அரிசி + சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா விர்ர்ர்ர்ர்... நீர்வளத்தில் புர்ர்ர்ர்ர்ர்...



உணவுப் பொருட்கள் ஏற்றுமதி சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு மிகப் பெரியது மட்டுமல்ல. உலகின் பல நாடுகளுக்கும் அத்தியாவசியமானதும் கூட. குறிப்பாக, அரிசி மற்றும் சர்க்கரை ஏற்றுமதியில் நாம் மிகப் பெரிய உயரங்களைத் தொட்டிருக்கிறோம். கடந்த 2021ம் ஆண்டு நமது விவசாய ஏற்றுமதி மதிப்பு மூன்று லட்சத்து பதிமூன்றாயிரத்து ஐநூறு கோடி ரூபாய். இது கடந்த 2020ம் ஆண்டோடு ஒப்பிடும்போது பதினெட்டு சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நமது ஒன்றிய அரசோ இந்த ஆண்டுக்கான இலக்காக நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் கோடிகளை நிர்ணயித்துள்ளது. உண்மையிலேயே இது மிகப் பெரிய இலக்குதான். இந்தியாவின் ஏற்றுமதி பல்வேறு காரணிகளால் தடுமாறிக்கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற ஓர் அதிகபட்ச இலக்கை நிர்ணயித்திருப்பது விவேகமின்மை என்பது நிபுணர்கள் கணிப்பு.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் உணவுப் பொருட்களில் அரிசிதான் முதன்மையானது. ஒன்றே முக்கால் கோடி மெட்ரிக் டன்னுக்கு மேல் அளவுள்ள அரிசி அறுபத்தாறாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதியாகிறது.

இதற்கு அடுத்த நிலையில் கடல் உணவுகள் உள்ளன. இவை மட்டும் நாற்பத்தைந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதியாகின்றன. மிளகு, மிளகாய், கிராம்பு, சோம்பு போன்ற வாசனைத் திரவியங்கள் இதற்கு அடுத்த நிலையில் முப்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதியாகின்றன. பால் பொருட்கள் இதற்கு அடுத்த நிலையில் இருபத்தி நாலாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டுக்குப் பறக்கின்றன. இதற்கு அடுத்த நிலையில்தான் சர்க்கரை இருபத்தோராயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதியாகிறது.

தொடர்ந்து, பிராசஸ்டு உணவுகள், பருத்தி, எண்ணெய், பழங்கள் மற்றும் காய்கறிகள், தேயிலை மற்றும் காபி, இதர எண்ணெய் வித்துக்கள், நல்லெண்ணெய், பருப்பு வகைகள், தயாரிக்கப்பட்ட பருப்புகள், தாவர எண்ணெய்கள் உட்பட பல்வேறு விவசாய உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.இதில் அரிசி மற்றும் சர்க்கரை ஏற்றுமதியில்தான் எப்போதும் சக நாடுகளின் போட்டியும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை பாதிப்பால் மாறுபாடுகளும் ஆண்டுதோறும் உருவாவது வழக்கம்.

ஏனெனில் இந்த இரண்டும்தான் தண்ணீர் மிக அதிகமாகத் தேவைப்படும் பயிர்கள். மேலும் நம் நாட்டில் இலவச மானிய மின்சாரமும் அரசால் வழங்கப்படுகிறது. சர்க்கரை உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் நம் நாட்டில் வேறு மானியங்கள், சலுகைகளும் உண்டு. இது உலக வர்த்தக மையத்தின் கண்களை உறுத்துகிறது. ஆஸ்திரேலியா, பிரேசில், தாய்லாந்து போன்ற நமது போட்டியாளர்கள் சர்க்கரை உற்பத்தியில் நம் அரசு விவசாயிகளுக்கு சலுகைகள் கொடுத்து வேண்டுமென்றே அடக்க விலையைக் குறைத்து உலகச் சந்தையில் விற்பனை செய்கின்றன என உலக வர்த்தக மையத்தில் புகார் தெரிவித்திருக்கின்றன.

ஆனால், இதுகூட நம் உண்மையான பிரச்னை இல்லை. இப்படி உச்சபட்ச இலக்கை நிர்ணயித்திருப்பதில் அரிசி உற்பத்தி மற்றும் சர்க்கரை உற்பத்திக்கான நீர்வளத்தை நாம் எப்படிச் சமாளிக்கப் போகிறோம்  என்பதுதான் பிரச்னை.நம்முடையது ஏற்கெனவே வானம் பார்த்த பூமிதான். என்னதான் நம்மிடம் வற்றாத ஆறுகள் இமயமலையில் பனிக் கட்டிகள்உருகுவதால் ஓடிக்கொண்டிருந்தாலும் நம் நாட்டின் பெரும் பகுதி பருவ மழையை நம்பி பிழைப்பதாகத்தான் இருக்கிறது.

இது நம் நாட்டை கடுமையான நீர் பற்றாக்குறை தேசமாக வைத்திருக்கிறது. அதாவது, ஆண்டு முழுதும் விவசாயம் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்பற்ற நிலமாக இருக்கிறது என்பதே எதார்த்தம்.

