கவிதை வனம்



குழந்தைகள் விருந்து

சல்லிக்கற்களை அடுப்பாக்கி
உள்ளங்கை அளவுப் பானையில்
உலை ஊத்தி
மணல் சலித்து சாதம் பொங்கி
வேம்பின் இலையில் தரை பெருக்கி
கொய்யா இலையில் பந்தி வைத்து
கொட்டாங்குச்சியில் நீர் ஊற்றி
இலை மடிக்கும் வேளையில்
இருங்க இன்னொரு முறை
சாப்பாடு கண்டிப்பா வைச்சிக்கிடணும்
எனும் குழந்தைகள் விருந்தில்
நிறைகிறது மனம்

- ந.நித்தியா

கேள்வி

அந்த அசைவ உணவகத்தின்
இருண்ட மூலையொன்றில்
எந்த நேரமும் வெங்காயம்
உரித்துக்கொண்டிருக்கும்
தோல் சுருங்கிய கிழவியின்
கண்களில் ததும்பி நிற்கும்
கண்ணீருக்குக் காரணம்
வெங்காயம் மட்டுமா?

- சுப்ரா