நன்மைகள் நல்கிடும் (ராம) நவகிரகங்கள்!



புனித யாத்திரை - 3  : ராமேஸ்வரம்

ரம்பா என்ற அசுரர்களின் அரசன், ஒருநாள் நதிக்கரையோரம் வந்து கொண்டிருந்தான். அந்நதியில் ஒரு பெண் எருமை குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். முற்பிறவியில் அழகிய ராஜகுமாரியாக இருந்து சாபத்தால் எருமையாக மாறியிருந்த அவள்மேல் மையல் கொண்டு தன்னை ஒரு ஆண் எருமையாக மாற்றிக்கொண்ட ரம்பா அதனுடன் கூடி மகிழ்ந்தான். அவ்விருவருக்கும் பிறந்தவன் மகிஷாசுரன். மற்றவர்களை துன்புறுத்திப் பார்ப்பதிலேயே சுகம் காணும் அசுரகுலத்தில் பிறந்திருந்த போதும் அவனுக்குள்ளும் நல்ல குணங்கள் இருந்தன. படைப்புக் கடவுளான பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து மனிதனாலும், மிருகத்தினாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான். வரம் பெற்றவுடன் அவனுக்குள் இருந்த பிறவி அசுரகுணம் வெளியேவர ஆரம்பித்தது.

பொதுவாகவே அசுரர்களுக்கு தேவர்களைக் கண்டால் ஆகாது. சமயம் வாய்க்கும் போதெல்லாம் தேவர்களை துன்புறுத்தி மகிழ்வதில் அசுரர்களுக்கு அலாதி பிரியம். அத்தகைய குலத்தவன் என்பதால்  தேவர்களை வதைக்க ஆரம்பித்தான். தேவர்களின் தலைவன் இந்திரன் மீது படையெடுத்து அவனை ஓடி ஒளியச் செய்தான். இந்திரனையே இப்படி கலங்கடித்த அவனை நினைத்து எல்லா தேவர்களும் அவனுக்கு அஞ்சி, ஒளிந்து வாழ்ந்துவந்தார்கள். மகிஷாசுரனின் கொட்டத்தை அடக்கி அழிக்கக்கூடிய சக்தி பராசக்தியான அகிலாண்டேஸ்வரிக்கு மட்டுமே உள்ளது என்பதை தேவர்கள் அறிந்தனர். உடனடியாக தேவியின் பாதத்தில் சரணடைந்தனர். சரணாகதிக்கு மிஞ்சியது ஏது?  தன்னைச் சரணடைந்தவர்களின் துயரங்களைப் போக்க  தேவி முடிவு செய்தாள்.

மகிஷாசுரனை நேருக்கு நேர் களத்தில் சந்தித்தாள். இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்தது. ஒரு கட்டத்தில் தேவியை எதிர்த்து நிற்க முடியாமல் மகிஷாசுரன் பின்வாங்க ஆரம்பித்தான். அப்படி அப்போதைக்குத் தப்பித்தவன், சக்கர தீர்த்தத்திற்குள் சென்று  பதுங்கிக் கொண்டான். திருமால் தன் பக்தனான காலவ முனிவரை கொடிய அரக்கனிடமிருந்து காக்க, தன் சக்ராயுதத்தை ஏவி அவரைக் காத்ததோடு, அவருக்குக் காவலாகவும் அதை நிறுத்திய இடம்தான் இந்த சக்கர தீர்த்தம். நீருக்குள் மூழ்கி ஒளிந்திருக்கும் தன்னை, கரையில் இருக்கும் தேவியால் எதுவும் செய்ய முடியாது என நினைத்தான் மகிஷாசுரன். ஆனால், அவனுடைய நினைப்பு பொய்யாகிப்போனது. ஆமாம், தேவி அந்த சக்கர தீர்த்தத்தை முற்றிலுமாக வற்றச் செய்தாள். நீரெல்லாம் வெளியேறி குளம் வற்றியபிறகு அசுரனால் என்ன செய்ய முடியும்? சேறாகிப்போன குளத்தில் தடுமாறி நின்றிருந்த அவனை வெளியே இழுத்துப்போட்டு வதம் செய்தாள் அம்பிகை. 

தேவர்களின் துயர் தீர்ந்தது. அதன்பின் மீண்டும் சக்கரதீர்த்தத்தில் நீர் நிரம்புமாறு செய்தாள் அந்தக் கருணா சாகரி. இந்த தீர்த்தம் ஆரம்பத்தில் தேவிபட்டிணத்திலிருந்து திருப்புல்லணை (திருப்புல்லாணி) வரை நீண்டிருந்தது. பிறகு இடையில் மண் மேவி நிலப்பரப்பு கூடியதால், திருப்புல்லணையில் இதன் ஒருபகுதியாக எஞ்சி இருக்கும் தீர்த்தப் பகுதி சக்கரதீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவி குடிகொண்ட ஊர் (பட்டணம்) என்பதால் “தேவிபட்டணம்” என இந்தத் தலம் பெயர் கொண்டது. ஆரம்பத்தில் “தேவிபுரம்” என்றழைக்கப்பட்ட இவ்வூரை புராணங்கள் ‘‘தேவிப்பூர்” என்று குறிப்பிடுகின்றன.

