இசையில் மயங்கிய நரி!
மனிதனின் கவலை களையும், துயரங்களையும் மறக்கடிக்கக் கூடிய ஆற்றல் இசைக்கு உள்ளது. சில நேரங்களில் நோய்களுக்குக் கூட நல்ல மருந்தாக மாறுகிறது இசை. மனிதன் மட்டுமல்ல, விலங்குகளும் கூட இசைக்கு அடிமை.
 இதற்கு உதாரணம் இந்தச் சம்பவம். அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தை மலைகளும், காடுகளும், நதிகளும் அலங்கரிக்கின்றன. அப்படியான ஒரு நிலப்பரப்பில் பிறந்து. வளர்ந்தவர் ஆண்டி தோர்ன். கிதாரைப் போல இருக்கும் பேஞ்சோ எனும் இசைக்கருவியை வாசிப்பதில் நிபுணர். இசையைப் போலவே பயணமும் அவருக்குப் பிடித்தமான ஒன்று. கடந்த வாரம் கொலராடோவின் காட்டுப்பகுதிக்குள் பயணித்திருக்கிறார் ஆண்டி. காலை வேளையில் சூரியனின் தரிசனத்தைப் பெற்றுக்கொண்டே காட்டுக்கு நடுவே பேஞ்சோவை வாசித்திருக்கிறார். ஆண்டியின் இசையில் மயங்கி ஒரு நரி அங்கே வந்திருக்கிறது. நரியைப் பார்த்தும் பயப்படாமல், திணறாமல் தொடர்ந்து ஆண்டி பேஞ்சோ வாசிக்க, அவர் எதிரில் அமர்ந்து இசையை ரசித்திருக்கிறது அந்த நரி.
சில விநாடிகளில் அந்த இடத்தைவிட்டு நகர்ந்த நரி, திரும்பவும் வந்து பேஞ்சோவின் இசையில் மயங்கிவிட்டது. இதை வீடியோவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர, 95 லட்சம் பேர் பார்த்து, வீடியோவை வைரலாக்கிவிட்டனர்.
த.சக்திவேல்
|