வயது 10... வாசிப்பது தவில்!அசரவைக்கும் புதுக்கோட்டை சிறுமி
‘‘அரசுப்பேருந்துகளில் கலைஞர்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகளுக்குக் கட்டணம் வசூலிக்கக்கூடாது...’’ எனக் கடந்த வருடத்தின் இறுதியில் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், ஊரடங்கில் எந்த திருமணத்திலும் பத்துபேருக்கு மேல் கூடவில்லை. இசை வாத்தியக்காரர்கள் இல்லாமலே பல திருமணங்கள் நடந்தன. இப்படியான சூழலில் ஒரு சிறுமி தீவிரமாக தவில் கலையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்.
புதுக்கோட்டை அறந்தாங்கியில் ஒரு திருமணம். தாலி கட்டும் நேரத்தில் ‘‘கெட்டி மேளம்... கெட்டி மேளம்...’’ என்று சொல்லி அர்ச்சகர் தாலியை எடுத்துக் கொடுக்கிறார். அரங்கமே அதிரும் அளவிற்கு மேளச் சத்தம் அடித்துத் தூள் கிளப்புகிறது. திரும்பிப் பார்த்தால் பத்து வயதுச் சிறுமி பத்து கிலோ மேளத்தை மடியில் வைத்துக் கொண்டு தாளம் வாசிக்கின்றார். அவரின் பத்து விரல்களும் ஸ்வரங்களை எழுப்புகின்றன. அந்தச் சிறுமியின் விரல் அசைவைப் பார்த்து, திருமணத்திற்கு வந்த அனைவரும் ஆச்சர்யத்தில் சிலையாகி விட்டார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நிஷாந்தினிதான் அந்தச் சிறுமி. இப்போது முழு நேர வாத்தியக் கலைஞராகிவிட்டார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 8 மாதங்களாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அந்த இடைப்பட்ட காலத்தில் தவில் வாசிக்க கற்றுக்கொண்டார்‘‘என் தாத்தா கிருஷ்ணன் நாதஸ்வர வித்துவான். அப்பா நாராயணன். நாங்கள் புதுக்கோட்டையில் குடியிருந்தோம். விடுமுறையின்போது வாராப்பூர் கிராமத்திற்கு வருவோம். அப்படித்தான் ஊரடங்கில் இங்கே வந்தோம்.
மாமா நாகராஜன் தவில் வித்துவான். அவரிடம் பாடம் படிப்பதற்கு நிறைய மாணவர்கள் வருவார்கள். அவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும்போது நானும் கூர்ந்து தாளத்தைக் கவனிப்பேன். புதுக்கோட்டையில் இருந்தபோது சில காலம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன். எனவே ராகமும் தாளமும் ஸ்வரங்களும் ஓரளவு தெரியும்.
வீட்டில் தினமும் மேளச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். மங்கல இசை வாத்தியமான மேள இசையை நாமும் கற்றுக்கொண்டால் என்ன என்று ஒரு நாள் நினைத்தேன். பிறகு யோசிக்கவேயில்லை. முழுவதுமாக களத்தில் இறங்கினேன்...’’ என்கிற நிஷாந்தினி, இப்போது மிக அருமையாக தவில் வாசிக்கிறார். பல்வேறு இசை நிகழ்ச்சிக்குச் சென்று தனது திறமையை வளர்த்து வருகின்றார்.
மூன்று மணி நேரம் இவர் வாசித்த ‘ஆதிதாளம்’ என்னும் இசை அனைவரையும் வியக்க வைத்தது. அதேபோல புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன் கோயில் நிகழ்ச்சி யில் மிகவும் அற்புதமாக இவர் தவில் அடித்ததைக் கோயிலுக்கு வந்த அனைவரும் ரசித்துக்கேட்டனர். ‘‘துவக்கத்தில் மரக்கட்டையில் மாட்டுத்தோலை தைத்துத்தான் பயிற்சி எடுக்க வேண்டும். விரல்களில் வலி தாங்க முடியாமல் கலங்கினேன். இரண்டு கையின் தோள்பட்டையிலும் உயிர் போகும் வலி.
