மனக் குழப்பங்கள் தீரும்



என்ன சொல்லுது எதிர்காலம்

? நான் ஜெராக்ஸ் கடையில் வேலை செய்கிறேன். வாடகை வீட்டில் வசிக்கிறேன். எனக்கு திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது. சில ஜோதிடர்கள் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா? எனக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும்? சொந்தக் கடை வைக்கும் யோகம் உள்ளதா? இதற்கு தகுந்த பரிகாரம் கூறவும்?
- ஆர்.சிவகுமார், புதுச்சேரி.

 உங்களின் ஜாதகத்தை ஜாதக தேஷ்மார்க்கம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். உங்கள் ஜாதகம் நன்றாக இருக்கிறது. மகரலக்னம் கும்ப ராசியில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். உங்களுக்கு புதாதித்ய யோகம், குருமங்கள யோகமெல்லாம் இருக்கிறது. ஆனால், உங்களுடைய ஜாதகத்திலே பிரபல யோகாதிபதியாக விளங்கும் சுக்கிரன் கேதுவுடன் சேர்ந்து நிற்பதனால் நீங்கள் போராடிப் போராடி முன்னேற வேண்டியதாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பாக்யாதிபதியாகிய புதன் அஷ்டமாதிபதியுடன் சேர்ந்திருப்பதாலும் அடுத்தடுத்து நீங்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

உங்களுடைய ஜாதகத்திலே லக்னாதிபதி சனிபகவான் நல்ல நிலையில் இருப்பதனால் உங்களுக்கு அதிரடி முன்னேற்றமெல்லாம்வருங்காலத்திலே உண்டு. ராகுதசை முடிவுற்று, குருமகாதசையும் முடிவடைந்து, தற்சமயம் சனிமகாதசையும் 21.6.2015துடன் முடிவடைகிறது. அடுத்ததாக 22.6.2015 முதல் புதன் மகாதசை தொடங்குகிறது.

புதன் தசை ஓரளவு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். புதன் பிறக்கும்போது லக்ன கேந்திரம் பெற்றிருப்பதாலும், ஆதித்யனாகிய சூரியனுடன் சேர்ந்திருப்பதாலும் நல்லதே செய்வார். ஆனால், ஆதித்யனாகிய சூரியன் உங்களுக்கு அஷ்டமாதிபதியாக இருப்பதனால் யோகப் பலன்கள் கொஞ்சம் குறைந்து நடக்கும். ஆனால், ஏற்கெனவே நடைபெற்ற தசையை காட்டிலும்  இந்த புதன் மகாதசை உங்களுக்கு நன்மை தரக் கூடியதாகவே இருக்கும்.

2011 முதல் நீங்கள் கோச்சார கிரகங்களாலும் வெகுவாக பாதிக்கப்பட்டீர்கள். அதாவது, கண்டகச் சனி, அஷ்டமத்துச்சனி என பலவிதமான அவயோகங்களையெல்லாம் அதனால்தான் நீங்கள் எந்தத் தொழிலை தொடங்கினாலும் இதுவரை உங்களுக்கு நல்ல பலன் நடைபெறாமல் போய்விட்டது.

 கோச்சார கிரகங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது 5.7.2015 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டிலே வந்து அமர்கிறார். அதுமுதல் உங்கள் வாழ்வில் நல்லது நடக்கும். புதன் மகாதசை தொடங்குவதாலும் நல்லது நடக்கும். உங்கள் ஜாதகத்தில் ஏழுக்குரியவன் அதாவது, களத்திர ஸ்தானாதிபதி சந்திரனும் களத்திரகாரகனாகிய சுக்கிரனும் இரண்டாவது வீட்டிலே அமர்ந்திருப்பதனால் மனைவியால் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. திருமணத்திற்கு பிறகு யோகமும் உண்டு.

 ஆனால், களத்திரகாரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதியான சந்திரனுடன் கேது சேரக்கூடாது. கேது நிழல் கிரகமாகும். கேது என்றாலே கொஞ்சம் கெடுக்கும் குணமுள்ளது. அதாவது, பலன்களை தடுத்து நிறுத்தக்கூடிய கிரகமாகும். அதனால்தான் உங்களுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே போகிறது. உங்களுக்கு செவ்வாய் தோஷம் உண்டு. செவ்வாய் உங்களுடைய ஜாதகத்தில் எட்டாவது வீட்டிலே அமர்ந்திருக்கிறார். செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தாலும் பகை பெற்ற ராகுவும் சேர்ந்து காணப்படுவதனால் செவ்வாய் தோஷம் கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கிறது.

உங்களுடைய லக்னாதிபதியாகிய சனிபகவானுக்கு செவ்வாய் பாதகாதிபதியாக வருவதனால்தான் உங்களுக்கு குருவுடன் சேர்ந்திருந்தாலும் அதிகமான கெடு பலன்களை தருகிறார். எனவே, செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால், செவ்வாய் தோஷத்திற்காக பெரிய பரிகாரங்களெல்லாம் நீங்கள் செய்ய வேண்டாம். இந்த காலத்தில் செவ்வாய் தோஷம் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஒரு தோஷமாகிவிட்டது.

