அரண்மனை குடும்பம் -7
தன் மகன் கணேசராஜா என்கிற கணேசன் தேர்தலில் நிற்கப் போகிறான் என்கிற செய்தி எம்.பி. அருணாசலம் மூலமாக காதில் விழவுமே கைலாச ராஜா முகத்தில் ஏராளமான அதிர்வலைகள்.
அவருக்கு மட்டுமல்ல... ஒட்டு மொத்த குடும்பமே அந்த அதிர்வை தங்கள் முகத்தில் எதிரொலித்தது.அவர்கள் அதிர்வதை உணர்ந்த அருணாசலமும் “என்னங்க... என்னமோ இப்பதான் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ற மாதிரி பாக்கறீங்க... உங்களுக்குத் தெரியாதுங்களா?”
 “அது இருக்கட்டும்... உனக்கு இதை யார் சொன்னது?”
“சின்னவரே ஒரு லயன்ஸ் கிளப் மீட்டிங்ல பேசியிருக்காருங்க. அந்த வீடியோ கூட இருக்குங்க. வேணும்னா போட்டுக் காட்டட்டுங்களா?”“அப்படியா..! கணேஷுக்கு இப்படி ஒரு ஆசை இருக்கறதா எனக்குத் தெரியல... அஃப்கோர்ஸ் நானும் மும்பை, தில்லினு டூர் போய்ட்டேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கவே இல்லை. நான் கூட நேத்துதான் வந்தேன். நான் வரவும் அவன் ஏற்காட்டுக்கு போய்ட்டதா சொன்னாங்க... அவன் வரட்டும், அவன்கிட்டயே கேட்கறேன்...”“ கேக்கறது என்னங்க... இப்பவே பாருங்க...” என்ற அருணாசலம் தன் கைப்பேசியை எடுத்து அதில் அடங்கிக்கிடந்த அந்த வீடியோவை வாட்ஸ்அப் பக்கம் போய் தட்டி எழுப்பி கைலாச ராஜா முன் காட்டினார்.
கணேசனும் கம்பீரமாக மைக் முன்னால் நின்று பேசத் தொடங்கியிருந்தான்.“நண்பர்களே! நமது சேலம் நகரம் கடந்த 20 வருடங்களில் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. ஆனால், போக்குவரத்து நெருக்கடிக்கு ஒரு தீர்வைக் காண்பதில் நாம் பின்தங்கியே இருக்கிறோம்.அதே போல் பெரிய அளவில் ஐ.டி. நிறுவனங்களும் இங்கே வரவேண்டும். அப்படி வரவேண்டும் என்றால் கட்டாயம் நமது விமானநிலையம் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டாக இருக்க வேண்டும்... அதே போல் ஏற்காடும் ஒரு பெரிய சுற்றுலாத் தலமாக, குறிப்பாக சேலத்தில் இருந்து ஹெலிகாப்டரில் போய்விட்டு வர முடிந்த ஒன்றாக இருக்க வேண்டும்.
ஏற்காடு அடிவாரத்தில் இருந்து விஞ்ச் மூலமாக போய் வரவும் எற்பாடுகள் செய்யலாம். தரைமார்க்கத்தில் பதினெட்டு கிலோ மீட்டர் என்றால் குறுக்கே விஞ்ச் மூலம் பயணிக்கும்போது, அல்லது கேபிள் கார் மூலம் பயணிக்கும்போது அது நான்கு அல்லது ஐந்து மைல் தூரம்தான் கொண்டிருக்கும்.அப்படிச் செய்தால் மேல் நாடுகளில் இருப்பது போல சேலம் நகரையே நாம் மிக நவீனமாக மாற்றிவிடலாம். இதற்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும். அவசியப்படும் பட்சத்தில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் நானே கூட நிற்கத் தயாராக இருக்கிறேன்!”
அந்தப் பேச்சு மேலும் தொடர்ந்தபோதிலும் அருணாசலம் அதை பாதியில் நிறுத்தி விட்டு கைலாசராஜா முகத்தைப் பார்த்தார். கைலாச ராஜா முகத்தில் சற்றே சலனம்.. “பாத்தீங்கல்ல..?” அருணாசலம் அந்த சலனத்தின் ஊடே கேட்டிட -“உம்... நல்லாவே பேசியிருக்கான். நான்கூட விமானம்தான் விட நினைச்சேன். ஆனா, இவன் விஞ்ச், கேபிள் கார்னு ரொம்ப விரிவாவே சிந்திச்சிருக்கான்...”“அய்யா சின்னவரைப்பாராட்ற மாதிரி தெரியுதுங்களே..?”
