ராகு-கேது பரிகாரத் தலங்கள்



சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சியைப் போலவே ராகு-கேது பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், ஜோதிடக் கலை, ராகுவை யோகக்காரகன் என்றும், கேதுவை ஞானக்காரகன் என்றும் உயர்வாகப் பேசுகிறது. ஒருவர் திடீரென்று அதலபாதாளத்திற்குச் செல்வதும், அவரே சிகரத்தில் அமர்வதற்கும் ராகுவும் கேதுவும்தான் காரணம். மனிதனின் Subconcious mind எனும் நனவிலி மனம்தான் ராகு. அதனால்தான் ஜோதிடத்தில் கனவுகளைப் பற்றி சொல்பவராகவும் ராகு இருக்கிறார்.

Sixth sense  என்று சொல்லப்படும் ஆறாவது அறிவுதான் கேது. அதாவது, நம்மால் எளிதில் உணர முடியாத விஷயங்களை உணர்த்துவதுதான் கேது. உடலுக்கும், மனதிற்கும் அப்பாற்பட்ட இயற்கை சக்திகளை குறித்த அறிவை அளிப்பவர் கேது. எல்லோருக்கும் சிந்தனை உண்டு. அந்த சிந்தனைகளை ராகுவும், கேதுவும் தூண்டிவிடும் (stimulating)   பணியைச் செய்கிறார்கள். நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தனக்கென்று உரிய நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆனால், ராகுவுக்கும் கேதுவுக்கும் தனிப் பாதைகள் என்று இல்லை. பன்னிரண்டு ராசிக் கட்டங்களில் இவற்றுக்குத் தனிப்பட்ட வீடும் இல்லை. ராகுவும் கேதுவும் உண்மையில் கிரகங்களே அல்ல.

அதுவொரு நீண்ட நிழல். அந்த நிழலே  கிரகங்களுக்குரிய சக்தியை பெற்றிருக்கிறது. அதனாலேயே அதை   sலீணீபீஷீஷ் ஜீறீணீஸீமீts   என்று அழைத்தார்கள். எனவே, ராகு-கேது நம்முடைய ஜாதகத்தில் எப்படி சஞ்சரிக்கிறார்கள், அந்த சஞ்சாரத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன, அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை ஜோதிடர்கள் சொல்வார்கள். பரிகாரங்களாகச் சென்று வணங்குமாறு அவர்கள் அறிவுறுத்தக்கூடிய கோயில்கள் எல்லாம் பெரும்பாலும் நாகங்களே வணங்கிய கோயில்களாகவே இருக்கும். அப்படி அந்தக் கோயில்களில் வழிபடும்போது, இந்த நிழல் கிரகங்கள் பெயர்வதால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவு களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். பொதுவாகவே நாகநாதர் எனும் திருப்பெயரிலுள்ள அனைத்து சிவாலயங்களும், ஆதிசேஷன் போன்ற நாக மரபினர் வணங்கிய் தலம் யாவுமே ராகு-கேதுவால் ஏற்படக்கூடிய எதிர்மறை தாக்கத்தை குறைக்கும்.

ஸ்ரீகாளஹஸ்தி

இத்தலம் மிகவும் பழமையானது. புராணம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலம். பஞ்சபூதத் தலங்களுள் வாயுத் தலமாக விளங்குகிறது. தட்சிண கயிலாயம் எனும் சிறப்பையும் பெற்றது. கண்ணப்ப நாயனார் வீடுபேறு பெற்ற தலம். ஆதிசங்கரர் தம்முடைய சிவானந்தலஹரியில் கண்ணப்பரின் பக்தியை மெச்சிப் பாடுகின்றார். அர்ச்சுனன் தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து காளஹஸ்தீஸ்வரரையும், பரத்வாஜ மகரிஷியையும் வணங்கி சென்றதாக கூறப்படுகிறது.

