சிறுகதை - சொர்ணாபிஷேகம்
விடாமல் மூன்றாவது முறையாக அழைப்பொலித்ததால் செல்ஃபோனைக் கையில் எடுத்தான் தாமோதரன். மதியான தூக்கமென்பதால் இந்த அழைப்புகளைத் தவிர்க்கவும் முடிவதில்லை. புதிய எண்ணாக இருந்தது. “ஹலோ...” கண்களைத் தேய்த்துக்கொண்டே கொட்டாவி வாயைத் திறந்தான்.“ஒரு நிமிஷங்க, உங்க பெரியம்மா பேசறாங்களாம்... இந்தாம்மா...”நெஞ்சம் அதிர்ந்துவிட்டது. ‘பெரியப்பா தவறிட்டாரா?’ சடக்கென்று எழுந்து உட்கார்ந்து “அம்மா...” என்றான்.“தாமு...” குரலில் துக்கமில்லை, அழுகையில்லை. இயல்புடனிருந்தது.
 “அம்மா...” “நைட் ட்யூட்டி பார்த்துட்டு வந்து தூங்கினியா?” “அப்பா எப்படிம்மா இருக்கார்?”
“எதுவும் சொல்றதுக்கில்லடா. தொண்ணூறு நாளா எப்படி இருந்தாரோ அப்படியேதான் தொண்ணூத்தி ஓராவது நாளும் இருக்கார். இங்க நகைக் கடைக்கு வந்தேன். கடைக்காரர் போன்லருந்துதான் பேசறேன். உன் மோதிர அளவு சொல்லுடா...”தாமோதரன் தடுமாற்றமடைந்தான். “புரியலம்மா... என்ன மோதிர அளவு?”“உனக்குதாண்டா...”“எனக்கா... எதுக்கு?” சந்தோசம் உள்ளே புகுந்தாடியதை மறைத்துக் கேட்டான்.  “ரொம்ப நாள் யோசனடா. உனக்கு மோதிரம் செய்யணும்னு... இப்பதான் முடிஞ்சது...”“அப்பா இருக்கிற நிலமையில என்னம்மா பேசற... தங்கம் கம்மியாவா விக்குது? வர்ற பென்ஷன், மாத்திரை மருந்துக்கே போதாது...”“வீட்டுக்குப் போய் அத்துபடியா பேசறேண்டா... போனை கடைக்காரர்கிட்ட தர்றேன். அவர்கிட்ட மோதிர அளவு சொல்லு...”என்னதான் சந்தோசமென்றாலும், வீம்பிற்காவது மறுப்பது என்றெண்ணினான். “ஹலோ...” நகைக்கடைக்காரரின் கரகரத்த குரல். “சார் பெரியம்மாகிட்ட தாங்களேன்...” “உங்க மோதிர சைஸ் தெரியுமா?” “அவங்ககிட்ட பேசணும்...”
கைப்பேசி பெரியம்மாவிடம் போனது. “தாமு! நான் வீட்டுக்குப் போய் பேசறேண்டா. இது ரெண்டு வருஷமா சேமிச்சது...” “பணமா வாங்கிக் கையில வெச்சுக்குங்க...” “தரமாட்டாங்க... நகை சேமிப்பு...” “உங்களுக்கு செய்துக்குங்க...”
“எங்கிட்ட இருக்கிறது போதும். அதையும் உன் ரெண்டு அக்காளுங்க விட மாட்டாங்க. பீராய்ஞ்சி எடுத்துக்குவாங்க...”“அம்மா! என்ன சொல்றதுனு தெரியல. வாழ்நாள் பூராவும் எங்களுக்குதான் செய்றீங்க. அப்பா இருக்கிற நிலைமையில வேணாம்மா?”“தாமு! இது கடை. வியாபாரம் பண்ற இடம். சொந்தக்கதையை அளந்து கொட்டி உட்கார முடியாது. மோதிர அளவு சொல்லு... அப்பா செத்தா கொள்ளிபோட நீதாண்டா இருக்கே...” முழுமையாகச் சொல்லி முடிக்காமல் மறுபடியும் கடைக்காரர் கைக்கு கைப்பேசி போனது.
“சொல்லுங்க தம்பி... உங்க பெரியம்மாவுக்கு ஆசை. பணம் கட்ட வரும்போதெல்லாம் எம்மகனுக்கு மோதிரம் செய்யணும்னு சொல்லிட்டுதான் கட்டுவாங்க... விரல் சைஸ் சொல்லுங்க...”
