கருணை, கனிவு மிக்க மீன ராசி நேயர்களே! உத்யோகத்தின் இடர்பாடுகள் பற்றிய யோசனை, பெண் கல்யாண செலவுகள் பற்றிய பயத்தோடு இந்த மாதம் தொடங்குகிறது. 14ம் தேதி சூரியன் மாற்றமும் 27ம் தேதி சுக்கிரன் மாற்றமும் நடப்பு கஷ்ட நிலைகளை நிவர்த்தி செய்யும். அதிகாரிகள் மாற்றத்தால் தங்கள் வேலை பரிமளிக்கும். திருமண செலவுகளுக்கு வீட்டை விற்பதற்கு முன் சற்று நிதானியுங்கள், நண்பர் உதவி கிடைக்கும். உடல் நிலை 25ம் தேதிக்கு பிறகு சீராகும். 19ம் தேதி முதல் 21ம் தேதிவரை தொழில்முறை பிரயாணம் வெற்றி தரும். மகான்கள் தரிசனம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு: ஆழமாகப் படித்திருப்பீர்கள். ஆனாலும் வேகமாக எழுதுவதால் சரியான சொற்களைப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும். இந்த நிலை 25ம் தேதிக்கு பிறகு மாறும். கவலை வேண்டாம். 25ம் தேதிவரை வாகனங்களில் பள்ளிக்கு செல்பவர்கள் கவனமாக செல்லவும்.
விவசாயிகளுக்கு: பெண்களுடைய உதவியினால் எதிர்பார்த்த தொகை கிடைத்து தோட்ட வேலைகளை தொடரலாம். தானியங்களை 28ம் தேதிக்கு மேல் வியாழக்கிழமைகளில் விற்பது லாபத்தைத் தரும். கால்நடை மாற்றுவதோ, அதிகரிப்பதோ, தற்போது வேண்டாம். வீட்டுப் பெண்களுக்கு தோட்டங்களில் சர்ப்ப பயம் ஏற்படும்; ஜாக்கிரதை.
உத்யோகஸ்தர்களுக்கு: வெகுநாட்களாக காத்திருந்து தேடிய வேலைக்கு 11ம் தேதி அழைப்பு வரும். அலுவலர்கள் 14ம் தேதிக்கு பிறகு தலைமையின் ஆதரவினைப் பெறுவீர்கள். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிய வேண்டியிருக்கும். அதிகாரிகளிடம் தந்த வாக்கை காப்பாற்ற சுக்கிரன் உதவி புரிவான். உயர்பதவிக்காக எழுதிய பரீட்சை வெற்றியை தரும். மனைவி கர்ப்பம் தரிக்கும் நேரமாக இருப்பதால் கவனம் தேவை. வியாபாரிகள் மூலதன அதிகரிப்பை 25ம் தேதிக்குப் பிறகு செய்வது நல்லது.
பெண்களுக்கு: மகள் கல்யாணத்திற்கு வீட்டை விற்றோ, அடமானம் செய்தோ ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படும். செவ்வாய் அனுகூலமாக இல்லை. 28ம் தேதிவரை பொறுத்திருந்து செய்தல் நலம் தரும். 25ம் தேதிவரை சனி, சுக்கிரனின் ஆதரவு இருக்கிறது. வசதி வாய்ந்த பழைய பெண் நண்பர்கள் உதவியை நாடினால் லாபம் உண்டு.
அரசியல்வாதிகளுக்கு: 14ம் தேதியன்று ராசிக்கு வரும் சூரியன், ஞாயிற்றுக் கிழமைகளில் தலைமையின் அழைப்பை ஏற்படுத்துவார். உங்கள் அதிகாரம் நிலைபெறும். 28ம் தேதி மாறும் சுக்கிரன் இதற்கு உதவி செய்வார். இந்த மாதம் 7ம் தேதி மாலையில் அருகிலுள்ள புராதான கோயிலில் உள்ள அம்பாளுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்வது தடைகளை அகற்றி உயர உதவும்.
பெரியவர்களுக்கு: உஷ்ண ஆதிக்கத்தால் நோய் ஏற்படும். முருகனுக்கு அபிஷேகம் செய்வது நோயின் வீர்யத்தை குறைக்கும்.
அச்சாரங்கள்: 18ம் தேதி காலை 7 மணிக்குள்ளும் 28ம் தேதி மாலை 6 மணிக்குள்ளும் (ராகு காலம் நீங்கலாக) புதிய ஒப்பந்தங்கள் செய்ய நல்லது.
எச்சரிக்கை:28ம் தேதிக்கு பிறகு இரு சக்கர வாகன பிரயாணங்களில் மிகுந்த கவனம் தேவை. 10, 25, 26 தேதிகளில் பிரயாணம் செய்ய வேண்டாம்.
பரிகாரம்: பிள்ளையாருக்கு வஸ்திரம், மாலை சாத்துதல், அஷ்டதசபுஜ துர்க்கை தரிசனம், துர்க்கை ஸ்லோகங்கள் சொல்லுதல், கேட்டல் போன்றவை நலம் தரும்.