‘‘அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி’’ என்று இத்தலம் சிறப்பிக்கப்படுகிறது. பாம்பு, சிலந்தி, யானை மூன்றும் வழிபட்ட தலமும் இதுவே. அம்பாளின் திருப்பெயர் ஞானப் பூங்கோதை. கருவறையில் காளஹஸ்தீஸ்வரர் பேரருள் பெருக்கி அருள்பாலிக்கிறார். அருகிலேயே மனோன்மணி சக்தியின் திருமேனி உள்ளது. கீழே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் போக மூர்த்தத் திருமேனி உள்ளது. சுகாசன அமைப்பிலுள்ள இந்த மூர்த்தம் மான், மழு ஏந்தி அபய ஹஸ்த, சிம்ம கர்ண முத்திரைகளுடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் அழகுற அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரதான சிறப்பே ராகு-கேது தோஷ பரிகார நிவர்த்தியே ஆகும். இத்தல ஈசனையும்,

அம்பாளையும் ராகு, கேது அம்சங்களாகச் சொல்வது வழக்கம். எனவே, இக்கோயிலில் எப்போதும் தோஷ பரிகார பூஜைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். அம்பாள் ஞானப் பூங்கோதையின் சந்நதி கிழக்கு நோக்கியது. அம்பாள் நின்ற திருக்கோலம். திருவடியில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு அமைந்துள்ளது. அம்பாளின் ஒட்டியாணத்தில் கேது உருவம் காணப்படும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடிய தலமிது. சென்னையிலிருந்து 110 கி.மீ., திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.

கீழ்ப்பெரும்பள்ளம்

இந்தத் தலம் கேது பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. சௌந்தர்ய நாயகி சமேத நாகநாதசுவாமி இங்கே அருள்பாலிக்கிறார். கேது, பிறப்பினால் அசுரன். இயற்பெயர் சுவர்பானு. பாற்கடலைக் கடைந்ததால் கிடைத்த அமுதத்தை தேவர்களுக்கு பரிமாறியபோது சுவர்பானு தேவர்களின் வடிவெடுத்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்தான். இதைக் கண்ட மோகினி வடிவிலிருந்த மகாவிஷ்ணு சுவர்பானுவை இருகூறாக்கினார்.

அசுரனின் தலை வேறாகவும், உடல் வேறாகவும் பிரிந்தது. பாம்பு உடலைக் கொண்ட பகுதி கருநிற ராகுவாகவும், ஐந்து தலைகளைக் கொண்ட கேதுவாகவும் மாறியது. இவர்கள் இருவருமே தவமியற்றி கிரகப் பதவியைப் பெற்றனர். இதற்கு நடுவே தங்களுக்கு அமுதம் கிடைக்கவில்லை என்பதற்காக வாசுகியை சுருட்டி எறிந்தனர். அதுவொரு மூங்கில் காட்டில்போய் விழுந்தது. வாசுகி அங்கேயே தவமியற்றியது. ஈசனின் தரிசனம் பெற்று எப்போதும் இங்கேயே இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டது.

அதோடு ஈசனையும் உமையையும் வழிபடும் பக்தர்களின் கேது தோஷத்தை தீர்த்தருளுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டது. ஈசன் நாகநாதசுவாமி எனும் பெயரோடும், அம்பாள் சௌந்தரியநாயகி எனும் திருப்பெயரோடும் அருள்கிறார்கள். கோயிலுக்கு முன்பாக நாகதீர்த்தம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய சந்நதியின் உள்ளே நுழைவாயிலில் திருமாளிகைப்பத்தில் விநாயகர், முருகர், துர்க்கை ஆகியோரின் சந்நதிகள் உள்ளன. இங்குதான் மேற்கு நோக்கி நின்ற நிலையில் கேது பகவான் எழுந்தருளியுள்ளார். தல விருட்சம் மூங்கில். நாகை மாவட்டம், மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் தருமகுளம் என்ற இடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.   

திருநாகேஸ்வரம்

இத்தலம் ராகு தோஷத்திற்கான தலைசிறந்த பரிகாரத் தலமாக திகழ்கிறது. பழமையை பறைசாற்றும் நெடிதுயர்ந்த கோபுரங்கள். வெளி வாயில், உள்கோபுர வாயில், வெளிப் பிராகாரம், உட் பிராகாரம், திருச்சுற்று மதில் என சீரான அமைப்போடு கோயிலை பார்த்துப் பார்த்து கட்டியிருக்கிறார்கள். இத்தலத்தின் மூலவரான நாகநாதரின் கோயில் சோமாஸ்கந்தரின் அமைப்பையொட்டி உருவாக்கப்பட்டுள்ளது. நாகநாத சுவாமி, முருகன், பிறையணிவாள் நுதல் அம்மை சந்நதிகள் சிறப்புற அமைந்துள்ளன. மூலவர் கருவறையை அடுத்த முதல் பிராகாரத்தில் மேல்புற விநாயகர், சந்திரசேகரர், முருகன், பஞ்சலிங்கம், லட்சுமி சிலையும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளன.

