தர்மங்களை காப்பாற்றுவதற்காக தைரியமாக செயல்படும் தனுசு ராசி நேயர்களே! இம்மாதம் நிரந்தர வேலைகள் பற்றிய எதிர்பார்ப்பும் நிலையான வருமானத் தேவைகள் பற்றிய சிந்தனையும் துவங்குகிறது. குரு, புதன் இருவரும் தினசரி செயல்பாடுகளில் வலிமையான தாக்கத்தை உண்டாக்குவார்கள். உஷ்ண உபாதைகளும் தலைவலியும் இம்மாதம் சிரமப்படுத்தும். 21 முதல் 24ம் தேதிக்குள் பூர்வீக வீடு அல்லது நிலம் பெறுவதும் அதனால் தாயார் சந்தோஷப்படுவதும் நடக்கும். 27ம் தேதிவரை சுக்கிரன், குரு சேர்க்கை, தேவதா பூஜைகளில் ஈடுபாட்டை அளித்து அதனால் வளத்தையும் அதிகரிக்கும். இந்த மாதம் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை அறிஞர்கள் வீற்றிருக்கும் சபையில் பங்கேற்பீர்கள்.
மாணவர்களுக்கு: சூரியன், சுக்கிரன் அமைப்பு பள்ளியில் எந்த விவகாரங்களிலும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறது. 25ம் தேதிக்கு பிறகு சனி-ராகு அமைப்பு வாதத்தை அதிகரிக்குமாதலால் கிழங்குவகை உணவை தவிர்ப்பது நலம். வயதான பாட்டன் பாட்டிகளை 27ம் தேதிக்கு முன்பு பார்த்து, ஆசி பெறுவது நல்லது.
விவசாயிகளுக்கு: விவசாயிகள் மாட்டு பண்ணைகளாலும் விவசாய நிலங்களாலும் நிறைந்த ஆட்களாலும் எல்லா செயல்களிலும் வெற்றியும் தனலாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். 24ம் தேதி முதல் 29 தேதிவரை வெற்றி கிட்டும், சூரியன்-சனி சேர்க்கை பகைவர்களால் பயம் ஏற்படச் செய்யும். களத்துமேடுகளிலும் பொது இடங்களிலும் வழக்கமாக அமரும் இடத்தை உடனுக்குடன் மாற்றிவிடவும்.
உத்யோகஸ்தர்களுக்கு:இந்தமாதம் 11ம் தேதிக்குப் பிறகு நடைபெறும் நேர்காணலில் வெற்றிபெற்று வாகன வசதியுள்ள வேலை கிடைக்கப் பெறுவீர்கள். புதன் தரும் இந்த அமைப்பினால் நியாயமான அதிகாரியாக நீங்கள் திகழ்வீர்கள். அலுவலகத்தில் தங்கள் இருப்பினை கலகலப்பாக உணர்த்த கேது-சுக்கிரன் அமைப்பு உதவி செய்யும். சுக்கிரன் அமைப்பு அபூர்வமான பொருட்களை சம்பாதிக்க உதவுவான்.
பெண்களுக்கு: 13ம் தேதிவரை சூரியன்-செவ்வாய் அமைப்பு பிரயாணங்களில் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றிய எச்சரிக்கை தருகிறது. 14ம் தேதிக்குப் பிறகு நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தாங்களும் குடும்ப உறுப்பினர்களும் கவனமாக இருக்க வேண்டும். புதன்-செவ்வாய் அமைப்பினால் வயிற்று வலியை தீர்க்க கீரைவகை உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இளம் பெண்களுக்கு 25, 27 தேதிகளில் பிள்ளை பாக்கியத்திற்கு வாய்ப்பளிக்கும் கிரக நிலைகள் உள்ளன.
அரசியல்வாதிகளுக்கு: ஆட்சியில் உள்ளவர்கள் விரோதிகளாவார்கள் என்பதை சனி-சூரியன் அமைப்பு அறிவிக்கிறது. இதே போன்று 28ம் தேதிக்குப் பிறகு சுக்கிரன்-கேது அமைப்பு மனைவியையே பகையாளியாகும் நிலையை தெரிவிக்கிறது. அலமேலு மங்கைத் தாயார் தரிசனமும் வழிபாடும் நன்மை தரும்.
பெரியவர்களுக்கு: மனசஞ்சலங்கள் தவிர்க்க இயலாதது. இதனால் வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல நேரும்.
அச்சாரங்கள்: 5ம் தேதி காலை 7:30 மணிக்குள்ளும் 7ம் தேதி மாலை 4 மணிக்குள் (ராகு காலம் நீங்கலாக) 26ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 3 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நன்று.
பரிகாரம்: சுவாமிமலை சுவாமிநாதசுவாமியை தரிசனம் செய்யுங்கள். இந்த மாதம் சஷ்டி விரதம் இருத்தல் நன்மை தரும்.