மங்களங்கள் அருளும் மரகதாம்பிகை



தமிழக சக்தி பீடங்கள்

மரகதாம்பிகை, லலிதா எனும் திருப்பெயர்களோடு ஈங்கோய்நாதர் எனும் மரகதாசலேஸ்வரரோடு அம்பிகை அருளாட்சி புரியும் தலம், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும். யோகினிகளால் பூஜைகள் நடத்தப்பெறும் திருத்தலம் இது. இங்கு அவர்களே நான்கு வேதங்களை தினமும் ஓதி சண்டி யாகம் போன்றவற்றையும் செய்து வருகிறார்கள்.

ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களுள் யார் பெரியவர் என போட்டி வந்தது. வாயுபகவான் தன் பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசினார். ஆதிசேஷன் மந்தார மலையை இறுகப் பற்றிக்கொண்டார். அப்போது அம்மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த ஒரு பகுதிதான் இம்மலை என்கிறார்கள்.

சிவபெருமான், அவர்களைச் சமாதானம் செய்து, மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார். மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், ‘மரகதாசலேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். இவருக்கு “திரணத்ஜோதீஸ்வரர்’’ என்ற பெயரும் உண்டு.

காவல் தெய்வம் காமாட்சி

அம்மனின் 51 சக்தி பீடங்களில் காமகோடி சக்தி பீடமாகத் திகழ்வது காஞ்சி காமாட்சியம்மன் ஆலயமாகும். தங்கக் கோபுரத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில்தான் ஆதிசங்கரர், ஆனந்தலஹரி பாடினார். தல விருட்சமாக செண்பக மரமும், தல தீர்த்தமாக பஞ்ச கங்கையும் உள்ளன. அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யம் கொழிக்கும் வாழ்வும், மனநிம்மதியும் ஏற்படுகின்றன.

இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவையும் இங்கு வரும் பக்தர்களின் முக்கிய பிரார்த்தனைகள். அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சமடைந்திருப்பதால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் விலகிவிடுகின்றன. குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தகருணை தெய்வம் கன்னியாகுமரி

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியாக திருவருள் புரிகிறாள் அம்பிகை. 51 சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். தல தீர்த்தமாக பாபநாச தீர்த்தம் துலங்குகிறது.  இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும்.  அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தலும் பக்தர்கள் செலுத்தும் முக்கிய நேர்த்தி கடன்கள்.

பாணாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி இங்கே குமரியாக நிலை கொண்டாள். அம்பிகையின் தோழிகளான தியாகசுந்தரி, பாலசுந்தரி இருவரும் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டருள்கின்றனர். தேவியின் மூக்கில் ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் மூக்குத்தி நாகரத்தினத்தால் ஆனது என்பார்கள்.

தாணுமாலயனுக்கும் தேவிக்கும் நடக்க இருந்த திருமணம் நாரதரின் கலகத்தால் நின்றது. திருமணத்திற்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரி கடற்கரையில் அரிசி போன்ற வெண் சிறுமணலையும், பலவண்ண மணல்களையும் காணலாம்.

மங்கள வாழ்வருளும் மங்களநாயகி

அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் விஷ்ணு சக்தி பீடமாகத் திகழ்கிறது கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலய மங்களாம்பிகை சந்நதி. கல்வியில் சிறந்து விளங்க விரும்புவோர், தொழில் துவங்குவோர், திருமணத்தடை உள்ளோர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர்,

 குபேர வாழ்வு விரும்புவோர் மங்களாம்பிகைக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்திப் பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோயிலின் முன்பு பொற்றாமரைக் குளம் இருக்கிறது. மகாமகத்திற்கு வருபவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரைக் குளத் திலும் நீராடுவர்.

இத்தலத்தின் தலவிருட்சமாக வன்னிமரமும்,  தல தீர்த்தங்களாக மகாமகக் குளமும்,  காவிரியாறும் உள்ளன. மங்களநாயகிக்கு ‘மந்திரபீட நலத்தாள்’ எனும் திருநாமமும் உண்டு. சம்பந்தர் இவளை ‘வளர்மங்கை’ என அழைக்கிறார்.

சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக ‘மந்திரபீடேஸ்வரி’ என்ற திருநாமமும் பெறுகிறாள்.

மேன்மை தரும் மாதங்கி


மதுரை மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமளா சக்தி பீடம் ஆகும். தேவியின் பெயர் தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறாள்.

தல விருட்சமாக கடம்ப மரமும் தீர்த்தங்களாக பொற்றாமரைக் குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி ஆகியவை உள்ளன. மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை, கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் அமைகின்றன. வேண்டும் வரமெல்லாம் அருளும் அன்னையாக மீனாட்சி விளங்குகிறாள். இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும், நிம்மதியான முக்தியும் கிடைக்கும்.