“ஏய்யா... என் மகன் நல்லா பேசினதை நான் பாராட்டக் கூடாதா?”
“அதுக்கில்ல... அரசியல்ங்கறது எப்படிப்பட்ட குட்டைன்னு உங்களுக்கு நல்லா தெரியும். வேதாளத்து கிட்ட சிக்குன விக்ரமாதித்தனாதான் நாங்களே இருக்கோம். நம்ப சின்னவரெல்லாம் வந்தா தாங்கமாட்டாருங்க...”“புரியுது... அவன் வரட்டும், பேசிட்டு நான் சொல்றேன்...”“அதான் நீங்க விரும்பற எல்லாத்தையும் செஞ்சுதர நான் தயாரா இருக்கேனுங்களே... அப்புறம் எதுக்குங்க நம்ம அரண்மனைக் குடும்பத்துக்கு அரசியல்?”
“நீ ரொம்பவே பயப்பட்ற மாதிரி தெரியுது... பொறந்த நாளும் அதுவுமா எதுக்கு அநாவசியமா கவலைப்படறே? நான்தான் அவன் வரவும் பேசிட்டு சொல்றேன்னு சொல்றேன்ல?” “பேசிட்டுதான் சொல்றேன்னு சொல்றீங்க. அவர் நிக்க நாங்க விடமாட்டோம்னு சொல்ல மாட்டேங்கறீங்களேய்யா...”“அது என்னால முடியாது... இந்த அரண்மனைக் குடும்பத்துல கணேசன் ரொம்பவே வித்யாசமானவன். அவனுக்கு எது விருப்பமோ அதைத்தான் செய்வான். அதுக்கு அவன் பண்ணிக்கிட்ட கல்யாணமே சாட்சி. ஒட்டு மொத்த குடும்பமே எதிர்த்தும் அவன் அந்த வடநாட்டுப் பொண்ணை விடலை. இன்னிக்கு அதுவும் இந்தக் குடும்பத்து மருமகளாகிப் போச்சு.
நான் எல்லா விஷயத்தையும் உன்கிட்ட பேசமுடியாது. இது ஒரு உதாரணம்தான். உனக்காக நான் ஒண்ணு வேணா செய்யலாம். ‘கணேசா நமக்கு அரசியல்லாம் வேண்டாம்ப்பா’ன்னு சொல்லிப் பார்க்கறேன். கேக்கறானான்னு பார்ப்போம்...”சொல்லிக் கொண்டே இனி இதுபற்றி பேசவேண்டாம் என்பது போல் எழுந்து நின்றார் கைலாசராஜா. அந்த உடல் மொழி அருணாசலத்துக்கும் புரிந்தது.“சரிங்கய்யா... பாத்து செய்யுங்க! நானும் புறப்பட்றேன்...” என்று தானும் எழுந்துகொண்டார்.அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த பங்களா காம்பவுண்டில் ஒரு கார் கூட இல்லை.
ஹாலில் கைலாசராஜாவிடமும் தீர்க்கமான யோசனை.“அவனை இப்படியே அவன் போக்குல போக விட்றதெல்லாம் எனக்கு கொஞ்சமும் சரியா படலை...” என்று மெல்ல ஆரம்பித்தாள் கைலாசராஜாவின் தாயான மங்களவல்லி.“ஆமாம் மாப்ள... அரசியல்லாம் நமக்கு கொஞ்சமும் சரிப்பட்டு வராது. கைல இருக்கற காசுதான் கரையும்...” என்று மெல்ல இடையிட்டார் மாமாவான குலசேகரராஜா.“அவனவன் கோடி கோடியா சம்பாதிக்கத்தான் அரசியலுக்கே போறான். நீ என்ன காசு கரையும்கறே?” என்று குலசேகரராஜாவைப் பார்த்து சிரித்தபடியே கேட்டார் கைலாச ராஜா.“எங்க... நம்ப கணேசன்தான் எல்லாத்துலயும் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் ஆச்சே? இவன் சம்பாதிக்கற ஆளே இல்லையே மாமா...”“அப்ப உங்களுக்கெல்லாமும் விருப்பமில்லன்னு சொல்லுங்க...”‘‘எனக்கு கொஞ்சம்கூட விருப்பமில்லை. அப்படியே போட்டி போட்டாலும் காசெல்லாம் கொடுக்காம ஜெயிக்கறதெல்லாம் கொஞ்சமும் சாத்யமில்ல. தோத்துப்போய் குடும்பத்துக்கே கெட்ட பேர்தான் மிஞ்சும். எற்கனவே ஒருத்திய இழுத்துட்டு வந்த அந்த ஒரு கெட்ட பேர் போதாதா... இது வேற சேரணுமா?”
