ஒட்டகப் பெண்!



பதினான்கு மாதங்களுக்கு முன் மங்கோலியாவின் உலாங்கோம் பகுதியிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார் பைகல்மா நோர்ஜ்மா. சுமார் 12 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து கடந்த வாரம் லண்டனை வந்தடைந்திருக்கிறார். மங்கோலியாவிலிருந்து லண்டனுக்கு வர இவ்வளவு நேரம் ஆகுமா?

ஆகும்! ஏனெனில் பைகல்மா பயணித்தது விமானத்தில் அல்ல; ஒட்டகத்தில்!ஆம்; உலகிலேயே ஒட்டகத்தில் அதிக தூரம் பயணம் செய்த சாதனையைத் தன்வசமாக்கிவிட்டார் இந்த ஒட்டகப் பெண். ‘‘எட்டு வருடங்களுக்கு முன்பு டிம் கோப் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர் குதிரையிலேயே மங்கோலியாவிலிருந்து ஹங்கேரி வரை பயணம் செய்திருக்கிறார்.

இதே மாதிரி நானும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், குதிரையில் இல்லாமல் ஒட்டகத்தில் பயணிக்க விரும்பினேன்...’’ என்கிற பைகல்மாதான் ஒட்டகத்தில் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த முதல் மங்கோலிய பெண்.

இந்த சாகசப் பயணத்தை ஏழு பேருடன் ஆரம்பித்திருக்கிறார் பைகல்மா. ஆனால், குளிரின் காரணமாக மற்ற ஆறு பேரும் இடையிலேயே வீட்டுக்குக் கிளம்பிவிட்டனர்.  சில இரவுகளில் மைனஸ் 58 டிகிரி குளிரில் உறங்க வேண்டிய நிலை. குளிர் அதிகமாகும்போது ஒட்டகங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் அவை குளிரில் உறைந்து இறந்துவிடும்.

அதனால் பனி அதிகமாகி நிலத்தில் பனிக்கட்டிகள் தேங்கும்போது அதை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறார். ‘‘உண்மையில்  ஒட்டகங்களுக்குத்தான் இந்தப் பயணம் பெரும் சவாலாக இருந்திருக்கும்...’’ என்று பெருந்தன்மையுடன் சொல்கிறார் பைகல்மா.

மங்கோலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் இவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தந்திருக்கிறது. இருந்தாலும் ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் அனுமதி வேண்டி மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருந்திருக்கிறார். அடுத்து கிழக்கு ஐரோப்பா முழுக்க ஒட்டகத்தில் பயணிக்கப்போகிறார் பைகல்மா.

த.சக்திவேல்