இந்தியாவுல யானை டாக்டர் மட்டுமில்ல... வனவிலங்கு டாக்டர்ஸும் இல்ல..!
‘‘யானைனாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். நானும் சின்ன வயசுல சாலையில் நடக்கும்போது யானை சாணத்தை பார்த்ததும் ஓடிப்போய் மிதிச்சிருக்கேன்.
 ஏன்னா, நல்லா படிப்பு வரும்னு சொன்ன கதைகள்தான். பொதுவா நமக்கு யானையின் அறிமுகம் முதல்ல விநாயகர் ரூபமாகவும், பிறகு கோயில் யானையாகவும், அப்புறம் தெருக்கள்ல பாகன்கள் அழைச்சிட்டு வர்றதும், சினிமாக்கள்ல நண்பனாகவும் ரொம்ப சாந்தமான வடிவங்கள்லயே தெரியவருது. 
ஆனா, அதே யானை மூர்க்கத்துடன் காட்டு யானையா வர்றதை நேர்ல பார்த்தபிறகே அது எப்படிப்பட்டதுனு என்னால் உணர முடிஞ்சது...’’ அனுபவங்களின் வழியே பேசுகிறார் பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன்.  தமிழகத்தில் அழிந்து கொண்டிருக்கும் யானைகளின் துயரத்தைப் பற்றியும், அதன் அழிவிற்கான காரணங்கள் பற்றியும் ‘யானைகளின் வருகை’ என இவர் கொண்டு வந்த அனுபவபூர்வ நூல் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வந்திருக்கிறார் கா.சு.வேலாயுதன். இதற்கும் வாசகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நூல்களின் வழியாக கோவையின் நாற்பது ஆண்டு கால வரலாறும் நம் கண்முன்னால் விரிகிறது.  ‘‘சொந்த ஊர் கோவை. 1997ல் பத்திரிகைத் துறைக்குள் வந்தேன். அதுக்கு முன்னாடி 17 ஆண்டுகளா வொர்க்ஷாப்ல வேலை செய்திட்டே எழுத்தாளரா இருந்தேன். பள்ளியில் படிக்கிறப்ப ஆல் இந்தியா ரேடியோவுக்கு கதைகள் எழுதியிருக்கேன். பிறகு ‘கல்கி’, ‘விகடன்’, ‘தாய்’, ‘செம்மலர்’னு நிறைய பத்திரிகைகளுக்கும் எழுதினேன். எல்லாவற்றிலும் என் கதைகள் வந்தது. அந்நேரம் ‘கல்கி’யில் பகுதிநேர நிருபர் வேலைக்கு டிகிரி படிச்சவங்க வேணும்னு கேட்டாங்க. நான் பிளஸ் டூதான் படிச்சிருக்கேன். ஆனா, அனுபவம் உள்ளவங்களுக்கு நிபந்தனைகள் தளர்த்தப்படும்னு சொன்னதால கலந்துக்கிட்டேன்.
 அப்படியா, 32 வயசுல பகுதிநேர நிருபர் பணியில் சேர்ந்தேன். பிறகு 1999ல் ‘குமுதம்’ இதழ்ல சீனியர் ரிப்போர்ட்டரா வேலை கிடைச்சது. அடுத்து, 2013ல் ‘இந்து தமிழ்’ தினசரியில் கோவைக்கு தலைமையா என்னை நியமிச்சாங்க. இங்க ஒரு தொடர் எழுதலாம்னு நினைச்சப்ப யானைகள் பத்தின விஷயங்கள் நிறைய வந்தது. ஆரம்பத்துல ‘கல்கி’யில் இருக்கிறப்ப ரெண்டு மூணு மாசத்திற்கு ஒருமுறைதான் யானைகள் சம்பந்தமா ஒரு கட்டுரை எழுதுறமாதிரி இருக்கும்.
