தலபுராணம் - மெட்ராஸ் பாஷை-2



இன்றும் சில சென்னைவாசிகள் பணத்தை ‘டப்பு’, ‘துட்டு’ என்ற வார்த்தைகளில் குறிப்பிடுவதைப் பார்த்திருப்போம். ‘டப்பு லேது’, ‘துட்டு இருக்கா’ போன்ற சொல்லாடல்களின் மூலமும், ‘காசு, துட்டு, பணம், மணி மணி…’, ‘துட்டு… துட்டு…’ போன்ற பாடல்கள் வழியாகவும் இதை அறியலாம்.

டப்பும், துட்டும் தெலுங்குச் சொற்கள். இதன் புழக்கம் 18ம் நூற்றாண்டில் இருந்தே இருக்கிறது. ஏனெனில், இவை பிரிட்டிஷ் காலத்தில் மக்களிடம் புழங்கிய நாணயங்களாகும். ஒரு டப்பு, அரை டப்பு, துட்டு ஆகியவை இன்று அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருட்களாக உள்ளன.
‘மவனே டாராயிடுவே…’ என வாக்குவாதத்தின்போது அடிக்கடி சொல்வார்கள். அதாவது கிழிச்சிடுவேன் என்ற பொருளில்!

இந்த ‘டாராயிடுவே’ என்பது ஆங்கிலச் சொல்லான Tearல் இருந்து வந்துள்ளது. இங்கு கண்ணீர் என்ற பொருளில் இல்லாமல் டெயார் என்ற உச்சரிப்பில், கிழித்து என்ற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. இந்த டெயாரே, ‘டார்’ ஆக மாறிவிட்டது. இதைப்போலவே பயத்தை, ‘டேர் ஆகிட்டேன் மச்சான்’ என்பார்கள். இந்த டேர் இந்தியில் இருந்து வந்த வார்த்தை. அதாவது பயம் என்பதே இதன் பொருள்.

‘கப்பு’ம், ‘கலீஜு’ம் அசுத்தத்தைக் குறிக்கும் சொற்கள். ‘ஒரே கப்பு அடிக்குது’ என்பார்கள். நடிகர் விவேக் கூட ‘ரன்’ படத்தில், ‘அம்மா… அப்பு கப்பு தாங்கல’ என்பார். இந்த கப்பு தெலுங்கு வார்த்தை. துர்நாற்றம் என்பது இதன் பொருள்.போலவே, ‘கலீஜு’ என்ற வார்த்தை கன்னடச் சொல். இதுவும் துர்நாற்றம் எனப் பொருள்படுகிறது. இப்படி ஒன்றல்ல… இரண்டல்ல… நிறைய இருக்கின்றன. குறிப்பாக, அடித்தட்டு மக்களே அதிகமாக இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்றும், வடசென்னை ஏரியாவில் வெற்றி பெற்றதை, ‘கெலிச்சான்’ என்றோ, ‘கெலிச்சிட்டான்’ என்றோ குறிப்பிடுவார்கள். இந்தச் சொல்லைத் தெலுங்கிலிருந்து உள்வாங்கியிருக்கின்றனர். தெலுங்கில் வெற்றியை கெலுபு (gelupu) என்பர். இதுவே, கெலிச்சான் என இங்கே மருவி உள்ளது.
‘‘இப்படி பிற மொழிகளை உள்வாங்கித் தன்வயப்படுத்தும் திறன் சென்னை மொழியின் மிகச் சிறப்பான அம்சங்களில் ஒன்று...’’ என்கிறார் ‘சென்னையும் அதன் தமிழும்’ நூலின் கட்டுரையில் எழுத்தாளர் அரவிந்தன்.

‘‘‘கஸ்மாலம்’ என்பதன் வேர்ச்சொல் வடமொழியில் உள்ள கஸ்மலம் என்ற சொல். இதன் பொருள் அழுக்கு. இழிவான காரியங்களைச் செய்பவர்களைச் சென்னைவாசிகள் கஸ்மாலம் என்பார்கள்.  அதுபோலவே, ஜபூர் அல்லது ஜபுரு என்று வழங்கப்படும் சொல்லின் வேர், ‘ஜபுர்’ எனப்படும் உருதுச் சொல்லாகும். இதன் பொருள் ஜால வித்தை என்பது. இது கிட்டத்தட்ட இதே பொருளின் அங்கத வடிவில் ‘ஜபுரு காட்டாதே’ என சென்னைத் தமிழில் வழங்கிவருகிறது...’’ என்கிறார் அரவிந்தன்.

‘ஜகா வாங்கிட்டான்’ என்பார்கள். இந்த ஜகா வடமொழிச் சொல் என்கிறார் எழுத்தாளர் இந்திரன். ‘‘ஜகா என்றால் விழிப்பு. கடைசி ேநரத்தில் விழித்துக் கொண்டு விலகிவிட்டான் என்பதைக் குறிக்கவே ‘ஜகா வாங்கிட்டான்’ என்கின்றனர்.

