ஓஷோ மறைந்திருக்கும் உண்மைகள்



தன் பிறப்பைத் தானே முடிவு செய்கிறது ஒரு குழந்தை

வானத்து விண்மீனின் அன்றைய நிலைக்கும் அன்று பிறக்கும் ஒரு குழந்தைக்கும் தொடர்பு இருக்கிறது. அது எப்படி?இந்த வினா, தர்க்கரீதியாகவும், தெளிவாகவும் இருப்பதுபோல் தோன்றுகிறது. பூமியில் பிறக்கும் ஒரு குழந்தைக்கும், வானத்து விண்மீனுக்கும் தொடர்பு இல்லையென்றே தோன்றுகிறது. ஆனால், பிரவுன், பிக்கார்டி, டமாட்டோ போன்ற பலரின் ஆய்வுகளிலிருந்து நமக்கு ஒன்று தெளிவாகிறது. விண்மீன்கள் மனிதனின் முழு வாழ்வையும் பாதிக்கின்றன என்று தோன்றுகிறது. ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தனி மனிதனும் விண்மீனின் பாதிப்பிற்கு உள்ளாகிறான் என்பதை அறிவோம்.

இன்னொன்று: ஜோதிடம் ஒரு விஞ்ஞானம். இது மிகப் புராதனமானதாக இருப்பதால் வளர்ச்சி பெறவில்லை என்று நினைக்கிறோம். ஆனால், என் கருத்து இதற்கு நேர் மாறானது. சில வளர்ச்சி பெற்ற நாகரிக சமுதாயங்களில், இந்த விஞ்ஞானம் எல்லையற்ற வளர்ச்சியைப் பெற்றிருந்தது. ஆனால், அந்தச் சமுதாயங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. ஜோதிடக் கலையின் துண்டு துணுக்குகளே நம்மிடம் மிஞ்சியிருக்கின்றன.

ஜோதிடம், வளர்ச்சி பெறவேண்டிய புதிய கலை அன்று. அறிவியலாக ஒரு காலத்தில் நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. அதை வளர்த்த சமுதாயங்கள் அழிந்துவிட்டன. எத்தனையோ சமுதாயங்கள் வரும், போகும். அதனால் அவர்களால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பெறும் அடிப்படைகள் அழிந்து விடுகின்றன. இன்று, விஞ்ஞானம் அதை அணுகி ஆராய முன்வந்திருக்கிறது. பிறக்கும்போது ஒரு குழந்தையின் நிலை, மிகுந்த துடிப்புள்ள, மிக நுட்பமாக, புகைப்படச் சுருள்போல இருக்கின்றது. விண்மீன்கள் மனிதனை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிய, இரண்டு மூன்று விஷயங்களை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. விண்மீன்கள் மனித வாழ்வைப் பாதித்தால்தான், ஜோதிடமே இருக்க முடியும்.

இரட்டைக் குழந்தைகள் நிலை பற்றி நாம் புரிந்து கொள்ள முயல்வது நல்லது. ஒரே கருமுட்டை இரண்டாகப் பிரிந்ததால் உருவாகிப் பிறந்த இரட்டையர் ஒரு பக்கம். இன்னொரு பக்கம், தாயின் கருப்பையில் இரண்டு தனித்தனிக் கருக்கள் ஒரே சமயத்தில் தோன்றி, வளர்ந்து, பிறந்த இரட்டையர். முதல்வகை அபூர்வமாகவே தோன்றுகிறது. அதாவது, ஒரே கருவிலிருந்து இரட்டையர் பிறப்பது. இவர்கள் ஒரே சமயத்தில் பிறப்பதால், இவர்களைப் பற்றிய ஆராய்ச்சியே முக்கியமானது. மற்றவகை இரட்டையரின் பிறப்பு நேரம் சற்றே மாறுபடுகிறது.

பிறப்பு என்பது நிச்சயமற்றதோர் அம்சம். கர்ப்பம் தரித்தலே இதன் முதல் காலகட்டம். சரியான பிறப்பு என்பதே இந்தத் தருணம்தான். தாய் வயிற்றில் கரு தோன்றுதலே உண்மையான பிறப்பு. தாயின் வயிற்றிலிருந்து குழந்தை வெளியே வருவதையே நாம் பிறப்பு என்கிறோம். ஆனால், அது இரண்டாம் பிறப்பு. இந்துக்கள் ஜோதிடத்தை மிக ஆழமாக ஆராய்ந்திருக்கிறார்கள். நாம் இப்போது அதில் ஆராயப் புகுந்தால், பிறப்பு என்பது, கரு தோன்றிய நேரமே என்பதை உணர்வோம். குழந்தை வெளியே வரும் நேரம் அல்ல.