பிறகு ‘குமுதம் ரிப்போர்ட்டர்’னு வந்தப்ப ரெண்டு வாரத்திற்கு ஒரு யானை கட்டுரைனு எழுதினேன். ஆனா, ‘இந்து தமிழ்’ வந்ததும் தினமும் ஒரு யானை சாகுறதும், ரயிலில் அடிபடுறதும், யானைகள் ஊருக்குள்ள போறதும், மக்கள் பாதிக்கப்படுறதுமான செய்திகள் வந்துச்சு. அப்ப பழைய புள்ளிவிவரங்களை எல்லாம் தேடித் தேடி பார்க்கிறப்ப இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால காட்டுக்குள்ள மனிதன் போகிறப்ப யானைகள் தாக்கி இறப்பது நடந்திருக்குனு தெரிஞ்சது.
அதாவது விறகு சுள்ளி பொறுக்கப் போகிறப்ப இந்தச் சம்பவங்கள் நடந்திருக்கு. ஆனா, இப்ப நகர்ப்புறத்துல கோவை மாநகராட்சிப் பகுதிக்கு உள்ளேயே யானைகள் வந்து அழிச்சாட்டியம் பண்ணுது. அப்ப 25 ஆண்டுகள்ல இவ்வளவு பெரிய மாற்றம் ஏன் நடந்தது, ஏன் தினமும் யானைகள் அநியாயத்திற்கு சாகுது, மனிதன் ஏன் சாகுறான்னு நான் புள்ளி விவரங்களை எடுத்தேன். நிறைய தகவல்கள் கிடைச்சது.
சரி, இதுசம்பந்தமா ஒரு தொடர் பண்ணலாமேனு நான் சார்ந்த தினசரியில் கேட்டேன். ஆன்லைன்ல பண்ண சொன்னாங்க. இருபது அத்தியாயத்திலே நல்ல வரவேற்பு கிடைச்சது. ஆன்லைன்ல வர்றதால உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்கள் இந்த யானைகளைக் காப்பாற்ற ஏதாவது பண்ணணும்னு உத்வேகத்தோடு ஒரு போராளியாவே புறப்பட்டு கடிதங்கள் எழுதினாங்க.
ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. தொடர்ந்து என் அனுபவங்களின் வழியாகவும், புள்ளி விவரங்களுடனும் 164 அத்தியாயங்கள் எழுதினேன். அதுல முதல் முப்பது அத்தியாயங்களை இந்து தமிழ் பத்திரிகையே பிரசுரம் பண்ணினாங்க. கடந்த மாசம் நான் பத்திரிகையில் இருந்து வெளியே வந்துட்டேன். இப்ப ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளரா இருக்கேன். அதனால நானே ரெண்டாவது பாகத்தை ‘கதை வட்டம்’னு ஒரு பதிப்பகம் தொடங்கி கொண்டு வந்திருக்கேன். இன்னும் நான்கு பாகங்கள் வரவிருக்கு...’’ என்கிறவர், சில அனுபவங்களைப் பகிர்ந்தார்.
‘‘இதுல ரெண்டு விஷயம் முக்கியமானதா பார்க்கிறேன். நான் யானையை காட்டுக்குள்ள போய் படம் எடுக்கும்போது அதன் காலடியில் விழுந்துகிடந்தேன். குட்டியுடன் வந்த அந்த யானை என்னை விட்டுட்டு போயிடுச்சு. ஏன் விட்டதுனு எனக்குத் தெரியாது. அப்படி பிழைச்ச அனுபவத்தை முதல் அத்தியாயத்துல சொல்லியிருக்கேன்.
