சனிப் பெயர்ச்சி பொதுப் பலன்கள்



சனிப் பெயர்ச்சி பொதுப் பலன்கள் (19.12.2017 முதல் 28.03.2020 வரை)

நவகிரகங்களில் கர்ம கிரகம், தொழில் கிரகம், வாழ்வில் அனைத்து விதமான நல்ல விஷயங்களையும் அளிப்பவர், சூரியனின் மகனான மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஆவார். சனிபகவான் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்துவித கர்மாக்களுக்கும் குருவாவார். நம் வாழ்வில் முக்கியமான விஷயங்களான ஆயுள், தொழில், கர்மா இம்மூன்றுக்கும் அதிபதி, அதாவது காரகன் சனியாவார்.

ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள்ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம். சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள், உழைப்பு, சமூக நலம், தேசத் தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணைக் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவை ஆகும். கிரக வரிசையில் ஏழாவதாக வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர்.

அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகமாகும். குருவிற்கு பார்வை பலமும், சனிக்கு ஸ்தான பலமும் சொல்லப்பட்டிருக்கிறது. நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகளில் இருக்கும் தடை தாமதத்தை நமக்கு உணர்த்தும் கிரகம் சனியாகும். சனி இருக்கும் கிரகத்தை வைத்தே ஒருவரது வாழ்வில் இருக்கும் தடைகளை தெரிந்து கொள்ள இயலும். சனி எங்கு இருக்கிறாரோ அதற்குண்டான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நாம் தடைகளை அகற்ற முடியும்.

சனியின் பலம்
சனி எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும். நிகழும் மங்களகரமான கலியுகாதி 5118 - சாலிவாகன சகாப்தம் 1939 - பசலி 1427 - கொல்லம் 1193ம் ஆண்டு ஸ்வஸ்திஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ருது மார்கழி மாதம் 4ம் நாள் (19.12.2017) சுக்ல பிரதமையும் செவ்வாய்க்கிழமையும் மூலா நக்ஷத்ரமும் வ்ருத்தி நாமயோகமும் பவ கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.45க்கு - காலை 9.59க்கு சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.

தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். இவர் மகர ராசிக்கு விகாரி வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி (28.03.2020) சனிக்கிழமையன்று உதயாதி நாழிகை 22.54க்கு மாறுகிறார். தனுசு ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் கும்ப ராசியையும், ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும், பத்தாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார். 

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்
நன்மை பெறும் ராசிகள்: மேஷம், கடகம், சிம்மம், துலாம்.
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கும்பம், மீனம்.
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம்.

சனி பயோடேட்டா
சொந்த வீடு - மகரம், கும்பம்
உச்சராசி - துலாம்
நீச்சராசி - மேஷம்
குணம் - குரூரம்
மலர் - கருங்குவளை
ரத்தினம் - நீலம்
கிரக லிங்கம் - அலி
வடிவம் - நெடியர்
பாஷை - அன்னிய பாஷை
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 2 1/2 வருஷம்
வஸ்திரம் - கருப்பு பட்டு
க்ஷேத்திரம் - திருநள்ளாறு, திருக்குளந்தை (பெருங்குளம்), சனிசிங்கணாபூர், தனி விநாயகர் மற்றும் ஆஞ்சநேய ஸ்வாமி  கோயில்கள்
ஆசனம் - வில் அம்பு
ஸமித்து (ஹோமக் குச்சி) - வன்னி
நைவேத்தியம் -  எள்ளு சாதம் (இனிப்பு அல்லது காரம்)
தேவதை - ம்ருத்யு (சிலர் யமன் என்பர்)
ப்ரத்யதி தேவதை - திருமுக்தி, பிரஜாபதி
திசை - மேற்கு
வாகனம் - காக்கை (சிலர் கழுகையும் சொல்கின்றனர்)
தானியம் - எள்
வஸ்து - நல்லெண்ணெய்
உலோகம் - இரும்பு
கிழமை - சனிக்கிழமை
பிணி - வாதம்
சுவை  - கைப்பு
நட்பு கிரகங்கள் - புதன், தேய்பிறை சந்திரன், சுக்கிரன்
பகை கிரகங்கள் - சூரியன், வளர்பிறை சந்திரன், செவ்வாய்
சம கிரகங்கள் - குரு (வியாழன்)
காரகம் - ஆயுள்
தேக உறுப்பு - தொடையிலிருந்து கால்கள் வரை
நக்ஷத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை வருடம் - 19 ஆண்டுகள்
மனைவி - நீளாதேவி
உபகிரகம் - மாந்தி

ஒவ்வொரு ராசியிலும் சனியின் நிலை
ராசி             சனியின் நிலை   
மேஷம்        நீசம்   
ரிஷபம்        நட்பு   
மிதுனம்        நட்பு   
கடகம்        பகை   
சிம்மம்        பகை   
கன்னி        நட்பு   
துலாம்        உச்சம்   
விருச்சிகம்    பகை   
தனுசு        நட்பு   
மகரம்        ஆட்சி   
கும்பம்        ஆட்சி   
 மீனம்        நட்பு   

ஒவ்வொரு கிரகத்துடனும் சனியின் நிலை
கிரகம்            சனியின் நிலை       
சூரியன்        பகை   
சந்திரன்        பகை   
செவ்வாய்             பகை   
புதன்        நட்பு   
குரு        சமம்   
சுக்கிரன்        நட்பு   

சனி காயத்ரீ மந்திரம்
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹி ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்!
ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

சனி ஸ்லோகம்:
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!
பொருள்: கண்ணில் இடப்படும் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.

பொதுவான பரிகாரங்கள்
தினமும் விநாயகர் - ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். தினமும் விநாயகர் அகவல் - ஹனுமான் சாலீசா - சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைப் பெற்று தரும். அடிக்கடி மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்வதும் நிறைவான மாற்றத்தைக் கொடுக்கும். தினமும் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்வது - குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது முன்னோர்களை வழிபடுவது பலம் சேர்க்கும். தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

பொது பலன்கள்: குரு வீட்டிற்கு சனி மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய தடை இருக்கும். திருமணம் சம்பந்தப்பட விஷயங்களில் தொய்வு ஏற்படும். ஆனால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரயங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும்.

தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேளையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும்.