டவுட் கார்னர் ?



- கி.ச.திலீபன்

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்னும் தண்ணீர் அருந்தக் கூடாது என்கிறார்கள். எனக்கு சாப்பிடும்போதுதான் நன்றாகத் தாகம் எடுக்கிறது. இதனால் இடையில் தண்ணீர் குடிக்கிறேன். ஏதும் விளைவுகள் ஏற்படுமா?
- சங்கீதா, கோபிச்செட்டிப்பாளையம்.

பதிலளிக்கிறார் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் பாசுமணி...
இரைப்பையில் திடம், திரவம், வாயு ஆகிய மூன்றுக்கும் தனித்தனி அடுக்குகள் உண்டு. இரைப்பைப் பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அதன் மேற்பகுதியில் நீர் தளும்பும். அதில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை போன்றவை மிதக்கும்போது வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வில் இரைப்பையையும் உணவுக்குழாயையும் இணைக்கும் வால்வு திறந்து விடும்.

இதனால் நெஞ்செரிச்சல், ஏப்பம், எதுக்களித்தல் ஏற்படும். இதனால்தான் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. சாப்பிடுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது. ‘அள்ளித் திணிச்சா அற்பாயிசு...  நொறுங்கத் தின்னா நூறாயிசு’ என்றொரு பழமொழி உண்டு. அது போல உணவை அவசர அவசரமாக அள்ளி விழுங்கக் கூடாது. நன்கு அரைத்து விழுங்க வேண்டும். அனுபவித்து சாப்பிட வேண்டும்.

அப்படி சாப்பிடும்போது தாராளமாக தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதுவும் குறிப்பிட்ட அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வயிறு நிரம்பும் அளவுக்குத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு தண்ணீர் குடித்த உடனே படுக்கவோ, குனியவோ கூடாது. ஏனென்றால் எதுக்களிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அளவோடு சாப்பிட்டு அளவோடு தண்ணீர் குடித்தல் நலம். எந்த விதியும் பொது விதியல்ல. அவரவர் உடலுக்கு எது பொருந்துகிறதோ அதைப் பின்பற்றுதல் நலம்.

(வாசகர்கள் இது போன்ற சந்தேகங்களை எங்களுடைய முகவரிக்கு அனுப்பலாம். உங்களுடைய சந்தேகங்களுக்கு ‘டவுட் கார்னர்’ பகுதியில்  விடை கிடைக்கும்.)