அடுத்து, எங்க வீட்டுக் காம்பவுண்ட் உள்ள இருக்கிற ரெண்டு வாழைகளை இரவு 12 மணிக்கு ரெண்டு குட்டிகளுடன் வந்து மூணு யானைகள் சாப்பிட்டது. அது எவ்வளவு பொறுமையா வந்து சாப்பிட்டுச்சுனு கண் கொண்டு பார்த்தோம். அதே யானை இன்னொரு வீட்டுல புகுந்து அந்த வீட்டின் சுவரை உடைச்சு முப்பது வாழைகளைச் சாப்பிட்டுட்டு போகிறதையும் கேள்விப்பட்டோம். அப்ப என்னனா அவங்க யானைகளைத் திட்டிட்டு இருந்தாங்க. நாங்க யானைகளை நேசிச்சிட்டு இருந்தோம். ஒரு யானை மேல வைக்கிற நேசம் கூட அதன் உள்ளுணர்வுக்கு புரியுமோ என்னமோனு ஒரு ஃபீலிங்குடன் கடைசி அத்தியாயத்துல குறிப்பிட்டு முடிச்சிருக்கேன். அப்புறம், இந்தியாவுல யானை டாக்டர்னு ஒருத்தர் கிடையாதுனு அத்தியாயம் 140ல் சொல்லியிருக்கேன். இன்னைக்கு வரை இந்தியாவுல வனவிலங்குகளுக்கான மருத்துவர்கள் இல்லவே இல்ல. எல்லாமே கால்நடை மருத்துவர்கள்தான்.
இந்த விஷயத்தை 1978ல் மக்னா என்கிற யானைக்கு மருத்துவம் பார்த்த நைஜில் ஒட்டர் என்பவர் சொன்னார். அவர் மசினகுடியில் இருக்கார். அவர்தான் மக்னா யானையை இந்த டாக்டர்கள் கொன்னுடுவாங்கனு பயந்து மேனகா காந்தியிடம் சொல்லி விஷயத்தை நாடாளுமன்றத்துல ஒலிக்கச் செய்தார்.
அப்பதான் இந்தியாவுல யானை டாக்டர்னு ஒருத்தர் இல்லவே இல்லனு தெரிஞ்சது. உடனே, வனவிலங்குகளுக்கான மருத்துவத்திற்கு அமெரிக்காவுல பல்கலைக்கழகம் இருக்குனு தெரிஞ்சு இந்தியாவுல இருந்து ஏழு மருத்துவர்களை பலகோடி ரூபாய் செலவில் படிக்க அனுப்பினாங்க.
ஆனா, அவங்க இந்தியாவுக்கு திரும்பவே இல்ல. அமெரிக்காவிலயே தங்கிட்டாங்க. பிறகு, மக்னா யானைக்காக அயர்லாந்துல இருந்து ஒரு மருத்துவரை அழைச்சிட்டு வந்தாங்க. அவர்கூட நானும் போயிருந்தேன். அப்ப இங்குள்ள மருத்துவர்களுக்கும், வெளிநாட்டு மருத்துவக் குழுவிற்கும் பெரியளவில் சண்டை நடந்தது. இதையும் எழுத்துல குறிப்பிட்டிருக்கேன்.
அப்புறம், இங்க வனவிலங்கு மருத்துவர்கள் இல்லை என்பதை ஓர் உதாரணம் மூலம் நிறுவியிருக்கேன். அதாவது, கோவை வனப்பகுதியில் ஐம்பது வயதுடைய ஒரு யானை படுத்தபடியே கிடந்தது. அதை சாடிவயல் மருத்துவ முகாமுக்குக் கொண்டு வந்து, வயித்துல கட்டினு சொல்லி மருத்துவர்கள் மருத்துவம் செய்தாங்க.
குளுக்கோஸ் எல்லாம் ஏத்தினாங்க. ஒண்ணும் நடக்கல. அப்ப சில பாகன்கள், ‘அது கர்ப்பமா இருக்கிறமாதிரி தெரியுது’னு சொன்னாங்க. ஆனா, அதை எந்த மருத்துவரும் கேட்கல. தொடர்ந்து கட்டியைக் கரைக்கவே மருத்துவம் செய்தாங்க.
