என் மனைவி நடிகர் விஜய்



Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil 
Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,Kungumam Thozhi 
Monthly  Magazine

                    பிரபலங்களின் மனைவிகள் பற்றி மக்களிடம் ஒரு மனச்சித்திரம் இருக்கவே செய்கிறது. அவர்களுக்கென்ன சுகவாசிகள்... கணவரின் புகழ் வெளிச்சத்தில் குளிர் காய்கிறவர்கள் என்பன போன்ற கமெண்ட்டுகளுக்கும் குறைவில்லை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்கிற மூத்தோர்மொழி இவர்களுக்கும் பொருந்தும்தான். ஆனாலும், யூகத்தில் ஒரு முடிவுக்கு வருவதைவிட, தங்களின் மனைவியைப் பற்றி சம்பந்தப்பட்ட பிரபலங்களே சொன்னால்தானே சரியாக இருக்கும்?

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவை பல விழாக்களில் கணவர், குழந்தை சகிதமாகப் பார்த்திருக்கிறோம். திருமதி விஜய்யின் அழகான முகமும் அடக்கமான தோற்றமும் நினைவில் பதிந்திருக்கிறதே தவிர, அவரது குணாதிசயங்கள் விஜய்க்குத்தானே தெரியும்? விஜய்யின் வாயினாலேயே அவரது மனைவிப் பற்றி சொல்லக் கேட்போமே!

‘‘காதலிக்கிற வயசுதான்... ஆனாலும், அப்ப அதுக்கு எனக்கு நேரமில்லைங்கிறதுதான் உண்மை. ஒரே நேரத்துல ரெண்டு, மூணு படங்கள் பண்ணிட்டிருந்த பீரியட். ‘ப்ரியமுடன்’ டைம்ல தான் கீதா அறிமுகமானாங்க. லண்டன்லேருந்து ஹாலிடேஸுக்கு வந்திருந்தவங்க, பொதுவான ஒரு நண்பர் மூலமா எங்க குடும்பத்துக்கு அறிமுகமானாங்க. ‘ஹாய்... ஹலோ’ சொன்னதோட சரி... பல்பு எரியலை... பட்டாம்பூச்சி பறக்கலை.

ரெண்டு வீட்டுப் பெரியவங்களும் பேசி, கல்யாணம் பண்றதுன்னு முடிவு பண்ணினாங்க. அப்புறம்தான் அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சோம். அந்த நேரம் எனக்கு ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ்ல நிறைய ஷூட்டிங் இருந்தது. அதை சாக்கு வச்சு முடியற போதெல்லாம் லண்டனுக்கு ஓடுவேன். அவங்களுக்கு நேரம் கிடைச்சா, இந்தியா வந்துடுவாங்க... இப்படியே ஒன்றரை வருஷம் போச்சு.

கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்பவும் ரொம்ப விளையாட்டுத்தனமாத்தான் இருந்தேன்.

25 வயசுல கல்யாணம்... 26 வயசுல பையன் பிறந்துட்டான். நானே குழந்தை மாதிரி இருந்தப்ப, எனக்கொரு குழந்தை வந்ததும்தான், திடீர்னு ஒரு பொறுப்பு வந்தது. கொஞ்சம் கொஞ்சமா அந்த வாழ்க்கைக்கு என்னைத் தயார்படுத்திக்க ஆரம்பிச்சேன்...’’

- நிதானமாகப் பேசத் தொடங்குகிறார் விஜய்.

‘‘ரொம்ப சின்ன வயசுலயே கல்யாணம், குழந்தைன்னு நான் குடும்பஸ்தன் ஆனதைப் பார்த்துட்டு, ‘இப்பல்லாம் 29, 30 வயசுக்குப் பிறகு, லைஃப்ல நல்லா செட்டிலானதும்தான் பசங்க கல்யாணமே பண்றாங்க. இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணியிருக்க வேண்டாம். ரெண்டு, மூணு வருஷம் வெயிட் பண்ணிருக்கலாம்’னு நிறைய பேர் சொன்னாங்க. எனக்கு அதுல துளிக்கூட வருத்தமில்லை. என்னைப் பொறுத்தவரை எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!

