குவைத் வேலை என நம்பி துபாயில் சிக்கிய பெண்ணை மீட்ட தமிழ்நாட்டு அமைச்சரும் திமுக அயலக அணியும்!
அரபுநாடுகளில், ‘அருமையான வேலை, கைநிறைய சம்பளம்’ என ஆசைவார்த்தை கூறி அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ஏமாற்றப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வு. இந்தக் கொரோனா காலம் அதை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது என்பதற்கு சமீபத்திய சம்பவமே ஓர் உதாரணம்.குவைத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்ட பெண் ஒருவர் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மற்றும் திமுக அயலக அணியின் முயற்சியால் மீட்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் பெயர் கலைச்செல்வி. நாமக்கல்லில் கேட்டரிங் பணி செய்து வருபவர்.
 ‘‘கல்யாணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சமையல் செய்து கொடுக்குற வேலையை செய்றோம். அப்பா சமையல் மாஸ்டரா 25 ஆண்டுகளுக்கும் மேல இருந்தார். இப்ப அவரால் முடியாததால நான் பண்றேன். கொரோனா நேரத்துல கடந்த ரெண்டரை ஆண்டுகளா ஒரு வேலைகூட இல்ல. அப்பதான் இந்த வாய்ப்பு வந்தது. சரி போகலாம்னு நினைச்சேன். எனக்கு இன்னும் திருமணமாகல. அப்பா, அம்மாவிற்காகவே பண்ணிக்கல. ஏன்னா, அப்பாவும் அம்மாவும் உடல்நலம் சரியில்லாதவங்க. அவங்களுக்கு மருத்துவ செலவிற்கே மாசம் நாலாயிரம் ரூபாய் தேவை. வேலையும் இல்லாததால மூணு லட்சம் ரூபாய் கடனாகிடுச்சு.
 இந்நேரம் காஞ்சிபுரத்துல இருந்து முஸ்தபானு ஒருத்தர் என்னை தொடர்பு கொண்டார். ‘இந்தமாதிரி ஆள் எடுக்குறோம். மாசம் 35 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். குழந்தைங்கள பார்த்துக்கிற வேலை’னு சொன்னார். நமக்கும் சூழ்நிலை சரியில்ல. இந்த வேலைக்குப் போனால் எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்னு நினைச்சேன்.
இந்த வாய்ப்பு என் அக்கா மூலம் வந்தது. அவங்க வெளிநாட்டுல இருக்காங்க. கிறிஸ்துவரா மாறிட்டாங்க. முஸ்தபா நம்பிக்கையானவர்னு அவளுக்கு யாரோ சொல்லியிருக்காங்க.
அதனால, முஸ்தபாகிட்ட ஓகே சொன்னேன். அவர் கொச்சினுக்கு அழைச்சிட்டு போனார். அங்கே கேரளா ஏஜென்ட் மூலம் போறதா திட்டம்.
என்கூட முஸ்தபாவின் உறவினர் பெண்ணும் வேலைக்கு வந்தாங்க. இங்கிருந்து கொச்சினுக்கு போனதும் அங்க பிசிஆர் டெஸ்ட் எல்லாம் எடுத்தாங்க. அதனால, ஒருநாள் அங்க தங்கியிருந்தேன். என் கூட அப்பாவும், சித்தி பையனும் வந்திருந்தாங்க. அங்க அறையில் இருக்கும்போது பணம் தரலனு அந்தக் கேரளா ஏஜென்ட்டும், முஸ்தபாவும் சண்டை போட்டுக்கிட்டாங்க. அப்ப நான், ‘இங்கேயே நீங்க பிரச்னை பண்ணி சண்டை போட்டுக்கிறீங்க. அங்க போய் என்னை தனியா விட்டால் என்ன செய்றது? அதனால வரல’னு சொன்னேன். அவங்க, ‘நீ வரணும். இல்லனா ஒன்றரை லட்சம் ரூபாய் தரணும். பாஸ்போர்ட் தரமாட்டோம். போலீஸ்ல புகார் செய்வோம்’னு மிரட்டினாங்க. நான் பயந்துபோய் வரேன்னு சொன்னேன்.எங்கள நேரே குவைத்திற்கு அழைச்சிட்டு போகாமல் துபாய்க்கு அழைச்சிட்டு போனாங்க. அங்க போனதும் என் பாஸ்போர்ட்டை வாங்கிக்கிட்டாங்க. மறுநாள்தான் குவைத்திற்கு டிக்கெட்னு சொன்னாங்க. ஆனா, அடுத்தநாள் முஸ்தபா உறவுப் பெண்ணை மட்டும் அனுப்பி வச்சாங்க. என்னை கேரளா ஏஜென்ட்டின் சொந்தக்காரர் வீட்டில் தங்க வச்சாங்க.
