எ தர்ஸ்டே



வித்தியாசமான ஒரு திரில்லிங் படமாக வெளியாகி, சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது ‘எ தர்ஸ்டே’. ‘ஹாட்ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது இந்த இந்திப்படம்.கொலாபா எனும் இடத்தில் ப்ளே ஸ்கூல் நடத்திவருகிறாள் நைனா. பெற்றோர்களைவிட நைனாவிடம் குழந்தைகள் நெருக்கமாக இருக்கின்றனர். நைனாவும் குழந்தைகளுடன் அன் யோன்யமாக இருக்கிறாள்.
மூன்று வாரம் விடுமுறை எடுத்துவிட்டு ஸ்கூலுக்குத் திரும்புகிறாள் நைனா. குழந்தைகளை ஸ்கூலில் விட்டுவிட்டு பெற்றோர்கள் சென்று விடுகின்றனர். ஸ்கூலில் வேலை செய்யும் பணிப்பெண்ணும் வெளியே கிளம்பிவிடுகிறாள்.

இந்நிலையில் குழந்தைகளுக்குக் கார்ட்டூன் சேனலைப் போட்டுவிட்டு, ஸ்கூலில் அனைத்து கதவு, ஜன்னல்களையும் மூடிவிடுகிறாள் நைனா. அடுத்து அருகிலிருக்கும் காவல் நிலையத்தை அழைத்து, ‘ப்ளே ஸ்கூலில் இருக்கும் 16 குழந்தைகளைக் கடத்தி வைத்துள்ளேன். எனக்கு சில டிமாண்டுகள் இருக்கு. அதை நிறைவேற்றினால் குழந்தைகளை வெளியே விடுவேன்...’’ என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிடுகிறாள்.

உண்மையில் நைனா யார்... என்பதற்கு திரில்லிங்காக பதில் சொல்கிறது திரைக்கதை. சமூகத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒரு முக்கிய குற்றத்தைக் கையில் எடுத்து விளையாடியிருக்கிறது ‘எ தர்ஸ்டே’. நைனாவாக மிரட்டியிருக்கிறார் யாமி கௌதம். படத்தின் இயக்குநர் பேஸாத் கம்பாட்டா.