கீத் (மனைவி சங்கீதாவை விஜய் இப்படித்தான் செல்லமாக அழைக்கிறார்)தும், நானும் பழக ஆரம்பிச்ச முதல் நாளே பேசித் தெளிவுப்படுத்திக்கிட்ட விஷயம்னா, அது என் தொழிலைப் பத்தினதுதான். எது நிஜம், எது நிழல்னு அவங்க ரொம்பத் தெளிவா புரிஞ்சுக்கிட்டாங்க. நடிப்புங்கிறது என் தொழில். ‘ஆன் ஸ்கிரீன்’ல நான் எத்தனையோ நடிகைகளோட கட்டிப்பிடிச்சு, நெருக்கமா நடிக்க வேண்டியிருக்கும். கேமராவுக்கு முன்னாடி நடக்கற அந்த விஷயங்கள், கேமராவுக்கு பின்னாடி எங்க குடும்ப வாழ்க்கையை, நிம்மதியை பாதிக்கக்கூடாதுங்கிறதுல ரெண்டு பேரும் தெளிவா இருந்தோம். இப்பவும் என்னோட ஹீரோயின்கள் எல்லாரையும் நான் கீதாவுக்கு அறிமுகப்படுத்தி வச்சிடுவேன். என்னைவிட, அவங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆயிடுவாங்க. நமக்கும் பிரச்னை இல்லை பாருங்க!’’
- சிரிப்போடு தொடர்கிறது பேச்சு...

    Man of few words... மீடியாவுக்கு தெரிந்த விஜய் இப்படித்தான்! வீட்டிலும் சார் அப்படித்தானா? மேடம் டென்ஷன் ஆக மாட்டாங்களா?

‘‘நான் வேணும்னே அப்படிப் பண்றதில்லீங்க... சின்ன வயசு லேருந்தே என் கேரக்டர் அப்படி. வீட்லேயும் அப்படித்தான். கல்யாணமான புதுசுல என்னோட இந்த கேரக்டரால கீதா கொஞ்சம் இரிட்டேட் ஆயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அப்புறம் பழகிட்டாங்க. இப்ப எனக்கும் சேர்த்து அவங்களே பேசிடறாங்க!’’

யார் சொன்னது! விஜய் மூடி டைப் என்று? கலாட்டாவும் கலகலப்புமாக கலக்குகிறார் மனிதர்.

    காதலைக் காலத்துக்கும் நினைவுபடுத்துவதில், பரிமாறிக் கொண்ட முதல் விஷயங்களுக்கு மிக முக்கிய இடமிருக்கும். அப்படி ஏதாவது ஞாபகமிருக்கா மிஸ்டர் விஜய்?

‘‘எனக்கு கிஃப்ட் கொடுக்கற பழக்கமே கிடையாது. கீதாகிட்ட ‘உனக்குப் பிடிச்சதை நீயே வாங்கிக்கோ’ன்னு சொல்லிடுவேன். என் செலக்ஷன் ரொம்ப மோசமா இருக்கும். கிஃப்டா கொடுத்ததுக்காக, அவங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் அதை யூஸ் பண்ணணுங்கிற கட்டாயம் எதுக்கு? இன்னும் சொல்லப் போனா, எனக்கான தேவைகளையே கீதாதான் செலக்ட் பண்ணுவாங்க. என்னோட டிரஸ்லேருந்து, சகலமும் அவங்க செலக்ஷன்தான்... அவங்க எனக்கு நிறைய வாங்கிக் கொடுத்திருக்காங்க. முதல் கிஃப்ட் ஒரு டிரஸ். கீதா தன் கையால எனக்கு சமைச்சுக் கொடுத்த முதல் அயிட்டம் தோசை. சும்மா சொல்லக் கூடாது, சூப்பரா இருந்துச்சு தெரியுமா?’’ - ஆசை தோசை அனுபவத்துடன் அழகாகச் சொல்கிறார் விஜய்.

தன்னையும், தன் துறை சார்ந்த விஷயங்கள் குறித்தும், மனைவியின் விமர்சனங்கள் எந்தக் கணவருக்கும் பெரிய விஷயம் தானே... விஜய் மட்டும் விதி விலக்கா என்ன? எனவே அடுத்த கேள்வி...

    கல்யாணத்துக்குப் பிறகு சங்கீதா பார்த்த உங்க படம்? என்ன கமென்ட் சொன் னாங்க? உங்க படங்களோட கதைகளைப் பத்தி அவங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணுவீங்களா?

‘‘99-ல கல்யாணம்  முடிஞ்சதும் ரிலீசான படம் ‘மின்சாரக் கண்ணா.’ என்ன கமென்ட் அடிச்சாங்கன்னு தயவு செய்து கேட்காதீங்க...

பெரிதாகச் சிரிக்கிறார். அந்தச் சிரிப்புக்குப் பின்னால் ஏதோ சீக்ரெட்!