அந்தக் கரு தோன்றுவதற்கான கூடலும், கர்ப்பம் தரித்தலும் நிகழும் காலத்தில் விண்மீன்களின் அமைப்பு குறிப்பிட்ட நிலையில் இருந்திருக்கும். அந்த அமைப்புதான் குறிப்பிட்ட வகைக் குழந்தை பிறக்கக் காரணமாகிறது. இதன் பின்னணியை நான் மேலும் விளக்க விரும்புகிறேன். அப்போதுதான் இந்தத் துறையில் நிகழ்ந்துள்ள பல ஆராய்ச்சி முடிவுகளையும்,
தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட நாளில் காலை ஆறு மணிக்குப் பிறந்தால், அந்த நேரத்தில், வானில் உள்ள விண்மீன்களின் அமைப்பு, அந்தக் குழந்தையின் வாழ்வைப் பாதிக்கும் என்று
பொதுவாக நினைக்கிறோம்.ஆனால், ஜோதிடத்தை ஆழமாக அறிந்தவர்கள் இந்தக் கருத்து சரியில்லை என்கிறார்கள். உண்மை இதற்கு மாறானது. ஒரு குழந்தை தான் பிறக்கும் நேரத்தைத் தானே முடிவு செய்கிறது! கிரகங்கள் எங்கே இருக்கும்போது பிறக்க வேண்டும் என்பதை, அதுவே தீர்மானிக்கிறது.

இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் கருக்கொள்ளும் காலத்தையும் அதுவே தீர்மானிக்கிறது! ஒவ்வொரு உயிரும் தான் எந்த வயிற்றில், எந்த நேரத்தில் கருவாகி எந்த நேரத்தில் பிறக்க வேண்டும் என்பதை முன்பே முடிவெடுத்து விடுகிறது. கரு உதிக்கும் நேரம் மிக முக்கியமானது. அந்தக் கண நேரத்தின்போது, இந்தப் பிரபஞ்சம் எப்படி இருந்தது என்பதும் முக்கியமானது. அந்தக் கணத்தில்,
பிரபஞ்ச வாயில் திறப்பதற்கான சாத்தியக்கூறு என்ன என்பது மிக முக்கியமான வினா.

ஒரே கரு முட்டையிலிருந்து இரண்டு கருக்கள் தோன்றினால், அவற்றின் கர்ப்ப நேரம் ஒன்றே. அவை பிறக்கும் நேரமும் ஒன்றே. அவர்களின் வாழ்வும் ஒன்று போலவே இருக்கும். அதனால், அவை பிறந்த காலம் முக்கியமில்லை என்று சொல்வது கடினம். அப்படிப் பிறக்கும் இரட்டையரின் அறிவுக் கூர்மை ஒன்று போலவே இருக்கும். சிறு வேறுபாடு தோன்றினால் அது நமது அளக்கும் குறைபாட்டினால் ஏற்படுவதுதான்.  இன்றும்கூட அறிவைத் துல்லியமாக அளக்கும் முறையை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லையே!

ஒரே கருவில் உதித்த இரட்டையர், வேறு வேறு இடத்தில் வளர்க்கப்பட்டாலும், அவை அறிவுக் கூர்மையில் வேறுபடுவதில்லை. ஒன்றை இந்தியா விலும் மற்றொன்றைச் சீனாவிலும் வளர்த்தாலும் சரி, ஒரு சகோதரம் இருப்பது மற்றொன்றிற்குத் தெரியாமல் இருந்தாலும் சரி, அவை ஒரே புத்திக் கூர்மையுடன்தானிருக்கும். பிறக்கும் காலத்தில் ஏற்பட்ட சக்தியுடன், அதன் அறிவுக்கூர்மை சம்பந்தப்பட்டிருப்பது ஆச்சரியமான அம்சம்தான்.

சீனாவில் வாழும் குழந்தைக்கு சளி பிடித்தால், அதே சமயத்தில் இந்தியாவில் வாழும் அதன் இரட்டைக்கும் சளி பிடிக்கும். அவர்கள் இறப்பும்கூட பொதுவாக ஒரே நாளில் இருக்கும். அதிகப்படியாக மூன்று ஆண்டுகள் இடைவெளி இருக்கலாம், அதற்குமேல் இருக்காது. இரட்டையரில் ஒன்று இறந்தால் மூன்று நாட்களிலிருந்து மூன்று ஆண்டு இடைவெளிக்குள் மற்றதும் இறந்துவிடும். இரண்டின், பழக்க வழக்கங்கள், உணர்வுகள் எல்லாம் ஒன்று போலவே இருக்கும். மற்றவற்றிலும் ஒற்றுமை காணப்படும். ஒருவர் மற்றவரின் பிரதி போலவே செயல்படுவார்.