இதேபோல, நாம் பல நேரங்களில் ‘அவன் ஜகஜ்ஜாலக் கில்லாடிப்பா’ என்போம். ஜகா என்பது விழிப்பு. ஜாலம் என்றால் வித்தை. கில்லாடி என்ற வார்த்தை கிலாடி எனும் இந்திச் சொல்லில் இருந்து வந்தது. கிலாடி என்றால் வீரர், திறமையானவர் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.

அதாவது, விழிப்பு + வித்தை + கில்லாடி. இப்படி தனித்தனியான வடமொழி வார்த்தைகளைக் கொண்டு தமிழில் சொற்களை உருவாக்கி உள்ளனர். அடுத்து, ‘ஆஸ்தி’ என்பதன் எதிர்ப்பதமே ‘நாஸ்தி’. இதுவும் வடமொழிச் சொல்தான். ஆஸ்தி என்றால் சொத்து. நாஸ்தி என்றால் இல்லாமல் போவது. அதனால்தான் சென்னைவாசிகள் ‘நாஸ்தி பண்ணிடுவேன்’ என்பார்கள். ஒன்றும் இல்லாமல் ஆக்கிடுவேன் என்பதே இதன்பொருள்.

அப்புறம், சிலர் சரியான ‘பாடாவதி பார்ட்டி’ என்பார்கள். இது படா + அவதி என்பதாகும். படா என்றால் இந்தியில் பெரிய என்று பொருள். அவதி என்பது தொல்லை. பெரிய தொல்லை பிடிச்சவன்ப்பா என்ற பொருளில் சொல்லப்படுகிறது...’’ என்கிறார் இந்திரன்.

சளி பிடிச்சிருக்கு என்பதை சென்னையில் ‘ஜல்பு புட்சிக்கிச்சு’ என்பார்கள். இது, ஜலதோஷம் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து வந்ததாகச் சொல்கின்றனர். இதேபோல், ஜல்சா, மஜா போன்ற வார்த்தைகள் உருதில் இருந்து வந்தவை. மகிழ்ச்சி,  கேளிக்கை போன்ற அர்த்தங்களில் சொல்லப்படுகின்றன. ‘அவன் சரியான கேடி’ என்பார்கள். இந்தக் கேடி ‘Known Dacoit’ என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கமே! அதாவது ஊரறிந்த திருடன் என்பதாகும். இந்த டகாய்ட் (Dacoit) எனும் சொல்லில் இருந்தே ‘டகால்டி’வந்திருக்கலாம்.

‘மவனே இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்டக் காட்டாதே’ என நடிகர் கவுண்டமணி அடிக்கடி இந்தச் சொல்லை படங்களில் பயன்
படுத்தியிருப்பார். ‘டோமர்’, ‘கேப்மாரி’ போன்றவை வசவுச் சொற்களாக சென்னைவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதிலும் ‘டோமர்’ அனிச்சைச் செயலாக அடிக்கடி பேச்சின் ஊடாக வந்து விழும்.

டோமர், கேப்மாரி என்பவை சாதிப் பெயர்கள். அன்றைய பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த குற்றப் பரம்பரைச் சட்டத்தில் இணைக்கப்பட்ட சாதியினர். திருட்டு, கொள்ளைகளைத் தடுக்க சில நாடோடி இன மக்களை இச்சட்டத்திற்குள் கொண்டு வந்து கண்காணித்தது பிரிட்டிஷ் அரசு. சுதந்திரத்திற்குப் பிறகே இந்தச் சட்டம் நீக்கப்பட்டது.  

ஆனாலும், அந்தப் பட்டியலில் இருந்த மக்களை இன்றும் குற்றம் செய்பவர்களாகக் கருதும் போக்கு நீடித்து வருகிறது. இதை வைத்தே திருட்டுத்தனம் பண்ணுகிறவன் என்ற பொருளில் டோமர், கேப்மாரி போன்றவற்றை வசவுச் சொற்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
மெட்ராஸ் மியூசியத்தின் கண்காணிப்பாளராக இருந்த, எட்கர் தர்ஸ்டன் தொகுத்த ‘Castes and Tribes of Southern India’ நூலில் இந்தச் சாதியினரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதேபோலவே, இன்னொரு வசவுச் சொல், ‘பாடு’. இது ஆங்கிலச் சொல்லாகும். அடுத்து, ‘நிஜார் கழண்டுரும்’ எனக் கோபத்தில் சொல்வார்கள். இந்த நிஜார் என்பது knickers என்பதன் திரிபு என்கின்றனர். நிக்கர்ஸ் என்றால் காற்சாட்டை! ‘பொறம்போக்கு’ என்பது பெம்புரோக் என்ற சொல்லில் இருந்து வந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இதற்குப் பின் ஒரு வரலாறு உள்ளதாக ‘சென்னையும், அதன் தமிழும்’ நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் அரவிந்தன்.
‘‘1800களில் இங்கிலாந்தில் இருந்து பலர் தங்கள் நிலங்களை விட்டுவிட்டு ஆஸ்திரேலியாவிற்குச் சென்றுவிட்டனர். லார்டு பெம்புரோக் என்பவர்,
நிலங்களுக்கேற்ற வரி வசூல் ஆகாததை விசாரித்து ஆளில்லா நிலங்களை அரசு நிலமாக்க, பெம்புரோக் எனும் சட்டத்தை இயற்றினார்.