‘‘என்ன படம் பண்றேன்னு சொல்வேனே தவிர, கதையெல்லாம் சொல்றதில்லை. கதை கேட்கறது, ஓ.கே. பண்றதெல்லாம் என்னோட தனிப்பட்ட முடிவு. 90 சதவிகிதம் சரியாவே இருந்திருக்கு. 10 சதவிகிதம் அப்படி இப்படி தப்பாயிருக்கலாம். ரீமேக் படங்கள் பண்றதா இருந்தா மட்டும், ஒரிஜினல் வெர்ஷனை கீதாவுக்கு போட்டுக் காட்டுவேன்.

Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil 
Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,Kungumam Thozhi 
Monthly  Magazine

கீதாவுக்கு ரசனை அதிகம். சராசரி ரசிகையா ஒரு படத்தை பிரமாதமா விமர்சனம் பண்ணுவாங்க. என் படமாவே இருந்தாலும், நல்லாருந்தா, நல்லாருக்கும்பாங்க. இல்லாட்டி, கிழி கிழின்னு கிழிச்சிடுவாங்க. ரொம்ப நாளைக்கப்புறம் ‘நண்பன்’ படத்தைப் பார்த்துட்டு, ‘பெஸ்ட் மூவி’ன்னு மேடம் பாராட்டியிருக்காங்க...’’

மனைவியின் திசை நோக்கி பவ்யம் காட்டுகிறார்!

கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் சகஜம். இதில் வி.ஐ.பி-களும் விதி விலக்காக இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கேள்வி...

    எந்தெந்த விஷயங்களுக்கு உங்களுக்குள் சண்டை வரும்? யார் முதலில் சரண்டர் ஆவீங்க?

‘‘காரணமே இல்லாம அடிக்கடி சண்டை போட்டுக்குவோம். எங்கயாவது வெளில கிளம்பறோம்னா, சொன்ன டைமுக்கு ரெடியாக மாட்டாங்க. போன வாரம்கூட அப்படி ஒரு இடத்துக்குப் போறதா பிளான். நான் ரெடியாகி, கார்ல ஏறிட்டேன். மேடம் வரவே இல்லை. எனக்கு செம டென்ஷன். காரை எடுத்துட்டு, எங்க ஏரியாவை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு திரும்பி வந்தா, நான் விட்டுட்டுப் போயிட்டேன் போலன்னு வெயிட் பண்ணிட்டிருந்தாங்க. திட்டினேன். அப்புறம் சகஜமாயிட்டோம். பொதுவா சண்டை வந்தா ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிக்க மாட்டோம். யார் முதல்ல வந்து சாரி கேட்கறாங்கன்றதுல ஒரு சின்ன த்ரில். வராங்களா, வராங்களான்னு வெயிட் பண்ணிட்டே இருப்பேன். மனசுக்குள்ள ஒரு டெட்லைன் போட்டு வச்சிருப்பேன். அது நெருங்கப் போகுது, அப்படியும் அவங்களுக்கு கோபம் குறையலைன்னு தெரிஞ்சா, வேற வழியே இல்லை, சரண்டர் தான்... ஆனாலும், அவங்களைக் காக்க வச்சுப் பார்க்கறதுல எனக்கு ஒரு அல்ப சந்தோஷம்.’’

‘மேட் ஃபார் ஈச் அதர்’ தம்பதிக்கான அத்தனை லட்சணங்களும் கொண்ட கணவராகத் தன்னை வெளிப்படுத்துகிறார்.

விஜய் அவரது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. ஆனாலும், தன் மனைவி, குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் இருக்கிறார். தனிக்குடித்தனம் என்ற முடிவு பெரும்பாலும் மனைவியின் தலையணை மந்திரத்தில் தீர்மானிக்கப்படுவதாக சொல்லப்படுவது உண்டு. விஜய் விஷயத்தில் மந்திரமும் இல்லை, தந்திரமும் இல்லை.

‘‘கல்யாணத்துக்குப் பிறகு 2 வருஷம் எங்கம்மா-அப்பாகூட ஒண்ணாதான் இருந்தோம். தனிக்குடித்தனம் போனா, எனக்கு பொறுப்புகள் அதிகமாகும்னு தோணவே, நான்தான் அந்த முடிவை எடுத்தேன். எங்கப்பாவும் அதையே சொன்னார். உண்மைதான்... முன்னல்லாம் அதான் அம்மா-அப்பா பக்கத்துலயே இருக்காங்களேன்னு விளையாட்டுத்தனமா இருப்பேன். இப்ப தனிக்குடித்தனம் வந்த பிறகு, கீதாவும் குழந்தைங்களும் தனியா இருப்பாங்களேன்னு பொறுப்பா வீட்டுக்கு ஓடி வந்துடறேன். அந்த அனுபவம் புதுசாவும் சந்தோஷமாவும் இருக்கு’’ - நெகிழ்ச்சியாக வருகின்றன வார்த்தைகள்...

