என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட்
உண்மை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் ரசனையின் மாற்றத்திற்கான எளிய வழிகள் துலங்கிவிட்டன. புயல்சின்னம் கரை கடக்க முயல்வதை காட்டும் வரைபடம் போல தமிழ்ப் படங்களின் சமீப கால நகர்வை அவதானிக்கும்போது நம்பிக்கையான சில கூறுகளை உணர முடியும்.
 ஒரு திரைப்படத்தின் அடிப்படையான கூறு அதன் கதை சொல்லல். கதையைத் தொடர்ச்சியான காட்சிகள், உரையாடல் வழி ஒரு முடிவை நோக்கி சாமர்த்தியமாக கதை சொல்வதே நம் வழி வந்த மரபாக இருக்கிறது. அதை கலைத்துப் போட்டு கதையை ஒரு படத்தின் உப காரணியாக்கி, உணர்வுகளை மட்டுமே நிறுவுகிற முயற்சிகள் உலக மொழிகளில் செய்யப்பட்டபோதும், நாம் அந்த விளிம்புகளை யோசிக்கவேயில்லை. அதிலும் ஆண் - பெண் ஈர்ப்பைத் தவிர தமிழ்நாட்டில் வேறு எதுவுமே நிகழவில்லையா?

இந்தக் கேள்விகள் எழுந்த சமயத்தில் வந்தவர்கள்தான் குறும்பட அனுபவத்திலிருந்து வந்த இயக்குநர்கள்.ஹீரோக்களின் இமேஜை அடித்து நொறுக்கி அவர்களை கல்யாண குணங்களிலிருந்து வெளியேற்றினார்கள்.
சமூகத்தின் அவல நிலையை சொல்லித் தீர்ப்பதுதான் குறும்படம் என்ற விஷயம் முன்பிருந்தது. அனைத்தையும் சொல்லி விட முடிகிற குறும்படத்தை இயக்க முடிந்தவர்கள், தமிழ் சினிமாவையும் கையாள முடியும் என நம்பிக்கை கொண்டார்கள். அதனால் வந்தவர்களே குறும்பட இயக்குநர்கள். 
நலன் குமரசாமி, கார்த்திக் சுப்புராஜ். லோகேஷ், அருண்குமார், ராம்குமார், ரவிக்குமார், ரமேஷ், சர்ஜுன் என இன்னும் நீள்கிற குறும்பட இயக்குநர்களிடமிருந்து வித்தியாசமான திரைப்படங்களை, வேறு வடிவத்தில் பார்த்தபோது, ‘ஆஹா’ என்று தமிழ் கூறும் நல்லுலகம் மலர்ந்தது.
இதற்கு முன்னர் இருந்தவர்கள் ‘என்ன நடக்கிறது இங்கே’ என நின்று பார்க்கிற வேடிக்கையும் நடந்தது. மாறி வந்த ஒரு சூழலில் இப்போது சற்றே ஒரு தேக்க நிலை... இடைவெளி... அனுபவக்குறைவா, ஆளுமை குறைவா என்றெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
தயாரிப்பாளரும், சினிமா ஆர்வலருமான தனஞ்செயனிடம் கேட்டால், ‘‘இப்படி கேள்வி எழ ஆரம்பித்து, கொஞ்ச காலமாகிவிட்டது. கார்த்திக் சுப்புராஜ், நலன் குமரசாமியை இதில் சேர்க்கவே முடியாது. அவர்கள் எக்கச்சக்கமாக குறும்படங்களை எடுத்து தேர்ச்சி பெற்றுக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால், ஒரே குறும்படம் எடுத்துவிட்டு சினிமாவிற்கு ஸ்கிரிப்ட் எழுத உட்காரும்போது இங்கே மாட்டுகிறார்கள். ஸ்கிரீன்ப்ளே என்பது ஸ்டெப் பை ஸ்டெப் கொண்டது. அதில் ஒருவிதமான தொடர்ச்சி, நேர்த்தி, ரசிகனைச் சுருட்டி வைத்துக்கொள்கிற தன்மை வேண்டும் என்ற நிலையை இப்போது அக்கறையாக எடுத்துக் கொள்வதில்லை. சமீபத்தில் ‘லட்சுமி’, ‘மா’வில் அதிகமும் பேசப்பட்ட சர்ஜுன் ‘எச்சரிக்கை’, ‘ஐரா’ படங்களை எடுத்தார். ஆனால், பேசப்படவில்லை. குறும்படம் எடுத்து வருவது நல்லதுதான். அதுவே தகுதி கிடையாது. நீங்கள் வைத்திருக்கிற ஸ்கிரிப்ட்டுக்கு அந்தத் தகுதி வேணும். ஒரு சினிமாப் படம் எடுப்பதற்கு முன்னால் சினிமாவில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்பதையும் புரிஞ்சுக்கணும்.