ஒவ்வொரு மனிதரின் தோலும், தனித்தன்மை கொண்டது. என் கை சிதைந்தால் மேலே தோல் வைத்துப் பழுது பார்ப்பார்கள். அதற்கு உங்கள் தோல் உதவாது. என் உடலின் தோல்தான் எனக்குப் பொருந்தும். இந்த உலகில், வேறு யாருடைய தோலும் எனக்குப் பொருந்தாது. மற்றவர் தோலை என் உடல் ஏற்றுக்கொள்ளாது. ஆனால், ஒரே கரு முட்டையிலிருந்து பிறந்த இரட்டையரில் ஒருவர் தோல் மற்றவருக்குப் பொருந்தும்; அதை அவர் உடல் ஏற்றுக்கொள்ளும்.

ஏன் அப்படி? காரணம் என்ன? பெற்றோர் என்பதால் அல்ல, ஒரே பெற்றோருக்குப் பிறந்த இரண்டு சகோதரர்கள் என்றாலும், ஒருவர் தோல் மற்றவருக்குப் பொருந்தாது. ஒரே கருவில் உதித்த இரட்டையருக்கே அது பொருந்தும். கரு உருவாகிய காலமே அந்த ஒருமைப்பாட்டை நிர்ணயிக்கிறது. பண்புகள், அறிவுக் கூர்மை, வாழ்நாள், மரணம் எல்லாவற்றையும் அதுதான் நிர்ணயிக்கிறது. ஒருவர் நோயுற்றால், மற்றவரும் நோயடைவார். அவ்வளவு முக்கியமானது கரு உருவாகும் காலம்.

அதைவிடப் பிறக்கும் காலமே முக்கியமானது என்று ஜோதிடம் சொல்கிறது. இதுநாள்வரை அறிவியல், ஜோதிடத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சூழல் வளர வளர, புதிய சோதனைகள் செய்யப்பட்டு, நமக்கு உதவும். நாம் செயற்கைக் கோள்களை விண்வெளியில் மிதக்க விட்டிருக்கிறோம். விண்மீன்கள், எரிகற்களால் பூமியைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. செயற்கைக் கோள்களால் இதையெல்லாம் நாம் கண்டு பிடித்திருக்கிறோம். இவற்றால் பாதிக்கப்படாத பொருள் பூமியில் எதுவுமே இல்லை.

நிலாவினால், கடல் பாதிக்கப்படுவது நமக்குத் தெரியும். கடல் நீரில் தண்ணீரும் உப்பும் எந்த விகிதத்தில் உள்ளனவோ அதே விகிதத்தில், நம் உடலிலும் இருப்பதை நாம் கவனிப்பதே இல்லை. நம் உடலின் எழுபது சதவிகிதம், தண்ணீர்தான். இந்த நீரில் உள்ள உப்பின் விகிதம்தான், அரபிக் கடல் நீரிலும் இருக்கின்றது. கடல்நீர் நிலாவினால் பாதிப்படைந்தால், நம் உடலிலுள்ள நீரும் பாதிப்பு அடையாதா?

இது தொடர்பாக, அண்மையில் கண்டறியப்பட்ட இரண்டு மூன்று உண்மைகளை மனதில் வைப்பது நல்லது. முழுநிலா நாளில், உலகில் பைத்தியத் தன்மை கூடுதலாகிறது. மற்ற வளர்பிறை, தேய்பிறை நாட்களில் அது குறைவு. அதிகம் பைத்தியமாவது பவுர்ணமி நாட்களில்தான். பைத்தியக்கார விடுதிகளில், பவுர்ணமி நாட்களிலேயே அதிகம்பேர் சேர்க்கப்படுகிறார்கள்; அமாவாசை நாட்களிலேயே அதிகம்பேர் அங்கிருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள் என்ற புள்ளிவிவரங்கள் இப்போது கிடைத்திருக்கின்றன.