மாதம் ஒரு முறை... சில நேரங்களில் மாதங்களுக்கு ஒரு முறைதான் மனைவி, குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியும். பிஸியான பிரபலங்கள் விட்டுக் கொடுத்தே ஆகவேண்டிய சின்னச் சின்ன சந்தோஷங்களில் இதுவும் ஒன்று.

    மனைவியை, குழந்தைங்களை மிஸ் பண்றீங்களா விஜய்?

‘‘என்னை மாதிரி அப்பாக்களுக்கு பிள்ளைங்களோட அதிக நேரம் செலவிட முடியாதுன்னாலும், இருக்கிற நேரத்தை சந்தோஷமா செலவிடணும்னு நினைக்கறவன் நான். குழந்தைங்க பிறந்தப்ப, அவங்களைக் குளிப்பாட்டறது, நாப்பி மாத்தறதுன்னு எல்லா வேலைகளையும் எனக்குக் கத்துக் கொடுத்துட்டாங்க கீதா. அவங்க வீட்ல இல்லாட்டாலும், என்னால தனியா மேனேஜ் பண்ண முடியுங்கிற அளவுக்கு செம எக்ஸ்பீரியன்ஸ்... ஆனா, இப்ப வரைக்கும் படிப்பு, நடத்தைன்னு பசங்க டிபார்ட்மென்ட் முழுக்க கீதாவோட நிர்வாகம்தான்.

ஷூட்டிங் இல்லாத நாள்கள்ல ஃப்ரீ டைம் கிடைச்சா, வீடுதான் எனக்கு உலகம். கீதாவோடவும் குழந்தைங்களோடவும் வீட்ல இருக்கத்தான் விரும்புவேன். என்னோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் எங்க ஏரியாலதான் இருக்காங்க. பல பேர் கல்யாணமானவங்க. அவங்க எல்லாரும், அவங்கவங்க ஒயிஃபோட எங்க வீட்டுக்கு வருவாங்க. வெளில போகணும், தனியா இருக்கணும்னெல் லாம் ஒரு நாளும் கீதா சொன்னதில்லை...’’
மனைவியைப் பற்றி பேசுகிறபோது விஜய்யின் முகத்தைப் பார்க்க வேண்டுமே... பொங்கி வழிகிறது பெருமிதம். அந்த எக்ஸ்பிரஷன் எந்தப் படத்திலும் பார்த்திராத ஒன்று!

நட்சத்திரங்களின் குடும்ப வாழ்க்கை என்பது காலம் காலமாக நிலையற்றதாகவே இருந்து கொண்டிருக்கிறது. காரணம், பரஸ்பரம் நம்பிக்கையின்மை. இந்த விஷயத்தில் விஜய் மிகவும் பக்குவப்பட்டவராக இருக்கிறார். குடும்பம் எனும் வண்டியின் அச்சாணியே ஒருவர் மீது மற்றவர் வைக்கும் நம்பிக்கைதான் என்பதை வெகு அழகாகப் புரிந்து வைத்திருக்கிறார்.

‘‘என்னதான் ஒயிஃப் பயங்கரமான அன்டர்ஸ்டாண்டிங்கோட இருந்தாலும், அதைத் தக்க வைக்கிற பொறுப்பு ஹஸ்பெண்டுக்கும் உண்டு. நம்ம கேரக்டர், நாம நடந்துக்கிற விதம்னு பலதும் அவங்களுக்கு நம்பிக்கையைத் தரணும். அந்த வகையில நான் என் மனைவிக்கு ரொம்ப சின்சியர். ஷூட்டிங் ஸ்பாட்ல அதிகம் பேச மாட்டேன். என்னைப் பத்தி கிசுகிசு வர்ற அளவுக்கு நடந்துக்க மாட்டேன். அதையும் மீறி யாராவது என்னைப் பத்தி சொன்னாக்கூட கீதா நம்ப மாட்டாங்க. அதுதான் கீதா!

இதைச் சொன்னா, ஏதோ சினிமால நான் பேசின டயலாக் மாதிரித் தோணலாம். ஆனாலும், அதுதான் உண்மை! அடுத்த ஜென்மம் இருக்கான்னு தெரியலை... ஒருவேளை இருந்தா, கீதாதான் எனக்கு மனைவியா வரணும்..... என் ஆசை, பிரார்த்தனை, நம்பிக்கை எல்லாம் அதுதான்!’’

சந்தேகமில்லை, விஜய் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் மனம் கவர்ந்த கதாநாயகன்தான். இங்கே சங்கீதாவின் நாயகன்!
- ஆர்.வைதேகி