மூணாவது நாள் காலையில் அந்த யானை குட்டி போட்டது. பிறகு இயல்பா எழுந்து நின்னது. வயோதிக காலத்துல கர்ப்பம் தரிச்சதால அதன் உடல் வலுவில்லாமல் போயிருக்கு. அதனால, எழுந்து நிற்க முடியாமல் படுத்துக் கிடந்திருக்கு. அவ்வளவுதான். இதுகூட தெரியாமல் வெறுமனே மருந்துகளைக் கொடுத்து கட்டியைக் கரைக்க முயற்சி செய்தாங்க.
இங்க யானைக்கு மருத்துவம் பார்க்கிறவரும் சரியில்ல. யானையைக் காட்டுல காப்பாத்துறவரும் சரியில்ல. இதுக்காக பேசுகிற தன்னார்வக் குழுக்களும் சரியில்ல. எல்லோருமே பணம் சார்ந்தே இயங்குறாங்கனு புரிஞ்சது. ஆனா, ஒருத்தன் மட்டும் எந்தவித சுயநலத்துடனும் இல்லாமல் யானைகளை பாதுகாக்கணும்னும், காப்பாத்தணும்னும் நினைக்கிறான். அவன்தான் பழங்குடி.
காட்டுல வசிக்கிற பழங்குடிகளைத் தவிர வேறு எவரும் வனவிலங்குகளைக் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை. இதனை இந்தப் புத்தகத்தின் மூலம் வலியுறுத்திச் சொல்றேன்...’’ என்கிறவர், யானைகளின் அழிவிற்கான காரணங்களை அடுக்கினார்.
‘‘முதல் காரணம் காடுகளை அழிக்கிறதுதான். காட்டுக்குள்ள விவசாய நிலங்கள் எல்லாம் பழங்குடிகளிடம் இருக்குது. ஆனா, அந்த நிலங்களுக்கு பட்டா கிடையாது. அந்த பட்டா இல்லாத நிலங்களை ஒட்டுமொத்தமா இங்கிருக்கிற கார்ப்பரேட் நிறுவனங்கள் கைபற்றுறாங்க. அதுல விலங்கியல் பூங்கா உலகத் தரத்துல ஆரம்பிக்கிறோம்னு சொல்லி அதை ஒரு வணிகத்தன்மையா மாத்துறாங்க. சிலர் கல்வி நிறுவனம், யோகா மையம்னு தொடங்குறாங்க.
இதனால, யானைகளின் வழித்தடம் அழிக்கப்படுது. அதனால, நேரே ஊருக்குள்ள வருது. இங்கே விவசாய நிலங்களுக்குள்ள வந்ததும் விவசாயிகள் அலறுறாங்க. அந்நேரம் சூழல் ஆர்வலர்களும் விவசாய நிலங்களுக்குள் புகுவதை பார்த்திட்டு அதையும் யானைகள் வழித்தடம்னு சொல்றாங்க. யானைகள் திசைமாறி வருவதெல்லாம் வழித்தடம் இல்ல. யானைகளுக்கு மூங்கில்தான் பிரதான உணவு. அதையும் அழிச்சிட்டு வர்றதால தனக்கு தேவையான உணவு கிடைக்கலனு ஊருக்குள்ள வருது.
அதேபோல காடுகள் அழிப்பினால் தண்ணீர் சுனைகளும் மாறிடுச்சு. அதனால, தண்ணீரைத் தேடியும் யானைகள் கீழ இறங்குது. மொத்தத்துல காடுகள் காடுகளா இல்லாமல், காடுகள் பழங்குடிகள் கையில் இல்லாமல், விவசாய நிலங்கள் விவசாயிகள் கையில் இல்லாமல் முழுக்க நகர்மயமாதலால் ஏற்பட்ட விளைவே யானைகள் மரணத்திற்கும், யானை - மனிதன் மோதலுக்கும், மனிதர்கள் மரணத்திற்கும் காரணம்...’’ என்கிறார் கா.சு.வேலாயுதன்.
பேராச்சி கண்ணன்
|