1820களில் மெட்ராஸ் மாகாண கவர்னராக இருந்த மன்றோ, ரயத்வாரி சட்டம் மூலம் மேய்ச்சல் நிலம், காடு ஆகிய இடங்களை பெம்புரோக் சட்டத்தின் அடிப்படையில் அரசுடைமை ஆக்கினார். இப்படியான அரசு இடங்களில் குடியேறியவர்களை ‘பெம்புரோக்’ என அழைத்தனர். பின் அது மருவி, புறம்போக்கு என்று ஆகி, தகுதியில்லாத, கேட்பதற்கு ஆளில்லாதவர்களைத் திட்டும் வார்த்தையாக புறம்போக்கு ஆகிவிட்டதெனச் சொல்லப்
படுகிறது...’’ என்கிறார் அவர்.

அடுத்து, ‘ரேஷன்ல கிருஷ்ணாயில் ஊத்துறானா’ எனச் சிலர் கேட்பதை பார்த்திருப்போம். சென்னைக்குப் புதிதாய் வருபவர்கள் ஏதோ ஒருவித எண்ெணய் என்றே நினைப்பார்கள். ஆனால், மண்ணெண்ணெய்தான் இங்கே கிருஷ்ணாயில். கெரசின் ஆயில் என்பது திரிந்து கிருஷ்ணாயில் ஆனது.
‘நாஸ்தா துண்ட்டியா’ என்பார்கள். உருது மொழியில் நாஸ்தா என்றால் காலை உணவு.

‘டக்கரு’ என்கிற வார்த்தை டக்கரி என்ற தெலுங்குச் சொல்லில் இருந்து மருவி உள்ளது. அதாவது, கலைநயமிக்க, அழகான எனப் பொருள்படும். அதனாேலயே, ‘டக்கர் பிகர் மாமு’ என்கின்றனர். கம்மனாட்டி, கம்னு கிட, லார்டு லபக்தாஸ், கய்தே (கழுதை), கெய்வி (கிழவி), மாமூல், மங்காத்தா, மச்சி, மாஞ்சா, மஞ்ச சோறு, மட்டை, ஓசி, பீட்டர், சாமான், சாவுகிராக்கி, சொக்கா, சப்பை, சாமி படம், செட் அப்பு, ரவுசு, உதாரு, உஷாரு, மாஸூ, மொக்கை, மீட்டரு, மூஞ்சி, முனிம்மா, மெர்சல், பொட்டலம், பொருள், பிஸ்தா, பிலிம் காட்டுறது, பருப்பு, பீலிங்கு, பிளேடு, தமாசு, வூடு கட்டறது, லூஸ்ல விடு, இஸ்கூலு, இங்கிலிபீசு... என எக்கச்சக்கமான வார்த்தைகள் சென்னைக்குள் புழங்குகின்றன.

தவிர, பொய் பேசுகிற பெண்களை கதை வுடுறா, ரீல் வுடுறா என்றும், காலியான இடங்களை ஜிலோனு இருக்குது என்றும், ஊர் சுற்றும் பசங்களை பொறுக்கிக்கினு கெடக்குது என்றும், பெண் வயசுக்கு வந்துவிட்டால் புட்டு சுத்தப் போறோம் என்றும், கஷ்டப்படுற குடும்பத்தைக் கஞ்சிக்கு செத்ததுங்க என்றும், டிராபிக் ஜாமை வண்டி முட்டிக்கிட்டு நிக்குது என்றும் குறிப்பிடுகின்றனர்.

இன்று, இந்த வார்த்தைகளில் சில குறைந்திருக்கலாம் அல்லது மறைந்திருக்கலாம். ஆனால், வேறு பல வார்த்தைகள் வந்துகொண்டே இருக்கின்றன. உதாரணத்திற்கு வேற லெவல், மாஸ், கெத்து போன்றவற்றைச் சொல்லலாம்.காசிமேடு, ராயபுரம் ஏரியாக்களில் மூஞ்சி என்றால் பணத்தைக் குறிக்கும் வார்த்தையாம். வாங்கிய பணத்தைக் கேட்க, ‘முதல்ல உன் மூஞ்சியை கீழ வச்சிட்டு பேசு’ என்கின்றனர்.

வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை பகுதிகளில் சிக்கல் என்பதை சிக்கோம் என்கின்றனர். பிரச்னை மாமு… போவாதே என்பதை சிக்கோம் எனச் சுருக்குகின்றனர்.இன்னொரு இடத்தில் ஒரு மங்கன் வந்து மாட்டிக்கிட்டான் என்கின்றனர். மங்கன் என்பது விவரமில்லாத பையனைக் குறிக்கிறதாம்.

இப்போது, ‘ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா, தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுடா சாலுமா…’, ‘டங்காமாரி...’ போன்ற பாடல்கள் செம ஹிட் அடித்தன. இப்படியாக மெட்ராஸ் பாஷை இந்த கானா பாடல்களின் வழியே எங்கும் ஒலித்து வருகின்றன.

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்

ராஜா