“சார்! எனக்கு நெஜமாவே மோதிர ஆசை இல்லை...”“ஆசை உங்களுக்கில்லை, பெரியம்மாவுக்கு!”இதுக்கு மேலேயும் முரண்டுபிடித்தால் போலித்தனமெனத் தெரிந்துவிடுமென்று நினைத்தான்.
“சைஸ் தெரியாதுங்க, எந்த சைஸ்னாலும் தாங்க. கைக்கு அஞ்சி விரல்னு பத்து இருக்கு. ஏதோ ஒண்ணுல நுழைஞ்சிடும். பெருசா இருந்தா நூல் சுத்திக்கலாம்...” “அப்படி போடக் கூடாது. சைஸ் இல்லாம ஷர்ட் பேண்ட் போடுவீங்களா? ஒரு நூலெடுத்து மோதிரவிரலை கரெக்ட்டா சுத்துங்க.
எத்தனை சென்ட்டி மீட்டர் வருதுன்னு அளந்து சொல்லுங்க. மோதிரம் போட்டா, கையைக் கடிக்கவும் கூடாது... கழட்டவும் கூடாது. பாத்ரூம்ல குளிக்கறப்பவும் உருவாம பத்திரமா விரல்லயே இருக்கணும்... ஒண்ணு செய்யுங்க. உங்க ஊருலயே ஏதாவது ஜுவல்லரிக்குப் போய் ரிங்சைஸ் தெரியணும்னு சொல்லுங்க. வளையம் வளையமாக் கோத்து வெச்சிருப்பாங்க. அவங்களே விரல்ல மாட்டிப் பார்த்து சைஸ் சொல்லிடுவாங்க... கேட்டு, இந்த நம்பருக்கு சொல்லுங்க...’’ கடைக்காரர் பொறுமையிழந்திருப்பது தாமோதரனுக்கு புரிந்தது. அவர் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்.
கண்ணுக்குள்ளிருந்த தூக்கம் ஆயிரம் மைல்களைத் தாண்டிப் போய்விட்டது. இப்போதைக்கு ராக்கெட்டை அனுப்பினால் கூட வந்து சேராத தூக்கம். இரவு பணியிலிருக்கும்போது மின்னலாகப் பறந்து வந்து கண்களில் விழுந்து வேலை செய்யவிடாமல் முடக்கும். தாமோதரனுக்கு இரயில்வே கேன்டீனில் வேலை. ஒரு வாரம் இரவிலும், ஒரு வாரம் பகலிலும் மாறி மாறி ஷிப்ட் வரும்.
புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான். வராத தூக்கத்தை வற்புறுத்துவது மடத்தனமாகப் பட்டது. பகல் சத்தம் உள்ளே நுழையாதிருக்க அறையின் கதவு, ஜன்னல்களை அடைத்திருந்தான். கதவைத் திறந்து வெளியே வந்தபோது ஹாலை தொலைக்காட்சி சீரியல் ஆக்கிரமித்திருந்தது.
குமுதாவும், தாமோதரனின் அம்மாவும் தொடரைப் பார்த்துக்கொண்டே பூ கட்டிக் கொண்டிருந்தார்கள். கடைக்கு கட்டித் தருகிறார்கள். சும்மா இல்லாமல் சிறிய வருமானம். தூங்காமல் எழுந்து வந்ததைக் கண்டு கேள்வியுடன் பார்த்தார்கள்.“பெரியம்மா போன் பண்ணாங்க...”அம்மா பயத்துடன் பூ கட்டுவதை நிறுத்தி தலையுயர்த்தினாள். “பெரியப்பாவா..?”“இல்ல... இல்ல... நல்லாத்தான் இருக்காராம். நானும் அப்படித்தான் நினைச்சேன்...” இருவரும் தொலைக்காட்சிக்கு கவனத்தைத் திருப்பினார்கள்.“எனக்கு மோதிரம் வாங்கறாங்களாம்... சைஸ் கேட்டாங்க...”“மோதிரமா?” குமுதா ஆச்சர்யத்தையும், ஆனந்தத்தையும் சேர்த்தே காட்டினாள்.
“வேணாம்னு சொன்னா கேக்கல... பிடிவாதம் பண்றாங்க. கஷ்டமா இருக்கு, காசா தந்துடுங்கன்னு கேக்க முடியுமா?”“கஷ்டத்த பாத்தா காதுல கம்மலே நிக்காது... கையில மோதரமா தங்கும்? வாங்கின வெலைக்கு விக்க முடியாது. பவுனுக்கு நாலாயிரம் அஞ்சாயிரம் துண்டாகும்...”“சும்மா தர்றவ பவுனா எடுப்பாளா? கால் பவுனோ, அரைப் பவுனோ...” அம்மா கடுப்புடன் சொன்னாள். சொந்த அக்கா என்றாலும் குறைதான் சொல்வாள்.