பொருத்தம் பார்க்கும்போது செவ்வாய்க்கு செவ்வாய் பார்த்து சேர்ப்பது நல்லது. அதுமட்டுமில்லாமல் சந்திரனும், சுக்கிரனும் கேதுவுடன் சம்பந்தப்பட்டதனால் ராகு, கேது தோஷம் உள்ள பெண்ணையும் நீங்கள் மணக்கலாம். 22.6.2015 முதல் உங்களுக்கு புதன் மகாதசை தொடங்கயிருக்கிறது. புதன் மகாதசை தொடங்கயிருப்பதனாலும், கோச்சார கிரகங்கள் அதுமுதல் வலுவடைந்து வருவதனாலும் உங்களுக்கு திருமணம் விரைந்து முடியும்.

2015 பிற்பகுதி அல்லது 2016 மார்ச் முதல் அக்டோபர் வரையுள்ள காலகட்டத்தில் உங்களுக்கு திருமணம் முடிய வாய்ப்பிருக்கிறது. 2019 பிற்பகுதி அல்லது 2020 மத்திய பகுதியிலிருந்து நீங்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது. நீசப் பொருட்கள் மூலமாக உங்களுக்கு பணம் வரும். எல்லா வகையிலும் நன்மைகள் உண்டாகும்.

 யோகாதிபதிகள் பலவீனமடைந்திருப்பதனால் அந்த யோகாதிபதிகள் பலம் அடைவதற்கும், நல்ல பலன்கள் ஏற்படுவதற்கும் நீங்கள் ரங்கம் சென்று ரங்கநாதரை வழிபடுவது நல்லது. முடிந்தால் திருவிடைமருதூரில் அருள்பாலிக்கும் மகாலிங்கேஸ்வரரை ஒரு பிரதோஷ நாளில் சென்று தரிசனம் செய்யுங்கள். தடைகளெல்லாம் நீங்கும். நற்பலன்கள் அதிகரிக்கும். திருமணமும் முடியும். வசதி, வாய்ப்பு பெருகும். 

?  எங்களின் இருவரின் ஜாதகத்தையும் இணைத்துள்ளோம். இருவருக்கும் குழந்தை பாக்யம் எப்பொழுது வாய்க்கும்?
- எஸ்.சீனிவாசன்.

உங்கள் இருவரின் ஜாதகத்தையும் அஷ்டவர்க்க பரல்கள், ஷட்வர்க்க பரல்கள் இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். இருவரின் ஜாதகத்திலும் குழந்தை பாக்யம் இருக்கிறது. கவலை வேண்டாம். அர்ச்சனாவின் ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி செவ்வாய் ஒன்பதாவது வீட்டிலே அமர்ந்திருப்பது நல்ல அமைப்புதான்.

அதுமட்டுமில்லாமல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதனால் நல்ல அறிவு, அழகு, அந்தஸ்துள்ள குழந்தை பாக்யம் கிடைக்கும். கோச்சார கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போதும் 20.9.2015 முதல் குழந்தை பாக்யம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் தசாபுக்திகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அர்ச்சனாவின் ஜாதகத்திலே தற்சமயம் புதன் மகாதசை நடைபெற்று வருகிறது.

 புதன் மகாதசையில் சுக்கிரபுக்தி 8.12.2017 வரை நடைபெறும். சுக்கிரன் ஜனன ஜாதகத்திலே நல்ல நிலையில் இருப்பதனால் குழந்தை பாக்யம் சிறப்பாக இருக்கும். நவாம்சத்திலும் சுக்கிரன், சூரியனுக்கும்  சந்திரனுக்கும் இரண்டாவது வீட்டிலே அமையப்பெற்றதும் நல்ல அமைப்பாகும். எனவே, குழந்தை பாக்யத்தை விரைவாக எதிர்பாருங்கள். சீனிவாசன் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் கேதுவுடன் நிற்பதனாலும் பிரபல யோகாதிபதி சனிபகவான் செவ்வாயுடன் நிற்பதனாலும், சுகஸ்தானாதிபதி  சூரியன் குருவுடன் சென்று நிற்பதாலும் சில சௌபாக்கியங்கள் சற்று தாமதமாகத்தான் கிடைக்கும்.

இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது தற்சமயம் சூரிய மகாதசை உங்களுக்கு நடைபெற்று வருகிறது. 22.8.2015 வரை சூரிய மகாதசையில் சூரியபுக்தி உங்களுக்கு நடைபெறும். 23.8.2015 முதல் சூரியதசையில் சந்திரபுக்தி தொடங்குகிறது. எனவே, 23.8.2015க்கு பிறகு உங்கள் ஜாதகத்தில் குழந்தை பாக்யத்தை எதிர்பார்க்கலாம்.  சூரியன் கேதுவின் நட்சத்திரத்திலே அமர்ந்திருப்பதனாலும், அஷ்டமாதிபதியுடன் சேர்ந்து நிற்பதனாலும் நீங்கள் தம்பதியாக திருவண்ணாமலை சென்று வருவது நல்லது.

