என்ன சொல்லுது எதிர்காலம்?



நிச்சயம் நல்ல கணவர் அமைவார்

? எனது இளைய மகன் தற்போது ஆஸ்திரேலியாவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறார். அவருக்கு திருமணம் எப்போது நடைபெறும்? எந்தத் திசையிலிருந்து பெண் கிடைக்கும்? பணியிலுள்ள பெண் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதா? பரிகாரமும் கூறுங்கள்.  
- இரா.விஸ்வநாதன், பண்ருட்டி.

உங்கள் மகனின் ஜாதகத்தை சுக்கிரநாடி எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். சுகமாலிகா யோகம், விபரீத ராஜயோகமெல்லாம் ஜாதகத்தில் உள்ளது.  தன, பூர்வ புண்யாதிபதியுடன் லக்னாதிபதி சுக்கிரனும், சுகாதிபதி சூரியனும் சேர்ந்தது யோக அமைப்பாகும். செல்வ வளம், வீடு, மனை, யோகம் யாவும் இவருக்கு உண்டாகும். இவருக்கு 22.8.2006 முதல் 22.8.2023 வரை புதன் தசை நடைபெறும்.

புதன் யோகாதிபதி என்பதால் அனைத்து யோகங்களும் இவர் வாழ்வில் உண்டாகும். தற்சமயம் புதன் தசையில் செவ்வாய் புத்தி 14.2.2016 வரை நடைபெறும். செவ்வாய் களத்திர ஸ்தானாதிபதியாக வருவதால் இக்காலக்கட்டத்தில் திருமணம் நல்ல முறையில் முடியும். கிழக்கு, தென்கிழக்கு அல்லது தெற்குத் திக்கிலிருந்து பெண் அமையும்.

 பூர்வீகம் மாறி வந்தவர்களாக இருப்பார்கள். கோச்சார கிரக அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயும்போது உங்கள் மகனுக்கு 19.8.2015 முதல் 10.4.2016க்குள் திருமணம் முடியும்.

7ல் சனி இருப்பதாலும், சப்தமாதிபதியுடன் களத்திரக்காரகன் நிற்பதாலும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட பெண் அமைவார். பாரம்பரிய குடும்பமாக இருக்கும். பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7, 8ல் பாப கிரகங்கள் இருந்து சேர்த்தால் மண வாழ்க்கை இனிக்கும். சென்னை திருவல்லிக்கேணியில் கோயில் கொண்டிருக்கும் பார்த்தசாரதிப் பெருமாளை ஏகாதசி திதி நாளில் வணங்குவது நல்லது.

? என் மகளுக்கு நல்ல வேலை, அழகு, அறிவு எல்லாம் இருந்தும் திருமணம் கூடி வரவில்லை. தந்தை இல்லாத பெண். யாரும் எடுத்து நடத்த ஆள் இல்லை. அம்மாவாகிய எனக்கோ படிப்பு, அறிவு, பேசும் சாமர்த்தியம் எதுவும் இல்லை. இந்தப் பெண்ணிற்கு எப்பொழுது
திருமணம் நடக்கும்?- ஆர்.சுசீலா, திருச்சி.

உங்கள் மகள் ஜாதகத்தை அகத்தியர் ஐநூறு எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மீன லக்னம், மிதுன ராசியில் பிறந்திருக்கும் அவருடைய ஜாதகத்தில் சப்தமாதிபதி புதனுடன் களத்திரக்காரகனான சுக்கிரனும் சேர்ந்து அமர்ந்திருப்பதாலும், சூரியன் தனித்து 8ல் நிற்பதாலும் குடும்பாதிபதி செவ்வாய் 12ல் மறைந்ததாலும் கடந்த மூன்றாண்டு காலமாக கோச்சார கிரகங்களும், தசா-புக்தியும் பலவீனமாக இருந்ததாலும்தான் இதுவரை திருமணம் தள்ளிப்போனது. உங்கள் மகளுக்கு தற்சமயம் சனி தசையில், சுக்கிர புக்தி நடைபெற்று வருகிறது.