வாழ்வைச் சிறப்பாக்கும் வடிவுடையம்மன்


திருவொற்றியூர் தலத்தில் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூல மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். உடன் வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன்; அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சங்கள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது இக்ஷூ சக்தி பீடம் ஆகும். அம்பிகை வடிவுடைநாயகி, தனிச் சந்நதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். அம்பாளுக்குக் கீழே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

கேரள நம்பூதிரிகளே இவளுக்கு பூஜை செய்கின்றனர். தினமும் காலை 9 மணி, மாலை 6 மணிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, ‘புஷ்பாஞ்சலி தரிசனம்’ தருகிறாள். திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு இந்த அலங்காரம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதை, ‘சுயம்வர புஷ்பாஞ்சலி’ என்கிறார்கள்.

வட்டப்பாறையம்மன் சந்நதிக்கு அருகில் ‘திருப்தீஸ்வரர்’ என்ற பெயரில் சிவன் காட்சி தருகிறார். வாழ்வில் திருப்தியில்லாதவர்கள் இவரிடம் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். இதனால் வாழ்க்கை சிறக்கிறது. நந்திதேவருக்காக சிவன், பத்ம தாண்டவம் ஆடிக்காட்டிய தலம். புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள குழந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

திருவருள்புரியும் தரணி பீட நாயகி


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குழல்வாய்மொழி, பராசக்தி என இரு திருவடிவங்களில் குற்றாலநாதருடன் தேவி அருள்கிறாள். தல தீர்த்தங்களாக சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆகியவையும், தலவிருட்சமாக குறும் பலாவும் உள்ளன.

இந்தப் பலாவில் உள்ள சுளைகள், ‘லிங்க’ வடிவில் இருப்பது கலியுக அதிசயம். அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றியபோது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை, குழல்வாய்மொழிநாயகியாகவும், பூதேவியை, பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு ஸ்ரீசக்கர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள்.

பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இதற்கு, ‘தரணி பீடம்’ (தரணி  பூமி) என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் ‘நவசக்தி’ பூஜை செய்கின்றனர்.

பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

மண வாழ்வுக்கு மஞ்சள் அபிஷேகம்


திருநெல்வேலியில் உள்ள நவகைலாயங்களில் முதல் தலமான (சூரிய தலம்) பாபநாசத்தில் பாபநாசநாதருடன் அருள்கிறாள் உலகம்மை எனும் விமலை சக்தி. அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் இது விமலை சக்தி பீடம் ஆகும். கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்துக் கொடுத்து வாங்கும் பிரார்த்தனையை இங்கே மேற்கொள்கிறார்கள்.

உலகம்மைக்கு அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தி னால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர். அம்பாள் உலகம்மை சந்நதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரலி மஞ்சளை இட்டு இடிக்கின்றனர். இம்மஞ்சள் பொடியாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது.

பாவங்கள் போக்கும் பர்வதவர்த்தினி

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்க தலமான ராமேஸ் வரத்தில் ராமநாதசுவாமியுடன் அருள்கிறாள் பர்வத வர்த்தினி எனும் மலைவளர் காதலி. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.

அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று  மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் கொண்ட பிரமாண்ட கோயில் இது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சந்நதியில் பெருமாள் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.  அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும்.

பர்வதவர்த்தினி அம்பாள் சந்நதி பிராகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து தரிசனம் அருள்கின்றனர். விநாயகர், பிரம்மச் சாரி என்பதால் இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது.

குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், துறவிகள் போல, பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.

அருள்மழை பொழியும் அபிராமி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரருடன் அருள்கிறாள் அபிராமி. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடம் ஆகும். ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜைகள் இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும்.

 கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேஷ  நாட்கள். தல விருட்சமாக ஜாதிமல்லியும், தல தீர்த்தமாக அமிர்த புஷ்கரணி, கங்கை தீர்த்தமும் உள்ளன. தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இத்தல விசேஷம்.

இது ஆயுள் விருத்தி தலமாகப் போற்றப்படுகிறது. 60ம் கல்யாண ஆண்டு விழா, ஜாதக ரீதியான தோஷங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர். இங்குள்ள அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான்.

அன்னம் பரிமாறும் அம்பிகை

காந்திமதி, வடிவுடையம்மை எனும் திருப்பெயர்களுடன் தல விருட்சமாக மூங்கிலையும், தலத்தீர்த்தமாக பொற்றாமரைக் குளம் எனும் ஸ்வர்ண புஷ்கரணி, கருமாரி தீர்த்தம் ஆகியவற்றைக் கொண்டு இறைவி கோலோச்சும் திருத்தலம் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம்.

நெல்லையப்பர் லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும்.  காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது.

மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இக்கோயிலில் காந்திமதி அம்பாள், தன் கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சந்நதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் வகைவகையான நைவேத்யங்களை சிவன் சந்நதிக்குக் கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர்.

இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் உறவில் எந்த பிரச்னையும் வராது என்பது திண்ணம்.

அஷ்டமி திதியின் அம்பிகைக்கு கல்யாணம்


தன் நாயகன் ஐயாறப்பனுடன் தர்மசம்வர்த்தினியாக தேவி திருவருள்புரியும் தலம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவையாறு.  சூரிய புஷ்கரணியை தல தீர்த்தமாகக் கொண்ட தலம் இது. இந்தக் குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணு வின் அம்சமாக கருதப்படுகிறாள்.