கோயிலின் நிருதி மூலையில் நாகவல்லி, நாகக் கன்னியோடு கம்பீரத்தோடு வீற்றிருக்கிறார். ராகு பகவான் கருணை பொங்கும் கண்களோடு அருள் பாலிக்கிறார். உடன் இரு தேவியரும் பக்தர்களைப் பார்த்து, உங்களுக்கு என்ன குறை என்று கேட்பது போலத் தோற்றமளிக்கிறார்கள். ராகு பகவானுக்கு தினமும் ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்தப் பால் நீலநிறமாக மாறுவதை கண்கூடாக காணலாம். நாகேஸ்வரரையும், பிறையணிவாணு தலாள் அம்மனையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்கிவது நலம் பயக்கும். கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கும்பகோணம்

நகரின் மையத்திலேயே நாகேஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. கும்பகோணம் கீழக்கோட்டம் நாகேஸ்வரன் கோயில் என்று இதனை அழைப்பர். கும்பத்திலிருந்து விழுந்த அமுத கலசத்தின் வில்வம், சிவலிங்கமாக மாறிய தலம் இது. மகாசிவராத்தி ரியின்போது நான்கு கால பூஜைகளில் முதல் ஜாம வழிபாட்டை ஆதிசேஷன் இங்கு மேற்கொள்வதாக ஐதீகம். அதனாலேயே ஈசனின் பெயர் நாகேஸ்வரர். கோயிலின் மூன்றாவது சுற்றில் மூலவரான நாகேஸ் வரர் சந்நதி அமைந்துள்ளது. அம்பாளின் அழகுப் பெயர் பிரஹந்நாயகி. மேலும் சூரியனும் இத்தல ஈசனை வழிபட்டுள்ளான். சூரியன் இத்தலத்தில் சித்திரை 11, 12, 13 தேதிகளில் வழிபடுகிறான்.

அப்போது லிங்கத்தின் மீது ஒளிபடரும். இக்கோயில் ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கொண்டி ருக்கிறது. இடப்பக்கம் நந்தவனமும், சிங்கமுக தீர்த்த கிணறும் உள்ளன. வலப்பக்கம் பிருஹன்நாயகி சந்நதியும், நடராஜ சபையும் அமைந்துள்ளன. இங்குள்ள நடராஜ மண்டபம் தேர் வடிவில் உள்ளது. இருபுறங்களிலும் உள்ள கல் சக்கரங்களின் ஆரங்களாக பன்னிரண்டு ராசிகளும் இடம்பெற, இரண்டு குதிரை களும் நான்கு யானைகளும் இழுக்கின்ற அமைப்பு மிகவும் அரிய ஒன்றாகும். பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள் எனும் மகான் புதர் மண்டிக்கிடந்த இக்கோயிலைப் புதுப்பித்து திருப்பணிகளை மேற்கொண்டார். இதற்காக இவர் தம் கழுத்தில் பித்தளைச் செம்பு ஒன்றை உண்டிக் கலயமாக கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சை எடுப்பாராம். ராகு-கேது தோஷமுள்ளவர்கள் இத்தல ஈசனை தரிசித்தாலே போதுமானது.

பாமணி

பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச்சரம் என்று இத்தலத்தை அழைப்பர். ஒரு காலத்தில் திருப்பாதாளேச்சுரம் என்றும் பாம்பணி என்றும் அழைக்கப்பட்டது. தற்போது மருவி பாமணி என்றாகிவிட்டது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது அதில் கிடைத்த விஷத்தை ஈசன் பருகினார். இதனால் குற்ற உணர்வு கொண்ட ஆதிசேஷன் தனக்குப் பாவம் ஏற்பட்டதாக சஞ்சலம் கொண்டார். இதைப் போக்கிக் கொள்ள தனஞ்செய முனிவ ராகப் பிறந்து இத்தலத்திற்கு வந்து லிங்கத்தை பூஜித்தார். அன்றிலிருந்து இத்தல ஈசனை நாகநாதசுவாமி என்றும் சர்ப்பபுரீஸ் வரர் என்றும் அழைத்தனர். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில் இது. கருவறையில் சுயம்பு லிங்கமாக நாகநாத சுவாமி தரிசனம் தருகிறார். அதன் மகாமண்டபத்தில் வடக்கு நோக்கி மனித முகமும் சர்ப்ப உடலுமாய், தனஞ்செய முனிவராக ஆதிசேஷன் தனிச் சந்நதியில் காட்சி தருகிறார்.