ஆங்கிலத்தில் மனநலம் சிதைந்தவரைக் குறிக்கும் சொல்: ‘லுனாடிக்’. இந்தியில், ‘சாந்த்மர’. ‘சாந்த்’, நிலாவைக் குறிக்கும் இந்திச் சொல். ‘சாந்த்மர’, ‘லுனாடிக்’ இரண்டுமே மூவாயிரம் ஆண்டுப் பழமை கொண்ட சொற்கள். வான்மதிக்கும், மதியிழந்தவர்க்கும் தொடர்புண்டு என்பது அந்த காலத்து மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. முழுமதி, மதியிழந்தவரை பாதிக்கும் என்றால் அறிவு படைத்தவரை ஏன் பாதிக்காது?

மூளையின் அமைப்பும், உடலில் கட்டமைப்பும், எல்லாருக்கும் ஒன்று போலவே இருக்கிறது என்றாலும், வான்மதி, மதிநலம் சிதைந்தவரை அதிகமாகவும், நிலைத்த மதி படைத்தவரைக் குறைவாகவும் பாதிக்கிறது. அளவு வித்தியாசம், அவ்வளவுதான். புத்தி நிலையாக இருப்பவரை நிலா பாதிக்காமல் இருப்பது என்பது சாத்தியமே இல்லை. அது சாத்தியம் என்றால் யாருக்குமே பைத்தியம் பிடிக்காதே! மதிகெட்ட மனிதரும் ஒரு காலத்தில் மனநிலை சரியாக இருந்தவர்தானே? அவர்தானே பாதிக்கப்பட்டுப் பைத்தியமாயிருக்க வேண்டும்?

ஜோதிடத்தில் சுத்தமாக நம்பிக்கை இல்லாத பேராசிரியர் பிரவுன் செய்த ஆராய்ச்சி மிகவும் சுவையானது. அவர் நாத்திகர். ஜோதிடத்தை ஏளனம் செய்து வந்தவர். இருந்தாலும் ஓர் ஆய்வு நடத்திப் பார்ப்போம் என்று அதில் இறங்கினார். தளபதிகள், மருத்துவர்கள் மற்ற திறமைசாலிகள் பலரது ஜாதகக் குறிப்புகள் பலவற்றை அவர் சேகரித்தார். அவருக்கு மிகவும் சிக்கல் ஏற்பட ஆரம்பித்தது! குறிப்பிட்ட கிரகங்களின் அமைப்பில், குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் மட்டுமே குறிப்பிட்ட தொழிலில் இருந்தார்கள்; பிரகாசித்தார்கள். செவ்வாயின் ஆதிக்கத்தில் இருந்தவர்களே தளபதிகளாக இருந்தார்கள். கல்வியாளர்களுக்கு செவ்வாயின் பாதிப்பே இல்லை.

ஐம்பதினாயிரம் பேரை ஆராய்ந்ததில், செவ்வாயின் பாதிப்பு உள்ளவர்களே, ராணுவத்தில் இருப்பது தெரிந்தது. படைத் தளபதிகள் பிறக்கும்போது, செவ்வாய் உச்சத்தில் இருந்திருக்கிறது. போரெதிர்ப்பாளர்கள் எவருமே செவ்வாய் உச்சத்தில் இருக்கும்போது பிறந்தவர்கள் அல்லர்! எங்கோ அங்கொன்றும், இங்கொன்றுமாக விதிவிலக்குகள் காணப்பட்டன.

கணித மேதைகள் வேறு ராசியில் பிறந்தார்கள், கவிஞர்கள் வேறு ராசியில். விதிவிலக்கு அரிதாகவே காணப்பட்டது. கணித நிபுணர்கள் பிறந்த ராசியில் கவிஞர்கள் பிறக்கவே இல்லை!
கவிஞர்கள், கணித மேதைகள், போர்வெறியர்கள், தளபதிகள், சமாதானவாதிகள் போன்ற பலருக்கும் குணாதிசயங்களும், பழக்க வழக்கங்களும் வேறுவேறுதான். அதேசமயம், கணிதமேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், உலகில் சமாதானம் நிலவ வேண்டும் என்று சொல்லலாம்;

ஞானி நீட்ஷே, ‘போரே இல்லாமல் போய்விடும் நாள், உலகம் அர்த்தம் இழந்துவிடும் நாள்’  என்று சொல்லலாம். அது அறிவு பூர்வமான வாதம் மட்டுமே. அல்லது, நட்சத்திரங்களின் மோதலா? அவர்களுக்குள் ஏற்படும் அறிவு வாதமா அல்லது பிறந்த நேரங்களின் முரண்பாடா?

(தொடரும்)

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017