எனவே திருவையாறு எல்லைக்குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும். இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள்.

ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தர்மசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள்.

எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவதுபோல, இத்தலத்தில் தெற்கு கோபுர வாயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாத்துகிறார்கள். சிலசமயங்களில் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள்கூட சாற்றப்படுவதுண்டு.

இங்கே மூலவர் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடாமுடியை மிதிக்கக்கூடாது என்பதால் சந்நதியை வலம்வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நவகிரகங்களில் இது சூரியத்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிராகாரங்களைக் கொண்டது. இங்குள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி அடைகிறது. சூரியன் இந்தக் கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.

கவலைகள் போக்கும் மாகாளி

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி ஆலயத்தில் மாகாளி, காளி சக்தி பீட நாயகியாய் அருள்கிறாள். தல விருட்சமாக பலா மரமும் தல தீர்த்தமாக முக்தி தீர்த்தமும் உள்ளன.  நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை. நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.  ஈசனிடம் போட்டி தாண்டவமாடிய காளி, ஈசனைப் போன்ற தாண்டவத்தை தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள்.

அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி, ‘என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்திற்கு வருபவர்கள், முதலில் உன்னை வழிபட்டபின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,’ என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். பரணி நட்சத்திரக்காரர்கள் கட்டாயம் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய தேவி இவள்.

திருவருள் பாலிக்கும்  திருவருணை நாயகி

அம்பிகை அபீத குஜாம்பாள் எனும் உண்ணாமுலையம்மனாக திருவருட்பாலிக்கும் தலம் திருவண்ணாமலை. தலமரமாக மகிழமரமும், தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தங்களும் உள்ளன.

இங்கு ஆடிப்பூரம் அன்று தீமிதி திருவிழா அம்மன் சந்நதி முன்பாக நடக்கும். பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்று தான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் திருவண்ணாமலையை கிரிவலம் வருதல் சிறப்பு.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. சுவாமிக்கு வேஷ்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாத்து தல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமி அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திக்கடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள்.

கவலைகள் போக்கும் கமலாம்பாள்

கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள் என முப்பெருந்தேவியர்கள் திருவருள் புரியும் திருத்தலம் திருவாரூர். தல விருட்சமாக பாதிரி மரத்தையும், தல தீர்த்தமாக கமலாலயக் குளத்தையும் கொண்ட தலம்.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கமலை சக்தி பீடம் ஆகும். திருவாரூரில் மூலவரை வன்மீகநாதர் என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள். கலைமகள், மலைமகள், அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக அம்பிகை விளங்குகிறாள்.

வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணிபோல் காட்சி தருகிறாள். மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியன நிறைவேறுகின்றன.

அம்மன் சந்நதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும். தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர்தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் ‘திருவாரூர் தேரழகு’ என்பார்கள். இங்குள்ள உற்சவ அம்மனான ‘மனோன்மணி’க்கு ஆடிப்பூரத்தில் விழா நடக்கிறது.

பாவங்களைப் போக்கும் பிரம்ம வித்யாம்பிகை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரருடன் இணைந்து அருள்பாலிக்கிறாள் பிரம்ம வித்யாம்பிகை. தல விருட்சங்களாக வடவால், கொன்றை, வில்வ மரங்களும், சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்களும் கொண்ட தலம். புராணப் பெயர் ஆதிசிதம்பரம். தேவியின் சக்தி பீடங்களில் இத்தலம் பிரணவசக்தி பீடமாக போற்றப்படுகிறது. மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து அவரைத் தன் கணவனாக பெற்றார்.

பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்யாம்பிகையானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபடுவது சிறப்பு. நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வச் செழிப்பு), வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம். கீழ்க்கரம் அபயமளிக்கிறது.

இடது கீழ்க்கரம் திருவடிகளின் பெருமையை சுட்டுகிறது. இத்தல தரிசனம் பூர்வ ஜென்ம பாவங்களை நீக்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. நரம்பு சம்பந்தமான நோய்களும் குணமாகும், கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிட்டும். பேய், பிசாசு தொல்லைகள் நீங்கும்.

அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் தண்டினீ பீடம் எனும் ஞானசக்தி பீடத்தில் வாராஹியின் அம்சமாக அருள்கிறாள் அகிலாண்டேஸ்வரி. தல விருட்சமாக வெண்நாவல் மரமும், நவ தீர்த்தங்கள் தல தீர்த்தங்களாகவும் உள்ள திருத்தலம். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படா
திருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் ‘அகிலாண்டேஸ்வரி’ என்றழைக்கப்படுகிறாள். ‘அகிலாண்டேஸ்வரி’, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக் காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம்.

எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலையைத் தான் அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சந்நதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் தன் சந்நதிக்குத் திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.

-ஸ்ரீசரண்