“கஸ்தூரி... நீ ஏன் எதுவும் சொல்லாம அமைதியாவே இருக்கே?” கைலாசராஜா மனைவி பக்கம் திரும்பிக் கேட்டார்.“நான் என்னத்த சொல்ல... காதல் கல்யாணம்னு ஒண்ணு பண்ணி ஒரு குழந்தையும் பொறந்தது. ஆனா, அதுவோ சீக்காளியா இப்பவோ அப்பவோன்னு இருக்குது. அவன் வாழ்க்கை இப்படி போகவேண்டாம்...” கஸ்தூரி பேசி முடிக்கும்போது கண்களில் கண்ணீரின் கசிவு. அதில் அவளது பாசமும் வருத்தமும் நன்றாகவே தெரிந்தது.
“நாம வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமுமில்ல. கணேசனுக்கு நடக்கறது செவ்வா தசை. ஜாதகத்துலயும் செவ்வா நீச்சம். அந்த தசையோட காலம் ஏழு வருஷம். அது ஆரம்பிச்சப்பதான் அந்த வடநாட்டுக்காரி அவனை வளைச்சு பிடிச்சா. இப்ப அந்த தசை முடியப் போகுது... அது முடியறதுக்குள்ள ஒரு பெரிய விபத்தையோ இல்ல அழிவையோ தராம போவாது. இதை நான் சொல்லலை. நம்ம குடும்ப ஜோசியர் நல்லமுத்து பிள்ளை எழுதியே கொடுத்திருக்கார். அதான் கணேசனும் இப்படியெல்லாம் நடந்துக்கறான்...”குலசேகரன் தெளிவாக உரத்த குரலில் சொன்னதைக் கேட்டு கஸ்தூரி மிரண்டு போனாள்.
“அண்ணே... என்ன இது புதுசு புதுசா ஏதேதோ சொல்றே…?” என்றும் கேட்டாள்.“நீ வருத்தப்படுவேன்னு தாம்மா நான் எதையும் சொல்லல. அரசியல் பேச்சு வரவும் சொல்லாம இருக்க முடியல... அவன் ராசிதான் அவனுக்கு பொறந்ததையும் போட்டு ஆட்டி வைக்குது... ஜோசியரும் நிச்சயம் இந்த பொண்ணோ, இதன் மூலமா வர்ற வாரிசோ உயிரோட இருக்க மாட்டாங்கன்னும் சொல்லிட்டார்.அவ்வளவு ஏன்... ஜாதகத்தை கைல எடுத்திருந்தா யாரும் கணேசக்கு பொண்ணு கொடுத்திருக்க மாட்டாங்க. நான் வேணா என் மருமகன்... தங்கச்சி மகன்னு என் மகளைக் கொடுக்கலாம்.
இவளும் எனக்கு கல்யாணமே வேண்டாம்னு அவன் நினைப்பால்ல இன்னமும் இருக்கா...”குலசேகரன் அழகாக தன் மகள் மஞ்சுளாவிடம் வந்து முடித்தார். துல்லியமாக அந்த விநாடியில் மஞ்சுளாவும் அழுதபடியே அங்கிருந்து விலகிப் போனாள். குலசேகரனின் பேச்சைக் கேட்ட வகையில் கைலாசராஜா மனதிலும் பெரும் இரைச்சல்!“யோசிங்க மாப்ள... துணிச்சலா சில முடிவுகள எடுங்க. அரசியல்லாம் நமக்கு வேண்டாம். கணேசன் வரையில் கால நேரமும் சரியில்லை. எப்ப வேணா எது வேணா நடக்கும்னு இருக்குது. இதை எல்லாம் மனசுல வைச்சு கொஞ்சம் கண்டிப்பான முடிவுகள எடுங்க... நானும் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்...”குலசேகரன் அழகாக பிட்டை போட்டுவிட்டு புறப்பட்டார்.