நாகராஜனான ஆதி சேஷனே சிவனை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்ற தால் நாக தோஷம் நீக்கும் முக்கிய தலமாக இக்கோயில் விளங்கு கிறது. அம்பாளின் திருப்பெயர் அமிர்த நாயகி. பாமணி நாகநாதர் புற்றுமண் லிங்கத் திருமேனி கொண்டவர். பொதுவாக புற்று லிங்கத்தின் மீது புனுகுச் சட்டத்தைக் கவசமாக அணிவித்து அதன் பிறகுதான் அபிஷேகம் செய்வார்கள். ஆனால், இந்த நாகநாதருக்கு எந்த கவசமும் அணிவிக் காமலேயே காலை, மாலை இருவேளையிலும் அபிஷேகம் நடைபெறுகிறது. மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் நாகநாதரையும், அமிர்தநாயகியையும் தரிசியுங்கள்.

திருப்பாம்புரம்
 
திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலமிது. வண்டுவார்குழலி சமேத பாம்புரநாதர் எனும் திருப்பெயரோடு இந்த ஆலயம் திகழ்கிறது. இத்தலத்தில் ஓருருவாகி ஈசனை நெஞ்சில் இருத்தி ராகுவும்-கேதுவும் அருள் பெற்றார்கள் என்பது புராண வரலாறு. ஆகையால் இத்தலத்திலுள்ள சுவாமி, அம்பாள் மற்றும் ராகு-கேதுவை வணங்குபவர்களின் தோஷங்கள் தீருகின்றன. ராகுவும்-கேதுவும் கோயிலின் ஈசான்ய மூலையில் தனிச் சந்நதியில் எழுந்தருளியுள்ளனர். ராகுகாலத்தில் இச்சந்நதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்யப்படுகின்றன. வாயு பகவானுக்கும், ஆதி சேஷனுக்கும் இடையில் தம்மில் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டு, வாயு பகவான் தன் வலிமையால் மலைகளை எல்லாம் புரட்டி வீச, ஆதி சேஷன் மலைகள் பெயரா வண்ணம் அவற்றைச் சுற்றி வ¬ளைத்து காக்க முயற் சித்தார்.

இருவரும் சம பலம் காட்டி நின்றதால், வெற்றியடைய முடியாத வாயு பகவான் தன் இயக்கத்தை நிறுத்திவிட, உயிர்கள் அனைத்தும் சோர்ந்தன. இந்திரன் உள்ளிட்ட தேவர் களின் வேண்டுகோளின்படி ஆதிசேஷன் போரிலிருந்து ஒதுங்கிக் கொண்டான். வாயு பகவான் வெற்றிக் களிப்பில் மலைகளை புரட்டி வீசினான். அதனால் கோபமுற்ற ஈசன் வாயு பகவானையும், ஆதிசேஷ னையும் பேயுருவாகும்படி சபித்தார். இருவரும் தம் குற்றம் உணர்ந்து ஈசனை வணங்கி தம்மைப் பொருத்தருளும்படி வேண்டிக்கொள்ள, வாயு பகவானை வைகை நதிக்கு வடக்கே, மதுரைக்கு கிழக்கில் பூஜை செய்து விமோசனம் பெறுமாறும், ஆதிசேஷனை திருப்பாம்புரத்தில் தம்மை பன்னிரண்டு ஆண்டுகள் பூஜை செய்து விமோசனம் பெறுமாறும் அருளினார். அதன்படி ஆதிசேஷன் இத்தலத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி விமோசனம் பெற்றான். சிவராத்திரியில் மூன்றாம் கால பூஜையை ஆதிசேஷன் இத்தலத்தில் நிகழ்த்துகிறார்.

இறைவன் பாம்புரேச்வரரின் சிவலிங்கத் திரு உருவை வணங்கிய வண்ணம் உற்சவர் ஆதிசேஷன் கருவறையில் எழுந்தருளி யுள்ளார். அம்பாள் வண்டுசேர் குழலியின் சந்நதி இறைவன் சந்நதிக்கு இடப்புறமாக வடக்குப் பிராகாரத்தில் அமைந் துள்ளது. இத்தலம் திருவாரூர் மாவட்டம் குடவாசல்-பேரளம் வழியில் இருக்கிறது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையி லிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். 