கடந்த 2011ம் ஆண்டு நமது நீர்வளத்தின் தனி நபருக்கான அளவீடு 1544 க்யூபிக் மீட்டர் என்பதாக இருந்தது. இது எதிர்வரும் 2050ம் ஆண்டில் 1140 க்யூபிக் மீட்டர் என்பதாகச் சுருங்கிவிடும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

ஒரு கிலோ சர்க்கரையைத் தயாரிக்க நமக்கு இரண்டாயிரம் லிட்டர் மறைநீர் (Virtual Water) தேவைப்படுகிறது. மறைநீர் என்பது வெறுமனே சர்க்கரைக்கான கரும்பை உற்பத்தி செய்யும் நீரோடு, கரும்பை சர்க்கரையாக மாற்றும் ஒவ்வொரு காரணியை தயாரிக்கவும் தேவைப்படும் நீரின் அளவாகும். இப்படிப் பார்த்தால் ஏழரை மெட்ரிக் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய குறைந்தபட்சம் நூற்று ஐம்பது கோடி க்யூபிக் மீட்டர் நீர் நமக்குத் தேவைப்படும்.

இதுவே அரிசியை எடுத்துக்கொண்டால் ஒரு கிலோ அரிசியைத் தயாரிக்க நமக்கு மூன்றாயிரம் முதல் ஐந்தாயிரம் லிட்டர் மறைநீர் வரை தேவைப்படுகிறது. சராசரியாக நான்காயிரம் லிட்டர் மறைநீர் எனக் கொள்வோமானால் நமது அரிசி ஏற்றுமதியான 17.7 மெட்ரிக் டன்னை எதிர்கொள்ள 354 கோடி க்யூபிக் மீட்டர் தண்ணீர் தேவை. அரிசியும் சர்க்கரையும் சேர்ந்து மட்டுமே ஐநூறு கோடி க்யூபிக் மீட்டர் மறைநீரை உறிஞ்சித் தீர்க்கின்றன. இவற்றைத் தயாரிப்பதற்கான மாற்றுவழிகளாக மாற்று உலர்த்துதல் திட்டம், நேரடி விதைப்பு முறை, சொட்டு நீர்ப் பாசனம் என எத்தனை விஞ்ஞானமுறைகளைப் பரிசீலித்தாலும் இந்தக் குறைந்த அளவு மறைநீர் தேவையை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

இந்த இடத்தில் நாம் இன்னொரு உண்மையைக் கண்டுகொள்ள வேண்டும். கடந்த ஏழு ஆண்டு கால மோடி ஆட்சியில் நமது ஏற்றுமதி விகிதம் குறைந்துதான் இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டோடு ஒப்பிடும்போது பதிமூன்றரை சதவீதம் நாம் ஏற்றுமதியில் சரிந்துள்ளோம். நமது விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருபது சதவீதம் எற்றுமதி என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இன்று அது இல்லை. இதற்குக் காரணம் மோடி அரசின் தவறான பொருளாதாரத் திட்டமிடல்தான்.

மோடி அரசின் மைய நோக்கமே ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் தராமல் இறக்குமதிக்கு முக்கியத்துவம் தருவதாக உள்ளது ஒரு காரணம். இதனை ‘ஆத்மநிர்பார் பாரதம்’ என மோடி விளித்தாலும் நமது ஆத்மாவை நிர்மூலமாக்குவதாகவே இது இருக்கும். எந்த நாடு ஏற்றுமதியை அதிகமாகவும் இறக்குமதியை குறைவாகவும் செய்கிறதோ அதுவே பொருளாதாரரீதியாக ஆரோக்கியமான நாடு என்பது ஒரு பால பாடம்.

ஆனால், மோடி அரசோ இதனைத் தலைகீழாகச் செய்ய நினைக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம் நமது மறைநீர் பிரச்னைகளை எதிர்கொள்ளலாம் என்பது கணக்கோ என்னவோ தெரியவில்லை. இன்னொருபுறம் நமது மறைநீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் ஏற்றுமதியில் அதிக இலக்கு என்பதையும் நிர்ணயித்துக்கொண்டு ஆத்மநிர்பார் கொள்கைகளும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் விவசாய உற்பத்தி என்பது இயற்கையோடு மல்லுக்கட்டிப் போராடும் சதிராட்டம். சுற்றுச் சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் உலக வெப்பமயமாக்கல் சூழலில் பருவ நிலைகள் கன்னாபின்னாவென பெய்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் மறைநீர் குறித்த விஞ்ஞானபூர்வமான சிந்தனைகள் எதுவுமில்லாமல் ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகளை வகுத்துக்கொண்டிருக்கிறோம் நாம் என்று விமர்சிக்கிறார்கள் விஞ்ஞானிகள். நம் முன் உள்ள பிரச்னையையும் அதன் உண்மையான சவாலையும் எப்போது எதிர்கொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை.

இளங்கோ கிருஷ்ணன்