திரைக்கதை... அதுதான் வேண்டும். எட்டு குறும்படங்கள் இணைந்ததுதான் ஒரு படம். 15 நிமிஷம் சுலபம்தான். ஆனால், 60 சீன்ஸை உருவாக்கும்போது அதில் ஒர்க்கவுட் செய்வது முக்கியம் இல்லையா..?’’ என ஆதங்கப்படுகிறார் தனஞ்செயன்.ஆனால், பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் சொல்வது வேறு மாதிரி இருக்கிறது. ‘‘இளைஞர்கள் சிலிர்த்து பெருகி வரணும். புதுசு புதுசா வரணும். பெரிய நடிகர்கள் புது இயக்குநர்களை நம்பிப் போகணும். அதே மாதிரி பெரிய இயக்குநர்களும் புது நடிகர்களை நம்பி வேலை செய்யணும்.
இன்னைக்கும் பழைய படியே படம் எடுத்துக்கிட்டு இருந்தால் எப்படி? நிறைய சேனல், யூடியூப், முகநூல்னு மக்களை பொழுதுபோக்கு பக்கம் பிரிச்சிட்டுப் போயிட்டாங்க. புது இயக்குநர்களிடம் இருக்கிற ஒன்றிரண்டு குறைகளை பெரிதுபடுத்தக்கூடாது. நமக்கு வேண்டியது புது சினிமா. அவ்வளவுதான்...’’ கறாராகச் சொல்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்.
இயக்குநர் லெனின் பாரதி பேசுவது வேறு பார்வை. ‘‘குறும்பட இயக்குநர்கள் வெறும் ஆசையினால் படம் எடுக்க வராமல், தீவிரத்தன்மையோடு, கலையாக சினிமாவை அணுகி வந்தார்களா என்றுதான் பார்க்கவேண்டும். திரைப்பட உள்ளடக்கம் பற்றிய தெளிவான பார்வை, அரசியல் புரிந்துணர்வு, வாழ்க்கைமீதான அப்சர்வேஷன்... இதெல்லாம் சேர்ந்து வந்தால் போதுமானது. உண்மையில் குறும்பட இயக்கம் தீவிரமானது. ஆனால், சினிமா வணிகம் சார்ந்தது. தயாரிப்பாளர் பணம் போடுகிறார். ஷூட்டிங்கின் நெருக்கடிகளைப் புரிந்து கொள்வது, ஒவ்வொரு நிமிஷமும் பணம் என்பதை உணர்வது, தயாரிப்பாளரை அரவணைக்கிற பொறுப்பு என எல்லாமே இருக்கிறது.
குறும்படத்தை நண்பர்களிடம் பணம் வாங்கி எடுத்திருக்கலாம். அதை அவருக்கு திருப்பித் தரவேண்டியதில்லை. ஆனால், சினிமா அவ்விதம் அல்ல. இதை உணர்வதே சிறப்பு...’’ அழுத்தமாகச் சொல்கிறார் லெனின் பாரதி.தமிழ் சினிமாவும் குறைபாடுகளும் சந்திக்கக்கூடாது என்றுதான் நினைப்போம். ஆனால், அது நேரும். கடவுள் சாதாரணமான விளையாட்டுக்காரரா என்ன! இயக்குநர் பேரரசு ஒரே குரலில் சொன்னது இதுதான்.