ஸ்ரீவாஞ்சியம்
 
ஸ்ரீவாஞ்சியம் என்றாலே எல்லோருக்கும் எமதர்மன் ஈசனுக்கு வாகனமாக அமைந்த புராணக் கதைதான் நினைவுக்கு வரும். இங்கிருக்கும் குப்த கங்கை எனும் தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தட்சன் இயற்றிய யாகத்தில் பங்கு கொண்டவர்களில் சூரியனும் ஒருவன். ஈசன் ஆணைப்படி வீரபத்திரர் அவனை தண்டிக்க, சூரியன் தன் பிரகாசத்தை இழந்தான். ஈசனின் பாதங்களில் விழுந்தான். அவன் ஸ்ரீவாஞ்சியத்தில் குப்தகங்கையில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் வழிபட்டால் சிவ துரோகம் நீங்கும் என்றார் ஈசன்.

அவ்வாறே சூரியன் தன் ஒளியை மீண்டும் பெற்றான். இதனால் சூரியனுக்கு உகந்த கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு குப்த கங்கையில் நீராடினால் பஞ்சமா பாவங்களும் மன்னிக்கப்படும் என்பது ஐதீகம். தலவிருட்சம் - சந்தன மரம். கோயில் முதல் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியன், பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான், மகிஷாசுரமத்தினி ஆகிய சந்நதிகள் உள்ளன. காசிக்கு சமமாக அகோரேஸ்வரர், பஞ்சநாதேஸ்வரர், மயூரநாதேஸ்வரர்,

மகாலிங்கேஸ்வரர் சந்நதிகளும் உள்ளன. இத்தலத்தில் யோகபைரவரும் அருள்புரிகிறார். இவரை வழிபட, யோகங்கள் கிட்டும் என்பார்கள். பொதுவாக பிற கோயில்களில் தனித்தனி மூர்த்தியாகக் காட்சியளிக்கும் ராகுவும் கேதுவும் ஒரே மூர்த்தத்தில் அருள்பாலிக்கும் அபூர்வத்தை வேறெங்கும் காண முடியாது. இந்த அமைப்பு ‘சண்டராகு’ என்று சொல்லப்படுகிறது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம்.

பேரையூர்

இந்த அருந்தலத்தை பேரேஸ்வரம் என்றும் செண்பகவனம் என்றும் அழைப்பர். சுயம்பு லிங்கமாக விரித்த நாகமோடு நாகநாதர் எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்பாலிக்கிறார். எல்லா நாக சக்திகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் கம்பீரத்தோடு வீற்றிருக்கிறார். யோகம் வளர்க்கும் இந்த நாயகர் இகலோகமான நம் வாழ்க்கையில் வேண்டுவன யாவையும் நாம் கேட்காமலேயே அருள்கிறார். முக்கிய நாகர் சிலைக்கு  பால் அபிஷேகம் செய்யும்போது உடலில் நீலநிறம் காட்டுவது அதிசயத்திலும் அதிசயம். அம்பாளின் இணையற்ற நாமம் பிரஹதாம்பாள். இந்தக் கோயிலின் தீர்த்தமும் நாகதீர்த்தம்தான். புண்ணிய புஷ்கரிணி என்றும் அழைப்பர்.

இந்த தலத்தின் பிரதான விஷயமே நாத ஒலி எழும் சுனைதான். சுற்றிலும் நாகர்கள் படமெடுத்து காக்க, என்றும் வற்றாத சுனைக்குள் நாக நாதரே அருவமாக வீற்றிருக்கிறார். நீர்ச்சுழியலோடு வரும் தென்றல் காற்றே ஒரு பாம்பு மூச்சு விடுவது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. எண்ணி மாளாத அளவுக்கு இங்கு நாகர் சிலைகளை  பிரதிஷ்டை செய் திருக்கிறார்கள். ஆமாம், ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் இங்கு பரிகாரமாக நாகர் சிலைகளையே பிரதிஷ்டை செய்துள் ளனர். புதுக் கோட்டை -  திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் நமனசமுத் திரத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

நயினார்கோவில்

நாகராஜன் இறைவனை வணங்கிய தலம் இது. எனவே, இறைவன் நாகநாதர் எனப்படுகிறார். இத்தலத்திற்கு திருமருதூர், வாசுகி மங்கலம், சேஷபுரம், நயினார் கோவில் என்று பல்வேறு திருப்பெயர்கள் உள்ளன. வாய் பேசமுடியாத ஒரு முகமதியப் பெண்ணை இத்தல இறைவன் பேச வைத்தமையால் இறைவன் நயினார் ஆண்டவர் என்றழைக்கப்படுகிறார். நாகலிங்கப் பெருமானின் சந்நதி மேற்கு முகமாக அமைந்திருக்கிறது. நாமதேவரின் கீதம் கேட்பதற்காகவே பெருமான் இப்படி மேற்கு முகமாக திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை, ‘‘நாமதேவர் நல்லிகை கேட்டு போற்றுபவர்க்காய் மேற்திசை திரும்பியும்’’ என்று நாகநாதர் சதகம் குறிப்பிடுகிறது.