வெளியே அவரின் தனிப்பட்ட உபயோகத்திற்கென்றே ஒரு பிஎம்டபிள்யூ கார் காத்திருந்தது. செர்ரி பழ நிறத்தில் டயர் கொண்ட ஒரு படகு போல காட்சியளித்த அதை நெருங்கியவர் சுற்று முற்றும் பார்த்து விட்டு கைப்பேசி வழியாக சதீஷைப் பிடித்தார்.“என்னய்யா... எல்லாம் எந்த அளவுல இருக்கு?”“கவனிச்சிகிட்டே இருக்கேன்யா... சின்னவர் எப்பவும் கூடவேதான் இருக்காரு... ஒரு ஆச்சரியம் பாருங்க... அந்த சின்ன பொண்ணு இப்ப நல்லா ஓடுதுவிளையாடுது. அதைப்பார்த்தா யாரும் சீக்காளின்னே சொல்ல மாட்டாங்க...” “எப்படிய்யா?”
“மார்ட்டின் வீடியோவே எடுத்து அனுப்பிட்டான். உங்களுக்கு தட்டி விடட்டுங்களா?” “அனுப்பு... ஆமாம் அது எப்படி இவ்வளவு சீக்கிரம் இப்படி குணமாச்சு?” “எல்லாம் அந்த வாழ மரத்தடி சாமியார் வேலை மாதிரிதான் தெரியுது...” “சாமியாராவது... மாமியாராவது... உளறாதய்யா!”
“நீங்க வந்து பார்த்தாதாங்க உங்களுக்கு தெரியும். இவரு நாம நினைக்கற டுபாக்கூர் சாமியார் மாதிரி தெரியலீங்க. ஷீரடி சாயிபாபாவே திரும்ப வந்துட்ட மாதிரி இருக்காரு. கூட்டமும் குவியுது...”“நம்ம ஜனங்க எல்லாத்துக்கும் கூடுவாங்கய்யா. அதை எல்லாம் வெச்சு நாம முடிவு பண்ணக் கூடாது. போகட்டும் நீ என்ன செய்யலாம்னு இருக்கே? நான் இங்க பலமா அஸ்திவாரத்த போட்டு வெச்சிருக்கேன்.
ஏற்காடு மலைலயே அவங்க கதை முடிஞ்சிட்டா எல்லாம் சின்னவரோட ஜாதகத்துனாலன்னு ஆயிடும். இங்க குடும்பத்துலயும் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது...”“விடுங்க... மார்ட்டின் இப்ப பங்களா கெஸ்ட் ஹவுஸ்லதான் இருக்கான். எனக்கு தகவல் தந்துகிட்டே இருக்கான். சின்னவர் தனியா வெளிய போனா போதும். இந்த தடவை அவன் எதையாவது பண்ணிடுவான்...”“என்ன வேணா பண்ணட்டும்... கொலை முயற்சிங்கற மாதிரியே தெரியக் கூடாது...”“அப்ப ஒண்ணு பண்ணலாங்களா?”“என்ன?”“ஒரே சமயத்துல நாலு கரு நாகங்களை அவங்க பெட் ரூமுக்குள்ள சின்னவர் இல்லாத சமயத்துல விட்டடுமா?” “இதுகூட நல்லாதான் இருக்கு... ஆமா பங்களாவை சுத்தி பாம்பு நடமாட்டம் உண்டா?”
“நிறையவே உண்டுங்க. இது நிச்சயம் ஒர்க்அவுட்டாகும். அந்த வடநாட்டுப் பொண்ணும் பாம்ப பார்த்தா விழுந்து கும்புடுதாம். அது அதோட குலதெய்வமாம்ல..?” “ஆமாம்... கைல கூட பச்சை குத்தியிருப்பா...”“அது போதுமே... சாமின்னு கும்புடப் போனாங்க. ஆனா, போட்டுத் தள்ளிடிச்சின்னு சொல்லிட்டு நாம போய்ட்டே இருக்கலாமே..?’’ “அப்ப முதல்ல அப்படியே செய்...”குலசேகரன் கடூரமாக சொல்லி முடித்தார்.