தசா-புக்தி அந்தரங்களையும், சப்தாம்சத்தையும் கணக்கிட்டுப் பார்க்கும் போது 27.9.2014 முதல் 24.6.2015க்குள் திருமணம் கைகூடும். நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும், கவலை வேண்டாம். ஒருமுறை சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானை உங்கள் மகளின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நடைபெறும் நாளில் சென்று தரிசனம் செய்து வாருங்கள். நிச்சயம் நல்ல கணவர் அமைவார்.  
 
?நான் தனியார் நூற்பாலையில் மேனேஜராக பணியாற்றுகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள். என் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று 31.8.2012 அன்று என்னுடைய இமெயிலுக்கு லாட்டரி விழுந்ததாக ஒரு தகவல் வந்தது. பணம் கட்டுங்கள் என்று சொன்னார்கள், நானும் அதை நம்பி கொஞ்சம், கொஞ்சமாக, பணம் கட்ட ஆரம்பித்து பல லட்சங்கள் கட்டினேன். கடைசியில் பொய் என்று தெரிந்து மிகவும் நொந்து போனேன்.

வட்டிக்கு பணம் வாங்கித்தான் கட்டினேன். இப்போது வாங்கும் சம்பளத்திற்கு வட்டி கட்ட முடியவில்லை. என் எதிர்காலம் குறித்து பயமாக இருக்கிறது. நான் கட்டிய பணம் திரும்ப வருமா? கடந்த பத்து மாதங்களாக இந்தப் பிரச்னை. என்ன செய்வதென்று தெரியவில்லை. வழி கூறுங்கள்.  - டி.ரவி, திண்டுக்கல். 

உபய லக்னம், உபய ராசியில் பிறந்து அடுத்தவர்களுக்கு உபயோகப்படும்படி வாழ்ந்து வரும் உங்களுக்கு அடுத்தடுத்து அல்லல்களும், பண இழப்புகளும், ஏமாற்றங்களும், வந்திருக்கின்றன. “அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி’’ என்ற பழமொழிக்குத் தகுந்தாற்போல் அஷ்டமத்துச் சனியில் அகப்பட்டுக் கொண்டு பல்வேறு அவஸ்தைகளை நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

 நீதிக் கோளான சனி, அஷ்டமத்துச் சனியாக வரும்போது கோடி கோடியாக சம்பாதித்தவர்களைக் கூட தெருக் கோடியில் நிற்கதியாய் தவிக்க வைப்பான். அதனால்தான் உழைப்பில்லாமல் வரும் பணத்திற்கு ஒருபோதும் ஆசைப்படக் கூடாது என்பார்கள். 16.11.2011 முதல் 15.12.2014 வரை உங்களுக்கு அஷ்டமத்துச் சனி நடைமுறையில் இருக்கும்.

உங்களுக்கு இமெயில் வந்த நாளான 31.8.2012 அன்றிருந்த கிரக அமைப்புகளும், நட்சத்திர அமைப்பும் உங்களுக்கு பண இழப்பையும், நிம்மதி குறைவையும் உண்டாக்கக் கூடியதாக இருந்துள்ளன. உங்கள் ஜாதகத்தை கேரள நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்ததில் சுக்கிரன் பலவீனமாக இருப்பது தெரிகிறது. பிரபல யோகாதிபதியான சுக்கிரன் அஷ்டமாதிபதி செவ்வாயின் சேர்க்கையைப் பெற்றிருப்பதால்தான் அந்நிய தேசத்திலிருந்து வந்த இமெயிலால் அனைத்தையும் இழந்து தவிக்கிறீர்கள்.

3.11.2014 அன்று உங்களுக்கு சுக்கிர தசை முடிவடைகிறது. அடுத்து வரும் சூரிய தசை உங்களுக்கு யோகாதிபதி தசையாக இல்லாவிட்டாலும், லக்னாதிபதி மற்றும் லாபாதிபதியின் சேர்க்கையைப் பெற்றிருப்பதாலும் 4வது தசையாக சூரிய தசை வருவதாலும் உங்கள் வருமானம் உயரும்.

கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள், கவலை வேண்டாம். அஷ்டமத்துச் சனியில் இழந்ததை மீண்டும் பெறுவது கடினம். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. மனைவியின் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துங்கள். முடிந்தால் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்தரகோசமங்கை எனும் ஊரில் அருள்பாலிக்கும் சித்தர் காக புஜண்டர் வணங்கிய சிவனை வணங்கி வாருங்கள். முடிந்தால் வில்வ தளத்தால் அர்ச்சனை செய்யுங்கள். தீர்வு கிடைக்கும்.