மேளத்தை என்னால் தூக்கக் கூட முடியாது. என் குரு நாகராஜனோ அல்லது அப்பா நாராயணனோதான் மேளத்தைத் தூக்கி என் மடியில் வைப்பார்கள்.ஆரம்ப நாட்களில் பத்து விரல்களிலும் வீக்கம் இருக்கும். கையை உதறினாலே வலிக்கும். ஆனால், விரலின் மேல் கப்பை மாட்டிக்கொண்டு மேளத்தை தட்டும்போது ஒரு லயம் பிறக்கும் பாருங்கள்... அந்த இசை எனக்கு தாங்க முடியாத சந்தோஷத்தை தந்தது; தருகிறது. வலியைப் பொருட்படுத்தாமல் வாசிக்கத் தொடங்கினேன்.
ஊரடங்கு காலம் என்பதால் வெளியில் எங்கும் செல்லாமல் முழுமூச்சாகக் கற்றுக்கொண்டேன்...’’ என்றவர் சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார் ‘‘ஆதி தாளமான ‘த தி தோ நம் ஜம்…. த தி தோ நம்... தக்கிடகிட தாம்கிடகிட தத்தித் தோ நம்...’ ஜதியை கட்டையில் வாசிக்க வேண்டும். பிறகுதான் வாத்தியத்தில் பயிலவேண்டும்.
ஆதி தாளத்தில் முதல் பாடம், இரண்டாம் பாடம் என ஏழு பாடங்களையும் முழுமையாக கட்டையில் பாராயணம் செய்ய வேண்டும். பிறகு மேளத்தில் வாசிக்கவேண்டும். இது ‘கெண்டை தாளம்’, ‘துருவ தாளம்’, ‘மிஷர தாளம்’, ‘சங்கீரண தாளம்’ என நீண்டுகொண்டே போகும். நிச்சயம் தொடர்ந்து கற்றுக்கொள்வேன்.
விரைவில் கச்சேரிகளில் வாசிக்கவேண்டும்...’’ என்கிற நிஷாந்தினியின் லட்சியம், பிரபல தவில் வித்துவான் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் மற்றும் மன்னார்குடி எம்.ஆர்.வாசுதேவன் போன்று தவில் வாசிப்பதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே.
தவிலின் உருளை வடிவிலான பகுதி பலா மரத்தினால் செய்யப்படுகிறது. பண்ருட்டியில் தயாராகும் இசைக்கருவிகள் வெளிநாடுகளில் புகழ்பெற்று வருகின்றன. தபேலா, மிருதங்கம், தவில், கஞ்சிரா, உறுமி, உடுக்கை உட்பட பல இசைக்கருவிகள் இங்கே தயாராகின்றன. பண்ருட்டி பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பலா மரங்களைக் கொண்டு இவை உருவாக்கப்படுகின்றன. இதன் சிறிய பக்கத்தில் இருக்கும் தோல் ‘வளந்தலை’ என்று அழைக்கப்படுகிறது. இது எருமைக்கன்றின் தோலால் செய்யப்படுகிறது.
இதன் பெரிய பக்கத்தில் உள்ள தோல் ‘தொப்பி’ என்று அழைக்கப்படுகிறது. இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. இந்த தோலை தாங்கிப்பிடிக்கும் வளையங்கள் இரு பக்கமும் உண்டு. அவை மூங்கிலால் செய்யப்படுகின்றன. அந்த வளையங்கள் விரைவாக உடைவதால் இப்போது இரும்பினால் செய்து பொருத்துகிறார்கள்.
தோல் கயிறு கொண்டு கட்டப்பட்ட பகுதிகள் உருக்கினால் செய்யப்படும் ஆணிகள் கொண்டு முடுக்கி விடப்படுகின்றன. டிஜிட்டல் கருவிகள் வந்தாலும் தோல் கருவியில்தான் மேளத்தின் துல்லிய இசையை உணர முடியும்.
திலீபன் புகழ்
|