ரத்த மகுடம்-59



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘இதை வன்மையாக மறுக்கிறேன்!’’ சீறினார் அனந்தவர்மர். ‘‘சாளுக்கிய மன்னராக நீங்கள் தொடர்ந்து நீடிக்கவும் உங்கள் மீது இந்த அவை சுமத்திய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவும் இப்படியொரு அபாண்டமான பழியை என்மீது சுமத்துகிறீர்கள்...’’ உதடுகள் துடிக்க அனந்தவர்மர் கத்தினார்.
‘‘தகுந்த ஆதாரங்களை குறுநில மன்னர்களும் அமைச்சர் பெருமக்களும் சூழ்ந்திருக்கும் இந்த அவை முன் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன்...’’ நிறுத்திய சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர், சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு தொடர்ந்தார்.

‘‘முதலில் எந்த ஆதாரத்தை வைக்கட்டும்... கரிகாலன் முன்பு சிவகாமி நிகழ்த்திக் கொண்டிருக்கும் நாடகம் குறித்த தகவலா அல்லது...’’
‘‘சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற ஓடி ஒளிந்திருக்கும் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மரின் உதவியை நான் நாடினேன் என்று இப்பொழுது பழி சுமத்தினீர்களே... அதற்கான ஆதாரத்தை முதலில் சமர்ப்பியுங்கள்!’’ அனந்தவர்மர் இடைவெட்டினார்.‘‘இதற்கு இந்த அவை ஒப்புக் கொள்கிறதா..?’’ விக்கிரமாதித்தர் பொதுவாகக் கேட்டார்.

அமர்ந்திருந்தவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தார்கள். ஆனால், அனைவருக்கும் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது. சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரை இந்த அவை விசாரிக்கவில்லை... மாறாக, அவர்தான் இந்த அவையை விசாரித்துக் கொண்டிருக்கிறார்!

‘‘நல்லது... மவுனம் சம்மதம் என்பதால் அனந்தவர்மர் கேட்ட ஆதாரங்களை அவை முன் சமர்ப்பிக்கிறேன்... அதற்கு கொஞ்சம் பழைய வரலாற்றில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்... பொறுமையாகக் கேட்பீர்கள் என நம்புகிறேன்...’’நிதானமாக வாக்கியங்களை உதிர்த்த சாளுக்கிய மன்னர், அவையில் அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிச் சுற்றி நடந்தபடி எல்லோரின் கண்களையும் நேருக்கு நேர் பார்த்தபடி பேசத் தொடங்கினார்...

‘‘தக்காணத்தைச் சேர்ந்த பாதாமி சாளுக்கியர்களாகிய நாம்... பழங்கால சோழ அரசின் எல்லை வரை ஆளும் பல்லவர்கள் மற்றும் தென் பகுதியை ஆளும் பாண்டியர்கள்... இந்த மூன்று அரசுகளும்தான் தக்காணத்தில் இருந்து தென் எல்லை வரை மிகப்பெரிய பேரரசை நிறுவ போர் புரிந்துகொண்டே இருக்கிறோம்.

இப்படியொரு மகத்தான சாம்ராஜ்ஜிய கனவு மூன்று அரசுகளிடமும் இருக்கிறது. ஏனெனில் இதற்கு முன் நம் பகுதியில் இப்படி எந்த அரசும் தனித்து பேரரசானதில்லை. ஆக, வரலாற்றில் யார் முதன்முதலில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை தென்னகத்தில் ஸ்தாபிக்கப் போகிறார்கள் என்ற ஆவல் மக்களை விட வடபகுதி அரசுகளிடம் அதிகம் நிலவுகிறது. காரணம், வணிகச் சந்தை... வணிக செல்வங்கள்... சுங்க வரிகள்.

தென் பகுதியைச் சேர்ந்த அனைத்து துறைமுகங்களும் இந்த மூன்று அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. யவனர்களும் பாரசீகர்களும் சீனர்களும் இந்த துறைமுகங்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அனைத்து நாட்டு வணிகர்களையும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இந்த மூன்று அரசுகளும் வணிகம் செய்ய அனுமதிக்கின்றன.

ஆனால், சுங்க வரியை தனித்தனியாக அவர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது. பாண்டியர்களின் துறைமுகத்தில் அவர்களுக்கு சுங்கம் செலுத்திவிட்டு மல்லை கடற்கரைக்கு வரும்போது பல்லவர்களுக்கு மீண்டும் வரி செலுத்த வேண்டியிருக்கிறது. போலவே தென்னக துறைமுகத்தில் இருந்து நம் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகத்துக்கு நாவாய்கள் வருகையில் சாளுக்கியர்களான நமக்கு சுங்கம் செலுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.

எனவே, எல்லா துறைமுகங்களும் ஓர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் ஒரே முறையில் வரி செலுத்திவிட்டு மற்ற துறைமுகங்களில் சுதந்திரமாக பயணிக்க முடியுமே என நினைக்கிறார்கள்.இதன் பொருட்டே மூன்று அரசுகளின் தூதுக்குழுக்களையும் யவனர்களும் பாரசீகர்களும் அராபியர்களும் சந்திக்கிறார்கள்... தங்கள் நாட்டுக்கு வரவேற்று மரியாதை செலுத்துகிறார்கள்.

