நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தற்சமயம் பிசியாக இருக்கிறார்..!



பல குரல்களை இமிடேட் செய்து அசத்துகிறார் இந்தப் பேராசிரியை

ஒரு நடிகர் அல்லது நடிகையின் குரலை இமிடேட் செய்வதையே பெரும்பாலும் பார்த்திருப்போம். ஆனால், இதில் வித்தியாசமாக விளம்பரங்கள் மற்றும் முக்கிய செய்திகளை இமிடேட் செய்து பலரின் கவனத்தை ஈர்க்கிறார் கவிதா முருகேசன்.‘‘இந்த முழு நாடும் கொரோனா வைரஸால் போராடுகிறது...’’ என நாம் தினமும் செல்போனில் கேட்ட குரலை அதே தொனியில் பேசி அசத்துகிறார்.

இது மட்டுமல்ல... ‘நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளரை தற்போது தொடர்பு கொள்ள முடியாது...’ என்கிற செல்போன் குரலையும், ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்...’ என்கிற குரலையும், அதை ஆங்கிலத்திலும் அப்படியே இமிடேட் செய்வதைப் பார்க்கையில் உண்மையில் கவிதா முருகேசன்தான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தவிர, ‘தடம் எண் ஒன்றிலிருந்து...’ என ரயில் புறப்பாடு சேவையை அதே குரலில் துல்லியமாகச் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்.இதனால், யூடியூப்களில் ரொம்பவே பாப்புலராகிவிட்டார் கவிதா முருகேசன். இந்தக் குரல்களுக்குச் சொந்தக்காரர் இவர்தான் எனப் பலரும் நினைக்கும்படி செய்துவிட்டார். இதுமட்டுமே இவரின் முகமல்ல. பேராசிரியர், செய்தி வாசிப்பாளர், விளம்பரம் படிப்பவர், குறும்பட நடிகை, மாடல், யூடியூபர், பேச்சாளர், கவிஞர், டப்பிங் மற்றும் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் என பன்முகத் தன்மை கொண்டவர்.

சமீபத்தில் இவர்  நீண்ட நேரம் தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரங்கள் வாசித்து நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனையை செய்துள்ளார். சினிமா மற்றும் நாடகங்களில் டப்பிங் கலைஞராக வேண்டும் என்கிற குறிக்கோளுடன் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறார். ‘‘சொந்த ஊர் ஈரோடுங்க. பள்ளிப் படிப்பிலிருந்து எம்.காம் வரை அங்கதான் படிச்சேன். குரல் மூலம் எனக்கான அடையாளத்தை உருவாக்க முடியும்ங்கிற எண்ணம் சின்ன வயசிலிருந்தே ஆழமா இருந்தது. காரணம், பள்ளியில் நடந்த சம்பவம்.

வறுமையின் ஊடேதான் என் பள்ளிப் படிப்பு கடந்தது. எங்களால ஃபீஸ் கட்டமுடியல. அதனால, இலவசக் கல்வி வேணும்னு கேட்டுப் படிச்சேன். அப்ப பள்ளியில் புத்தகத்தை எடுத்து வாசிக்க சொல்லுவாங்க. மாணவிகளுடன் நானும் வாசிக்க ஆர்வமா இருப்பேன். ஆனா, என்னை ஆசிரியர்கள் வாசிக்க சொல்லமாட்டாங்க. ஒருமுறை வாசிச்சப்ப ‘நீ இழுத்து வாசிக்கிற... வேண்டாம்’னு சொல்லிட்டாங்க. அப்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அந்நேரம் என் தோழி, ‘நீ வாசிக்கிறது நியூஸ் வாசிக்கிறமாதிரி இருக்குடி... ஏன் அதுக்கு முயற்சி செய்யக்கூடாது’னு கேட்டா.

எனக்குள்ள ஒரு நம்பிக்கை வந்துச்சு. கல்லூரியில் படிக்கிறப்ப உள்ளூர் டிவி சேனல்ல முயற்சி பண்ணலாம்னு ‘கரன் டிவி’க்கு விண்ணப்பிச்சேன். அப்படியே, ஈரோடு ‘கரன் டிவி’யில் பணி செய்தேன். பகுதிநேரமா பணிபுரிஞ்சுகிட்டே கல்லூரியில் படிச்சேன். எல்லோரும் கல்லூரி வாழ்க்கையை சந்தோஷமா கழிச்சப்ப நான் வேலை செய்திட்டே படிப்பைத் தொடர்ந்தேன். அவ்வையார் சொன்னது மாதிரி இளமையில் வறுமை ரொம்பக் கொடியது. ஆனாலும், ஒருகட்டத்துல ரசிக்க ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் தனியார் சேனல்ல டிரை பண்ணினேன்.

ஆரம்பத்துல அப்பாவுக்கு இந்தத் துறையில் விருப்பம் இல்ல. அப்புறம் அப்பாவே ஊக்கப்படுத்த ஆரம்பிச்சுட்டாரு. அப்ப எனக்குள் தாழ்வு மனபான்மை இருந்தது, நாம மாநிறமா இருக்கிறோமே, நம்மளை எடுத்துக்குவாங்களானு ஒரு கேள்வி. ஆனா, என் அம்மா, முயற்சி செய், தோல்வி அடைஞ்சாலும் பரவாயில்லனு சொன்னாங்க. அந்த முயற்சி கைகூடி தேர்வானேன். அப்ப தொடங்கின என் விடாமுயற்சி இப்பவரை தொடர்ந்திட்டு இருக்கு...’’ என்கிறவர் தொடர்ந்தார்.