பஞ்சமி திதி வளர்பிறையாகவும் இருக்கலாம், தேய்பிறையாகவும் இருக்கலாம், பஞ்சமி திதி நடைபெறும் நாளில் வில்வார்ச்சனை செய்து அருணாசலேஸ்வரரை சூரியனின் அம்சம் பொருத்திய அக்னி ஸ்தலமாகிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வணங்கி வாருங்கள். நிச்சயம் குழந்தை பாக்யத்தை எதிர்பாருங்கள். வாழ்வு சிறக்கும். நிம்மதி உண்டு.

?  எனது மகளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? வேலை வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும்?
 - கருப்பையா, கல்லக்குடி, திருச்சி.

உங்கள் மகளின் ஜாதகத்தை ஜாதக தேஷ்மார்க்கம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மீன லக்னம், ரிஷப ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகளுக்கு 18.11.2015 வரை ராகுமகாதசை நடைபெறும். 19.11.2015 முதல் ஆரம்பமாகும் குருமகாதசை உங்கள் மகளுக்கு நல்லதைத் தரும். உங்கள் மகள் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழில் செவ்வாயும், எட்டில் சூரியனும் நிற்பதுடன் சந்திரனுக்கு ஏழில் சுக்கிரனும், எட்டில் சனியும் நிற்பதால் கிரக பொருத்தம் பார்த்து சரியான வரனை தேர்ந்தெடுத்து சேர்ப்பது நல்லது.

கோச்சார கிரகங்கள் மற்றும் தசாபுக்தி அந்தரங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது 2017ம் ஆண்டின் முற்பகுதி அல்லது 2018ம் ஆண்டின் பிற்பகுதியில் திருமணம் முடிய வாய்ப்பிருக்கிறது. உங்கள் ஊருக்கு மேற்கு பகுதி அல்லது வடகிழக்கு பகுதியுள்ள நகரில் வேலை கிடைக்கும். 10.8.2016 முதல் திருப்தியான வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

உங்கள் மகளுக்கு தற்சமயம் கண்டகச்சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் திருமணம் நிச்சயிப்பதற்கு முன் வரனை நன்கு விசாரித்து முடிவெடுப்பது நல்லது. காஞ்சிபுரத்திற்கு முன்புள்ள உத்திரமேரூருக்கு அருகிலுள்ள திருப்புலிவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் சிவாலயத்திலுள்ள சிம்ம தட்சிணாமூர்த்தியை ஏதேனும் ஒரு வியாழக்கிழமை அல்லது பௌர்ணமி திதி நாளில் மகளுடன் சென்று வணங்கி வாருங்கள். நல்ல வாழ்க்கை அமையும்.

? என் வாழ்க்கையில் ஈசன் அருளால் நல்ல செல்வம் உண்டு. இருந்தும் எள் அளவு கூட நிம்மதி இல்லை. எனது தாய் நான் பித்துப் பிடித்து அலைவது போல கனவு கண்டுள்ளார். மேலும் நான் கண்ட எல்லா ஜோதிடர்களும் என் வாழ்வின் இரண்டாவது பாதியை பற்றி சரியாகவே சொன்னதில்லை. நான் அறிந்து கொள்ளக் கூடாது என்பது போலவே அவர்கள் நடக்கிறார்கள். தாங்களாவது அந்த விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்.
 - ஆர்.பி.சரவணன், கோவை.

உங்களின் ஜாதகத்தை கேரள மணிகண்ட ஜோதிடம் எனும் நூலின் அடிப்
படையில் ஆராய்ந்தோம்.

கடக லக்னம், மகர ராசியில் பிறந்திருக்கும் உங்களுக்கு 28.5.2018 வரை ராகுமகாதசை நடைபெறும். பதினெட்டு வயது முதல் உங்களுக்கு ராகு மகாதசை நடைபெற்று வருகின்றது. ராகு லக்னத்திற்கும், லக்னாதிபதிக்கும், பூர்வபுண்ணியாதிபதிக்கும், பாக்கியாதிபதிக்கும் மறைந்து காணப்படுவதால் தான் எதிர்மறை எண்ணங்களும், நிம்மதியற்ற போக்கும் உங்களிடம் மிதமிஞ்சி உள்ளது.

நிழல் கிரகமான ராகு நவாம்சத்தில் சனியுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளதால்தான் எதிலும் மகிழ்ச்சியடைய முடியாமல் மயங்குகிறீர்கள். 29.5.2018 முதல் தொடங்கும் குருமகாதசை உங்களுக்கு ஓரளவு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியதாக அமையும். உங்களுக்கு பித்து பிடித்தாற்போல உங்கள் தாயார் கண்ட கனவு பலிக்காது. உங்கள் வாழ்வில் இரண்டாம் பகுதி நன்றாக இருக்கும். நேரம் கிடைத்தால் கொல்லிமலையில் அருள்பாலிக்கும் அருள்மிகு அறப்பளீஸ்வரரை பௌர்ணமி திதி நாளில் சென்று வணங்கி வாருங்கள். மனக்குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி உண்டாகும்.