கருவ றைக்கு பின்புறம் புற்று அமைந்துள்ளது. இங்கு மருத மரத்தினடியில் நயினார் பெருமான் நாகவடிவில் காட்சியளித்த தாக தல புராணம் கூறு கிறது. அம்பாள் சௌந்தர்ய நாயகி எனும் பெயரோடு அருள்பாலிக்கிறாள். அர்த்த மண்டபத்திற்கு எதிரேயுள்ள தடாகத்து நீரைப் பருக, நோய்க ளெல்லாம் நீங்குவதாக ஐதீகம் நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தோர் இத்தலத் திற்கே வந்து ராகு-கேது தோஷ நிவர்த்தி பரிகாரங் களை செய்து கொள்கின்றனர். மருதமும், வில்வமும் தலவிருட்சங்களாக உள்ளன. இத்தலம் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. 

நாகப்பட்டினம்

நாகை நகரம் சரித்திரமும், புராணமும் கலந்து இழைந்த கடற்கரைப் பட்டினம். ஈசனும், திருமாலும் நிகரிலா அருளாட்சி புரியும் புண்ணிய பூமி. புண்டரீகன் எனும் பக்தனை காயம் என்கிற உடம்போடு ஈசன் தன்னிடத்திலே ஆரோகாணமாக அதாவது அப்படியே ஏற்றுக் கொண்டதால் (காயம் - ஆரோகணம் ஈஸ்வரர்) காயாரோகணேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். நாகராஜனான ஆதிசேஷன் இத்தல ஈசனை வணங்கி பெரும்பேறு பெற்றான். இதனாலேயே இத்தலம் நாகப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. மீனவர் குலத்தில் பிறந்த அதிபத்தரை கடலன்னை தாலாட்டி வளர்த்தாள். அதிபத்தர், துள்ளித் தாவும் மீன்களைப் பிடித்து, ‘‘காரோணத்தோனிடம் சேர்ந்துவிடு. ஆதிபுராணரை அடைந்திடு’’ என்று சொல்லி, தாம் முதலில் பிடித்த மீனை மீண்டும் கடலில் விடுவார். கைநழுவி நீரில் வழுக்கியோடிய மீன்கள் மாயமாக மறைந்து காயாரோகணரை அடைவதைப் பார்த்து மகிழ்வார்.

 அதிபத்தரை வறுமை வாட்டியது. ஆனால், அந்த வறுமையிலும் தனக்கு அடுத்தடுத்து மீன்கள் கிடைக்காவிட்டாலும், முதலில் பிடிக்கும் மீனை காயாரோகணருக்கே அர்ப்பணித்தார். வறுமை, தன் கடுமையைக் காட்டியது. வயிறு காய்ந்தது. ஆனால், அவரது பக்தியோ வற்றாத கடலாக நாகைக் கரையில் அலை அலையாக புரண்டது. ஒருமுறை வலையைப் பிரித்துச் சோதித்த அதிபத்தர் அதில் ஒரே ஒரு நவரத்ன மீனைக் கண்டார்.

‘இன்று வந்த முதல் மீன் நீயே’ என்று சொல்லி தம் வறுமையை முற்றிலுமாகப் போக்கியிருக்கக்கூடிய அந்த மதிப்பு வாய்ந்த மீனையும் ஈசனுக்கே சமர்ப்பித்தார். நீரில் விழுந்த மீன் மறைந்தது. ஆனால், அங்கே காயாரோகணர் ரிஷிபாரூடராகக் காட்சி அளித்தார். அதீத பக்தியால் சிவந்தவரை ‘அதிபத்தா... அதிபத்தா’ என அன்போடு அழைத்தார். மீனவர்கள் அதிபத்தநாயனாரை கொண்டாடினர். இன்றும் கூட மீனவர்கள் இத்தல பெருமானையே முழுமுதற் கடவுளாக வணங்குகின்றனர். அம்பாளின் அருட்பெயர் நீலாயதாட்சி என்பதாகும். அழகுத் தமிழில் கருந்தடக்கண்ணியம்மை. அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. நாகை நகரின் மையத்தில் நீலாயதாட்சி உடனுறை காயாரோகணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.


