உக்ரைன்: கசாப்புக்கடை ஆட்டுக்குட்டி!
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்குமா என்பது இன்று சர்வதேச அளவில் தினப்படி விவாதிக்கப்படுகிற செய்தியாகி விட்டது. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னான காலகட்டத்தில் இப்படி ஒரு நாடு இன்னொரு பெரிய நாட்டை நேரடியாக ஆக்கிரமிக்க முயல்வது இதுவே முதல்முறை.உக்ரைன் கிட்டத்தட்ட நாலரைக் கோடி மக்களைக் கொண்ட நாடு. ஜரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்தபடி பெரிய ராணுவத்தைக் கொண்ட நாடு. எனவே இவ்விரு நாடுகளும் மோதிக்கொண்டால் அது உருவாக்கும் அழிவு மிகப்பெரியதாக இருக்கும்.
 இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் தங்களின் கூட்டு பாதுகாப்புக்கும் தற்காப்புக்கும் என்று நேட்டோ (NATO) கூட்டமைப்பை 1949ல் உருவாக்கின. இது சோவியத் யூனியனுக்கு ஒரு விதத்தில் அழுத்தம் அளிப்பதாக இருந்தது. நேட்டோவை சமன் செய்யும் விதமாக சோவியத் யூனியனுக்கும் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே வார்சா ஒப்பந்தம் 1955ல் உருவாக்கப்பட்டது.
 இப்படி இரண்டு குழுக்களாக அமெரிக்காவும் சோவியத் யூனியனும் நட்பு நாடுகளுடன் அணிதிரண்டது மறைமுகமான பனிப்போருக்கு வழிவகுத்தது. ஒரு கட்டத்தில் கம்யூனிச அரசு அமைந்த நாடுகள் மெல்ல சோவியத் பாதிப்பில் இருந்தும் கம்யூனிச நிலைப்பாட்டில் இருந்தும் விலகத்தொடங்கின. வார்சா ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக 1991ல் ரத்து செய்யப்பட்டு சோவியத் நட்பு நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டன.
 இது நடந்த சில மாதங்களிலேயே ரஷ்யா உட்பட 15 நாடுகளின் கூட்டமைப்பாக இருந்த சோவியத் யூனியன் கலைந்தது. அப்படி கலைந்த பல நாடுகள் பின்னாளில் அமெரிக்க ஐரோப்பிய கூட்டமைப்பான நேட்டோவில் அங்கத்தினர்களானார்கள். ரஷ்யா இன்னுமே அணு ஆயுத வல்லரசாக மதிக்கப்பட்டாலும் அமெரிக்காவுக்கு எதிராக தனது நிலை சற்று தாழ்ந்துவிட்டதாகவே உணர்கிறது.
 என்னதான் சோவியத் யூனியன் அமைப்பு சிதறியிருந்தாலும் ரஷ்யா இன்னுமே பலம் பொருந்திய நாடுதான். எனவே, பிரிந்து சென்ற முன்னாள் சோவியத் நாடுகளின் மீது எந்த அளவு அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தை செலுத்த முடியுமோ அந்த அளவு செய்துவந்தது. முன்னாள் சோவியத் நாடுகளும், வார்சா ஒப்பந்த நாடுகளும் ஜனநாயகத்தின் மீதும் ஐரோப்பிய கூட்டமைப்பின் மீதும் ஆர்வம் கொண்டு ரஷ்யாவின் செல்வாக்கில் இருந்து விலகிச்செல்லவே விரும்பின.
பால்டிக் நாடுகளில் நடந்த பால்டிக் சங்கிலிப் போராட்டத்தை ஒரு நல்ல உதாரணமாகச் சுட்டலாம். இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியும் ரஷ்யாவும் ஒரு ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டன. அதன்படி வலுகுறைந்த ஐரோப்பிய நாடுகளைப் பட்டியலிட்டு யார் மீது யார் ஆதிக்கம் செலுத்தலாம் என்பதை தமக்குள் பிரித்துக்கொண்டன. அதன்படி பால்டிக் நாடுகள் ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. இதை எதிர்க்கும் விதமாக மூன்று பால்டிக் நாடுகளையும் சேர்ந்த மக்கள் உலகின் மிக நீளமான மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் சேர்ந்து 600 கிமீ நீளமான மனிதச் சங்கிலியை உருவாக்கினர்.
சத்தியாக்கிரகப் போராட்ட முறையை ஒத்த அமைதிபூர்வமான இந்த மாபெரும் எதிர்ப்பு பால்டிக் நாடுகள் சோவியத் ஆளுகையிலிருந்து விடுபட முக்கிய காரணமாக அமைந்தது. இதுபோன்றே ரஷ்யாவுக்கு எதிரான போராட்டங்கள் உக்ரைன் உட்பட பல நாடுகளில் நடந்துள்ளன. பெருவாரியான மக்கள் மீண்டும் கம்யூனிச வகை அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல விரும்பவில்லை.
