அழகுப்புயல் ஹன்ஷிகாவின் கன்னங்களில் ஏகத்துக்கு சிவப்பு ஏறியிருந்ததைச் சொன்னால் ஏதும் விபரீதக் கற்பனைகள் கொள்ளத் தேவையில்லை. எல்லாம் வெற்றிக் களிப்புதான். அறிமுகமாவதற்கு முன்னரே கைக்கொள்ளாத முக்கியத் தமிழ்ப்படங்களில் நாயகி ஆகிவிட்ட இந்த சிந்தி மொழி சின்ட்ரெல்லா, எடுத்து வைக்கும் முதலடியே முத்தான அடியாக அமைந்தது சன் பிக்சர்ஸின் ‘மாப்பிள்ளை’ படத்தில். படம் பெற்ற அதிரிபுதிரியான வெற்றிதான் ஹன்ஸின் கன்னங்களில் ஆப்பிளைக் காணவைத்தது.
‘‘
ஆனாலும் கடந்த ஏழாம் தேதி நைட்... அடுத்த நாளை நினைச்சு கொஞ்சம் நெர்வஸாதான் இருந்தேன் & ‘மாப்பிள்ளை’ ரிலீஸை நினைச்சுதான். ‘என்ன ஆகுமோ... என்னைத் தமிழ்ல எப்படி ஏத்துக்குவாங்களோ?’ன்னு அத்தனை பதட்டம்... ஆனா எட்டாம் தேதி இரவு, பறக்கிறதுக்கு றெக்கையில்லாத குறைதான்..!’’ என்றபடி வளர்ந்த குழந்தையாகச் சிரிக்கிறார் ஹன்ஸ். சன் பிக்சர்ஸ் மூலம் அறிமுகமானதிலும் அவருக்கு அத்தனை சந்தோஷம்.
‘‘இந்தி, தெலுங்குன்னு நடிச்சிருந்தாலும் தமிழ்ல நடிக்கிறதை தவமா நினைச்சிருந்தேன். அதனால இங்கே ஒரு நல்ல ஓபனிங் இருக்கணுமேன்னு தவிப்போட இருந்த நிலைமையில, அது சன் பிக்சர்ஸோட ‘மாப்பிள்ளை’ மூலமா அமைஞ்சதில அத்தனைக் கவலையும் பறந்துபோச்சு. ஏன்னா, நாம யார்னு வெளியே தெரிய நல்ல அறிமுகம் வேணும். இந்த ‘மாப்பிள்ளை’யும் சரி, அடுத்து வர்ற ‘எங்கேயும் காதலு’ம் சரி... சன் பிக்சர்ஸோட படங்களாவே அமைஞ்சு என் சந்தோஷத்தை ரெண்டு மடங்காக்கிடுச்சு. நான் அதிர்ஷ்டக்காரிதான். இதுக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் என்னை நல்லவிதமா ஏத்துப்பாங்கன்னு முழுசா நம்பறேன்...’’ என்றவர் தன் முதல் நாயகன் தனுஷ் பற்றியும் இயக்குநர் சுராஜ் பற்றியும் மனம் திறந்தார்.
‘‘கூட நடிக்கிற ஆர்ட்டிஸ்ட் மேட்ச் ஆகலைன்னா, மொத்த படமுமே ஏனோ தானோன்னுதான் வரும். ஆனா தனுஷ் போல ஒரு கோ ஸ்டார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். எப்போதும் நல்ல வார்த்தைகளே பேசற நம்பிக்கையான நடிகர். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ரகம். அதில தனுஷ் இறங்கி வந்து பழகற இனிமையானவர். நடிக்கும்போது நிறைய உதவிகள் செய்தார். தமிழ்ல என்னோட மறக்க முடியாத முதல் ஹீரோ.
அதே போல சுராஜ் போல ஒரு கூலான டைரக்டரைப் பார்க்க முடியாது. என்ன வேணும்னு அவருக்குத் தெளிவா தெரிஞ்சிருக்கிறதால ஈஸியா வேலை வாங்கிட முடியுது. பெரிய படங்களை, அதுவும் கமர்ஷியல் மிக்ஸ் சரியா கலந்து எடுக்கணும்னா அதுக்கு சரியான திட்டங்கள் வேணும். அதுல திட்டமிட்டு வேலை பாக்கிறதுலயும் சரி... திட்டமிட்டு வேலை வாங்கறதிலயும் சரி... சுராஜ் மகா கெட்டிக்காரர். மாஸுக்குப் பிடிக்கிற அளவில கம்ப்ளீட் பேக்கேஜ் கொடுத்திருக்கார்...’’
‘‘சரி... நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்க. முதல் படம் ரிலீசாகறதுக்கு முந்தியே வரிசையா படங்கள்... அதுவும் பெரிய ஹீரோக்களோட உங்களுக்கு புக்காகிட்டே இருக்கு. என்ன காரணம்..?’’
‘‘உண்மையை வாங்க எதுக்கு இத்தனை பில்ட் அப் கொடுக்கணும்..? ஈட் சினிமா, ஸ்லீப் சினிமா... என்ஜாய் சினிமாங்கிற அளவில என்னோட வாழ்க்கையா ஆயிடுச்சு சினிமா. அதுதவிர, எனக்குன்னு பொழுதுபோக்குகள் கூட இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா..? வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நான் நடிக்க வந்தேன்னா அது நடிப்பு மேல இருக்கிற பேஷனாலதான். அதனால எதையும் எதிர்பார்க்காம, என் வயசுக்கும் அதிகமா கடுமையா உழைக்கிறேன். ஒரு படத்தில நான் சரியா இல்லைன்னு செய்திகள் வெளியே வந்தா அடுத்த படம் கிடைக்குமா..? ஸோ... என்னோட கடின உழைப்புதான் என் கமிட்மென்ட்களை நிர்ணயிக்குது. அதுதான் வெற்றிக்கும் காரணம்..!’’
கொஞ்சம் சீரியஸாகப் பேசிய அந்த பட்டர்ஃபுரூட் முகத்தில் ஒரு புன்னகையைப் பார்த்துவிட நினைத்து, ‘‘உங்க ப்ளஸ் பாயின்ட் புன்னகைதானே..?’ என்று ஒரு பிட்டைப் போட்டதும் அது நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது.
‘‘உங்க காம்ப்ளிமென்ட்டுக்கு தேங்க்ஸ்..!’’ என்றபடி ஒரு வெதுவெதுப்பான புன்னகையைக் காட்டி நகர்ந்தார். அடுத்த சந்திப்பு வரை இது போதும்..!
வேணுஜி