மகளிர் ஹாக்கி ஹிரோஷிமாவை அதிரவைத்த இந்தியா!
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்திய எப்.ஐ.எச் சீரீஸ் ஃபைனல்ஸ் மகளிர் ஹாக்கி போட்டித் தொடரில், தங்கப்பதக்கம் வென்று அசத்தியிருக்கிறது இந்தியா. அதுவும் ஆசிய சாம்பியன் ஜப்பானை அதன் சொந்த மண்ணிலேயே புரட்டி எடுத்தது ஹைலைட்!ஹிரோஷிமாவில் நடைபெற்ற இந்தத் தொடருக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல்தான் பயணமானது இந்தியா.
 உலகத் தரவரிசையில் 9வது இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு, எப்படியாவது ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது மட்டுமே ஒரே நோக்கமாக இருந்தது.அதற்கு குறைந்தபட்சம் இறுதிப் போட்டி வரையாவது முன்னேற வேண்டும் என்பதால் கூடுதல் நெருக்கடி. இருந்தாலும், ராணி ராம்பால் தலைமையிலான இந்திய வீராங்கனைகள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்கினர்.
 முதல் லீக் ஆட்டத்தில் உருகுவே அணியை 4 - 1 என வீழ்த்தியது நம்பிக்கையை அதிகரித்தது. அதே வேகத்துடன் போலந்து அணியை 5 - 0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்த இந்தியா, கடைசி லீக் ஆட்டத்தில் பிஜி அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்தது. குர்ஜித் கவுர் ஹாட்ரிக் உட்பட 4 கோல் போட்டு அசத்த…
11 - 0 என பந்தாடி ஏ பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.பி பிரிவில் 2வது இடம் பிடித்த சிலி அணியுடன் அரை இறுதி பலப்பரீட்சை. இதில் வென்றால் மட்டுமே ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் சற்று பதற்றத்துடனேயே களமிறங்கினர்.
 சிலி வீராங்கனை கார்சியா 18வது நிமிடத்திலேயே கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். யாமிருக்க பயமேன் என்று துடிப்புடன் விளையாடிய குர்ஜித் 2 கோல் அடிக்க, கேப்டன் ராணி, நவ்னீத் கவுர் தலா ஒரு கோல் போட்டு சிலியை சின்னாபின்னமாக்கினர். 4 - 2 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்திய இந்தியா ஃபைனலுக்கு முன்னேறியதுடன், ஒலிம்பிக் தகுதிச் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்துகொண்டது.
தந்தை இறந்த தகவல் கிடைத்தும் தாயகம் திரும்பாமல் இப்போட்டியில் விளையாடிய சக வீராங்கனை லால்ரேம்சியாமியின் கடமை உணர்வுக்கு இந்த வெற்றியை அர்ப்பணித்தார் கேப்டன் ராணி.பி பிரிவில் ரஷ்யா, சிலி, ஜப்பான் அணிகள் தலா 6 புள்ளிகள் பெற்ற நிலையில், கிராஸ் ஓவர் போட்டியில் போலந்து அணியை 5 - 0 என வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி இருந்த ஜப்பான், அதில் ரஷ்ய அணியின் சவாலை பெனால்டி ஷூட் அவுட்டில் முறியடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
தங்கப் பதக்கத்துக்கான மோதல்… சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாகக் களமிறங்கிய ஜப்பானுக்கு எதிராக 3வது நிமிடத்திலேயே கோல் போட்டு மிரட்டினார் கேப்டன் ராணி. பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய ஜப்பான் அணிக்கு கனோன் மோரி 11வது நிமிடத்தில் கோல் அடிக்க, ஆட்டத்தில் அனல் பறந்தது.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் குர்ஜித் கவுர் 45வது, 60வது நிமிடங்களில் அபாரமாக கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.அதிக கோல் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் குர்ஜித் கவுர் (11) முதலிடம் பிடிக்க, தொடரின் சிறந்த வீராங்கனை விருதை கேப்டன் ராணி தட்டிச் சென்றார்.
‘‘உலக சீரீஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதை விட, ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த லட்சியத்துடன்தான் ஹிரோஷிமாவுக்கு வந்தோம். ஆசிய சாம்பியன் ஜப்பானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதில் கூடுதல் மகிழ்ச்சி. இந்த வெற்றி ஒரு தொடக்கம்தான். நிச்சயமாக 2020 ஒலிம்பிக்சில் விளையாட தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி விதைத்திருக்கிறது...’’ என பூரிக்கிறார் கேப்டன் ராணி.
‘‘ஜப்பானுக்கு எதிரான ஃபைனல் மிகப் பெரிய சவாலாக இருந்தது. கடினமான போட்டியை திறமையாக சமாளித்தோம். குறிப்பாக, நமது வீராங்கனைகள் தற்காப்பு ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்டனர். பெனால்டி, கார்னர் வாய்ப்புகளை குர்ஜித் முழுமையாகப் பயன்படுத்தி வெற்றிக்கு உதவினார். ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறோம்...’’ என்கிறார் பயிற்சியாளர் மரின்.
ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள இந்தத் தொடருக்கான இடம், அட்டவணையை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு இன்னும் அறிவிக்கவில்லை. போட்டி எங்கு நடந்தாலும் சரி… ஒலிம்பிக் கனவை நனவாக்குவோம் என ஆர்ப்பரிக்கிறது ராணி & கோ!
பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு உள்ளிட்டோரின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் இந்திய அணி, 2020 ஒலிம்பிக்சில் விளையாடுவதற்காக டோக்கியோ பறக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்!
ஷங்கர் பார்த்தசாரதி
|