‘‘ஈசல் மாதிரி பல இயக்குநர்கள் வந்து போய்விட்டார்கள். சினிமாவில் அவர்கள் ஆயுள் கம்மியாகிவிட்டது. 40 வருஷங்களுக்கு முன்னாடி ‘16 வயதினிலே’ வந்தது. வந்து ஒரு வாரத்தில் பாரதிராஜா பெயர் பட்டிதொட்டியெங்கும் போய்ச் சேர்ந்தது. ‘பாரதி கண்ணம்மா’ வந்து சேரன் எல்லோருக்கும் தெரிந்துவிட்டார். அதுமாதிரி ‘மௌன கீதம்’ சக்கைப்போடு போட்டு பாக்யராஜ் பிரபலம்.
‘ஆண்பாவம்’ வந்து பாண்டியராஜன். இப்ப படம் ஹிட்டானால் டைரக்டர் பெயரே தெரியவில்லை. இளம் இயக்குநர்கள் யோசிக்கணும். நான் அடிமட்டம் வரைக்கும் இறங்கிப்போய் பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜ், பா.இரஞ்சித் பெயர்கள் மட்டும்தான் தெரியுது. என்னடான்னு பார்த்தால் ரஜினி படம் பண்ணியிருக்காங்க.
டிவியில் பெண்கள் 300, 400 எபிசோட் விடாமல் உட்கார்ந்து பார்ப்பாங்க. அவங்களைக் கூப்பிட்டு சீரியல் டைரக்டர் பெயர் கேட்டால் தெரியாது. அவ்வளவுதான் சார், டைம்பாஸ்!இப்ப இருக்கிற குறும்பட இயக்குநர்கள் டெக்னிக்கலில் அத்துபடி. நல்லது. ஆனால், அவங்க கதாசிரியர்கிட்ட கதை கேட்கணும். டிஸ்கஷனில் சில இடங்களில் கோர்ட் மாதிரி இருக்கும். ஆர்குமென்ட்ஸ் பாயிண்டுக்கு மேல் பாயிண்ட் குவியும்.
அடுத்த வீட்டு கல்யாணத்திற்கு போறதுக்கும், நம்ம வீட்டு கல்யாணத்துல நிற்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல. அடுத்த வீட்டில சாப்பிட்டு, மொய் எழுதிட்டு, கை குலுக்கிட்டு வந்திடலாம். நம்ம வீட்டில அப்படி இருப்போமா? நம்ம வீட்ல இன்னும் உணர்வு, உணர்ச்சி, உயிர் இருக்கில்லையா! அப்படிப்பட்ட இடங்களை வச்சி நாம் படம் எடுக்கணும். நானெல்லாம் ‘எவண்டா டைரக்டர்’னு கடைசியா கேட்டது ‘சுப்பிரணியபுரம்’ சசிகுமாரைத்தான்.
தம்பிகளா, நீங்க சென்டிமென்ட்டை மறந்திட்டிங்க. அதுதான் ஆதார பலம். ‘விஸ்வாச’த்தில் ஃபைட், பாட்டு எல்லாத்தையும் தூக்கிட்டு நின்னது அப்பா - பொண்ணு சென்டிமென்ட்தான். ‘பாசமலர்’ மாதிரி டைட்டில் முதற்கொண்டு கடைசி வரைக்கும் அழ வைக்க வேண்டாம். ஆனா, சென்டிமென்ட் வேண்டாம்னு சொல்லிடாதீங்க. கூத்தடிச்சி படம் பண்ணலாம். ஆனா, அதுக்கு ஆயுசு கம்மி. அதுல உங்க பெயர் தெரியாமல் போயிடும்… பார்த்துக்கங்க...’’ என எச்சரிக்கிறார் பேரரசு.
இப்படி எல்லாவற்றையும் சேர்த்து வைத்துப் பார்த்தால் நாம் இன்னமும் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. தமிழ் சினிமாவில் மாற்றத்தை உணரும், விரும்பும் அனைவருக்கும் புரிவதுதான் இது. ஏனென்றால் கலையின் கடந்த காலம் விசித்திரமானது... எதிர்காலம் மிக விசித்திரமானது.. சினிமாவோ மிக மிக விசித்திரமானது..!
நா.கதிர்வேலன்
|