னு நிறைய விஷயங்கள் சொல்லித் தந்தாங்க. பிறகு மலர்விழி அம்மாவும், மணிவண்ணன் அப்பாவும் உறவுகளைத் தந்து, நாங்க ஆதரவற்றவர்கள் இல்லைனு உணரச் செய்தாங்க. இப்ப இன்னொரு உறவு கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...’’ என்று மகிழ்ச்சி ததும்பச் சொல்கிறார்.
பேராச்சி கண்ணன்
|