இதுவரை நேட்டோவில் சேராமல் இருக்கும் நாடு உக்ரைனும் ஜார்ஜியாவுமே. வேறு சில நாடுகளும் நேட்டோ அமைப்பில் இன்னும் சேராமல் இருக்கின்றன. ஆனால், அவை மரபான அணி சேராமை கொள்கை கொண்ட நாடுகள் - ஸ்விட்சர்லாந்தைப் போல. உக்ரைனையும் ஜார்ஜியாவையும் நேட்டோவில் இணைத்துக்கொள்ள 2008ல் நடந்த நேட்டோ சம்மேளனத்தில் கருத்தளவில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதி இன்று வரை பல்வேறு காரணங்களால் நிறைவேறாமலேயே உள்ளது. உக்ரைன் பிரச்னையில் ஆதார சிக்கல் என்பது இதுதான்.
உக்ரைன் ஒரு சுதந்திரமான நாடு. தங்களின் வெளியுறவுக்கொள்கை என்ன, யாரோடு அணி திரள்வோம் போன்ற முடிவுகளை எடுப்பது ஒரு சுதந்திர நாட்டின் அடிப்படை உரிமை. ஆனால், நடைமுறை யதார்த்தம் வேறு மாதிரியாக உள்ளது. நேட்டோ கூட்டமைப்பின் அடிப்படை, அவர்களில் ஒரு நாடு தாக்கப்பட்டால் மொத்த நேட்டோவும் தாக்கப்பட்ட நாட்டுடன் தோள் சேர்ந்து நிற்க வேண்டும் என்பது. ஒரு பேச்சுக்கு உக்ரைன் இன்று நேட்டோவின் அதிகார பூர்வ உறுப்பினர் ஆகியிருந்தால், உக்ரைன் தாக்கப்படும் சூழலில் அமெரிக்கா உட்பட அத்தனை நேட்டோ நாடுகளும் உக்ரைனின் உதவிக்குக் களமிறங்குவார்கள். உக்ரைனைத் தாக்குவது அமெரிக்காவைத் தாக்குவதற்கு சமம்.
எனவே, உக்ரைன் நேட்டோவில் சேர்ந்துவிடாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் ரஷ்யா முயன்றது. உக்ரைனின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டது. ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு கொண்ட அரசியல் தலைவர்களை ஆதரித்தது. பொருளாதார ரீதியாக சலுகை விலையில் இயற்கை எரிவாயுவை உக்ரைனுக்கு வழங்கியது. உக்ரைன் - ரஷ்ய எல்லையோரம் வசிக்கும் ரஷ்ய மொழி பேசும் உக்ரைனியர்களிடையே பிரிவினைவாதத்தை ஆதரித்து தூண்டிவிட்டது. இந்த அணுகுமுறை ஓரளவு வேலையும் செய்தது.
உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கிரைமிய தீபகற்பத்தை 2014ல் ரஷ்யா தன்னோடு இணைத்துக்கொண்டது. இதற்கு உலக அளவில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. ரஷ்யா கிரைமியாவை இணைத்துக்கொண்டதை இதுவரை எந்த சர்வதேச அமைப்புமே ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு மேலும் எதிர்ப்பைக் காட்டும் விதமாக ரஷ்யா G8 நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.
இப்போது அதேபோல் உக்ரைனின் கிழக்கு எல்லையில் உள்ள டோன்பாஸ் பகுதியிலும் ரஷ்யா செய்ய நினைக்கிறது. தனக்கு ஆதரவான போராளிகள் மூலம் டோன்பாஸ் பகுதியை கடந்த 8 ஆண்டுகளாக ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
2014ல் இந்த சச்சரவுகளின் உச்சத்தில் உக்ரைன் வான்வெளி பகுதியில் சென்றுகொண்டிருந்த மலேஷியன் ஏர்லைன்சின் பாசஞ்சர் விமானம் MH-17, ரஷ்ய ஏவுகணை ஒன்றால் சுட்டு வீழ்த்தப்பட்டது. கிட்டத்தட்ட 300 அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். சர்வதேச அளவில் இது கடும் எதிர்ப்பை உருவாக்கியது. 2015 வாக்கில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த எரிவாயுவை முடக்கியது .
இப்படி பல விதங்களில் விவகாரத்தை ரஷ்யா பெரிதாக்கவே முயன்று வந்துள்ளது. எனவே, உக்ரைன் இன்று வந்து சேர்ந்த புள்ளி தவிர்க்கவே முடியாத நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும்.
இதில் ஒரு பொருளாதாரக் கோணமும் உள்ளது. ஐரோப்பிய எரிபொருள் தேவையில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவிடமிருந்து வருகிறது. இந்த எரிவாயு வரத்து தடுக்கப்பட்டால் எரிவாயுவின் விலை உடனடியாக ஐரோப்பா எங்கும் எகிறும். மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல ஜெர்மனி உட்பட பல முக்கிய ஜரோப்பிய நாடுகளின் வர்த்தக இணை ரஷ்யா. நாளை போர் மூண்டு கடுமையான பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் மீது போடப்பட்டால் அது இரண்டு தரப்புக்குமே கடும் பொருளாதாரப் பாதிப்பை விளைவிக்கும்.இவ்வகை முரட்டு அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பையும் பொருளாதார உறவுகளும், அரசியல் பேச்சு வார்த்தைகளும் ஓரளவு மட்டுப்படுத்தியிருந்தாலும் இந்த விவகாரம் தெளிவான ஒரு தீர்வை நோக்கி சீக்கிரமே நகரவேண்டும் என்ற அவசரம் ரஷ்யாவின் அணுகுமுறைகளில் தென்படுகிறது.