‘‘ஈரோடு தனியார் சேனல்லதான் செய்தி வாசிப்பிற்குப் பயிற்சி கிடைச்சது. எப்படி படிக்கணும், எப்படி உச்சரிக்கணும்னு எல்லாமே கத்துக்கிட்டேன். அந்நேரம், எங்க வீட்டுல டிவி கிடையாது. நான் செய்தி வாசிப்பதை என் அம்மா வேற ஒருத்தங்க வீட்டு வாசல்ல நின்னு பார்க்கிறதை கவனிச்சு ரொம்ப அழுதிட்டேன். நான் எம்.காம் முடிக்கிறவரை வீட்டுல டிவி இல்ல. அதனால, முதல்ல டிவி வாங்கணும்னு தவணை முறையில் வாங்கினேன்.

இதுக்கிடையில் எம்.காம் படிக்கிறப்போ என் கிளாஸ்மேட்டா சீனிவாசன் அறிமுகமானார். நல்ல மோட்டிவேட்டர். நாங்க விருப்பப்பட்டு 2009ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் பண்ணிக்கிட்டோம். பிறகு, ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் விரிவுரையாளரா என் பணியை ஆரம்பிச்சேன். ஆகாஷ் ஆதவன், யஷ்வந்த்னு ரெண்டு பசங்க பிறந்தாங்க.
என் கணவர் சீனிவாசன் என்னுடைய எல்லா செயலுக்கும் பக்கபலமா இப்ப வரை இருக்கார். அவர் மட்டுமல்ல; என் அம்மா, மாமனார், மாமியார், என் மாணவ மாணவிகள் எல்லோருமே என் முயற்சிக்கு உத்வேகம் தந்திட்டே இருக்காங்க.

அதனால, 2013ல் சென்னைக்கு வந்து இன்னொரு தனியார் டிவியில் செய்தி வாசிப்பாளரா சேர்ந்தேன். ஆனா, பெரிசா மற்ற வாய்ப்புகள் அமையல. அதனால திரும்பவும் ஊருக்குப் போயிட்டேன். பிறகு  திருச்செங்கோடு விவேகானந்தா மற்றும் ஈரோடு கொங்கு கல்லூரிகள்ல பேராசிரியரா என் பணிகளைச் செய்தேன். அந்நேரம், 2020ல ‘கிழவி’, ‘பேதம் கொல்’னு இரண்டு குறும்படங்கள்ல நடிக்கிற வாய்ப்பு அமைஞ்சது. அதுல என் மூத்த மகன் ஆகாஷ் ஆதவன் எனக்கு மகனாவே நடிச்சான். அதற்கு நாங்களே டப்பிங்கும் கொடுத்தோம். இப்ப மறுபடியும் கடந்த ஆண்டு சென்னைக்கு வந்து என் முயற்சியைத் தொடங்கியிருக்கேன். ஏன்னா, வெப்சீரிஸ், குறும்படம் நடிக்க, டப்பிங் கொடுக்க, விளம்பரப் படங்கள்ல வாய்ஸ் ஓவர் செய்யனு நிறைய வாய்ப்புகள் வருது.

எல்லா மொழிகளிலும் கொண்டு வர்றதால இந்தி டூ தமிழ், தெலுங்கு டூ தமிழ்னு அதுக்கும் பயிற்சி எடுத்திட்டு இருக்கேன். கூடவே, தெரிந்தவர்களிடம் வாய்ப்பும் கேட்டுட்டு வர்றேன். இதுதவிர, கோயம்பேடு செயின்ட் தாமஸ் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியரா பணி செய்றேன்...’’ என்கிற கவிதாவிற்கு, சினிமாவில் தன் குரலுக்கான அடையாளம் டப்பிங் மூலம் கிடைக்க வேண்டும் என்பதே கனவு.

‘‘என் முழுநேர வேலை ஆசிரியர் பணிதான். அதை எப்பவும் விட்டுக்கொடுக்கக் கூடாதுனு நினைக்கிறேன். அங்கிருந்துதான் நான் பல விஷயங்களைக் கத்துக்கிறேன். இருந்தும் செய்தி வாசிக்கிறதும், குறும்படங்களில் நடிக்கறதும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பணி செய்வதும் பிடித்தமான ஒரு பகுதிநேர துறையா கருதுகிறேன்.

சன் டிவியில் செய்தி வாசிக்கிற ரத்னா மேடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க உச்சரிப்பு அவ்வளவு அழகா இருக்கும். அதேமாதிரி டப்பிங்ல நயன்தாராவிற்கு குரல் கொடுக்கணும் என்பது என் ஆசை. நிச்சயம் என் முயற்சிகள் எல்லாம் ஒருநாள் கைகூடும்...’’ என நம்பிக்கை மிளிர சொல்லும் கவிதா, நயன்தாராவிற்கான குரலை அப்படியே பேசிக்காட்டுகிறார். அத்தனை துல்லியமாக இருக்கிறது!

ஆர்.சந்திரசேகர்