? என் மகள் டிகிரி முடித்து இரண்டு வருடம் வேலை செய்து கொண்டிருந்தாள். கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கிறாள். வேலைக்குப் போ என்று சொன்னால் அலட்சியப்படுத்துகிறாள். குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது. அவள் நல்ல வேலைக்குச் செல்ல நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? அவளுக்கு நல்ல துணைவன் அமைவாரா?- வ.கல்யாணி, சென்னை.

உங்கள் மகளின் ஜாதகத்தை வசிஷ்டர் வாக்கு எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மேஷ லக்னம், ரிஷப ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தில் குரு சுயசாரம் பெற்று வலுவாக உள்ளார்.

எனவே, வருங்காலத்தில் செல்வ வளமுடன் வாழ்வார். ஆனால், லக்னாதிபதி செவ்வாய் ராகுவுடனும், ராசிநாதனான சுக்கிரன் சனியுடனும் சேர்ந்து நிற்பதாலும் தற்சமயம் ராகு தசை நடைபெற்று வருவதாலும் ஏறக்குறைய கடந்த மூன்றாண்டு காலமாக ராகு தசையில் சனி புக்தி நடைபெற்றதாலும் தான், அவர் மனஉளைச்சலுக்கும், தாழ்வுமனப்பான்மைக்கும் ஆளாகி உள்ளார். உங்கள் மகளுக்கு இதற்கு முன் உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்களும், மரியாதைக் குறைவான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

தற்சமயம் புதன் புக்தி தொடங்கியுள்ளதால், கோச்சார கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது 19.11.2014லிருந்து சுக்கிரன் உள்ளிட்ட முக்கிய கிரகங்கள் வலுவடைவதாலும் உங்கள் மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். மன வேதனையும், தாழ்வு மனப்பான்மையும் நீங்கும். நல்ல கணவரும் அமைவார். முடிந்தால் சமயபுரம் மாரியம்மனை, வெட்சிப் பூமாலை அணிவித்து வணங்கி வாருங்கள்.

?  எனது கணவர் வெளியூரில் பணிபுரிகிறார். வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் வரு கின்றன. எப்போது பிரச்னைகள் தீர்ந்து பழையபடி சொந்த ஊருக்கு வந்து வேலையில் சேருவார்? வருமானம் இறங்கு முகமாக உள்ளது. இவருக்கு ப்ரமோஷன் ஏதேனும் இப்போது உண்டா? எந்த திசை வீடு வாசல் யோகம் தரும்?
- ஒரு வாசகர்.

உங்கள் கணவரின் ஜாதகத்தை கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறைப்படி ஆராய்ந்தோம். உத்யோக ஸ்தானம் வலுவிழந்து காணப்படுகிறது. அனலியாகிய அங்காரகனும், அருக்கனாகிய ஆதித்யனும் ஜல வீடான கடகத்தில் வலுவிழந்து காணப்படுவதுடன் பாதகாதிபதியுடன் சேர்க்கை பெற்று 10ம் பத்தில் கேதுவோடு நிற்பதால்தான் உத்யோகத்தில் அடிக்கடி பிரச்னைகள் வந்து கொண்டிருக்கின்றன. 1.2.2021 வரை இவருக்கு சனி மகாதசை நடைபெறுகிறது.

சனி நீசம் பெற்று அஸ்வினி நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால்தான் வேலை செய்யும் இடத்தில் சின்னச் சின்ன அவமானங் களையும், விரும்பத்தகாத இடமாற்றங்களையும் சந்திக்கிறார். உங்கள் மகனின் ஜாதகப்படி 15.12.2014 முதல் தந்தையாருக்கு மனநிம்மதியும், உத்யோகத்தில் ஸ்திரத் தன்மையும், அலுவலகத்தில் கௌர வமான சூழ்நிலையும், வேறு புது நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகளும் அமையும். சொந்த வீடு யோகம் உண்டு. வடகிழக்கு, தெற்கு பார்த்த வாசல் நன்மை பயக்கும்.    

ஜோதிட  ரத்னா கே.பி.வித்யாதரன்