என் தந்தையும் சாளுக்கியர்களில் மாமன்னருமான இரண்டாம் புலிகேசி காலத்தில் பாரசீகத்துக்குச் சென்ற சாளுக்கிய தூதுக்குழுவும் இந்த வகையானதுதான்.இதை தவறு என்று சொல்ல முடியாது. யவனர்கள், பாரசீகர்கள், அராபியர்கள், சீனர்கள் பார்வையில் இது சரிதான்.
போலவே மற்ற இரு அரசுகளையும் கைப்பற்ற வேண்டும் என சாளுக்கியர்களும், பல்லவர்களும், பாண்டியர்களும் தனித்தனியே கருதுவதும் திட்டமிடுவதும், அதற்கான ஏற்பாடுகளில் இறங்குவதும் இயல்புதான்.  

ஏனெனில் மின்னலைப் போல் செல்வங்கள் அரசு விட்டு அரசு கடக்கின்றன. எத்தனை கஜானாக்களை உருவாக்கினாலும் அத்தனையும் நிரம்பி வழியும் அளவுக்கு செல்வங்கள் மூன்று அரசுகளிடமும் குவிகின்றன. அதனாலேயே இன்னும் இன்னும் என்ற ஏக்கம் மூவருக்குமே கிளர்ந்து எழுகிறது.
அதேநேரம் மூவராலுமே மற்ற இருவரையும் வெற்றி கொள்ள முடியாத அளவுக்கு இயற்கையாகவே பல தடைகள் நிலவுகின்றன.

தக்காணத்தை ஆளும் சாளுக்கியர்களாகிய நமக்கு வடக்கில் வட அரசர்களின் தொல்லை... தெற்கிலோ பல்லவர்கள். இந்தப் பல்லவர்களை ஜெயித்தால்தான் பாண்டியர்களை நம்மால் வீழ்த்த முடியும். பாண்டிய நாட்டுப் பக்கம் நாம் செல்லும்பொழுது வடக்கில் இருக்கும் அரசுகள் நம் சாளுக்கிய தேசத்தின் மீது போர் தொடுக்காமல் இருக்க வேண்டும்!

பல்லவர்களைப் பொறுத்தவரை வடக்கில் நாம்... தெற்கில் பாண்டியர்கள்! நடுவில் அவர்கள் சிக்கியிருப்பதால் இரு எல்லைகளிலும் தங்கள் படையை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம்!பாண்டியர்களின் நிலையோ வேறு. தெற்கில் அவர்களுக்கு இருப்பது கடல். வடக்கிலோ பல்லவர்கள்... அதன்பிறகே தக்காணத்தில் நாம்.ஆக, மூவருமே மற்ற இருவரை வெற்றி கொள்ள நினைத்தால் அவ்விருவரும் தங்களுக்குள் தற்காலிகமாக நண்பர்களாக மாறி மூன்றாமவரை நோக்கிப் பாய வாய்ப்பிருக்கிறது.

இப்படியொரு சிக்கலில் மூன்று அரசுகளுமே சிக்கியிருக்கிறது. எனவே, எவ்வித சேதாரமும் இன்றி மூவருமே காய்களை நகர்த்தி வருகிறோம்... மற்ற இரு அரசுகளையும் கைப்பற்ற திட்டமிடுகிறோம்... ஆனால், இந்த அரசியல் மோதல்கள் பண்பாட்டு வளர்ச்சிக்குத் தடையாக நிற்கவில்லை; நிற்கவும் மூவரும் அனுமதிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

சமணம், பவுத்தம் ஆகிய மதங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு பன்முக வளர்ச்சியுடன் இந்து மதம் இப்பொழுது தக்காணம் முதல் தென் எல்லை வரை பரவியிருக்கிறது. பக்தி மரபுகள் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஊடுருவிவிட்டன. இதனால் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக் கலை... என சகல கவின் கலைகளும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றன.

இவ்வளவும் இந்த அவையில் அமர்ந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் தெரியும்... அறிந்ததையே மீண்டும் நினைவுபடுத்தியதற்குக் காரணம் அனந்தவர்மரின் செய்கைதான்...பொறுங்கள்... இன்னமும் நான் முடிக்கவில்லை... ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன்... பிறகு நீங்கள் உங்கள் தரப்பை சொல்லுங்கள்...’’

இடையில் பேச முற்பட்ட அனந்தவர்மரை அடக்கிவிட்டு தன் சிம்மாசனத்தில் அமர்ந்தார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.
‘‘பாதாமி சாளுக்கியர்கள் எனப்படும் நமது அரசை நிறுவியவர் முதலாம் புலிகேசி. புலிகேசன் என்றால் அரியேறு என்று அர்த்தம். அவர் பாதாமிக்கு அருகில் இருந்த குன்றை வலிமை மிக்க அரணாக மாற்றினார். அதன் பின் அவர் அசுவமேத யாகம் செய்து தன் சுயேட்சையை எட்டுத் திக்கிலும் தெரியப்படுத்தினார். அவர் அமைத்த கோட்டை மலப்பிரபா நதியில் இருந்து பல காத தூரங்களுக்கு எதிரிகளின் தாக்குதலைச் சமாளிப்பதற்கு ஏற்ற உயர்ந்த இடத்தில் அமைந்திருந்தது.

