பாரதிராஜாவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்!



‘‘டிரைலருக்கு கிடைத்த மரியாதை அமோகமா இருக்கு. சந்தோஷத்தில் இருக்கேன். எங்க யூனிட் அவ்வளவு கடுமையாக உழைச்சாங்க. சினிமாவில் பல ஆண்டுகளுக்கு இந்தப்படத்தின் பேச்சும், விவாதமும், அனுபவப் பகிர்வும் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அப்படிப்பட்ட முயற்சிதான் ‘கென்னடி கிளப்.’

முடிந்த அளவுக்கு பாசாங்கு இல்லாமல், தமிழ்ப்பார்வையாளர்களை ரொம்பவும் நம்பி, துணிச்சலான பல பகுதிகளையும் உள்ளடக்கி எடுத்திருக்கேன்.
தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான கபடியின் தன்மை, அதிலிருக்கிற அர்ப்பணிப்பு, அரசியல், பவர், அறம், பண்பாடு, ஒழுக்கம், மதிப்பீடு, கட்டுப்பாடுகள்... இவை எல்லாவற்றையும் பேசுகிறேன்.

நம்பிக்கையைத் தரக்கூடிய, ஒரு பெரும் விளையாட்டின் ஊடாக பேரன்பைப் பேசக்கூடிய, காட்டித்தரக்கூடிய படமாகக்கூட ‘கென்னடி கிளப்’ இருக்கும்...’’ நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சுசீந்திரன். ‘வெண்ணிலா கபடிக்குழு’வில் கவனம் ஈர்த்து அடுத்தடுத்து மனதை ஈர்த்த கலைஞன்.உங்களால் ஒரு ஸ்போர்ட்ஸ் படம் அருமையாகச் செய்ய முடியுது...

எங்க அப்பா நல்லுச்சாமி ஒரு டிரைவர். பழநிக்கு அருகேயிருக்கிற ஒரு கிராமம்தான். எங்க அப்பா அந்தக்காலத்தில் பேசப்படுகிற கபடி வீரர். ஒவ்வொரு ஊருக்கும் அவர் விளையாடப்போய் வந்த கதைகள், அனுபவங்கள், கடைசிக்கட்ட பரபரப்புகள் ஒவ்வொன்றையும் அப்படியே நேரில் பார்த்த மாதிரி விவரணைகளோடும், பாவனைகளோடும் சொல்வார்.

கபடிக் கதைகளைக் கேட்டு வளர்ந்த பருவம் என்னோடது. அப்படியே அந்த நினைவுகள் ஊறிக்கிடக்கும். இந்தப்படத்தில் பாரதிராஜா என் அப்பா கேரக்டர்தான். ரியல் பிளேயர்களை நடிக்க வைச்சிருக்கேன். கபடிதான் தமிழர்களோடு ஒட்டி இருந்திருக்கு. பாரம்பரியமாக இன்னும் நம்மை தொடர்ந்துக்கிட்டே இருக்கு. இந்தியாவில் தமிழ்நாட்டு கபடி விளையாட்டு வீரர்கள் முக்கியமானவர்கள். அரியானாவிற்கு அடுத்தபடியாக நாம்தான் இருக்கோம்.

‘லகான்’, ‘தங்கல்’.... எல்லாம் பார்த்தபிறகு நாமும் இந்த மாதிரி நேர்மையாய், உண்மையாய், உணர்ச்சியோடு ஒரு படம் செய்ய முடியுமென்று தோன்றுகிறது. ‘சக் தே இந்தியா’ வந்தபோது, அதை ‘லகானி’ன் மறுபதிப்பு என்றார்கள். ஆனால், நாம் பார்த்தது வேறு படம், வேறு உணர்வு. அப்படியான முயற்சிகள் தமிழிலும் நிச்சயம் சாத்தியப்படுத்த முடியும்னு தோன்றியது.

பாரதிராஜா - சசிகுமார் எப்படி உங்களுக்கு அமைஞ்சாங்க..?
பாரதி அப்பாவை எப்போவோ பிக்ஸ் பண்ணிட்டேன். எங்க அப்பா ரோலுக்கு அவர்தான். அவர் ‘கென்னடி கிளப்’ ஷூட்டிங் கிளம்புகிற அழகை அவரது அஸிஸ்டெண்ட் ரொம்பப் பெருமையாகச் சொல்வாங்க.

கலர்ஃபுல், பவர்ஃபுல்னு நீங்க ரைமிங்கா..... எழுதுவீங்களே. அதுக்கு அவர்தான் சரி. இவ்வளவு அழகா கேரக்டருக்கு உள்ளே கூடிப்போய் அமைவது எல்லாம் பெரிய விசேஷம்! ஆனால் அது எனக்கு அமையணும்னு இருந்திருக்கு. பாரதியப்பாவிற்கு நிச்சயம் தேசிய விருதுக்கான பெரிய இடம் இருக்கு. அப்படியே துடிப்பும், நெகிழ்வும், இயல்புமா அவங்க நடிச்சிருக்கிற நடிப்பு, இன்னிய தலைமுறைக்குப் பாடம்.