“ஏதோ செய்றாங்களே அத்தை... வருஷா வருஷம் தீபாவளிக்கு எனக்கும் பிள்ளைகளுக்கும் டிரெஸ் வாங்கித் தர்றாங்க... ஸ்கூல் பீஸ் கட்டினாங்க... உங்க பையனுக்கு வண்டி வாங்கித் தந்தாங்க...”“புதுசா வாங்கித் தந்துட்டாளா... செகண்ட் ஹேண்ட்தானே..?”“அதுவே முப்பதாயிரம் அத்தை... இல்லன்னா சைக்கிளைத்தானே ஒதச்சுட்டு போவாரு...” என்ற குமுதா, தாமோதரனைப் பார்த்தாள். “சாப்பிடறிங்களா? வயிறு ரொம்பினா தூக்கம் வரும்...”“வேணாம்... தூக்க மாத்திரைபோட்டாலும் இப்ப தூக்கம் வராது. மோதிர சைஸ் தெரிஞ்சிட்டு வர்றேன்...” “உங்க விரலோடதுதானே? இருபத்திரண்டு!”“இருபத்திரண்டா?”
“ஆமா... கல்யாணத்தப்ப, எங்க தம்பி விமலோட விரலும் உங்க விரலும் ஒரே சைசுன்னு பேசிக்கிட்டாங்க... ஞாபகம் இருக்கு. அப்படியேதான் இருக்கீங்க... ஊதவுமில்ல, வத்தவுமில்ல...”“இருபத்திரண்டுன்னு சொல்லிடறேன்... மோதிரத்தை வெக்கிறனோ, விக்கிறனோ தெரியல... இந்த லச்சணத்துல சைஸ் வேற...”“அடகு வெச்சா திருப்பப் போறதில்ல... பாதி காசுதான் வரும்... வித்தாலாச்சும் சேர்ந்து வரும்...” குமுதாவின் மனதில், அடகு வைத்து திருப்ப முடியாமல் மூழ்கிப் போன நகைகளும், விற்றுவிட்ட நகைகளும் ஞாபகத்தில் மின்னின.
வீடு கட்டத் தொடங்கின போதே ஒவ்வொரு நகையும், சிமெண்ட்டாகவும் மணலாகவும் மாறிவிட்டது. கல்யாணத்தில் பனிரெண்டு மோதிரம் மொய் வந்தது. கட்டை விரல் தவிர மற்றெல்லா விரல்களிலும் மோதிரம் மாட்டியிருந்த புகைப்படம் ஆல்பத்திலிருக்கிறது. ‘தாமோதரன்னு பேரு வெச்சாலும் வெச்சாங்க... மோதிரம் மழையா கொட்டிருச்சு...’ என்று நண்பர்கள் சிரித்தது மறக்க முடியாது. தாமு என்றழைப்பது போல் சிலர் மோதிரம் என்று அழைப்பார்கள்.
மோதிரங்களெல்லாம் கையைவிட்டுப் போனபோது, ‘என் பேர்லயே மோதிரம் இருக்கு... எனக்கெதுக்கு மோதிரம்...’ என தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டான். “மோதிரத்துக்கு பதிலா பணம் தந்திருந்தா ரெண்டு மாசத்து லோனாச்சும் கட்டி இருக்கலாம்...”“அவளுக்கு பணமா உதவறதுக்கு மனசு இருக்காதுடா...” அம்மா பூச்சரத்தை செண்டாகச் சுற்றினாள்.
விளம்பரம் வந்ததும் சேனல் மாற்றினாள் குமுதா. “மோதிரமா இல்லாம வாஷிங் மெஷினாவது வாங்கித்தரலாம்... கையில தொவைக்க முடியல...” “புது வருஷம் ஆஃபர்ல சேல் பண்ணா வாங்கலாம்... பேங்க்காரன்தான் நோட்டீஸ் அனுப்புறதும், போன் பண்றதுமா ரொம்ப நோகடிக்கிறான்...”“இப்போதைய நெலமைக்கு லச்ச ரூபான்னாலும் போதாது... பெரியவ ஆன்லைன் கிளாசுக்கு போன் வேணும்னு மூணு மாசமா அழறா...”“சரியாப் போச்சு... அத மறந்துட்டேன். முதல்ல மோதிரத்தை வித்து எம் மகளுக்கு செல்லு வாங்கித் தந்துடறேன். படிப்பு நாசமாகுது...” இதற்கு மறுப்பு யாரிடமிருந்தும் வரவில்லை.