உப்பூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளுமுன் விநாயகர் வழிபாடு மற்றும் நவகிரக பூஜை செய்ய வேண்டும் என்பது வேதசாஸ்திரங்கள் வகுத்தளித்த விதி முறையாகும். பொதுவாகவே விதிமுறைகளை தன் விருப்பத்திற்கேற்ப வளைப்பதும், மீறுவதும் மனித குணம். ஆனால். ராமரோ மனித உருக்கொண்ட அவதார புருஷரல்லவா? அதனால் மூத்தோர் வகுத்தளித்த வழிமுறைகளை பின்பற்ற நினைத்தார் அவர். அதன்படி உப்பூரில் விநாயகர் வழிபாட்டை முடித்தவர் நவகிரகங்களை இங்கே வழிபட முடிவு செய்தார். மனிதர்கள் வாழும் கோளான (கிரகம்) பூமியின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய பிற கோள்கள் உள்ளன. அக்கிரகங்களின் நகர்வுகள், இடமாற்றங்கள் எல்லாம் மனிதர் செயல்பாடுகளிலும், வாழ்வியலிலும் மாற்றங்களை நிகழ்த்துகின்றன. நேரடியான பலன்களை தரக்கூடிய அம்சம் இது.

“கிரகம் சரியில்லை என்றால் கிரகம் சுற்றி வா” என்பது பண்டைய நாட்களிலிருந்தே சொல்லப்படும் சொலவடை. கிரகம் என்பது நவகிரகத்தைக் குறிக்கும். நவம் என்றால் ஒன்பது. இந்த ஒன்பது கிரகங்களையும் வானியலார் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என வரிசையாக அமைத்துள்ளனர். இந்த ஒன்பது கிரகங்களின் ஆசி கிடைக்கப்பெற்ற ஒருவன் எல்லாக் காரியத்திலும் வெற்றி பெறுவான். அந்த வெற்றி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதாலயே முன்னோர்கள் எல்லா ஆலயங்களிலும் விநாயகர் வழிபாட்டோடு நவகிரக வழிபாட்டையும் வைத்தனர்.  சீதையை மீட்பதற்கான முயற்சியில் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என நினைத்த ராமர், நவகிரகங்களின் மூலம் கிடைக்கக் கூடிய சக்தியை பெறவும், தனக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நீங்கவும் நவகிரக வழிபாட்டை செய்ய நினைத்தார்.

அதற்காக ஒன்பது கிரகங்களையும் குறிக்கும் வகையில் ஒன்பது கல்தூண்களை கடலுக்குள் பிரதிஷ்டை செய்தார். அந்த இடம் “நவபாஷாணம்” (நவம் - ஒன்பது; பாஷாணம் - கல்) என்றழைக்கப்படுகிறது. தேவிபட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில்  அமைந்துள்ளது. ராமர் கல்தூண்களை கடலுக்குள் ஸ்தாபித்தபோது அவை கடலின் சீற்றத்தாலும், கொந்தளிப்பாலும் அழிந்து விடக்கூடாது என எண்ணினார். கடலரசனிடம் அப்பகுதியில் அலை சீற்றமில்லாது இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அதையே ராம கட்டளையாக ஏற்ற கடலரசன், அப்பகுதியில் அலைகளை எழுப்பாமல் அமைதியானான். இன்றளவும் கடலின் அந்தப் பகுதி அலையடிக்காமல் அமைதி காக்கிறது! ஆழமற்ற இந்த நவபாஷாணத்திற்குள் இருள் சூழும் நேரத்திற்கு முன்பாக சென்று வழிபட்டு வரலாம். 

பொதுவாகவே இருள் சூழ ஆரம்பிக்கும்போது மற்ற நேரங்களை விட கடலின் நீர் மட்டம் உயர்ந்து விடும் என்பதால் காலையில் சென்று வழிபடுதல் நல்லது. இங்குள்ள நவகிரகத் தொகுதிக்கென பிரத்யேகக் கட்டடமோ, கோயில் அமைப்போ ஏதுமில்லை. நவகிரகங்களுக்கான பூஜைகளைக்கூட அவரவரே செய்து கொள்ளலாம். இந்த நவபாஷாணங்களைத் தொட்டும் வழிபடலாம். கரையிலிருந்து நவபாஷாணத்திற்கு சென்றுவர பாலமும், நவகிரகங்களை வலம்வர ஏதுவாக அதைச் சுற்றிலும் இரும்பு கிராதி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடலில் நீராடி நவகிரகங்களை வணங்கி வழிபட்ட பின் அடுத்து நாம் செல்ல வேண்டிய இடம், “பாம்பன்”

(யாத்திரை தொடரும்)

- கோபி சரபோஜி