அவருக்குப் பின்னாடி சசிகுமார் அண்ணா. அவரோட நேட்டிவிட்டியும் அத்தனை பொருத்தம். அவர் கொடைக்கானல் பக்கமே முழுக்க ஹாஸ்டலில் படிச்சவர். வாலிபால் சாம்பியன். விளையாட்டுகளில் மனசும், கவனமும் நிறைய வச்சிருக்கிறார். அவங்க காம்போ அப்படி நல்லவிதமாக அமைஞ்சது. டிரைலர் பார்த்திட்டே நிறைய பேர் பேசிட்டாங்க. ஆனால், அவங்களுக்கு எல்லாம் உணர்ச்சிபூர்வமாய் இன்னும் காட்சிகள் நிறைந்திருக்கும்னு சொல்லிக் கொள்கிறேன்.

இந்தியா முழுக்க கபடி வீரர்களை இங்கே களம் இறக்கி இருக்கீங்க...மத்த விளையாட்டு மாதிரி இல்லே கபடி. பிற விளையாட்டுக்களுக்கு பால், கிரிக்கெட் மட்டை, ஸ்டிக்னு கொஞ்சமாவது பொருட்கள் தேவைப்படும். கபடிக்கு அப்படியே மணலிலே காலால் ஒரு கோடு போட்டு ஆரம்பிச்சிடலாம்.

மத்த விளையாட்டுகளுக்கு அடிப்படை பொருள்களுக்கே கொஞ்சம் பணம் தேவைப்படும். ஆனால், கபடி அப்படியில்லை. சொல்லப்போனால் கபடி வீரர்களில் 99% பேர் வறுமைக் கோட்டுக்குக்கீழேயே இருக்காங்க. அவங்களின் தினப்படி வாழ்க்கையே கஷ்டம் நிரம்பியது.

எங்க அப்பாவை முன் வைத்துச்சொன்னால் சரியான சாப்பாடு, வசதிகள் இல்லாமல் ஏதோ ஒரு மாயசக்திதான் அவங்களை உயிர்ப்புடன் வைச்சிருக்கிறது போல. தினமும் விடியற்காலையில் எழுந்து பயிற்சிக்குப் போவதும், கனவுகளை வளர்த்துக்கிறதும் அவங்களுக்கு வாடிக்கையாகப் போச்சு.

இவ்வளவு திறமைகள் இருந்தும், அவர்களில் பலர் அரசியலில் பாதிக்கப்படுவது தாங்கிக்க முடியாமல் இருக்கும். இந்த மாதிரி வீரர்களுக்கு அடிக்கடி வருவது காயம். சமயங்களில் முக்கியமான கட்ட ஆட்டங்களில் காயங்களினால் ஆட முடியாமல் போய் மனசு உடைந்துபோய் விடுவதுண்டு.

இன்னிக்கும் பாருங்க, இந்திய தேசியக்கொடியை மார்பில் போர்த்திக்கொள்கிற உரிமை இதுமாதிரி வீரர்களுக்குத்தான் இருக்கு. நாம் இதுமாதிரி விளையாட்டு வீரர்களின் அருமை பெருமை புரிஞ்சுக்கணும். அதற்கான களத்தை இந்த ‘கென்னடி கிளப்’ உருவாக்கித்தரும்.

வெளி மாநிலங்களிலிருந்து 120 பிளேயர்களை இங்கே வரவழைத்து, அசல் போட்டியே நடத்தினோம். மொத்த பட்ஜெட்டை விட அந்த 12 நாள் பட்ஜெட் அப்படியே படத்தை தூக்கிட்டு போயிடுச்சு. ஆனால், படத்தின் தரத்தை மனசில் வைத்து அதை சந்தோஷமா ஏத்துக்கிட்டோம்.பாடல்கள் இமான் இசையில் நல்லாவே இருக்கு...

அவரது ட்யூன்கள் சூத்திரம் மாதிரி இல்லாமல் எளிமையாக இருக்கு. சீனை எடுத்திட்டு அவரை நம்பி அங்கேயே பாட்டும் எடுக்கலாம். அவர் இசையில் பண்பாடு இருக்கு. தமிழ் மண்ணோட அடையாளம் இருக்கு. ஒரு சுகம் இருக்கு. முக்கியமாக அவர் இசையில் இருக்கிறது உயிர். அதுதான் அழகு.

நாங்க ‘வெண்ணிலா கபடிக் குழு’க்கு போட்ட பாடல்தான் இன்னிக்கும் கபடிப் போட்டிகளில் முதல் பாடலாக ஒலிக்குது. இதிலும் அப்படி ஒரு பாடல். இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து எடுத்த படத்திற்கு ஆர்.பி.குருதேவ்தான் கேமிராமேன்.

நாம் செய்கிற வேலையை மனசு வைச்சு, மனப்பூர்வமா நல்லபடியாக செய்திட்டுப் போனாலே, அதுவே ஒரு நல்ல இடத்திற்கு கொண்டுபோய்ச் சேர்க்கும்னு சொல்வாங்க. அப்படிப்பட்ட பக்குவத்திற்கு எங்க யூனிட் வந்து நிற்குதுன்னு நான் நம்புறேன்.                    

நா.கதிர்வேலன்