சென்னை - குன்றத்தூர்

ஈடிணையற்ற பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலம் இது. சேக்கிழார் பெருமான், சோழ தேசத்தில் அமைச்சராக இருந்தபோது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமியை தரிசிப்பதை பெரும் பேறாகக் கருதினார். இப்படியொரு ஆலயத்தை தம் சொந்த ஊரில் அமைக்க ஆவல் கொண்டு, அதை நிறைவேற்றி மனநிறைவு கொண்டார். இத்தலத்தை வடநாகேஸ்வரம் என்று அழைத்தனர். இத்தலத்தில் நாகத்தின் கீழ் லிங்க உருவில் காட்சி தருகிறார் ஈசன்.

கோயிலினுள் சேக்கிழார் பெருமான் சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் நாகேஸ்வரர் அருள் பொழிகிறார். தலைப்பகுதியில் சிறிதளவு பின்னப்பட்டிருந்ததால் நாகேஸ்வரரை திருக்குளத்தில் இட்டு அருணாச லேஸ்வரரை மூலவராக பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தனர், சிவனடியார்கள். நாகேஸ்வரர், சேக்கிழார் பிரதிஷ்டை செய்த ஈசனல்லவா? அதனால் குளம் திடீரென ரத்தச் சிவப்பாயிற்று. சிவனடியார் கனவில், ‘ஏற்கெனவே இருந்த இடத்திலேயே பழையபடி நாகேஸ்வரரைப் பிரதிஷ்டை செய்யுங்கள்’ என்று தோன்றிய உத்தரவுக்கிணங்க பக்தர்கள் மீண்டும் அருணாசலேஸ்வரரை பிராகாரத் திலும், நாகேஸ்வரரை மூலவராகவும் பிரதிஷ்டை செய்தனர்.

பிராகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமியும் பிராகார முடிவில் காமாட்சி அம்மனும் தரிசனம் தருகிறார்கள். நாகேஸ்வரர் எனும் நாமத்தோடு அருள்பாலிப்பதாலும், ராகுவின் அம்சத்தோடு ஈசன் விளங்குவதாலும் ராகு தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடலாம். இன்றும் சர்ப்பங்கள் இரவில் இறைவனை வழிபட்டு வருவதாகக் கூறுகின்றனர். தாம்பரம், கோயம்பேடு, பூவிருந்தவல்லியிலிருந்து பேருந்து வசதி உண்டு.

சென்னை - கெருகம்பாக்கம்

                                                         
இத்தலத்தில் கேது பகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். இரு நாகங்கள் பின்னிப் பிணைந்த நிலையில், நடுவில் காளிங்க நர்த்தன கண்ணன் வடிவில் இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட வேளை கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்டவேளை பூஜைகள் விசேஷம். கோயிலில் முதலில், ஆதிகாமாட்சி, ஐந்தரை அடி உயரத்தில் அன்பே வடிவாய் திருக்காட்சி அளிக்கிறாள். மூலக் கருவறையில் ஈசன், நீல கண்டேஸ்வரராக அருள்கிறார். அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, வலி தாங்காமல் வாசுகி நஞ்சைக் கக்கியது. பாற்கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. இரண்டும் சேர்ந்து ஆலாலம் எனும் கொடிய விஷமாய் மாறின.

யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த நஞ்சை சட்டென விழுங்கினார் ஈசன். அதைக் கண்டு பதைபதைத்த பார்வதி, அந்த நஞ்சு தொண்டை யைவிட்டு நெஞ்சுக்குள் இறங்காதபடி அதை ஈசனின் கண்டத்திலேயே நிறுத் தினாள். ஈசன் நீலகண் டேஸ்வரர் ஆனார். ஈசனுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போல் ஒரு சிற்பம் காணப்படுகிறது. இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடுபலன்கள் குறைகிறது. சென்னை, போரூர்-குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் உள்ளது, இந்த ஆலயம். போரூர் சந்திப்பில் இருந்து 3 கி.மீ தொலைவு.