(தொடரும்)
சந்திரமௌலீஸ்வர கனபாடிகள் விளக்கமளிக்கும் முன் சில கேள்விகளை அசோகமித்திரனிடம் கேட்க விரும்பினார். அசோகமித்திரனும் அதை வரவேற்றார். “இந்த உலகில் நிதர்சனமான விஷயங்கள், அப்படி நிதர்சனமில்லாதபடி நம்பிக்கை வைத்து மட்டுமே ஏற்க முடிந்த விஷயங்கள் என்று இருவகைகள் இருக்கின்றன. அதை நீங்கள் ஒப்புக்கொள்கின்றீர்களா?” என்பது கனபாடிகள் கேட்ட முதல் கேள்வி. இந்தக் கேள்வி அசோகமித்திரனுக்கு முதலில் சரியாகப் புரியவில்லை.“எது நிதர்சனமானது..? எது நம்பிக்கை வைத்து ஏற்கவேண்டியது... என்பதை நீங்களே சரியான உதாரணங்களுடன் முதலில் சொல்லிவிடுங்கள்... நான் என் பதிலை பிறகு சொல்கிறேன்...” என்றார்.
“உங்கள் தாயை நீங்கள் நிதர்சனமாக நம்பலாம். அவள் இல்லாமல் நீங்கள் பிறந்திருக்க முடியாது. அவள் உங்களை பத்து மாதங்கள் சுமந்ததில் இருந்து பெற்று வளர்த்தது வரை எல்லாமே நிதர்சனம். அதை ஊரும் உலகமும் கூட பார்த்திருக்கும். பார்க்கவும் முடியும். எனவே உங்கள் தாய் நிதர்சனமானவள். ஆனால், உங்கள் தந்தையை நீங்கள் நம்பித்தான் ஏற்கவேண்டும். இவரே உன் தந்தை என்று உங்கள் அம்மா சொல்வதை நம்பத்தானே வேண்டும்?” என்கிற கனபாடிகளின் கேள்வி அசோகமித்திரனுக்கு மெல்லப் புரியத் தொடங்கியது.
“அது எப்படி...? என் தந்தையின் சாயல், குணம் என்று பல விஷயங்கள் இருக்கிறதே... ஆக, அப்பாவைக்கூட நம்பிக்கை வைத்து ஏற்கத் தேவையில்லையே..?” என்று ஒரு பதில் கேள்வியைக் கேட்டார் அசோகமித்திரன்.‘‘இந்த சாயல், குணம் எல்லாம் எல்லோருக்கும் பொருந்திவரும் என்று கூறமுடியாது. முழுக்க முழுக்க ஒருவர் அவர் தாயை அப்படியே உரித்துக்கொண்டும் பிறக்கலாம். எனவே, அம்மா சொல்வதை நம்பித்தான் நாம் முதலில் தந்தையை ஏற்கிறோம். வாஸ்தவம்தானே?” என்று கனபாடிகள் கேட்கவும் அசோகமித்திரன் மறுக்கவில்லை.
“சரி... இதன்மூலமாக நீங்கள் எதை எனக்கு உணர்த்த வருகிறீர்கள்?” என்கிற ஒரு பதில் கேள்வியைக் கேட்டார் அசோகமித்திரன்.“நல்ல கேள்வி... உலகில் உள்ள விஷயங்கள் அவ்வளவும் ஒன்று நிதர்சனமானது... இன்னொன்று நம்பிக்கை வைத்து ஏற்பது என்கிற இரு விதத்துக்குள்தான் உள்ளது.
பாம்புகள் தொடர்பான உங்கள் கேள்விக்கான பதில் என்பது புராணங்கள் சார்ந்தது... அடுத்தது அனுபவம் சார்ந்தது! இதை நம்பிக்கை வைத்தே ஏற்கவேண்டும். அடுத்து அனுபவித்து உணர்ந்திட வேண்டும். இதை நிதர்சனமாய் ஒரு விஞ்ஞானக்கூடத்து ஆய்வு போல் ஆய்வுகள் நிகழ்த்தி நிதர்சனப்படுத்த முடியாது. அதற்காகவே அப்படிச் சொன்னேன்” என்றார் சந்திர மௌலீஸ்வர கனபாடிகள்!
- இந்திரா செளந்தர்ராஜன்
ஓவியம்: வெங்கி
|