அந்த அழுத்தத்தை அதிகரிக்கவே உக்ரைன் எல்லையில் இப்போது ஒன்றரை லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களைக் குவித்திருக்கிறது.உக்ரைனில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ரஷ்யாவுக்கு பெரும் பங்குண்டு. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டு அதன் திசையை மாற்றியது விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப்பின் ரஷ்ய வியாபாரத் தொடர்புகள் இன்னுமே விசாரணையில் உள்ளன.
அதேபோல டிரம்ப் தனது பதவிக்காலத்தில் NATO அமைப்பை, அதன் தேவையை மிகக்கடுமையாக விமர்சித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உக்ரைன், ஜார்ஜியா, பெலாரஸ் போன்ற நாடுகள் நேட்டோவில் சேராவிட்டாலும் அவை சுதந்திர நாடுகளாக இருப்பதையே அமெரிக்கா விரும்புகிறது. நேட்டோ நட்பு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அவை ஓர் அரண் போல இருக்கும் என்று எண்ணுகிறது.
எனவே, இந்த சர்ச்சையில் நேரடியாகப் பங்கு கொள்ளாமல் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியும், பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியும் ரஷ்யாவை எச்சரித்து வருகிறது. அதிபர் பைடன் இதை சற்று வித்தியாசமாகக் கையாள்கிறார். சுமுகமாக பேச்சுவார்த்தை மூலம் இதை தீர்த்துக்கொள்வோம் என்று மட்டும் சொல்லாமல் ஒவ்வொரு கட்டத்திலும் ரஷ்யாவின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று முன்னறிவித்து (Pre-empt ) அப்பட்டமாக்குகிறார். இதன்மூலம் ரஷ்யா எப்படி இதை படிப்படியாகத் திட்டமிட்டு செயல்படுத்துகிறது என்ற குட்டு வெளிப்படுகிறது.
நாளை உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டால் அதற்கு முழு முதல் காரணம் ரஷ்யாவே என்னும் தெளிவு இன்று பரவலாகவே ஏற்பட்டிருக்கிறது. மற்றொரு காரணத்திற்காகவும் இந்த விவகாரத்தில் தலையிடுவது அமெரிக்காவுக்கு முக்கியமாகிறது. இன்று அமெரிக்காவுக்கு இணையாக ஒரு வல்லரசாக ஆசியாவில் தன்னை நிறுவிக்கொள்ள சீனா முயல்வதை நாம் அறிவோம். ரஷ்யா எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் உக்ரைனை ஆக்கிரமிக்க முடியும் என்றால் நாளை சீனா தைவானைக் கையகப்படுத்துவதையும் தட்டிக் கேட்க முடியாத சூழல் உருவாகும்.
இந்தியா இந்த விவகாரத்தில் இதுவரை எந்த தரப்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஆனால், உள்ளூர இந்த ஆக்கிரமிப்பு நிகழக்கூடாது என்றே நினைக்கிறது. இன்று ரஷ்யா சொல்லும் அதேபோன்ற காரணங்களை வைத்துக்கொண்டு நாளை சீனா அருணாசலப் பிரதேசத்துக்குள்ளோ, பாகிஸ்தான் காஷ்மீருக்குள்ளோ நுழையலாம் என்பதை இந்தியா உணர்ந்தே உள்ளது. இந்தப் பின்னணியில் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்குமா என்பது அதிபர் புடின் தவிர யாரும் ஊகிக்கமுடியாத கேள்வி.
புடின் உத்தேசிப்பது உக்ரைன் மீதான ரஷ்யாவின் பொருளாதார, அரசியல், ராணுவ மற்றும் பண்பாட்டு ரீதியான அதிகாரத்தை. உக்ரைனின் நிலை கசாப்புக்கடை பந்தலில் கட்டப்பட்டிருக்கும் ஆட்டுக்குட்டியின் நிலையைப் போன்றது. அய்யோ பாவம் என்று அலறும் அமெரிக்கா அதை காசு கொடுத்து வாங்கி தன்னுடன் எடுத்துப்போகாது. ஐரோப்பிய கடைக்காரருக்கோ அதை வெட்டினால்தான் தொழில். ரஷ்ய வாடிக்கையாளருக்கு அதை வாங்கிப்போனால்தான் விருந்து. இந்த மூவரும் ஒரு சமரசத்துக்கு வருவதில்தான் ஆட்டுக்குட்டியின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
- கார்த்திக் வேலு
|