கோடகநல்லூர்

கோடகநல்லூரை கார்கோடக க்ஷேத்திரம் என்று அழைப்பார்கள். கார்க்கோடகன் எனும் பாம்பு ஒருமுறை காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டது. அந்தச் சமயத்தில் நளமகாராஜா கார்கோடகன் எனும் ராஜசர்ப்பத்தை காப்பாற்றினார். தன்னைக் காப்பாற்றிய நளனுக்கு உதவி செய்யும் பொருட்டு அவரைத் தீண்டி, அவரை யாரும் அடையாளம் கொள்ள இயலாதபடி மாற்றியது கார்க்கோடகன். உருமாறியதால், தன் மாமனாரின் அரண்மனையில் தேரோட்டியாகப் பணியாற்ற முடிந்தது அவரால். அது மட்டுமல்ல, அவர் தேரோட்டும் நேர்த்தியைக் கண்டு இது தன் கணவரைத் தவிர வேறு யாராலும் இயலாது என்று புரிந்து கொண்டு அவரை தமயந்தி அடையாளம் கண்டுகொண்டாள்.

அதேபோல அவள் சமைத்த உணவை உண்ட நளனும், தமயந்தியைத் தெரிந்துகொண்டார். இதற்கிடையில் ஏழரை ஆண்டுகள் சனி பாதிப்பு விலகியதால், மீண்டும் கார்க்கோடகன் நளனைத் தீண்ட அவர் பழைய ராஜ உருவைப் பெற்றார். நன்மைக்கே என்றாலும் நளனைத் தீண்டியதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள வழிதேடியது கார்க்கோடகன். தாமிரபரணி நதிக்கரையில் கயிலைநாதனை நோக்கி தவமிருந்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்று அறிவுறுத்தப்பட, அதன்படியே தவமிருந்தது அந்தப் பாம்பு. அதனாலேயே அந்தத் தலம் கார்க்கோடகநல்லூர் என்று பெயர் பெற்றது. அதன் தவத்தினை மெச்சிய பரமேஸ்வரன், கார்க்கோடகன் முன் தோன்றி பாவ விமோசனம் அளித்தார். அங்கே கயிலைநாதனாகக் கோயில் கொண்ட அவர், அந்தத் தலத்தில் எந்தப் பாம்பும் யாரையும் தீண்டக்கூடாது என்றும் ஆணையிட்டார்.

அதனால்தான் தற்போதும் கோடகநல்லூரில் விதவிதமான பாம்புகள் அலைந்து திரிந்தாலும் மனிதர்கள் யாரையும் அவை தீண்டியதாக சரித்திரம் இல்லை. கிழக்குப் பகுதியில் நாக தீர்த்தம் உள்ளது. பிரமாண்டமான நந்தி மேற்கு நோக்கியபடி உள்ளார். உள்ளே சென்றால் அன்னை சிவகாமி பேரருள் பொழிகிறார். கருவறையில் கயிலாயநாதர் எனும் பெயரோடு லிங்கத் திருமேனியில் ஈசன் அருள்பாலிக்கிறார். திருநெல்வேலி-பேட்டை வழியாக சேரன்மகாதேவி மற்றும் முக்கூடல் செல்லும் டவுன் பஸ்ஸில் சென்று கல்லூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து கோயிலுக்கு ஆட்டோ பிடித்து செல்லலாம்.

ஆம்பூர்

இத்தலத்தில் நாகரத்தின சுவாமி எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்பாலிக்கிறார். ஒரு பசு ஒரு புற்றில் பால் சொரிவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர் மக்கள். அருகே சென்று பார்த்தபோது உள்ளுக்குள் சிவலிங்கம் இருந்தது தெரிந்தது.  உடனே அவருக்கு ஒரு கோயில் நிர்மாணித்தார்கள். பாம்புப் புற்றில் இருந்தது சிவலிங்கம் என்பதால், மூலவர் நாகரத்தினசுவாமி என்று அழைக்கப்படுகிறார். அம்மனுக்கு அபயவல்லி என்பது திருநாமம்.

தலவிருட்சமாக வில்வமும், தலத் தீர்த்தமாக நாகதீர்த்தமும் திகழுகின்றன. மேலும், கோயிலுக்குள்ளேயே ஞானாம்பிகை உடனுறை காளத்திநாதர் தனிச்சந்நதியில் அருள்பாலிக் கிறார். மூன்று நிலை ராஜகோபுரங்களோடு பாலாற்றின் தென்கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

- கிருஷ்ணா