அதற்குக் கிழக்கில் இருக்கும் குன்றுகளில் மகாகூடமும் ஒன்று. அதே திசையில் இன்னும் பல காத தொலைவில் மலப்பிரபா நதி கரையில் பட்டடக்கல் இருக்கிறது. அதே நதியின் மறு கரையில் அய்கோளே... இந்த இடங்களில் எல்லாம் சாளுக்கியர்களின் கட்டட சிற்பக் கலை சிறப்பை வருங்காலத் தலைமுறையும் கண்டு களிக்கும்.

இந்த முதலாம் புலிகேசிக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவரது மகன் முதலாம் கீர்த்திவர்மன், பனவாசிக் கடம்பர்களோடும், கொங்கணத்து மவுரியர்களோடும், நள மரபினரோடும் போர் செய்து ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார்.கொங்கண வெற்றியால் அங்கிருந்த முக்கிய துறைமுகமான
ரேவதி தீவு (இன்றைய கோவா), நம் எல்லைக்குள் வந்தது.

கீர்த்திவர்மர் திடீரென காலமானபோது என் தந்தை இரண்டாம் புலிகேசிக்கு இள வயது. எனவே கீர்த்திவர்மரின் தம்பியான மங்களேசன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். காண்டேஷ், மாளவம் பகுதிகளில் ஆட்சி செய்து வந்த காலசூரி வம்ச அரசரான புத்தராஜன் மீது மங்களேசன் படையெடுத்துச் சென்றார். ஏராளமான கொள்ளைப் பொருட்கள் கிடைத்ததே தவிர நாட்டின் எல்லை விரிவுபடுத்தப்பட்டது என்று சொல்ல முடியாது.

இதே காலத்தில் ரேவதித் தீவில் கலகம் மூள ஆரம்பித்தது. அதை அடக்கி மீண்டும் சாளுக்கியர்கள் அங்கு கால் பதிக்க மங்களேசன் வழிவகுத்தார்.
இதற்குள் என் தந்தை இரண்டாம் புலிகேசி வளர்ந்து ஆளானார். நியாயமாக சாளுக்கிய மணிமுடியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு மங்களேசன் அகன்றிருக்க வேண்டும். ஆனால், முடிந்த வரை காலத்தைக் கடத்தி தன் மகன் அரியணை ஏற வழிவகை செய்ய ஆரம்பித்தார்.

இதை அறிந்த என் தந்தை பாதாமியில், தான் இருந்தால் ஒருவேளை தன் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று நினைத்து இரவோடு இரவாக யாருக்கும் எந்த சந்தேகமும் எழாதபடி நாட்டை விட்டு வெளியேறினார்.நண்பர்களின் துணையோடு படை திரட்டி மங்களேசரோடு போரிட்டு அவரை வீழ்த்தி சாளுக்கிய மன்னரானார்...

கவனிக்க... தன் உரிமையை நிலைநாட்ட என் தந்தை தன் நண்பர்களின் உதவியைத்தான் நாடினார்... பகைவர்களின் துணையை நாடவில்லை... அதாவது...’’ எழுந்த விக்கிரமாதித்தர் நேராக அனந்தவர்மரின் இருக்கைக்கு அருகில் சென்று அவர் முகத்தை உற்றுப் பார்த்தார். ‘‘உங்களைப் போல் பல்லவர்களின் உதவியை நம் தந்தை நாடவில்லை!’’‘‘பொய்...’’ அனந்தவர்மர் தன்னை மீறி கத்தினார்.

‘‘உண்மை...’’ குரலை உயர்த்தாமல் அதேநேரம் அழுத்தமாகச் சொன்ன விக்கிரமாதித்தர் சட்டென தன் வாளை உருவி அனந்தவர்மரின் கழுத்தில்
வைத்தார்! ‘‘ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் வரை வாயே திறக்கக் கூடாது! கண்டிப்பாக உங்கள் தரப்பை எடுத்துச் சொல்ல வாய்ப்பு வழங்கப்படும்! அதுவரை சுவாசிக்க மட்டுமே செய்ய வேண்டும்!’’

கர்ஜித்த விக்கிரமாதித்தர், என்ன ஏது என்று மற்றவர்கள் சுதாரிப்பதற்குள் அங்கிருந்த திரைச்சீலையை இழுத்தார்.அது சிவகாமி நாட்டியமாடுவது போல் ஓவியம் தீட்டப்பட்ட திரைச்சீலை.இழுத்த இழுப்பில் அது அவர் கையோடு வந்தது.அந்த இடத்தில் கம்பீரமாக ஒருவர் அமர்ந்திருந்தார்.அவர் மாமன்னர் இரண்டாம் புலிகேசி!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்