“முடிஞ்சாப் பாரேன்... செல்லு வாங்கிட்டு காசு மீந்தா கம்மி விலையில வாஷிங் மெஷின் வாங்கித் தந்துடு...”“கண்டிப்பா ஆகாது. கடன்காரனுங்க என்னைத்தான் கேக்கறானுங்க. நான்தான் பதில் சொல்லணும். அஞ்சாயிரம், ஆறாயிரத்துல செல்லு வாங்கிட்டு மீந்தா பேங்க்குக்கு கட்டிடறேன்...”வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பெரியப்பா எண்ணிற்கே போன் செய்தான். அவர் பக்கவாதத்தில் முழுப் படுக்கையாகிவிட்டார். ஒவ்வொரு பக்கமாக மூன்று பக்கமும் மூன்று முறை வாதமடித்து முக்கால் பிணமாகி விட்டார். பெரியம்மாதான் போனை எடுத்து பேசுவார்.
“ஹலோ!” “அம்மா... தாமு பேசறேன்...” “சொல்லுடா தாமு... கடைக்காரர்கிட்ட மோதிர சைஸ் சொல்லிட்டியா..?” “இன்னும் சொல்லல... இருபத்திரெண்டாம்...”
“அந்த நெம்பருக்கு சொல்லிடு..” “இல்லம்மா, பணமா வாங்கித் தந்துடேன்... ரொம்ப கஷ்டமா இருக்கு. கேன்டீன் வியாபாரம் முன்ன மாதிரி இல்ல... படுத்துருச்சி. இப்படியே போனா சீக்கிரம் தண்டவாளத்துலயே படுத்துடும்...” “வியாபாரம் நல்லாத்தானே போச்சு?”
“அதெல்லாம் அப்பம்மா... ரெயில்வே ஸ்டேஷன்ல எப்ப பாத்தாலும் கூட்டமா இருக்கும். ரெயில் வர்றதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னையே வந்து பிளாட்பாரத்துல காத்திட்டிருப்பாங்க... வண்டி லேட்னாலும் காத்திட்டிருப்பாங்க. சும்மா இல்லாம காபி, டீ குடிப்பாங்க... சமோஸா, பிஸ்கட் வாங்கித் தின்பாங்க. இப்ப அப்படி இல்லம்மா... வீட்டுலருந்தே நெட்ல பார்த்து வண்டி எப்போ வரும்னு தெரிஞ்சுக்கிறாங்க... வண்டி பிளாட்பாரத்துக்குள்ள நுழையும்போதுதான் ஜனங்களும் நுழையறாங்க... வியாபாரமே இல்லை...” “அதையே நம்பிட்டிருக்காம வேற எதுனா பார்க்கணும்...” “எதுக்கும் முதலீடு வேணும்மா...”
“என்னடா தாமு பண்றது... அப்பா நல்லாருந்தார்னா பென்ஷன் மேல லோன் எழுதித் தருவேன்... நாங்களும் கஷ்டமாதாண்டா இருக்கோம்...”“மோதிரத்துக்கு பதிலா பணம் தர மாட்டாங்களா?”“முடியாதுடா... நீ மோதிரத்தை கையில போட்டேயாகணும்... காரணம் இருக்குடா. அப்பாவோ, நானோ செத்தா யாருடா கொள்ளி போடப் போறாங்க..? நீதானே போட்டாகணும்..? செத்த உடம்பை வைச்சு கடைசி சடங்கு செய்வாங்க... அப்ப புரோகிதர் அபிஷேகம் பண்ணுவார்... மஞ்சள் அபிஷேகம், குங்கும அபிஷேகம், சந்தன அபிஷேகம், புஷ்ப அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம்னு ஒவ்வொண்ணா பண்ணிட்டு கடைசியா சொர்ணாபிஷேகம் பண்ணுவார்.
அப்ப யாராவது மோதிரமோ, செயினோ கழட்டித் தந்தா நெத்தி மேல வெச்சி எடுத்துத் தருவார்... யாரும் தரமாட்டாங்க; தயங்குவாங்க... பிணத்து மேல வெச்ச நகையை மறுபடியும் போடறதான்னு யோசிப்பாங்க...உன் கைல மோதிரம் இருந்தா நீ யோசிக்க மாட்டே... தந்துடுவே... சொந்தக்காரங்க முன்னாடி உனக்கு கவுரவமாகவும் இருக்கும். நாங்க செத்தபின்னாடி மோதிரத்தை எதுனாலும் பண்ணிக்கடா... அதுவரைக்கும் கையிலயே இருக்கணும்...” பெரியம்மா அதற்கு மேல் சொன்ன எதுவும் தாமோதரன் காதில் விழவில்லை.
- நா.கோகிலன்
|