அந்தக் கேரளா ஏஜென்ட், ‘உங்க பாஸ்போர்ட்டிற்கு சீல் வைக்கல’னு சொன்னார். அதை மும்பையிலேயே சீல் பண்ணியிருக்கணுமாம்... அப்படி பண்ணாமல் கூப்பிட்டு போயிட்டாங்களாம். இங்க துபாய்ல சீல் வைக்க முடியாதுனு சொன்னதால, மும்பைக்கு என் பாஸ்போர்ட்டை அனுப்பியிருப்பதாவும் அதுவரை நான் அங்கேயே தங்கணும்னும் சொன்னாங்க.
எனக்கு அவங்க பண்றதைப் பார்த்து ரொம்ப சந்தேகம் வந்தது. அதனால, நான்காவது நாளே முஸ்தபாவிடம், ‘எனக்கு வர இஷ்டமில்ல. இங்கிருந்தே திருப்பி இந்தியாவுக்கு அனுப்பிடுங்க’னு கெஞ்சினேன். அப்ப முஸ்தபா, ‘நீ வந்துதான் ஆகணும். அப்பதான் எனக்குப் பணம் கிடைக்கும். அப்புறம், அடுத்த நாளே உன்னை ஊருக்கு ஃபிளைட் ஏத்திவிடுறேன்’னு சொன்னார்.
ரெண்டு வாரம் ஆகிடுச்சு. மறுபடியும் முஸ்தபாவிடம் கேட்டதும், ‘உனக்கு இஷ்டம் இருந்தால் இரு. இல்ல நீயே கிளம்பிப் போ. யார்கிட்ட வேணாலும் போய் சொல்லு. நான் யாருக்கும் பயப்படமாட்டேன்’னு மிரட்டுற தொனியில் பேசினார்.
அப்பதான் எனக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் சாரின் நினைவு வந்தது. அவர் எங்க பகுதியைச் சேர்ந்தவர். அவரின் விழாவிற்கு நாங்க சமையல் செய்து கொடுத்திருக்கோம். உடனே அவரின் எண்ணை முகநூல்ல இருந்து எடுத்து மெசேஜ் அனுப்பினேன். உடனே அவர் திமுகவின் அயலக அணிக்கு அனுப்பியிருக்கார். அயலக அணியைச் சேர்ந்த யாழினி மேடம், வெளிநாடுவாழ் தமிழர்கள் இந்திய நலச்சங்கத்தின் அமீரகத் தலைவர் மீரான் சார்கிட்ட விஷயத்தைச் சொல்லியிருக்காங்க. அவர் உடனே நான் இருக்கிற பகுதியை அடையாளம் கண்டு வந்திட்டார். அந்த கேரளா ஏஜென்ட்டை எச்சரிக்கை செய்தார்.
அந்த அறையில் உள்ளவங்ககிட்ட, ‘இந்தப் பொண்ணை குவைத்திற்கு அனுப்பக்கூடாது. இந்தியாவுக்கு அனுப்பணும்’னு சொன்னார். பிறகு என்கிட்ட ஏதாவது பிரச்னை செய்தாங்களானு விசாரிச்சார். அவங்க அதுல பயந்துட்டாங்க. அப்புறம், அங்கிருந்து அழைச்சிட்டு போய் பாதுகாப்பா ஓர் இடத்துல தங்க வச்சார். அவரின் சொந்த செலவுல என்னை தமிழ்நாட்டுக்கு அழைச்சிட்டு வந்தார். அதுக்குள்ள என் அப்பா, அம்மாவுக்கும் தகவல் அனுப்பி வரச் சொல்லிட்டார்.
மறுநாள் எங்களை முதல்வர் ஸ்டாலின் அய்யாவை சந்திக்க வச்சார். முதல்வரும், அமைச்சர் மதிவேந்தன் சாரும், அயலக அணியின் யாழினி மேடமும், மீரான் சாரும் இல்லனா நான் இல்ல. அவங்களுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன். இப்ப முதல்வர் அய்யாகிட்டயும், அமைச்சர் அய்யாகிட்டயும் ஏதாவது ஒரு வேலை வேண்டும்னு கோரிக்கை வச்சிருக்கேன்...’’ என நிம்மதிப் பெருமூச்சுடன் சொல்கிறார் கலைச்செல்வி.
இந்நிலையில் வெளிநாடு வாழ் தமிழர்கள் இந்திய நலச்சங்கத்தின் அமீரகத் தலைவர் மீரானிடம் பேசினோம். ‘‘அவங்க துபாய்ல இருந்து 50 கிமீ தூரத்துல ஓர் இடத்துல இருந்தாங்க. ஒருவேளை குவைத்திற்கு அனுப்பியிருந்தா அவங்கள மீட்க ரொம்ப சிரமப்பட்டிருப்போம். இந்தப் பெண்ணை என்ன பண்ண திட்டமிட்டிருந்தாங்கனு தெரியல.
பொதுவா இந்தக் கொரோனா நேரத்துல வேலையில்லாததால என்ன பண்றதுனே தெரியாமல் கஷ்டத்துல இப்படி முடிவெடுத்திடுறாங்க. அது பல சிக்கல்களை கொண்டுவந்திடுது. அதுக்கு கலைச்செல்வி ஓர் உதாரணம்...’’ என்கிறவர், ‘‘இதுமாதிரி போகணும்னு நினைக்கிறவங்களுக்கு நம் அரசாங்கம் இமிக்ரேஷன் கிளியரன்ஸ் பண்ணிட்டு போகச் சொல்லுது. ஆனா, பலரும் அப்படி செய்றதில்ல. காரணம், இமிக்ரேஷன் கிளியரன்ஸுக்கு பணம் செலவாகும். அதுல சம்பளம் இவ்வளவுனு குறிப்பிட்டு இருக்கணும். தவிர, வேலைக்கு அழைக்கும் ஸ்பான்சர் ஒரு கமிட்மென்ட் லெட்டரை தூதரகத்திற்குக் கொடுக்கணும். அதை வச்சுதான் இமிக்ரேஷன் கிளியரன்ஸ் கொடுப்பாங்க.
அதைக் கடக்கதான் கொச்சின்ல ஆட்களை சரிக்கட்டி அழைச்சிட்டு போறாங்க. இங்கேயே இமிக்ரேஷன் கிளியரன்ஸ் வாங்கும்போது என்ன நிறுவனம்... யாருடையது... யார் அழைச்சிட்டு போறா... எல்லாமே தெரிஞ்சிடும். அப்புறம், அழைச்சிட்டு போறவர் நான்தான் பொறுப்புனு பாதுகாப்பு உறுதிமொழியும் கொடுக்கணும். அப்ப இவங்களுக்கு எந்தப் பிரச்னைனாலும் உடனே சரி செய்யலாம்.
இப்ப துபாய்ல ஆட்கள் வந்தவுடனே அந்தத் தூதரகம் மொபைல் நம்பர் கொடுக்கும். அல்லது அவங்க மொபைல் நம்பரை வாங்கி வச்சுக்கும். அதைக் கொண்டு வாரத்திற்கு ஒருமுறை தூதரகத்திலிருந்து போன் செய்து, ‘ஒழுங்கா நடத்துறாங்களா... பிரச்னை ஏதும் இருக்கா’னு கேட்பாங்க.
இதுமாதிரி சிஸ்டம் தேவையா இருக்கு. நம்ம ஒன்றிய, மாநில அரசுகள் நிறைய விழிப்புணர்வுகள் தர்றாங்க. அதை கவனமா பார்க்கணும். இங்க ஏமாத்துறவங்க ஏமாத்திக்கிட்டேதான் இருப்பாங்க. மக்கள்தான் எச்சரிக்கையாவும், விழிப்புணர்வுடனும் இருக்கணும்...’’ என்கிறார் மீரான்.
பேராச்சி கண்ணன்
|